"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 18, 2020

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கந்த ஷஷ்டி விரதம் பற்றிய பதிவுகள் நம் தளத்தில் கண்டு வருவீர்கள் என்று நாம் விரும்புகின்றோம். இதற்கு முந்தைய பதிவுகளில்  முருகப் பெருமானின் முதல்  படை வீடாகிய திருப்பரங்குன்றம் பற்றியும், இரண்டாம் படை வீடாகிய திருச்செந்தூர்  பற்றியும்,மூன்றாம் படை வீடாகிய திருவாவினன்குடி பற்றியும் சிறிது கண்டோம். மேலும் திருப்பரங்குன்றம் கவசமும், திருச்செந்தூர் கவசமும், திருவாவினன்குடி கவசமும் படித்தோம். இன்றைய பதிவில் முருகப் பெருமானின் நான்காம்   படை வீடான திருவேரகம்  பற்றி அறிய இருக்கின்றோம். திருவேரகம்  என்ற பெயர் புதிதாக உள்ளதா? ஆமாங்க..சுவாமிமலை திருத்தலம் தான் திருவேரகம் ஆகும்.

முருகப்பெருமானை பற்றி ஒரு பதிவில் உணர்த்த முடியுமா? என்றால் அது முடியாது. அது போலவே திருவேரகம் தலத்தை பற்றியும் நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம்.



முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.

அமைவிடம் :  தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும்,கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும் வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் ஏராளமான குடில்களும் உள்ளன.

சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர்.

இத்தலத்தை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்.

இக்கோயிலின் தல வரலாறு சுவாமிமலையில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு:

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான்,  “பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?”என்று முருகனிடம்கேட்டார். “ஓ நன்றாகத் தெரியுமே” என்றார் முருகன். “அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன். “உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!” என்றார் முருகன்.




அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

நான்கரை அடி உயர சுவாமிநாதன் :

ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்கக் கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்   

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் “தாத்ரி” என்பர். அதனால் சுவாமிமலையை “தாத்ரிகிரி” என்றும் குறிப்பிடுகின்றனர்.மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.

முருகனை போற்றிப் பாடல்கள் :

அருணகிரிநாதர் முப்பத்தெட்டு திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிநாதனுக்குச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். “ஒருதரம் சரவணபவா…” என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.

அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, “சுவாமிநாத பரிபாலயாதுமாம்” என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

மாடக்கோயில் :

சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.




இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.




மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் “கண் கொடுத்த கணபதி” என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.




திருவிழா:

திருக்கார்த்திகை திருவிழா – 10 நாட்கள் – இத்திருவிழாவே இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சித்திரை – பிரம்மோற்சவம் – 10 நாட்கள் வைகாசி – வைகாசி விசாகப்பெருவிழா ஆவணி – பவித்ரோற்சவம் – 10 நாட்கள் புரட்டாசி – நவராத்திரிபெருவிழா – 10 நாட்கள் ஐப்பசி – கந்தசஷ்டிபெருவிழா – 10 நாட்கள் மார்கழி – திருவாதிரைத் திருநாள் – 10 நாட்கள் தை – பூசப்பெருவிழா பங்குனி – வள்ளி திருக்கல்யாண விழா இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடிஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படிதிருவிழா சிறப்பாக நடைபெறுகிறது இவை தவிர கிருத்திகை, மாதப்பிறப்பு,அம்மாவாசை, பௌர்ணமி , சஷ்டி, கார்த்திகை, விசாகம் அன்றும் தமிழ் ,ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

சிறப்பம்சம்

இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும்.

அடுத்து திருவேரகம்  சஷ்டி கவசம் காண இருக்கின்றோம். இன்றைய பதிவில் மேலும் சுவாமிமலை திருப்புகழ் தர விரும்புகின்றோம்.


காப்பு

 அமரர்இடர்தீர அமரம் புரிந்த 

 குமரன் அடி நெஞ்சே குறி,


 துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 

 பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

 நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 

 சஷ்டி கவசந்தனை

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கா ரமாக உதயத் தெழுந்தே
ஆங்கா ரமான அரக்கர் குலத்தை        ... ... 4

வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே        ... ... 8

நான்கு மறைகள் நாடியே தேடும்
மான் மருகோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா (து) என்னை
காணநீ வந்து காப்பதுன் கடனே        ... ... 12

காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் புதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி        ... ... 16

... ஏகாட்சரமாய் ... எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதல் பொருளே
... துவியட் சரத்தால் ... தொல்லுல (கு) எல்லாம்
அதிசயமாக அமைத்தவா போற்றி        ... ... 20

... திரியட் சரத்தால் ... சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
... சதுரட் சரத்தால் ... சாற்றுநல் யோகம்
மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே        ... ... 24

... பஞ்சாட் சரத்தால் ... பரமன் உருவதாய்த்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத் (து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்        ... ... 28

ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறு சிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்        ... ... 32

சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும்ஆ யுதத்தால்
தரங்குலைந் (து) ஓடத் தாரகா சுரன்முதல்        ... ... 36

வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தாய்
சீர்த் திருச் செந்தூர்த் தேவசே னாபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித் திகளருள் ஈசன் புதல்வா        ... ... 40

துட்டசங் காரா சுப்பிர மண்யா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர        ... ... 44

சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க் (கு) அருளும் ஈசா போற்றி        ... ... 48

ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ (டு) உடன்யான்
அருச்சனை செய்ய அனுக்ரகம் செய்வாய்        ... ... 52

பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரொ (டு) என்னைச்
சல்லாப மாகச் சகலரும் போற்ற        ... ... 56

கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்        ... ... 60

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு        ... ... 64

திட்டு முறைகள் தெய்வத சாபம்
குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்        ... ... 68

உன்னுடை நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை
செய்வதுடன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரனே சரணம்        ... ... 72

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 74



சுவாமிமலை திருப்புகழ் 

செகமாயை உற்று என்அக வாழ்வில் வைத்த

     திருமாது கெர்ப்பம் ...... உடல்ஊறித்


தெசமாதம் முற்றி, வடிவாய், நிலத்தில்

     திரமாய் அளித்த ...... பொருள் ஆகி,


மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்

     மலைநேர் புயத்தில் ...... உறவாடி,


மடிமீது  அடுத்து விளையாடி, நித்தம்

     மணிவாயின் முத்தி ...... தரவேணும்.


முகமாயம் இட்ட குற மாதினுக்கு

     முலைமேல் அணைக்க ...... வரு நீதா!


முது மாமறைக்கு உள் ஒரு மா பொருட்குள்

     மொழியே உரைத்த ...... குருநாதா!


தகையாது எனக்கு உன் அடி காண வைத்த

     தனி ஏரகத்தின் ...... முருகோனே!


தரு காவிரிக்கு வட பாரிசத்தில்

     சமர் வேல் எடுத்த ...... பெருமாளே.

வள்ளிபிராட்டியின் தனங்களில் பொருந்த வந்தருளிய நீதிபதியே! பழைய சிறந்த வேதத்தின் ஒப்பற்ற பெரும் பொருள்களுக்கு உட்பொருளாகிய ஓமெனும் ஒரு மொழிப் பொருளை சிவமூர்த்திக்கு உபதேசித்தருளிய குருநாதரே!தடையொன்றும் இன்றி அடியேனுக்கு, உமது திருவடியைக் காணுமாறு அருள் செய்த ஒப்பற்ற திருவேரகத்தில் உறையும் முருகக் கடவுளே! காவிரி நதிக்கு வடபுறத்தில் போருக்குரிய வேலைத் தாங்கி நிற்கும் பெருமிதம் உடையவரே!  உலக மாயையில் சேர்ந்து, என் இல்லற வாழ்வில் அமைந்த அழகிய மனைவியின் கருவில் தங்கி உடம்பில் பத்து மாதம் ஊறி முதிர்ச்சியுற்று, அழகுடன் நிலத்தின் நன்கு தோன்றியக் குழந்தைபோல் தேவரீர் எனக்கு அமைந்து, அடியேன் பிள்ளைப் பாசத்துடன் உம்மை உச்சி மோந்தும், கண்ணில் ஒத்தியும், முகத்துடன் முகம் சேர்த்தும் மகிழுமாறு, நீர் என் மலையன்ன புயத்தில் உறவு செய்து, என் மடியில் அமர்ந்து விளையாடி நாள்தோறும் உமது மணிவாயால் முத்தந் தந்தருள வேண்டும்.

இன்றைய சஷ்டி விரத நான்காம் நாளில் திருவேரகம் கவசம் ஓதி முருகப் பெருமான் அருளை அனைவரும் பெறுவோம். இன்னும் கந்தனைப் பற்றுவோம் ...போற்றுவோம். இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் வாழ்வில் குருவருளும் திருவருளும் பெற அறுபடை வீடு கந்தக் கடவுளிடம் வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருச்சீரலைவாய் மாசித் திருவிழா அழைப்பிதழ் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/02/2020_27.html

 திருச்சீரலைவாய் ஆவணித் திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_20.html

 திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (7) - https://tut-temples.blogspot.com/2019/11/7.html

 திருச்செந்தூரின் கடலோரத்தில்... குருநாதரின் அரசாங்கம் ! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_5.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_12.html

No comments:

Post a Comment