"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 7, 2019

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1)

 அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

நாம் ஏற்கனவே கூறியது போல், வள்ளிமலை தரிசனம் நம்மை இன்னும் பக்தியில் ஆழ்த்துகின்றது. பக்தி மட்டுமா என்றால் இல்லவே இல்லை. பக்தியின் உச்சம் காட்டுவதோடு ஞானத்தின் ஆழத்தையும் காட்டுகின்றது. வள்ளிமலை கிரிவலம், மலையேற்றம், தரிசனம், வள்ளிமலை தவப்பீடம், வள்ளிமலை சுவாமிகள் ஆசிரமம் என ஒவ்வொன்றாக வள்ளிமலை அற்புதங்கள் என தொடர்பதிவாக தர நாம் விரும்புகின்றோம்.அகத்தியர் ஜெயந்தி விழாவினை நம் தலத்தில்  ஒரு வாரப் பதிவுகளால் நிறைத்தோம். அதே போல் வள்ளிமலை பற்றியும் வாரம் முழுதும் நாம் பேசலாம். குருவருள் நம்மை உணர்த்த வேண்டி நிற்கின்றோம்.

ஆறுமுகனே தெய்வம்
அன்னோன் குருசாமி
வேறு தெய்வம் சொல்லில் விருதாவே
நூறு தரம் மெய் சொன்னேன்
மெய் சொன்னேன் வேத முடிவிதுவே
பொய் சொன்னால் வாய் புழுத்துப் போம்

என்று தண்டபாணி சுவாமிகள் பாடி இருக்கின்றார். நாம் இப்போது தான் முருகனின் அருட்கடலை சிறு துளியாக பருகி வருகின்றோம். முருகன் அருளை வள்ளிமலையில் நாம் பெற்ற போது, இனி வருடத்திற்கு ஒரு முறை நாம் வள்ளிமலை கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதுள் இறுத்தினோம். ஆனால் குருவருள் மீண்டும் இந்த மாதம் வள்ளிமலை செல்ல கூட்டுவித்துள்ளது. வழக்கம் போல் மலை ஏற்றம், முருகர் தரிசனம், வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் ஆசிரமம், சாதுக்களுக்கு அன்னதானம் என திட்டமிட்டுள்ளோம். நம்முடன் இணைய விருப்பமுள்ள அன்பர்கள் நம்மைத் தொடர்பு கொள்ளலாம்.



 அப்படி என்ன தான் இருக்கின்றது வள்ளிமலையில் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகின்றது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். இந்த குன்றில் குமாரனோடு வள்ளியும் இருப்பதால் வள்ளிமலை மிக மிக பிரசித்தி பெற்றது. மலை என்றால் வலம் செல்வது நன்றாம். இங்கு கிரிவலம் செல்வது நம் வளங்களை தரும் என்பது திண்ணம். திருஅண்ணாமலை போன்று வணிக கடைகள் கிரிவலப் பாதையில் இல்லை. எனவே நாம் நம் விருப்பப்படி கிரிவலம் செல்லலாம். சுமார் 1 மணி நேரம் போதுமானது. இயற்கை காற்று, பசுமை காட்சிகள், வள்ளி பிறந்த இடம் என அனைத்தும் ஒருங்கே சேரும் போது வள்ளிமலை ...வளங்களை அள்ளித்தரும் மலை தான்.




அடுத்து இங்கே மலையேற்றம் மிக சிறப்பு பெற்றது. மலையேற்றத்திற்கு இங்கே படிகள் அமைத்து உள்ளார்கள். இடையில் ஓரிடத்தில் ஓய்வு மண்டபம் வரும். இங்கே சித்தர்களின் அருளாசி பெறலாம். இவையெல்லாம் அடுத்து தொடர்பதிவாக வர காத்திருக்கின்றது. நாம் மலை ஏறும் படிகளில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அல்லது அதனை ஒட்டிய நாட்களில் படி உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்த படி பூசைக்கு பின்னர் ஒரு பெரிய கதையே உண்டு. தொடர்பதிவில் ஒவ்வொன்றாக காணலாம். அதுவரை பொறுத்திருங்கள். நம் குழுவிற்கும் படி பூசை செய்ய அருள் கிடைத்திருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.




நாம் இங்கே அளிக்கும் ஒவ்வொரு பதிவும் நம் திட்டத்தின் படி நடப்பதில்லை. பரம்பொருளின் ஆணைப்படிதான் நடக்கின்றது. 2019 ம் ஆண்டை வள்ளிமலையில் ஆரம்பித்தோம். மீண்டும் நம்மை முருகப் பெருமான் தரிசனத்திற்கு அழைக்கின்றார். இது போன்று வாய்ப்பு கிடைக்கும் போதே நாம் தரிசனம் செய்வதே சிறந்தது. எப்போ அழைப்பாரோ என்று ஏங்கிய நமக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது. தொடர்பதிவில் மீண்டும் அனைவரிடமும் சந்திக்கின்றோம்.


வள்ளிமலை பற்றி அருணகிரிநாதரும், வாரியாருக்கு சொன்னதை படித்தீர்களா? திகட்டாத இன்பம் தருவது வள்ளிமலை. யாரெல்லாம் பெண்களுக்கு தோஷம் செய்து இருப்பதாய் உணர்கின்றீர்களோ, அவர்கள் அனைவரும் வள்ளிமலை முருகனிடம் சரண் அடையுங்கள்.

அப்படியே நாம் கொண்டாடிய ஸ்ரீ கந்த ஷஷ்டி விழாவிற்கு செல்வோமா?




சென்ற ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு முடித்து நாம் கந்த ஷஷ்டி விழாவிற்கு காப்பு கட்ட நமக்கு குருக்கள் பணித்தார். அதே போல் நம் குழுவின் சார்பில் மூவர் காப்பு கட்டிக்கொண்டோம். அன்று முதல் விரதம் இருக்க ஆரம்பித்தோம்.



இதோ..நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்..என்று முருகன் அருளில் திளைக்க நாம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து ஒரு வாரம் வந்தோம்.

 மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு

நூறு முகம் காட்ட இருக்கும் ஆறு முகனை தினமும் தொழுது கொண்டே வந்தோம்.


இதோ..அந்த நாளும் வந்தது. நாமும், சிவசங்கர்,பத்ம குமார் மூவரும் அன்று மாலை கோயிலை அடைந்தோம். முதன் முதலாக சூர சம்ஹாரம் காண இருக்கின்றோம். அன்று மாலை முழுதும் முருகா..முருகா என்று ஒலித்து கொண்டே இருந்தது. 

முருகன் கோயிலின் முன்னே வேல் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் உற்சவர் இருக்கும் இடத்திற்கும் சென்றோம். நேரம் செல்ல செல்ல நமக்கு சற்று பதட்டமாக இருந்தது. குருக்கள் பூசையை ஆரம்பித்தார். இதோ சற்று நேரத்தில் வேல் வாங்கி சூர சம்ஹாரம் செய்ய முருகன் புறப்பட இருக்கின்றார். நாமும் முருகனுடன் செல்ல இருக்கின்றோம்.



அழகெல்லாம் முருகனே..அருளெல்லாம் முருகனே..என்று கேட்டிருப்போம், மேலே பாருங்கள்..பார்த்தால் இது புரியும். 



கந்த ஷஷ்டி விழா பற்றி கோயில் குருக்கள் சிறிய உரை நிகழ்த்தினார். மாலை நேரம் இரவு நோக்கி நெருங்கி கொண்டிருந்தது. நாமும் நம்முள்ளே உள்ள தீய குணங்களை சம்ஹாரம் செய்ய முருகனிடம் வேண்டினோம்.
நம் அன்பர் பத்ம குமார் முருகனுக்கு குடை பிடிக்க தயாராகி விட்டார். முருகனுக்கு குடை பிடிக்க இவர் ஒரு வாரம் விரதம் இருந்துள்ளார். சும்மாவா..சாட்சாத் அந்த பரம்பொருளின் கருணை நமக்கு சும்மா கிடைக்குமா என்ன?






இன்னும் சற்று நேரத்தில் முருகன் வேல் வாங்கப் போகின்றார். வேல் வாங்கி விட்டு சூரனை சம்ஹாரம் செய்ய புறப்பட போகின்றார். மூன்று வேல்களை ஒவ்வொன்றாக முருக அடியார்கள் வாங்கினார்கள். நமக்கு கதாயுதம் கிடைத்தது. அப்படியே வாங்கி விட்டு, முருக சரணம் விண்ணப் பிளக்க முருகன் கோயிலை விட்டு வெளியே வந்தார்.


அலைகடலென கூட்டம் வந்துவிட்டது. இதற்கு மேல் நாம் காட்சியை பதிவு செய்யவில்லை. சிவசங்கர் முருகனை ஒருபக்கத்தில் தூக்கி கொண்டு வந்தார். பத்மகுமார் குடையையே அப்படி,இப்படி என ஆட்டிக்கொண்டு வந்தார். நாம் முருகனுக்கு முன்னே மூன்று வேல் உள்ள படையில் ,படை வீரனாக சென்றோம். கோயிலுக்கு வெளியே செல்ல, இருள் சூழ்ந்து விட்டது.
முதலில் சிங்க முகன் முருகனிடம் மோதுவதற்கு ஓடோடி வந்தார். முருகன் ஒரு வேல் சென்று தலையை கொய்தது.இரண்டாவதாக கஜ முகன் ஒரு கை பார்க்க வந்தார். முருகன் சும்மா விடுவாரா என்ன? மீண்டும் கஜமுகன் தலையைக் கொய்து அனுப்பினார். இறுதியில் சூரன் வந்தார். இவர் ஒரே முறை வரவில்லை. மூன்று முறை முருகனிடம் வந்தார். முருகப் பெருமான் மூன்றாவது முறை சூரனை சம்ஹாரம் செய்து சேவலாக மாற்றினார்.இது செய்தியாக பார்த்தால் ஒன்றும் விளங்காது. நேரில் சென்று பார்த்தால் தான் நாம் சொல்ல வரும் விஷயம் புரியும். நாம் அப்படியே கண்ணீர் கடலில் மிதந்தோம். நம்மை முருகப் பெருமான் அவரது போர்ப் படையில் முன்னே நிறுத்தி உள்ளார் என்றால் என்னே நாம் செய்த புண்ணியம். சூர சம்ஹாரம் முடிந்து உள்ளே சென்ற முருகப் பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை என்று தொடர்ந்தது.
நாம் உள்ளே அரோகரா! அரோகரா என்று கோஷமிட்டுக் கொண்டே உள்ளே சென்ற போது, சில அடியார்கள் நம் காலை தொட்டுக் கும்பிட்டார்கள். முருகா சரணம் என்று அவன் புகழ் ஓதி, போர் கருவிகளை வேலொடு கொடுத்தோம்.
மீண்டும் இரவு சுமார் 9 மணி அளவில் கோயில் சென்று முருகனை தரிசித்தோம், நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்... என்று நமக்குத் தோன்றியது.


ஆம். நம்மிடம் உள்ள தான், தனது என்ற பற்றுக்களை கொஞ்ச கொஞ்சமாக கந்த ஷஷ்டி சூர சம்ஹாரத்தில் அழித்து விட்டார் என்று இன்று நம்மால் உணர முடிகின்றது.

சென்ற ஆண்டு செப்டம்பரில் கொண்டாடிய போது நமக்கு சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலர் பிரசாதம் கிடைத்தது. இன்னும் ஓராண்டு முழுமைக்குள் தற்போது ஜூலை மாதம் நேரிலே சென்று ஸ்ரீ சிங்காரவேலர் தரிசனம் பெற்று வந்தோம். விரைவில் தனிப்பதிவாக தருகின்றோம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பதும் நமக்கு சத்தியமாக சாத்தியப்பட்டிருக்கின்றது.

எப்படியோ.. நம் கனவிலும் நினையாத கந்த ஷஷ்டி விரதம் நாம் முதன் முதலாக கைக்கொண்டிருக்கின்றோம். அடுத்த ஆண்டில் இன்னும் சீர்பட முருகனருள் வேண்டி நிற்கின்றோம். இந்தப் பதிவின் மூலம் சிவசங்கர் & பத்மகுமார் அவர்களுக்கும், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் குருக்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எப்படிச்  செல்வது ?

வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து
நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

No comments:

Post a Comment