நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக
வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும்
அகத்தியரை வழிபட முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி
வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று
வந்தனர். இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக
வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல்
பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை
தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன்,
கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. இதையடுத்து கேரள
வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல்
சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர
அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்
காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு
அனுமதி வழங்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில்
இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் பயணிக்கலாம். காலை 6 மணி
முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில்
நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம். பஸ் நிறுத்தத்தில்
இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை
அடையலாம். போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு
பெற்று பயணம் துவங்கலாம். தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை.
ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு
செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை நடைப்பயணம் தொடங்கும்.
முதல்
அரைமணி நேரப்பயணத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து
சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு
போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த
வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் என்ற
இடம் நம்மை வரவேற்கும்.
அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள்
தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க
வைக்கப்படுவர். மறுநாள் காலை அதிருமலையின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு
மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை
மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென்
பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு மீண்டும் நடைபயணம்
தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற
இடம் வரவேற்கும். இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம்
கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை
பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (கேரளத்தவர்கள் இங்கு வந்து
பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை
என்றழைக்கப்படுகிறது.
இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம்
உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை என்று
அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின்
குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த
தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை
பயணத்தை தொடர வேண்டும். செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள
கயிறு (ரோப்) பிடித்துக் கொண்டு கவனத்துடன் ஏறிச் சென்றால்
கடல்மட்டத்தில் இருந்து சுமார் 6350 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை
அடையலாம்.
அங்கு சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த
சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம்
மறந்து, இந்த தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்ற பரவச நிலை
பக்தர்களுக்கு ஏற்படும்.
இனி 7 ஜனவரி 2024 அன்று கிடைத்த நம் குருநாதர் தரிசனத்தை இங்கே பகிர உள்ளோம். ஒவ்வொரு அருள்நிலைகளை பார்த்து கண்கள் வழியாக உள்ளத்துள் எடுத்து செல்லுங்கள்.
மேலே நீங்கள் காண்பது முதல் நாள் தொடங்கி, அடுத்த நாள் காலை வரை உள்ள நிகழ்வின் துளிகள். இங்கே நாம் அடுத்து பொதிகை வேந்தர் தரிசனம் காண உள்ளோம். இரண்டாம் நாள் காலை 7 மணி அளவில் மலை ஏற ஆரம்பித்தால் நாம் சுமார் 10 மணி அளவில் பொதிகை வேந்தர் தரிசனம் பெறலாம். இனி நாம் காண கிடைக்காத நம் குருவின் தரிசனம் பெற உள்ளோம்.
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் தரிசனம் ..உள்ளத்தில் பெருங்கோயிலை கட்டி, அங்கே நம் குருநாதரை வைக்க வேண்டும் என்று அல்லவா விழைகின்றோம். அனைத்தும் குருவருளால் எனும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றுகின்றது. எப்படி இருக்கின்றது இன்றைய தைப்பூச சிறப்பு பதிவு. தங்களின் கருத்துக்களை கூறவும். இன்றைய நாளில் நாம் கூடுவாஞ்சேரியில் பெட்ரா வள்ளலார் தரிசனத்தில் பின்வரும் பாடல் கேட்டு மகிழ்ந்தோம். நாமும் இங்கே பாடி மகிழ்வோம்.
1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
4. என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
5. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
6. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
7. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
9. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
10. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-