"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, March 30, 2020

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க இன்றைய பதிவில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். ஷஷ்டி என்றாலே முருகன் தான்.  எப்படித் தான் அழைப்பது ? முருகா..குமரா..வேலவா..கார்த்திகேயா. கந்தா..கடம்பா..ஷண்முகா..அழகா... முருகனைப் பாட தமிழ் போதுமா? என்று யாம் அறிந்திலோம். இப்பொது தான் கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்றவை படித்து வருகின்றோம். காரணமின்றி காரியமில்லை என்று சொல்லுவார்கள், அது போல் தான் இந்தப் பதிவும் என்று சொல்லலாம்.

வீட்டில் உள்ள பழைய மாத இதழ்களை தூசி தட்டிய போது, முருகப் பெருமான் பற்றி பேசும் திருப்புகழ் மந்திரம் பற்றிய செய்தி கிடைத்தது. ஆம். அந்த மாத இதழ் திருவருள் சக்தி ஆகும். அதனை இங்கே இந்த ஷஷ்டி தினத்தில் பகிர விரும்புகின்றோம். நமக்கு கிடைத்த அந்த முதல்  மந்திரத்தை பார்க்கும் போது தற்போது நிலவி வரும் சூழலுக்கு ஏகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் 

யாருக்குத் தான் மரண பயம் இல்லை.அதுவும் இப்போது நிலவி வரும் சூழல் நம்மை அச்சத்தில் அல்லவா ஆழ்த்துகிறது. உயிர்களை துடிக்க துடிக்க கொன்று, தின்று அருள் வேண்டும் என்று கேட்பது நியாயமா? உடனே சைவமா? அசைவமா? என்று நாம் கேள்விகளை தொடுகின்றோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். மரம், செடி, கொடிகளுக்கும் உயிர் உள்ளதே என்று எதிர் கேள்விகளும் வரும். இதற்கு நம் அருளாளர்களின் வழியைத் தான் நாம் நாடுகின்றோம்.

தெய்வப்புலவர் வள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை பற்றி பேசி இருக்கின்றார் அல்லவா. வள்ளுவர் வாழ்ந்த காலம் வேறு. நாம் வாழும் காலம் வேறு என்றும் நீங்கள் எண்ணலாம். மெய்,அறம் தர்மம் என்பது எப்போதுமே ஒன்று தான்.அதுவும் திரு என்ற அடைமொழியில் உள்ள நூல்கள் அனைத்தும் நம் இறை அருளியவை ஆகும். திருக்குறள், திருவாசகம், திருஅருட்பா, திருப்புகழ், திருமந்திரம்  போன்றவை அனைத்தும் இல்லறம் பேசும் திரு மந்திர நூல்கள் ஆகும்.

குருவழி நிற்பவர்கள் குருவின் பேச்சை கேட்பது தான் சிறந்தது. அதனை ஆராய்ச்சி செய்வதால் நமக்கு யாதொரு பயனும் இல்லை. முருகப் பெருமானையும், சித்தர் மார்க்கத்தில் இருக்கும் அடியார் பெருமக்கள் குரு சொல்லே மந்திரம் என்று கடைப்பிடியுங்கள்.
கொல்லாமை,புலால் உண்ணாமை தவிர்த்தாலே போதும். கந்தன் அருள் உங்களை எப்போதும் காக்கும்.

அப்படி என்றால் பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பும் உண்டு அல்லவா? ஆம். அந்த இறப்பு என்பது நம் பூத உடலுக்கு தான் அன்றி, நம் உயிருக்கு அன்று. கொல்லாமை,புலால் உண்ணாமை கடைபிடித்து கௌமார நெறியில் இருப்போரை காலன் பற்ற மாட்டான், மாறாக நம் வேலன் பற்றுவார். சரி. காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம்  கீழே தருகின்றோம்.



திருப்புகழ் ஒரு கடல் போன்றது. அதில் ஒரு சிறு முத்தைத் தான் எடுத்து இங்கே கொடுத்திருக்கின்றோம்.

பாதி மதிநதி (சுவாமிமலை)
சுவாமிநாதா! மரண பயத்தைத் தீர்த்து,
திருவடியை வழிபட அருள்க.
தான தனதன தான தனதன
     தான தனதன ...... தனதான
பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

இதோ திருமந்திரத்திற்கான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.


     பிறைச் சந்திரனையும், கங்கா நதியையும், மலர்களையும் (கருணையுடன்) சூடிக்கொண்டுள்ள சடைமுடியையுடையவரும் எப்பொருட்கும் இறைவரும் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரரே!

         தனிப்பெருந் தலைவரே!

         கற்கண்டின் பாகினையும் கனிரசத்தையு மொத்த இனிய மொழியையுடைய வள்ளி நாயகியாரது திருவடியைப் பிடித்து வணங்கிய கணவரே!

         கொல்லுவதற்கு என்று கணைவிட்டும், அடைக்கலம் புகுந்ததனால், ஒரு கண்ணைக் கொடுத்துக் காகத்திற்கு அருள் புரிந்தவரும், மாயவல்லபரும், பாவநாசகருமாகிய நாராயணமூர்த்தியினுடைய மருகரே!

         படைப்புத் தொழிலுக்கு முதல்வராகிய நான்முகக் கடவுளுடன் ஏனைய தேவர்களும், தங்கள் தங்கள் உலகங்களைப் பண்டுபோல் அரசுசெலுத்தி ஆளும்படி அவர்கட்குற்ற சிறையை நீக்கி மீட்டு, (தாள ஒத்துக்கிசைய) ஆடுகின்ற மயிற்பரியின் மீது எழுந்தருளி, தேவர் குழாங்கள் சூழ்ந்துவர பவனி வந்த என்றுமகலா இளமை யுடையவரே!

         மாமரங்கள் வளம்பெற மிகவும் வளர்ந்துள்ள குளிர்ந்த சோலைகள் பல சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையின் மீது உறைகின்றவரே!

         சூரபத்மனுடைய வச்சிரயாக்கை பிளவுபட்டழியவும் கடல் வற்றவும் வேற்படையை விட்டருளிய வல்லபத்தையுடைய பெருமித மிக்கவரே!

         கூற்றுவன் அடியேனிடம் அணுகாவகை உமது திருவடித் தாமரைகள் இரண்டையும் வழிபட்டு உய்யுமாறு அருள்புரிவீர்.



என்ன அன்பர்களே.. இந்த திருமந்திரந்தை அனுதினமும் பாராயணம் செய்யலாம் அல்லவா? மீண்டும் சொல்கின்றோம். திருப்புகழ் பற்றி நாம் நம் தலத்தில் பேசுவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் முருகன் அருள் முன்னின்று நம்மை வழிநடத்துவதால் தான் இது போன்ற பதிவுகள் அருளப்படுகின்றது. நம் தளத்தின் சேவைகள், பதிவுகளை படித்து வரும் அன்பர்களுக்கு இந்த செய்தி உறுதியாக விளங்கும் என்று நம்புகின்றோம். நம்மை வழிநடத்தும் முருகப் பெருமான் மற்றும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பதம் பற்றி தான் நம் பயணம் நடந்து வருகின்றது. இப்பிறவி விட்டால் எப்பிறவி வாய்க்குமோ  என்று யாம் அறிந்திலோம். கிடைத்தற்கரிய இப்பிறவியில் நம்மை வழிநடத்தும் குருநாதரின் தாள் என்றும் பணிவோம்.

பதிவின் ஆக்கத்தில் உதவி: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கலையரசு P.D. ஜெகதீஸ்வரன் அவர்கள்

இன்னும் திருப்புகழ் படிப்போம்.

மீள்பதிவாக:-

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

No comments:

Post a Comment