"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 13, 2020

நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு

அடியார் பெருமக்களே...

அனைவருக்கும் வணக்கம். 

பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள்  என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.


 சரி. பதிவின் உள் செல்வோமா?


முதல் முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.


வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.

எதிர்பார்த்தல் ஏமாற்றமே தரும். இன்று குடும்பங்களில் நடைபெறும் பல குழப்பங்கள், சண்டைகள்,சச்சரவுகள் என அனைத்திற்கும் காரணம் எதிர்பார்ப்பே ஆகும். அதுவும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இந்த எதிர்பார்ப்பினால் வரும் ஏமாற்றம் இருக்கின்றதே..அப்பப்பா..வார்த்தையால் இதனை சொல்ல இயலாது. 

சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் இந்த எதிர்பார்ப்பு, ஆசையில் இருந்து தோன்றுகிறதா? இல்லை பேராசையில் இருந்து தோன்றுகிறதா? என்று சரியாக சொல்ல முடியாது.இந்த எதிர்பார்ப்பை தவிர்த்தாலே பல பிரச்சினைகள் சரியாகி விடும்.எப்படி தவிர்ப்பது? இங்கே ஒரு நாள் முழுக்க எதிர்பார்ப்பை தவிர் என்று சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் எடுத்த உடனேயே இது சாத்தியமல்ல. முதலில் சிறு சிறு நிகழ்வுகளில் இந்த எதிர்பார்ப்பை தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்க்க பழகினால் தான் ஒரு நாள் முழுக்க இதனை கடைபிடிக்க முடியும்.

இந்த வரிசையில் இன்று நாம் காண இருப்பது தானம் செய்யப்  பழகு என்பதாம்.


என்னப்பா? இதெல்லாம் ஒரு குறிப்பா? என்று ஏளனமாக நினைக்காதீர். இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் தேவையைத் தாண்டி தான் பொருட்கள் வைத்திருக்கின்றோம். அலைபேசி வந்த புதிதில் அனைவரிடமும் ஒன்றே ஒன்று இருந்தது. "ஜியோ" வந்த பின்பு அனைவரிடமும் இரண்டு,மூன்று அலைபேசிகள் ( நம்மையும் சேர்த்து தான் )..ஆனால் ஒரு அலைபேசியை நாம் உபயோகித்தால் போதுமானது. இது போல் தான் ஆடைகள். அனைத்து உபயோகமற்ற ஆடைகளை எடுத்து மூட்டையாக கட்டி வைத்திருப்போம்.  அவற்றை தானமாக கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்துக்  கொண்டே இருப்போம். எல்லா நாளும் நல்ல நாளே.

இங்கே அணியாத ஆடைகளை தானமளி என்று சொல்லி இருக்கின்றார்கள். இதனை நாம் செய்ய செய்ய அடுத்து நாம் மற்ற தானங்களையும் செய்ய பழகுவோம். 

ஒளவைப் பாட்டியும் அரியது எது என்று பின்வருமாறு கூறுகின்றார்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.

ஒளவைப் பாட்டி சொன்னது போல் மனிதராக பிறத்தல் அரிது என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த மானிடப் பிறப்பில் கூன்,குருடு,செவிடு இல்லாமல் நாம் இருப்பது அரிதினும் அரிது. இந்த வழியில் தானமும் தவமும் செய்தல் அரிது. இந்த தானமும் தவமும் தான் நாடு செழிக்க உதவுகின்றது. தற்போது வரை நாம் அனுபவித்து வரும் அனைத்திற்கும் நம் மூத்தோர் செய்த தானமும்,தவமும் ஆகும். இன்னும் இந்த உலகை உயிர்பிப்பதும் இதுவே ஆகும்.

அடுத்து வள்ளுவப்பெருந்தகையும் கேட்டபோது 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

என்று வான் சிறப்பு அதிகாரத்தில் கூறியுள்ளார்.

வானம் மழையைக் கொடுக்காவிட்டால் தானம் கொடுத்தலும் தவம் செய்தலும் இவ்வகன்ற நிலவுலகின்கண் நிலைபெறா என்பது பாடலின் பொருள்.

மழைக்கும் தானம், தவம் இவற்றிற்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது இந்த திருக்குறள் மூலம் தெரிகின்றது அல்லவா?

இதனையே சித்தர் சிவவாக்கியரும் கீழ்கண்டவாறு கூறுகின்றார்.

சித்தர் சிவவாக்கியம் -242
ஆடு மாடு தேடினும் ஆணை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே. 

ஆடு மாடுகள் என்றும் யானை சேனை சேவகர்கள் என்றும் கோடிக்கணக்கான செல்வங்களைத் தேடித்தேடி சேர்த்து வைத்தாலும் மரணம் நேரும் பொது இவையாவும் குறுக்கே வந்து நின்று தடுக்க முடியுமா? இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நீங்கள் ஓடி ஓடிச் செய்த உதவிகளும் மனம் உவந்து செய்த அன்னதானம் போன்ற தர்மங்களும் ஆபத்துக் காலங்களில் சாட்டையால் சாடி விட்ட குதிரையைப் போல் விரைவாக வந்து தலைக் காத்து நிற்கும். தர்மம் தலைகாக்கும் என்பதனை உணர்ந்து உங்கள் பிறவியை ஈடேற்ற தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள்.

இந்த செய்திகளை எல்லாம் பார்க்கும் போது , நாம் பெற வேண்டும் என்றால் கொடுத்துப் பழக வேண்டும். இதனை தான் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் செய்து வருகின்றோம்.


தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் அடிநாதம் அன்னசேவை தான். ஆம். முதன் முதலில் நாம் அன்னசேவை செய்து தான் நம் குழுவை ஆரம்பித்தோம். இன்று உழவாரப்பணி, மோட்ச தீபம், ஆலய தரிசனம், ஜீவ நாடி சேவை, மலை யாத்திரை, சமூக சேவை, தீப எண்ணெய் சேவை என பல வழிகளிலும் நாம் தானம் செய்து வருகின்றோம். தற்போதுள்ள மகாளய பட்ச சேவையில் தினமும் அன்னசேவை குறைந்தது 10 நபர்களுக்கு செய்து வருகின்றோம். அதனை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.

02.09.2020 - 1 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

தக்காளி சாதம், கேரட், முட்டைக்கோஸ் பொரியல்

                                          





03.09.2020 - 2 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

 பசுவிற்கு அகத்தி கீரையும், வாழைப்பழமும்






04.09.2020 - 3 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 


12 அன்பர்களுக்கு பிசிபேலாபாத் இன்று மதியம் வழங்கினோம். 






05.09.2020- 4 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 


1. இன்றைய மகாளயபட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் 21 அன்பர்களுக்கு காலை உணவாக குருவருளால் வழங்கினோம். 

2. அடுத்து நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் தரிசனம் பெற்றோம். இங்கு பித்ரு பூஜை, சிரார்த்தம் பொது சங்கல்பம் ஏற்கவில்லை. விரைவில் தனியாக இது பற்றிய செய்தி தருகின்றோம். 

3. அடுத்து செங்கல்பட்டு அகத்தியர் ஞான கோட்டத்தில் ஸ்ரீ அகத்திய பெருமான் தரிசனம் பெற்று, அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்னசேவைக்கு நம் தளம் சார்பில் ரூ.2000 /- கொடுத்துள்ளோம். 






06.09.2020 - 5 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 


1. இன்றைய மகாளயபட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் 12 அன்பர்களுக்கு காலை உணவாக குருவருளால் வழங்கினோம். 

2. அடுத்து பால்காரர் ஒருவருக்கு 50 கிலோ மாட்டுத் தீவனம் குருவருளால் வழங்கினோம்







07.09.2020 - 6 ஆம் நாள் மகாளய பட்ச சேவை

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு காலை உணவாக 4 இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி என வழங்கினோம்.மேலும் 3 அன்பர்களுக்கு குடை தானம் குருவருளால் செய்தோம். இதில்  ஒருவர் குப்பை பொறுக்குவதாக கூறி, நம்மிடம் உணவும், குடையும் பெற்றார். இரண்டாவதாக இஸ்திரி போடும் அன்பருக்கு குடை மட்டும் வழங்கினோம். அவர் தம் கடைக்கு பெரிய அளவில் குடை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். நாமும் வாங்கி தருவதாக கூறியுள்ளோம். மூன்றாவது செருப்பு தைக்கும் அன்பர் ஒருவருக்கு வழங்கினோம்.அவர் நமக்கு நன்றி தெரிவித்து, அப்போதைய வெயிலில் குடை பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

                                                                                                                                                                                                  










08.09.2020 - 7ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 11 அன்பர்களுக்கு காலை உணவாக 2 தோசை, 1 வடைகறி என வழங்கினோம்.





09.09.2020 - 8 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 11 அன்பர்களுக்கு மதிய உணவாக தயிர் சாதம், ஊறுகாய் என வழங்கினோம்.

இன்று காலையில் கோமாதாக்களுக்கு அகத்திக்கீரையும், வாழைப்பழங்களும் கொடுத்தோம்






10.09.2020 - 9 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 12 அன்பர்களுக்கு காலை உணவாக புளியோதரை சாதம், உருளைக்கிழங்கு சிப்ஸ் என வழங்கினோம்.

மாடம்பாக்கம் ஆதனூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தேவைப்படும் பொருள்கள் கேட்டு உள்ளோம். விரைவில் நம் தளம் சார்பில் அந்த பொருள்கள் வாங்கி அங்கே கொடுக்க உள்ளோம்







11.09.2020 - 10 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 20 அன்பர்களுக்கு 4 இட்லி,சாம்பார், கேசரி
 என வழங்கினோம்.இவை நேற்று வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், காஞ்சி ஏகாம்பரஸ்வரர் கோவிலில் குருவருளால் வழங்கப்பட்டது. 

மேலும் கிளார் ஶ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் தீப எண்ணெய் தானமாக இலுப்பெண்ணெய் டின் ஒன்றும், பூசைப் பொருட்களாக வஸ்திரம், திருநீறு,மஞ்சள்,பன்னீர், அபிஷேகப் பொடி என வழங்கினோம். நம் குழு அன்பர்கள் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம்

இதே போன்று பூசைப் பொருட்கள் தூசி அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்று வழங்கினோம். நேற்று அங்கே நடைபெற்ற ஶ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கு பெற்று ஆசி பெற்றோம். நாம் கொடுத்த வஸ்திரத்தை திருக்கல்யாண தம்பதியினர் கிரீடமாக அணிந்ததை கண்டு மகிழ்ச்சியுற்றோம்.
 











12.09.2020 - 11 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் என கூடுவாஞ்சேரி பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கினோம்.மேலும் இன்றைய சேவையில் பசுவிற்கு வாழைப்பழமும், அகத்திக் கீரையும் கொடுத்தோம்.





13.09.2020 - 12 ஆம் நாள் மகாளய பட்ச சேவை 

இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் என கூடுவாஞ்சேரி பகுதியில் அன்பர்களுக்கு  வழங்கினோம்.மேலும் செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்டம் சென்று குருநாதரை வணங்கி, அங்கே ஒரு குடையும், ஒரு போர்வையும் நம் தளம் சார்பில் அன்பருக்கு கொடுக்க கூறியுள்ளோம்.

                                                                                                                                                                                                  





மேலும் இன்றைய செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்டத்தின் அன்னதான சேவையில் நம் தளம் சார்பில் ஏற்கனவே சிறு தொகை கொடுத்து இருந்தோம்.






 விரைவில் செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்ட தரிசனப் பதிவுகளை தனிப்பதிவில் தருகின்றோம்.  ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவில் எதிர்பார்ப்பினை தவிர்க்க வேண்டி பேசினோம். இன்று தானம் செய்ய வேண்டியுள்ளோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html





2 comments:

  1. Replies
    1. தங்களின் கருத்திற்கு தலை வணங்கி மகிழ்கின்றோம்.
      தொடர்ந்து நம் தளத்தை பார்வையிட்டு தங்கள் உள்ளக்கருத்தை தெரிவிக்க வேண்டுகின்றோம்.

      நன்றி
      வணக்கம்

      Delete