"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 31, 2019

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

 அனைவருக்கும் வணக்கம்.

நம் தள வாசகர்களுக்கும், நம் சேவைகளில் பங்கு கொண்டு உறுதுணையாய் இருக்கின்ற அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.  இன்றைய நன்னாளில் பிள்ளையார்பட்டி கதாநாயகனை தரிசித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது? நம் தள வாசகர்களுக்காக இதோ தரிசனத்தை தொடர்வோம்.

பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.




பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும்,
1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர்,
 2. மருதங்குடி,
3. திருவீங்கைகுடி,
4. திருவீங்கைச்வரம்,
5. இராசநாராயணபுரம் என்று
வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.

முதலில் நம்மை அழகான வரவேற்பு நுழைவாயில் வரவேற்கின்றது.






இங்கு இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில் மிக்க பொலிவுடன் விளங்குகிறது. ஆகம நெறிப்படி அருமையாக பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில் திருப்பணியை கூர்ந்து நோக்குவோமானால் நான்கு முறையாக திருப்பணி நடந்திருக்கின்றமை நன்கு புலனாகும்.

முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.

இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பத்தி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறபத்தியில் தென்பால் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் விளங்கும் கற்பக விநாயகர் திருக்கோலம் அர்த்த சித்திரம் ஆக வடக்கு நோக்கி விளங்கக் காண்போம். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் பெருந்தெய்வமான கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.

அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்.

அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியிற் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்தமைத்த பெரியதொரு மஹாலிங்கம் பொழிந்தினிது துலங்கக் காண்போம்.  இந்த மூர்த்தி தன் திருவீசர் என்று விளங்கும் திருவீங்கைக்குடி மஹாதேவர் .

அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் திருவுண்ணாழியின் வடபுற வெளிச்சுவரில் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.

இக்குடைவரைக் கோயிலுக்குள் சுவர்களிலும் தூண்களிலும் காணப்பெறுகின்ற கல்வெட்டுகள் நமக்கு ஓரளவு செய்திகளைத்தான் புலப்படுத்துகின்றன என்றாலும் அவற்றில் இருந்து மிக முக்கியமான செய்திகளும் சில கிடைக்கின்றன.

முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அதனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி பிடிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.

மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை "கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி" என்றே குறிப்பிட வேண்டும்.

நுழைவாயில் தாண்டி உள்ளே சென்றால் இரு புறமும் கடைகள் இருந்தன.அத்தனையையும் தாண்டி உள்ளே சென்றால் கோயில் கோபுரம், குளம் என அழகாய் அருள் தரிசனம் பெற முடிகின்றது.










பிள்ளையாரின் பெருமை

உலகம் யாவையும் காத்துத் துடைக்கும் முழுமுதல் இறைவன் ஒருவனே. அவனை இப்படியேன் இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று நம் போன்றவர்கள் எளிதில் உணரமாட்டோம். ஆனாலும் உண்மை உணர்ந்த அருள்பழுத்த நெஞ்சினர்கள் அவனுக்கு அவனருளாலே ஆயிரமாயிரம் திருப்பெயர்களையும், திருவுருவத்தையும் தந்து நாமுய்ய வழிவகுத்தருளியிருக்கிறார்கள். அவையனைத்தும் அறவோர் தியானத்தில் முளைத்தவை. அவற்றிர்கெல்லாம் தத்துவப்படியும், ஆகமமுறையிலும், சிற்ப நெறியிலும் தியான ஸ்லோகங்கள் எண்ணற்றவை நமக்கு உண்டு.

பிள்ளையார், மூத்த திருப்பிள்ளையார், கணபதி, கணேசன், கணநாதன், விநாயகன், விக்கின விநாயகன், விக்கினராஜன், விக்கினேசுவரன், கஜமுகன், கரிமுகன், யானைமுகன், வேழமுகன், தும்பிக்கையன், அத்தி முகன், ஐங்கரன், அங்குசபாசன், முன்னவன், ஓங்காரன், பிரணவப்பொருள், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகன், கற்பக பிள்ளையார் முதலான பல பொதுப்பெயர்களை கொண்டருலும் பெருமான் இடத்திற்கு தக்கபடி பலப்பல காரணங்களால் சிறப்பு பெயர்கள் பலவற்றை தாங்கி அருள்வதை நாம் நன்கறிவோம்.

இந்த மூர்த்தீயின் உருவ தத்துவத்தைச் சிறிது சிந்தித்து பார்த்தாலும் அதன் அருமை நன்கு புலப்படும். பிள்ளையாரை ஞானத்தின் அதிதேவதை என்பர் நூலோர் யானைத்தலையே அதற்குச் சான்று. ஓங்கார ஒலிக்குறிய வரிவடிவமான ஓம் என்பதை காட்புலனாகும்படி காட்ட யானைத்தலையே பெரிதும் ஏற்றதாயிருக்கிரது.வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்பெருவதன் மூலம் 'ஓ' என்ற எழுத்தின் தொடக்கச்சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல் நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று வலைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ் நோக்கி துதிக்கை நுனி வரைக் கோடிட்டால் 'ஓ' என்ற வரி வடிவம் தோன்றிவிடக்காண்போம். கையில் உள்ள மோதகம் 'ம்' என்ற வரி வடிவத்தை சுட்டுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட விளக்கமாக இவ்வுண்மையை (ஓங்கார சொரூபத்தை) புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.








பிள்ளையாரின் சிறப்பு

1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
4. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
5. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
7.ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.

ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும். இவற்றால் நாம் உணரக்கூடியது உணர வேண்டியது ஒன்று. பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப் பெற்றிருக்கிறது என்ற உண்மை தான் அது.

கோபுர தரிசனம் பெற்று உள்ளே சென்று ஐந்து கரத்தோனை, ஆனை முகத்தோனை கண்டு வழிபட்டோம்.





இந்த தலத்தின் பெருமைகள் மீண்டும் ஒருமுறை அறியலாம்.




  • இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.
  • 6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.
  • இரண்டு கைகள் கொண்ட விநாயகர்
  • மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.
  • குடவரைக் கோயில்.
  • தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்.
ராட்சத கொழுக்கட்டை: 
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்.
பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பர்.


ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் ஏயிற்றனை
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
என்று நமக்குத் தெரிந்த பிள்ளையார் துதிகளை துதித்தோம். பின்னர் வழிபாடு முழுமை செய்து வெளியே வந்தோம். 




பின்னர் கோயிலில் இருந்த சில சாதுக்களுக்கு அன்னம்பாளிப்பு செய்து விட்டு அங்கிருந்து விடை பெற்றோம். மீண்டும் ஒருமுறை நம் சேவைகளில் உடல் உழைப்பு,பொருளுதவி என செய்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கும், நம் தள வாசகர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் விருப்பம் தெரிவித்து, நம் தளத்தின் பதிவுகளை பகிரும் அன்பர்களுக்கும் நம் தளம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- மூத்தோனை தரிசனம் இன்னும் தொடரும்.

மீள்பதிவாக:-

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ்

 அனைவருக்கும் வணக்கம்.

 சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்ததும் வரும் ஊர் கூடுவாஞ்சேரி. திருநந்திவரம், திருநந்திகேஸ்வரம் என்றெல்லாம் முன் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது நந்திவரம் (கூடுவாஞ்சேரி) என்று வழங்கப்படுகிறது.

இத்தகு பாடல் வைப்புத் தலமான கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் கோவில் மட்டுமின்றி, மேலும் பல கோயில்கள் அருள் தந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில், வேலி அம்மன் ஆலயம், வள்ளலார் கோயில் என கூற முடிகின்றது. ஒவ்வொரு கோயிலும் இங்கே தனிச்சிறப்பு கொண்டு விளங்குகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் பற்றி விரிவான தனிப்பதிவை அடுத்து தருகின்றோம்.

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்

மூத்தோனை வணங்க வேண்டிய தலமாக இங்கே உள்ளார். உலகெலாம் படைத்த மூத்தோன், உயிரெலாம் வணங்கும் அருளோன், தன்னலமிலா தலைவன், நெற்றிப்பொட்டாய் தகிப்பவன், ஒற்றைக்கால் தேரில் வருபவன், முற்றிய நோயை நீக்குபவன், வெற்றிக்கு துணைவன் ஆனவன், மதிஒளி வழங்கும் ஆசான் ,மனவொளி பரப்பும் சுடரானவன், அதிதியின் அழகுப்புதல்வன், 
அகண்ட தீப செங்கதிரானவன், காரிருள் விலக்கும் கதிரவன்,கர்ணன் போற்றும் தந்தையானவன்,
கருணையே, காந்தமே, சாந்தமே, காலத்தின் சாட்சியாய் நிலைப்பவன்  என ஏக பரம்பொருளாய் கணபதி இங்கே நிலை பெற்று இருக்கின்றார். இந்த திருக்கோயில் முருகன் அருளால் உருவானது என்றால் கொஞ்சம் யோசிக்கின்றீர்கள் தானே? திருப்புகழ் அமிர்தம் ஊட்டிய வாரியார் சுவாமிகளின் கைங்கர்யத்தில் இந்த விநாயகர் கோயில் உருவாகி உள்ளது என்றால் முருகப் பெருமானே தானே இங்கே ஆதாரம். முருகன் அருள் முன்னிற்க இங்கே விநாயகர். விநாயகர் இங்கே சுயம்பு மூர்த்தியாக மாமரத்தில் வாசம் செய்து வருகின்றார்.












இந்த திருத்தல வரலாறு விரைவில் தருகின்றோம். இங்கு விநாயகரோடு, முருகப்பெருமான், சிவன், பார்வதி, லலிதாம்பாள், துர்க்கை, குரு பகவான், பெருமாள், ஐயப்பன், ஆஞ்சநேயர், நவகிரக நாயகர்கள், அகத்தியர், வள்ளலார் என அனைவரையும் ஒருங்கே காணலாம். இங்கு நித்ய பூசை  அனைத்து மூர்த்திகளுக்கும் நடைபெற்று வருகின்றது.














நீங்கள் மேலே காண்பது பிரதோஷ பூசை ஆகும். சிறப்பு பூசைகளும் இங்கே அருளப்பட்டு வருகின்றது. சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு,பிரதோஷ சிவன் வழிபாடு, அஷ்டமி பைரவர் வழிபாடு, மூலம் ஆஞ்சநேயர் வழிபாடு, சஷ்டி,கிருத்திகை முருகன் வழிபாடு, பூசம் வள்ளலார் வழிபாடு, ஆயில்யம் அகத்தியர் வழிபாடு என்று களை கட்டும் திருத்தலம் என்று சொன்னால் அது மிகையில்லை. மேலும் இங்கு அமாவாசை தோறும் நம் TUT குழுவின் மூலம் மோட்ச தீப வழிபாடும் நடைபெற்று வருகின்றது.






விநாயகருக்கென்றே பிரத்தியேகமான திருத்தலத்தில் வருகின்ற திங்கட் கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொண்டாட இருக்கின்றார்கள். அதனை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம். அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அடியார் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு மூத்தோன் அருள் பெற வேண்டுகின்றோம்.






விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நாம்  சென்று பார்த்த போது, கோயிலுக்கு வெளியே தனி மேடை அமைத்துக் கொண்டு இருந்தார்கள். இன்னிசை நிகழ்ச்சியும் உண்டு. நம் தமிழக ஆளுநர் அன்று கோயிலுக்கு வந்து சிறப்பு சேர்க்க உள்ளார்கள்.








இடர்களை நீக்கும் இடம்புரி கணபதியையும் , வளங்களை அருளும் வலம்புரி கணபதியையும் ஒரு சேர வணங்கி, வாழ்வில் வளம் பெற அனைவரையும் நம் தளத்தின் சார்பில் அழைக்கின்றோம். மேலும் சென்ற வாரம் நடைபெற்ற மோட்ச தீப வழிபாட்டின்போது, இத்திருக்கோயிலை காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுளோம். இதோ தங்களின் பார்வைக்கு.



இணையத்தில் இங்கே பார்க்கலாம். மிக மிக அற்புதமான காணொளித் தொகுப்பை வெளியிட்ட திரு.யாணன் ஐயா அவர்களுக்கும் நம் தளத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

Friday, August 30, 2019

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...

அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.


-கொங்கணார் கடைக்காண்டம்.

ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது  என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..சரி..இந்தப் பதிவில்  அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தர சித்தம் கொண்டுள்ளோம். இந்தப் பதிவிற்காக இணைப்பு படங்களை தேடிய போது தான், சட்டென்று நமக்கு இவர் நினைவிற்கு வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லட்சக்கணக்கில் மக்கள் தரிசனம் பெற்று வந்துள்ளார்கள். தரிசனம் பெறாத அன்பர்களுக்குகா இங்கே அவரை அருள் தர வேண்டுகின்றோம். வேறு யார்? ஆம்.அத்தி வரதரே ஆவார். அகத்தியர் உத்தரவிற்கும் வரதருக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பதிவின் முழுமையில் நீங்களே உணர்வீர்கள் என்று நம்புகின்றோம்.

























  பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோவில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில் முதலாவதாக தரிசிக்கலாம். வேண்டும் வரமெல்லாம் தரும் இந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் அப்படி என்ன ரகசியங்கள் உள்ளது என்று பார்ப்போம்....

  இக்கோவிலில் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி 2019 ம் ஆண்டு  தரிசனம் தந்தார் நம் வரதர். பிறகு மறுபடி நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.அடுத்த தரிசனம் 2059 ஆண்டில் தான். இப்போது மூலவர் கற்களில் உருவாக்குகிறார்கள். கற்சிற்ப காலத்துக்கு முன்னால் அத்தி மரத்தாலேயே இறை திருவுருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கும் அத்திமரம், எத்தனை வருடம் நீரில் ஊறினாலும் கெட்டுப் போகாது என்பதற்கும் சாட்சியாக இந்த அத்திவரதர் விளங்குகிறார். அந்த அத்தி வரதரிடமே விண்ணப்பம் வைக்கின்றோம். நம் குருநாதர் காட்டிய வழியில் அத்தி வரதா! லோக ஷேமமாக இருக்க அருளுங்கள் என்று வேண்டுவோம்.

 மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
தாயார் : பெருந்தேவி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்

 உற்சவருக்கு, “அழைத்து வாழ வைத்த பெருமாள்’ என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

 கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

 வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

 ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

 காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன

 ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, அல்லது  இருமுறைதான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும்.

அகத்தியர் பெருமான் ஜீவ நாடியில் உரைத்தது

"ஆவணி மாதம் சூர்யன் ஆட்சி இதனுடன் நெருப்பு கிரகமான செவ்வாய் கூடின 10.8.2019 அன்று முதல் காடுகள் நில தலைவனாகிய மால் மாயோன் நிலத்தில் (காடுகளில்) நெருப்பு  குற்றம் ,மலை சரிவு கடுமையான பாதிப்புகள் உண்டாக ஏதுவாக வரும் ஓர் திங்கள் இது தொடர அபயம் தரும் மாயோன் திருமாலை போற்றி துதி செய்து கார்மேகனிடம் வேண்டுதல் வையுங்கள்.

ஆவணி திருவோணம் (11.09.2019) மிகவும் நல்ல தருணம். நிலம், நீர் ,நெருப்பு இதிலிருந்து உயிர்களை பயிர்களை தருக்களை காக்க ஏக மனதாக திருமாலை போற்றி சங்கல்பம் செய்து காப்பவன் அருளால் நலம் அடையுங்கள்."

ஆகவே அன்பர்களே இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாடு செய்து இயற்கையை காக்க சங்கல்பம் வைக்க வேண்டுகிறோம்.மாதம் முழுவதும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ஆவணி திருவோணம் (11.09.2019) அன்றாவது பெருமாள் வழிபாடு செய்ய வேண்டுகிறோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா  தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக!!!

நம் தளம் சார்பில் பெருமாள் கோயிலில் ஆவணி திருவோணம்  வழிபாடு நடைபெற அகத்தியரிடம் வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அத்தி பூத்தாற்போல(40 ஆண்டுகளுக்கு ஒரு முறை) கிடைக்கும் அத்தி வரதர் தரிசனம் ! - https://tut-temples.blogspot.com/2019/07/40.html