மீண்டும் சிந்திப்போம்.
Monday, October 24, 2022
கந்த சஷ்டி திருவிழா அழைப்பிதழ் - 25.10.2022 முதல் 30.10.2022 வரை
Wednesday, October 19, 2022
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
2019 ஆம் ஆண்டில் நாம் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் கோடகநல்லூர் யாத்திரை சென்றோம். ஏற்கனவே நாம் சென்ற ஆண்டில் ஒரு பதிவில் பேசினோம். இன்றைய பதிவில் மீண்டும் 2019 ஆண்டில் நமக்கு கிடைத்த கோடகநல்லூர் தரிசனத்தை இங்கே தொடர இருக்கின்றோம். நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.
இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம் என தொடர்ந்து வருகின்றோம். இந்த வகையில் சென்ற ஆண்டில் நம் குழு சார்பில் கோடகநல்லூர் இரண்டாம் பூஜை ஏற்பாடு செய்வதற்கு பணிக்கப்பட்டோம்.
இதோ. இந்த ஆண்டும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கோடகநல்லூர் வழிபாடு பற்றிய அறிவிப்பை இன்றைய பதிவில் குருவருளால் தருகின்றோம்.
அதற்கு முன்பாக சென்ற ஆண்டின் வழிபாட்டு துளிகளை இன்றைய ஐப்பசி ஆயில்ய நன்னாளில் இங்கே முதலில் காண்போம்.
அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை சிறப்பாக நடைபெற பொருளுதவி செய்த அணைவருக்கும், அருளுதவியாக பூஜை சாமான்கள் ஏற்பாடு, அபிஷேகத்தில் உதவுதல், பிரசாதம் வழங்குதல் போன்ற அனைத்து நிகழ்விலும் உடலுழைப்பை நல்கிய அனைவருக்கும் நம் தளம்( தேடல் உள்ள தேனீக்கள் - TUT குழு) சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகு வழிபாட்டை நமக்கு அருளி, வழிகாட்டிய சித்தன் அருள் வலைத்தளத்திற்கு, திரு. அக்னிலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம். அனைத்து அகத்தியர் அடியார்களின் பாதம் பணிந்து நன்றி கூறுகின்றோம்.
நேற்று 12.12.2021 (ஞாயிற்று கிழமை), உத்திரட்டாதி நட்சத்திரம், நவமி திதி அன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, லோகஷேமத்துக்காக, அகத்தியப்பெருமான் ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாளுக்கு, அபிஷேக ஆராதனைகளை செய்கிற நாள்.
நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நமக்கு தெரிவித்த மிகச்சிறந்த/முக்கியமான முகூர்த்த நேரங்களில் ஒன்றான "கோடகநல்லூர் நீளா பூமி சமேத ஸ்ரீ ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு" அபிஷேக ஆராதனைகள் செய்து அருள் பெறும் நாள் வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி (ஞாயிற்று கிழமை) அன்று வருகிறது.
அதை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் வினவியபோது, "பெருமாள் இப்பொழுதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார்." என உரைத்தார். இது நம் குருநாதருக்கு மிகப்பெருமையான விஷயம், ஏன் என்றால் அன்று கோடகநல்லூரில் இருந்து பெருமாளுக்கான சேவைகளை செய்யப்போவதே அவர்தான்.
ப்ரஹன்மாதவ பெருமாளின் அருளாலும், நம் குருநாதரின் அருளாலும், அன்றைய அபிஷேக பூஜைக்கான விஷயங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் கோடகநல்லூர் வந்திருந்து அகத்தியப்பெருமான் நடத்தும் அபிஷேக பூஜையில் கலந்து கொள்ளும்படி "சித்தன் அருள்" சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
அபிஷேக பூஜை காலை 9.30/10 மணிக்கு தொடங்கும். அகத்தியர் அடியவர்கள் முன்னரே வந்து, தாமிரபரணியில் நீராடி பூஜையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
எல்லா வருடமும் போல் உழவாரப்பணிக்கான வாய்ப்பு கிடைத்தால், அகத்தியரின் அடியவர்கள், இயன்றவரை ஏற்று செய்து, அகத்தியர்/பெருமாள் அருள் பெற்றுக் கொள்ளவும்.
அந்த புண்ணிய தினம் ஞாயிற்று கிழமையில் வருவதால், அனைவருக்கும், வந்து பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், முன்னரே அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இப்பொழுதே தெரிவிக்கப்படுகிறது.
அகத்தியப்பெருமானின் கூற்றின் படி அந்த முகூர்த்த நாள் என்பது
எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள்.
தாமிரபரணியின் பெருமையை (இந்த நதி தீர்த்தத்தில் அன்று நீராடினால், அவர்களின் 1/3 பாபத்தை தாமிரபரணி தாய் அழித்து சுத்தம் செய்துவிடுவாள்) அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
அன்றைய தினம், அனைத்து நதிகளும், தாமிர பரணியில் நீராடி தங்களை சுத்தி செய்து கொள்கிற நாள். ஆகையால், அன்று அங்கு நீராடி, அடியவர்களும், தங்களை சுத்தி செய்து கொள்ளலாம்.
அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
சித்தன் அருளை வாசிக்கும், எத்தனையோ அடியவர்களின் வேண்டுதலை/பிரார்த்தனையை நிறைவேற்றிய முகூர்த்த நாள்.
06/11/2022 - ஞாயிற்றுக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.
பூக்கள், துளசி உதிரியாகவோ, மாலையாகவோ, சிறிது பச்சை கற்பூரம், பெருமாளுக்கு பூஜைக்கு வாங்கி கொடுத்து, பிரார்த்தனையை கொடுத்து, அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.
அன்றுகோயிலுக்கு வருகிற அகத்தியர் அடியவர்கள், முடிந்தவரை முகக்கவசம் அணிந்து வரவும். நம்மால் பிறருக்கு ஒரு ஊறு விளைந்து விடக்கூடாது,என்பதில் கவனமாக இருங்கள்.
நெல்லை சந்திப்பை அடைந்தவர்கள், தீவுத்திடலில் உள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில், சேரன்மாதேவி செல்லும் பஸ்சில் நடுக்கல்லூரில் இறங்கி அங்கிருந்து 1 1/2 கி.மீ நடந்தோ, ஆட்டோவிலோ பயணித்து கோடகநல்லூரை அடையலாம்.
பெருமாள் இப்பொழுதே தயாராகிறார் என்கிற வாக்கு மிக சிறப்பான குருநாதர் செய்தி, என்பதிலிருந்து அனைவருக்கும் அருள் கிடைக்க வழி வகுக்கிறார் என்பது உண்மை. ஆகவே, அனைவரும் வந்திருந்து அவர் அருள் பெற்று செல்க, என சிரம் தாழ்ந்து வேண்டிக்கொள்கிறோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
Friday, October 14, 2022
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளம் சார்பில் நடைபெறும் ஆலய தரிசனம், அன்னசேவை போன்ற அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இங்கு தான் செல்ல இருக்கின்றோம் என்று நாம் எதுவும் தீர்மானிப்பதும் இல்லை. இப்படி தான் சென்ற ஆண்டில் தீபாவளி ஆடை தானம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டிலும் சேவை தொடர்கின்றது. அடுத்து நம் தளத்தின் யாத்திரை பதிவின் தலைப்பை பார்த்தாலே புரிந்து இருக்கும். ஆம். திருஅண்ணாமலை யாத்திரை நாளை முதல் இரண்டு நாட்கள் தீபாவளி சேவையாக நடைபெற உள்ளது.
இணையவெளியில் தேடிய பொழுது கிரிவலம் எப்படி செல்ல வேண்டும் என்று திரு.இளையராஜா அவர்களின் குரலில் ஒரு ஒலிக்கீற்றை கேட்டோம். கேட்பதற்கு முன்பு நாம தான் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் போறோம்ல என்று நினைத்தோம். ஒலிக்கீற்றை கேட்ட பின்பு அட..ஒரு தடவ கூட இன்னும் முறையாக கிரிவலம் போகலனு தான் தோணுது. எப்போ இந்த அருள்நிலை நமக்கு கிடைக்கும் என்று அருணா..கருணா..என்று அண்ணாமலையாரிடம் விண்ணப்பிக்கின்றோம்.
அண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் மலை. ஆனால் நாம் நினைக்கின்றோமா என்பது தான் கேள்விக்குறி? நினைத்தாலும் எப்படி நினைக்க வேண்டும்? மனம்,மொழி,மெய்களால் அல்லவா நினைக்க வேண்டும். இந்த நினைப்பில் இருந்து தான் நாம் தொழ முடியும். இப்படி நாம் நினைத்து நினைக்க நமக்கு தொழ வாய்ப்பு கிடைக்கும். அப்படி தொழ ஆரம்பித்து விட்டால்
அண்ணாமலை தொழுவார் வினை வலுவா வண்ணம் அறுமே
என்று திருஞானசம்பந்தர் கூறுவது திண்ணம்.
அதுவும் எப்படி தொழ வேண்டும் என்றால் ஆடிப்பாடி தொழ வேண்டும் என்கின்றார் திருநாவுக்கரசர்.
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும்.
அண்ணாமலை அங்கு அமரர்பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கை தொழுது
கலந்து போற்றும் காதலினால்
உண்ணா முலையாள் எனும் பதிகம்
பாடி தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா
மலைச் சென்று சேர்வுற்றார்
என்று சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் புராணத்தில் கூறியுள்ளார்.
திருஅண்ணாமலை, திருவண்ணாமலை என்று கேட்டாலோ, படித்தாலோ நம்முள் ஒரு வித உணர்வு ஏற்படுகின்றது. இது நம்மை அன்பே சிவம் என்ற நிலை நோக்கி நகர செய்கின்றது அல்லவா? இது தான் அண்ணாமலையாரின், நம் அன்பில் கலந்தோன் உணர்த்தும் நிலை. நாம் பல முறை திருஅண்ணாமலை சென்றாலும் மீண்டும் மீண்டும் ஒரு காந்தமாக இருந்து இரும்பாகிய நம்மை ஈர்க்கும் மலை திருஅண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் மலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருக்கும் மலை. மேலும் திருஅண்ணாமலை என்று சொன்னாலே கிரிவலமும் பிரசித்தம். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.
- மீண்டும் சிந்திப்போம்