அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய ஆனி மாத ஆயில்ய நட்சத்திரம் இன்றும் முழுதும் உள்ளது. வாய்ப்பு இருக்கும் அன்பர்கள் அருகில் உள்ள ஆலயம் சென்று தத்தம் ஆன்மா லயத்துடன் குருவின் மந்திரம் ஓதி மனதை திரப்படுத்துங்கள். இது தான் ஆலய வழிபாட்டின் நோக்கம் ஆகும்.ஆனால் நாம் மனதொன்றி வழிபாடு செய்வது இல்லை. இன்றைய ஆயில்ய நட்சத்திரத்தில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு வழிபாடு செய்து கொண்டிருக்கின்றோம்.

நாம்
இப்புவியில் பிறந்து வாழ்ந்து இறக்கும் வரை நம் வாழ்க்கை ஒரு பரம பத
விளையாட்டே! இந்த விளையாட்டில் ஏணி போன்று குருவும், நாம் பண்ணும்
பக்தியும் பரமபதத்தை இறைவனை அடைய உதவும். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும்
அருகில் பாம்பும் இருக்கும்? பந்தபாசமும், மனத்தை நம்பும் மனமும் தான்
இராஜநாகம்! இறையை அடைய உச்சிக்கு சென்றாலும் அங்கும் இறை இறுதிவரை
சோதித்துதான் தானாக ஆக்கும், அதுவும் இறையருளே! மீண்டும் மனத்தை நம்பி,
பந்தபாசங்களில் விழுங்கப்பட்டு( பாம்பால்) கீழே வந்தாலும் அருகில் ஏணி
உண்டு, அது குருவருளே! எந்நிலையிலும் , பிறவி பிறவியாகவும் குரு ஏணியாக
இருந்து நம்மை இறையாக்க பரமபதத்தை அடைய நம்முடன் எப்பொழுதுமே உள்ளார்! நாம்
ஏணியில் ஏறுகிறோமா இல்லை யா என்பதுதான் இறையருள்!!! குருவருள் சித்திக்க
இறையருள் சத்தியமாகும்!!! சற்குருநாதர் திருவடிகளே சரணம்!!!
இந்தப் பிறப்பில் குரு கிடைப்பது தான் மிக மிக சிறப்பான நிலை ஆகும். தந்தையின் புண்ணியத்தில் நாம் பிறக்கின்றோம். தாயின் புண்ணியத்தில் நம் ஆயுள் நிலைக்கின்றது . குருவின் ஆசியால் மட்டுமே இப்பிறவியின் நோக்கம் அறிந்து வாழ்கின்றோம்.இந்த சிந்தனையோடு குருநாதரின் தாள் போற்றுவோம்.
குரு என்பது வார்த்தை என்ற நிலையில் இருந்து குரு என்பது வாழ்க்கை என்று நிலைக்கு நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இது நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கும் பொருந்தும்.இந்த பயணத்தில் குருவின் நாமத்தை நாம் சொல்ல நமக்கு புண்ணியம் வேண்டும். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஆசியினால் நம் தளத்திற்கு சித்தர்களின் ஆசி கிடைத்து வருகின்றது. இன்றைய நன்னாளில் சென்ற ஆண்டில் தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் நமக்கு 17/04/2020 (zoom meeting) அன்று கிடைத்த ஜீவ வாக்கு ஆகும்.
திருவண்ணாமலை கிரிவலம் முறையாக சுற்றி வர ஆசிகள், அஷ்ட லிங்க தரிசனம், இடுக்கு பிள்ளையார் பற்றி கூறுங்கள் :
தேகத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று எத்தனை வழிமுறைகளைக் கூறினாலும் அதனை காலகாலம் மனிதன் ஏற்பதில்லை. புறம் தள்ளி விடுகிறான். எனவேதான் இறை வழிபாட்டோடு தேக ஆரோக்கியத்தையும் சேர்க்க வேண்டியிருக்கிறது . அந்த வகையிலே பிரகார வலம், கிரிவலம் இவையெல்லாம் அவசியம். பதட்டமின்றி, நிதானமாக அடிமேல் அடியெடுத்து வேறு லௌகீக விஷயங்களை, உலகியல் விஷயங்களை பேசாமல் மௌனமாக மனதிற்குள் இறை நாமத்தை மட்டும் உருவேற்றிக் கொண்டு வலம் வருவதே சிறப்பு. அடுத்ததாக எந்த கிரிவலமாக இருந்தாலும் ஆங்காங்கே உள்ள சிறு ஆலயமோ, உப சன்னிதிகளோ தென்பட்டால் அங்கும் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்ய நன்மை உண்டாம். இஃதொப்ப நிலையிலே, முறை என்றால் மனம் வேறு சிந்தனைக்குள் ஆட்படாமல் மனம் முழுக்க இறை நாமத்தை மட்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டே பிரகார வலமோ, ஆலய வலமோ, கிரி வலமோ ஒரு மனிதன் செய்வது மிகவும் சிறப்பு. எனவே இதை மட்டும் கடைபிடித்தால் போதும்.
திருவிடைக்கழி முருகப் பெருமான் தலம் பற்றி :
எத்தனை தலங்கள் இருந்தாலும் எல்லா தலங்களுமே சிறப்புதான். எந்தெந்த மனிதர்களுக்கு எந்தெந்த தலங்கள் சென்றால், நட்சத்திர ரீதியாக, ஜாதக ரீதியாக, கர்ம வினை ரீதியாக, சில நன்மைகள் உண்டு என்ற கணக்கு இருந்தாலும் அதற்காக அதனையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. எல்லா ஸ்தலங்களும் சிறப்புதான். எப்பொழுது சிறப்பு ? அந்த மனிதன் அந்த ஸ்தலத்தில் அந்த ஆலயத்தில் நின்று கொண்டு, வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் இறை சிந்தனையோடு அமைதியான முறையில் பிரார்த்தனையை தொடர்ந்தால் அவனுடைய பாவங்கள் நீங்கும். இருந்தாலும் இஃதொப்ப இன்னவன் வினவுகின்ற திருவிடைக்கழியில் மனிதர்கள் கருதுவது போன்ற தோஷங்களுக்கு மட்டுமல்லாது செவ்வாய் தோஷம் குறைவதற்கும், குருதி தொடர்பான பிணிகள் நீங்குவதற்கும் அங்கு பிரார்த்தனை செய்வதோடு சத்ரு சம்ஹார திரிசதி பூஜைகளை செய்ய ஏற்ற ஸ்தலங்களில் அஃதும் ஒன்று.
ஸ்தல யாத்திரை, மலை யாத்திரை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சூட்சும நுணுக்க வழிபாடுகள் பற்றி :
அமைதி, அமைதி, அமைதி. மனதிற்குள் இறை நாமம், இறை நாமம், இறை நாமம். அவ்வளவே.
ஓதி மலை உழவாரப்பணி, வள்ளி மலை வழிபாடு, கோடகநல்லூர் யாத்திரை, சதுரகிரி வழிபாடு பற்றி ஆசிகள் :
அனைத்திற்கும் நல்லாசிகள், மென்மேலும் தொண்டு தொடர நல்லாசிகள் .
பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி நாட்களில் அன்ன சேவை செய்கிறோம். இதில் குறையிருந்தால் எங்களை வழி நடத்தி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்
தேனியின் நாமகரணத்தை சூட்டியிருக்கிறார்கள். தேனீக்களைப் பற்றி தெரியுமா ? தேனீக்கள் கடுமையாக போராடி நுணுக்கமாக தேனையெல்லாம் சேர்த்து வைக்கும். அப்போது அந்த தேனை மனிதன் ஒருவகையில் களவாடி விடுகிறான். எனவே இது குறித்து ஒரு மரபு சொல் கூட மனிதர்களிடையே வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நினைவூட்டுகிறோம். ஒரு மனிதன் தேனீக்களிடம் சென்று “ இத்தனை கடினப்பட்டு நீங்கள் எல்லோரும் தேனை சேகரிக்கிறீர்கள். ஒரு தினம் வந்து மனிதன் அல்லது மனிதர்கள் களவாடி விடுகிறார்களே, எடுத்து விடுகிறார்களே, உங்களுக்கு வருத்தமாக இல்லையா ? “ என்று கேட்டால் “ ஒரு வகையில் வருத்தம்தான். இருந்தாலும் நாங்கள் வருத்தப்படவில்லை “. “ ஏன் வருத்தப்படவில்லை ? “ என மீண்டும் அந்த மனிதன் வினவுகிறான். அதற்கு தேனீக்கள் கூறுகின்றன “ எங்கள் உழைப்பாகிய தேனைதான் மனிதனால் திருட முடியுமே தவிர நாங்கள் தேனை எடுக்கின்ற அந்தக் கலையை எங்களிடமிருந்து மனிதர்களால் ஒருபொழுதும் திருட முடியாது “ என்று சொல்கிறது இதுதான் மனிதர்களுக்கும் பாடம். மனிதன் சேர்த்து வைத்த செல்வத்தை ஒருவன் திருடலாம். ஆனால் அவன் செல்வம் தேடுகின்ற கலையை திருட முடியுமா? முடியாது.
எனவே, விளைவை ஒருவன் எடுத்து கையாளலாம். அந்த விளைவை கொண்டு வந்து சேர்க்கும் அந்த ஒரு கலையை, யுக்தியை யாராலும் திருட முடியாது என்பதை இவர்களும் புரிந்துகொள்ளட்டும்.
திருக்கோஷ்டியூர் தலத்தின் மகிமையை பற்றி :
நம்பியாண்டார் நம்பியை நினைவூட்டுகிறது .அஃதொப்ப ஸ்தலம். எனவே சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்தலம். திருமண தோஷம் நீக்கும் ஸ்தலம். பலவிதமான புண்ணியங்களும், பாவங்களும் கலந்து வாழ்கின்ற மனிதர்களுக்கு, இஃதொப்ப கடை பிறவி வேண்டும் என ஆசைப்படுகின்ற மனிதர்களுக்கும் ஏற்ற ஸ்தலம் அப்பா.
மீண்டும் மீண்டும் படிக்கும் போது குருநாதரின் ஆசி நன்கு நமக்கு புரிகின்றது. அப்படியென்றால் குருவின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? போற்றினால் உமது வினை அகலுமப்பா! ஆம்! சித்தர் பெருமக்கள், மகான்களின் நாமத்தை போற்ற வேண்டும். நமக்கு கிடைத்த குருவின் நாமத்தை நாம்
"ஓம் அகத்தீசாய நம "
என்று கூறி போற்ற வேண்டும்.இதற்கு சில அடிப்படை தகுதிகள் வேண்டும். முதலாவது நாம் சைவ உணர்வில் ( உணவிற்காக பிற உயிர் கொல்லாமை ) வாழ வேண்டும். அடுத்து நாம் நம்மால் இயன்ற அளவில் அன்னதானம் போன்ற தான, தர்மங்களில் ஈடுபட வேண்டும். இது போன்ற சேவையில் ஈடுபடும் போது முதலில் நம் குடும்பத்திற்கு செய்து பின்னர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். பெற்றோரை பட்டினி போட்டு , 1000 பேருக்கு அன்னதானம் செய்வதால் என்ன பயன் உண்டு? இந்த இரண்டையும் (அதாவது புலால் உண்ணாமை , தான தர்மம் செய்தல் ) கைக்கொண்டு குருவின் நாமத்தை வந்தால் குருவின் அருள் நம்மை எப்போதும் காக்கும்.
இந்த நிலையில் முருகன் அருள் நடத்த, குருவின் உபதேசம் குருவருளால் இங்கே தரப்படுகின்றது.சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் மூலம் இன்றைய குரு உபதேசமாக முருக மந்திரங்களை இங்கே தருகின்றோம். அதற்கு முன்பாக ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் பூஜை, யாக காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.
சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் கடந்த பல ஆண்டுகளாக, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் வழிபாட்டில் பல அன்பர்களை வழி நடத்தி வருகின்றார்கள். இங்கு நித்திய பூஜைகளாக காலை, மாலை குருநாதருக்கு அபிஷேகம், பிரத்யங்கரா தேவி வழிபாடும், மாதந்தோறும் பௌர்ணமி, அமாவாசை யாகம் நடைபெற்று வருகின்றது. மேலும் கடந்த 9 ஆண்டுகளாக பாபநாசத்தில் மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத்திருவிழா நடத்தி வருகின்றார்கள். மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத்திருவிழா பற்றி தனிப்பதிவுகள் ஏற்கனவே தந்துள்ளோம். நித்திய அன்னசேவை போன்று பற்பல சேவைகளை ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் செய்து வருகின்றார்கள்.
குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்கிற்கிணங்க, ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மூலம் இங்கே இரண்டு முருகர் மந்திரங்களை தருகின்றோம். அடியார்கள் அனைவரும் காலை பிரம்ம முகூர்த்தம் முன்னர் இந்த இரண்டு மந்திரங்களை 108 முறை என்ற அளவில், பின்னர் 18 ன் மடங்காக அதிகப்படுத்தி உச்சரித்து எல்லா உயிர்களிலும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்து வாருங்கள். இவற்றை நித்திய வழிபாட்டிலும் இணைத்துக் கொள்ளலாம்.
ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-