2017 ஆம் ஆண்டில் ஆடி மாதம் தொடங்கும் முன்பே நாம் நேற்று சக்தியின் தரிசனம் கண்டோம்.இது சிவத்தின் அருளாலே கிடைத்தது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள்.இது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் அவருடைய கையில் வெறும் பொம்மை தானே.ஆட்டுவிப்பர் அவரன்றோ.? நாம் தரிசித்த ஆலய தரிசனத்தை இங்கே யாம் பெற்ற இன்பம்,பெறுக இவ்வையகம் என்பது போல்,இந்த பதிவில் பகிர இருக்கின்றோம். முன்னரே அறிவித்தபடி, நம் அன்பர்கள் தங்களது இருப்பிடத்தில் உள்ள கோவில்களின் விழா நிகழ்வுகளை ஓரிரு வார்த்தைகளில் நமக்கு அறிவித்தால், அதனை இங்கே எதிர்வரும் பதிவுகளில் வெளியிட தயாராக உள்ளோம்.
கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள சக்தியின் தரிசனத்தை இனி வரும் நாட்களில் காணலாம்.சரி !
இன்றைய பதிவிற்கு செல்வோமோ?
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் உள்ள இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.மேட்டுபாளையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து போக்குவரத்து உள்ளதால்,கோவிலுக்கு எளிதில் செல்லலாம். தோரண வாயில் நம்மை வரவேற்றது,உள்ளே சென்றவுடன் மிகவும் பெரிய சிலைகள் தென்பட்டன. நமக்கு பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
விசாரித்துப் பார்த்தோம்.சரியான தகவல் கிடைக்கவில்லை.ஆனால் மக்கள் இவர்களை சுற்றி வந்து வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.நாமும் வணங்கி விட்டு, அந்த சூலம் உள்ள பகுதியைக் கண்டோம்.இங்கே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக அசைவம் படையல் செய்கின்றார்கள்.அந்த இடம் தான் நீங்கள் பார்க்கின்ற சூலம் உள்ள பகுதி.அதன் அருகில் ஆட்டுக்கிடா வை சாமி வர வைத்து, படையல் செய்கின்றார்கள்.
சைவம்,அசைவம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்.அதை பற்றி இங்கே யாம் பேச/விவாதிக்க விரும்பவில்லை. நம்முடைய நோக்கம் சக்தியின் தரிசனம் மட்டுமே. அதனைக் கடந்து சென்றால் உப்பு,கற்பூரம் வாங்கி ஒரு மேடு போல் பிரார்த்தனையை செலுத்துகிறார்கள்.
இங்கே குளிக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் பல இடங்களில் சூழல் அதிகம் என்பதால் பார்த்து,கவனமாக குளிக்க வேண்டும்.இது போன்ற தரிசனம் செய்யும் போது,நீர்நிலைகளில் கவனம் தேவை.
தரிசனம் முடித்து நாகர் சன்னதி சென்றோம். சக்தி என்றாலே, நாகர் இல்லாமலா? மேலும் மஞ்சளின் மகத்துவமும் இருக்க வேண்டும் அன்றோ ?
மூலவர் - வனபத்ர காளியம்மன்
தல விருட்சம் - தொரத்திமரம்
தீர்த்தம் - பவானி தீர்த்தம்
பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்பு
மாவட்டம் - கோயம்புத்தூர்
தல வரலாறு:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.
அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. கோவிலையொட்டி மேல்புறத்தில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பானதாகும்.
தாங்கள் எண்ணிய காரியம் நிறைவேற அம்மனை வேண்டி விரதம் இருந்து பக்தர்கள் பூக்குண்டம் இறங்குவார்கள். ஆடிப்பெருக்கன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் அருகேயுள்ள பவானி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பனம் செய்வார்கள்.
7 கல் எடுத்து அவற்றுக்கு விபூதி பூசுவார்கள். பின்னர் சந்தனம், குங்கும் வைத்து படையலிட்டு வழிபடுவார்கள். புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம்.
சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து,ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு. அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.
ஆடி அமாவாசை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெறும். அன்னையை அமாவாசை தோறும் வழிபடுவோர் பில்லி, சூனியம் போன்ற இடர்பாடுகளில் இருந்து விலகி இன்சுகம் பெறுவதாக ஐதீகம். எனவே ஆடி அமாவாசை இந்த கோவிலின் விசேசமான நாளாகும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு டவுன் பஸ் வசதி உள்ளது.
நடைதிறந்திருக்கும் நேரம்...
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.
- அம்மன் புகழ் ஓங்குக!
முந்தைய பதிவிற்கு :-
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html