"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 1, 2019

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்

 வாழ்வாங்கு வாழ

இன்று முதல் ஒரு புதிய முயற்சியாய் - வாழ்வாங்கு வாழ என்று ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்க உள்ளோம்.இந்த பதிவு கேள்வி பதில் வடிவில் இருக்கும். யாருக்கு தான் கேள்விகள் இல்லை.எத்தனையோ ஆயிரமாயிரம் கேள்விகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த கேள்வி பதில் பதிவிற்கு விடை தருபவர் திரு. ராம் மனோகர் அவர்கள். அவருடைய தளத்தில் இருந்து அவரின் அனுமதியோடு இங்கே சுவாரசியமான கேள்வி பதில்களை பகிர்கின்றோம்.வழக்கம் போல் தள வாசகர்கள் தங்களின் கருத்துக்கள் மூலம் வழி நடத்தும் படி கேட்டுக் கொள்கின்றோம்.ஏதேனும் சந்தேகம் - ஆன்மிகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தமாக இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.

வாழ்வாங்கு வாழ  என்ன செய்ய வேண்டும்?உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உயிர்  கலங்காதிருக்க வேண்டும். மன வளம் பெற்று இருக்க வேண்டும்.இங்கேயே ஒரு கேள்வி ஆரம்பமாகிவிட்டது.உயிர்  என்றால் என்ன? மனம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா ? அலல்து வேறு வேறா? அப்பப்பா ! எக்கச்சக்க ஓட்டம் நடைபெறுகின்றது.இது போன்ற நடைமுறை சிக்கலான கேள்விகளுக்கு தான் இங்கே நாம் விடை காண இருக்கின்றோம்.
வாழ்வாங்கு வாழ நாம் முதலில் நாம்  வாழ்த்திப் பழகுவோம்.

     ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன!
வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச்  சிறியவர்கள் சந்திக்கும்போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர்தம் மரபு!
மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன! இவ்வாறு வாழ்த்தும்போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும் பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக்கொள்வர்.
அது மட்டுமன்றி தமிழர்கள் இயற்கையையையும் இந்த பிரபஞ்ச வெளியையும் வாழ்த்துகின்ற தன்மையை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இயற்கையிடமிருந்தும் இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். இன்றுவரை தமிழகம் வந்தாரை வாழவைத்து அச்சமின்றி வாழும் சூழலுடன் (இத்தனைக்கும் தன்னுடைய வளங்கள் அனைத்தையும் மற்ற இனத்தவரிடம் இழந்துவிட்டு) வாழ வைத்திருப்பதே இதற்கு சாட்சியுமாகும்.

வாழ்த்துகின்ற எண்ணங்களுக்குள்ள மகத்தான ஆற்றல் அப்படி! வாழ்த்துதலின் சிறப்பியல்புகளைப் பற்றி நமது தமிழரிஞர்கள் எத்தனையோ முறை எடுத்துரைத்தும் வாழ்த்துதல் பற்றிய விழிப்புணர்வும் அதனை நமது வாழ்வின் ஒரு அங்கமாகப் புதுப்பித்துக் கொள்ளும் மன நிலையும் இதுவரை நமக்குள் ஏற்படவே இல்லை!
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வாழ்த்துவோம். வாழ்வாங்கு வாழ்வோம் !!


கேள்வி - எதையாவது எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போடுகிறார்களே ஏன் ?





இராம் மனோகர் - முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது வழக்கமாக இருக்கிறது. பழைய காலத்து ஏடுகள், கலவெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதால், இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். நாத்திக வாதம் பேசுவபவர்கள் கூட ''எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக வட்டமும், கோடும் போட்டுப் பார்த்து  விட்டு எழுதத் துவங்கவதே பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது'' என்று சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது.



 முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி.
 இரண்டாவது உரு நேர் கோடு.
 மூன்றாவது வட்டம்.
 நான்காவது பிறை மதி.
 ஐந்தாவது பிந்து.
இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த  சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம். பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ  வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்றும். காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

என்ன பிள்ளையார் சுழி பற்றித் தெரிந்து கொண்டோம் அல்லவா? 

கேள்வி - குருவை அடைவதற்கு நமக்கு தகுதி வேண்டும் என்றுதான் சொல்கிறீர்கள். அது என்ன தகுதி என்று சொன்னால் தானே எங்களுக்கும் தெரியும் ?

இராம் மனோகர் - பொதுவான கோட்பாடு என்னவென்றால், யோக முயற்சியில் ஈடுபடும் சாதகர்களுக்கு உடல், மனம், உயிர் இவற்றின் இயக்கம் சீராகவும் சமனாகவும் இருக்க வேண்டும். முதலில் மனமானது சீராகும் பொழுது ஒவ்வொன்றாகச் சீராகி வரும். அப்படி மனதைச் சுத்திகரிப்பதற்கான முயற்சியை திரிகரணச் சுத்தி என்பார்கள். அதாவது

''மனஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேக மஹாத்மனாம் |
மனஸ்யன்யத் வசஸ்யன்யத் கர்மண்யன்யத் துராத்மனாம் ||'' என்கிறது நீதி சாஸத்திரம்.

மனம், வாக்கு, செயல் இவைகளில் முரண்படாமல், தூய்மையைக் கடைபிடிப்பவர் மகாத்மா. ஒன்றுக்கொன்று முரண்படுபவர் துராத்மா எனப்படுகிறது. அதைத்தான் வள்ளல் பெருமான் ''உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்'' என்பார். மனம் ஒன்று நினைக்க, வாய் ஒன்று பேச, செயல் ஒன்று நடக்க என்று ஒன்றுக்கொன்று முரண்படும் பொழுது மனதில் கள்ளத்தனம் மிகுந்து விடும். கள்ளத்தனம் என்றால் பொய். உண்மைதான் இறைவன். எனவே உண்மையாக இருந்தால்தான் மனத் தூய்மை ஏற்படும். எனவேதான் வள்ளுவர் ''புறம்துய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும்'' என்றார். கள்ளத்தனம் மிகுந்தவர் மனதில் அமைதி என்பது அறவே இருக்காது. அமைதியற்ற மனமானது சலனமுற்ற நிலையில் தன் வலிமையை இழப்பதோடு, நமக்கு வசப்படாது. இதனால் உடல் மற்றும் உயிர் சக்திகளுக்கும் இழப்பு ஏற்படும்.
அகத்தியர் பெருமான் சொல்லும் பொழுது,

''மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே!!!!'' என்பார்.



முதல் வரியில் மந்திரம் செபிக்க வேண்டாம் என்றார் சரி. அது என்ன கடைசி வரியில் மந்திரம் செம்மையாமே எனறு சொன்னார் ? நாம் யோக முயற்சிகளில் மந்திரங்களை செபிப்பது எதற்காக ? நமது ஆதாரச் சக்கரங்களாகிய தாமரைகளின் இதழ்களில் உள்ள இதழ்களின் அட்சரங்களைத் தூண்டி விட்டு, அவைகளில் அதிர்வை ஏற்படுத்தி, சீராக இயங்கச் செய்து, பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து திரிகரணங்களையும் வலிமைப்படுத்தி அதன் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகத்தான். மந்திரங்கள் என்பது ஒரு வகையான யுக்தி. மந்திரங்கள் சித்தியடைய வேண்டும் என்றால் யந்திர ரகசியங்கள், தந்திர வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் பஞ்சபூதங்களோடு மந்திரங்களை இணைத்து செயல்பட வைக்கக் கூடிய உபாயங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே மந்திரம் சித்தியாகி மனம் செம்மையாகும். மனதைத் ஸதிரப்படுத்துவதற்குத்தான் யோக முயற்சிகளில் மந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் ஒரு மனிதனானவன் தனது சுய முயற்சியால், நன்னடத்தை, ஒழுக்கமான வாழ்க்கை, மன அமைதி இவற்றைப் பெற்று விடுகிறன் என்றால், அவனுக்கு இத்தகைய யோக முயற்சிகள் ஒன்றும் தேவையில்லை என்கிறார்.
மனம் செம்மையடைய என்ன என்ன செய்ய வேண்டும் ? மனதில் நல்லதையே நினைக்க வேண்டும். குறிப்பாக ''நான்'' என்கிற அகந்தை அறவே இருக்கக் கூடாது. தன்னை, தான் என்கிற எண்ணத்தை விட்டு விடுவதே யோக முயற்சிக்கு வித்து என்பார் ஔவையார். அது போலவே கடும் சொற்களை ஒருவன் பேசுகிறான் என்றால், அதற்குக் காரணம் அவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்பதினாலேயாகும். அன்பு இல்லாத உள்ளத்தினால் அறம் பாழாகும். வாழ்வே விஷமாகும். வன் சொல் வாயில் மட்டுமல்ல அகத்திலும் இருக்கக் கூடாது. நீரில்லாத மரம் வாடி விடுவதைப் போ, அன்பு இல்லாதவன் வாழ்வும் வறண்டு போகும். அன்பு நம் ஒவ்வொரு செயலிலும் நிரம்பி நிற்க வேண்டும். அன்பைப் பெருக்கி, அதை மனதிலும், சொல்லிலும், செயலிலும் பாய்ச்சுவதே திரிகரண சுத்தியே தவிர வேறொன்றுமில்லை.

யோக முயற்சியைப் பொருத்த வரை இது தவிர பஞ்ச சுத்திகள் என்று உண்டு. அவை ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, மந்திர சுத்தி, திரவிய சுத்தி, தேவ சுத்தி என்பனவாம். ஆத்ம சுத்தி என்றால் சாதகன் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வது. பூத சுத்தி, ப்ராணாயாமம், நியாஸம் இவையெல்லாம் இதில் அடங்கும். தான் தவம் செய்யும் அல்லது வழிபாடு செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது ஸ்தான சுத்தியாகும். மந்திர சுத்தி என்றால் மூல மந்திரத்தை மற்ற அட்சரங்களோடு சேர்த்து ஒரு முறை ஆரோகணமாகவும், ஒரு முறை அவரோகணமாகவும் கூறுவது. திரவிய சுத்தி என்பது வழிபாட்டிற்குரிய திரவியங்களை நீர் அல்லது கோமேயம் கொண்டு சுத்தம் செய்வது. தேவ சுத்தி என்பது வழிபடும் தேவதையை அல்லது தியானிக்கும் இஷ்ட தெய்வத்தை பிராணப் பிரதிஷ்டை செய்வது.

சுத்தி என்பதே சித்து என்ற ஆன்மப் பயிற்சியால் கிடைப்பதுதான். எனவே இதற்கு மனம், உடல், ஜீவாத்மா தூய்மையாக இருக்க வேண்டும். அத்தகைய தூய்மை ஒழுக்கத்தினால் மட்டுமே அமையும். மெய், வாய், கண், மைக்கு, செவி ஆகிய கர்ம இந்திரியங்கள் மூலம் நல்லதையே நுகர வேண்டும். இது இந்திரிய ஒழுக்கம் எனப்படும். நான் என்ற அகந்தையற்று இருப்பது, கோபம், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய உணர்வுகள் அற்று இருப்பது, மனதை இடைவிடாது புருவ மத்தியில் நிறுத்துவது இதெல்லாம் கரண ஒழுக்கம் எனப்படும். சாதி மத பேதம், ஆண், பெண் பாகுபாடு மற்றும் உயர்ந்தவர், தாழந்தவர் என்ற வேறுபாடுகளற்று இருப்பது ஜீவ ஒழுக்கம். அனைத்து உயிர்களும் சமமே. அனைத்தும் பசுகள். இறைவன் ஒருவனே பதி என்கிற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பது ஆன்ம ஒழுக்கம்.

ஆன்ம ஒழுக்கம்தான் குருவை அடையத் தேவையான தகுதி. அத்தகைய ஒழுக்கங்களை கடைபிடித்தால்தான் திரிகரண சுத்தி ஏற்பட்டு மனமது செம்மையாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எப்படிப்பட்ட யோக முயற்சிகளும் தேவையில்லை. தக்க சமயத்தில் தேவியானாவள் தானே உச்சிக்குப் போய் சிவனைக் கலந்து நிற்பாள். அது இயலாத போதுதான் யோக முயற்சிகள் தேவைப்படுகின்றன.



இதுபோல் இந்த தொடர் பதிவைத் தொடர்வோம்.

- மீண்டும் அடுத்த கேள்வியில் சந்திப்போம் 

2 comments:

  1. நல்ல சத் சங்கம் ஆக இம்முயற்சி அமையட்டும்.

    ReplyDelete