"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 31, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, இதற்கு முந்தைய பதிவில்  தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி அறிந்து கொண்டோம். இன்றைய பதிவில் திருப்புகழ் தலக் கோயிலாக  திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் தரிசனமும், அங்கே பாடப்பெற்ற மூன்று திருப்புகழ் படிக்க உள்ளோம்.

இறவாமற் பிறவாமல், பந்தப்பொற் பார, மனத்திரைந்தெழு என்று மூன்று திருப்புகழ் பாடப்பெற்ற திருப்புகழ் தலமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் அமைந்துள்ளது. முதலில் திருப்புகழ் படித்து மகிழ்வோம்.

திருப்புகழ் 943 இறவாமற் பிறவாமல்  (அவிநாசி)

தனதானத் தனதான தனதானத் ...... தனதான

......... பாடல் .........

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.


திருப்புகழ் 944 பந்தப்பொற் பார  (அவிநாசி)

தந்தத்தத் தானன தானன
     தந்தத்தத் தானன தானன
          தந்தத்தத் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

பந்தப்பொற் பாரப யோதர
     முந்திச்சிற் றாடகை மேகலை
          பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே

பண்டெச்சிற் சேரியில் வீதியில்
     கண்டிச்சிச் சாரொடு மேவியெ
          பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய்

கொந்துச்சிப் பூவணி கோதையர்
     சந்தச்செந் தாமரை வாயினர்
          கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங்

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
     மண்டிச்செச் சேயென வானவர்
          கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே

அந்தத்தொக் காதியு மாதியும்
     வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
          அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி

அங்கத்தைப் பாவைசெய் தாமென
     சங்கத்துற் றார்தமி ழோதவு
          வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
     வெந்துக்கத் தூளிப டாமெழ
          சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
     கொங்கிற்றொக் காரவி நாசியில்
          தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.


திருப்புகழ் 945 மனத்திரைந்தெழு  (அவிநாசி)

தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
     கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
          மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி

வருத்த முந்தர தாய்மனை யாள்மக
     வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
          வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட

எனைக்க டந்திடு பாசமு மேகொடு
     சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
          லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான்

இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
     பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
          இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும்

கனத்த செந்தமி ழால்நினை யேதின
     நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
          கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக்

கடற்ச லந்தனி லேயொளி சூரனை
     யுடற்ப குந்திரு கூறென வேயது
          கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா

அனத்த னுங்கம லாலய மீதுறை
     திருக்க லந்திடு மாலடி நேடிய
          அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா

அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
     நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
          யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.



படம் 1 காசிக்கு நிகரான கேட்டாலே முக்தி தரும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருங்கருணை நாயகி சமேத அவிநாசியப்பர் கோவில்


அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்

அவிநாசி-641654

திருப்பூர் மாவட்டம்

இருப்பிடம்: திருப்பூர் 13 கிமீ, கோயம்புத்தூர் 43 கிமீ

மூலவர்: அவிநாசியப்பர், அவிநாசிநாதர், அவிநாசி ஈஸ்வரர், அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிலிங்கம். பெருங்கேடிலியப்பர்

அம்மன்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி

திருப்புகழ் நாயகன்: முருகப்பெருமான்

தலவிருட்சம்: பாதிரிமரம்

தீர்த்தம்: காசிக்கிணறு, நாகக்கன்னிகை தீர்த்தம், ஐராவத தீர்த்தம்

புராணப் பெயர்: திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி

பாடல்: சுந்தரர், அருணகிரிநாதர் (6 திருப்புகழ் பாடல்)

பழமை: 7-ம் நூற்றாண்டு 

 தலமகிமை:

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களில் முதன்மையான தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி நல்லாற்றின் கரையில் அமைந்துள்ள அவிநாசியப்பர் கோவில் என்பது சிறப்பு. இக்கோவில் 274 சிவாலயங்களில் 205-வது தேவாரத் தலமாகும். இத்தலத்தில் அவிநாசியப்பருடன் கருணையே உருவான பெருங்கருணை நாயகி, திருப்புகழ் பாடல் பெற்ற முருகப்பெருமான், சிறப்பு மிக்க நர்த்தன விநாயகர் ஒருங்கே அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலவிருட்சமான பாதிரிமரம் சித்திரை பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூ பூக்கும். மற்ற சமயங்களில் பூக்காதது என்பது இத்திருத்தலத்தில் மட்டுமே நடைபெறும் அதிசயம். இத்தலத்தில் முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது நம்பிக்கை.

அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இங்கு பாலதண்டாயுதபாணி, சுப்பிரமணியர், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதிகள் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் அருள்கின்றார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் உள்ளது. அருணகிரிநாதர் சுப்பிரமணியர் மீது 6 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.  கோவில் நுழைவாயிலில் ஆனந்தவயப்பட்டு ஆடும் நர்த்தன விநாயகரை தரிசித்தால், வாழ்வு ஆனந்தமயமாகும் என்பது நம்பிக்கை. ஆடல்வல்லானின் மகன் கணபதியை நிருத்த கணபதியாக தரிசித்தால், கலைகளில் தேர்ச்சி பெறலாம் என்பதும் நம்பிக்கை.

சித்திரை பிரம்மோற்சவம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. பூரம் நட்சத்திரத்தன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். 5-ம் நாளன்று 63 நாயன்மார்களுக்கு ஈசன் ரிஷபரூடராக தரிசனம் தருவது சிறப்பு. இக்கோவில் கும்பாபிஷேகம் 1980 ,1993, 2008-ல் சிறப்பாக நடைபெற்றது.     

 தல வரலாறு:

ஊழிக் காலத்தில் தேவர்கள் அஞ்சி புகுந்ததனால் திருப்புக்கொளியூர் (விநாசம் இல்லாததால்) அழியாத தன்மையுடையது. வாரணவாசியில் (காசி) இருந்து ஒரு கிளை விட்டு தென்பகுதியில் கொங்குவளநாட்டில் காஞ்சிமா நதியின் தென்புறம் வேர் ஒன்று சுயம்பாக அவிநாசியப்பர் என்ற திருநாமத்துடன் வெளிப்பட்டது. சுவாமியின் வேர் வரும்போது கூபம் வடிவில் கங்கை நதி வந்ததாக வரலாறு. பார்வதி தேவி வலப்பாகம் வேண்டி பாதிரி மரம் அடர்ந்த இவ்வூரின் பாதிரி வனத்தில் 1000 ஆண்டுகள் தவமியற்றி பெருங்கருணாம்பிகை என்னும் நாமத்துடன் வலப்பாகம் பெற்றார். பிரம்மன் (100 ஆண்டுகள்) ஐராவதம் என்னும் வெள்ளை யானை (12 ஆண்டுகள்) தாடகை (3 ஆண்டுகள்), நாகக்கன்னி (21 மாதங்கள்) வழிபட்டனர். வியாதவேடர்கள், சங்ககண்ணன், யக்ஞ குப்தன், காகம், தருமசேன மகாராஜா ஆகியோர் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம் இதுவாகும். 


இவ்வூரில் வாழ்ந்த கங்காதரசர்மா வேதபதுமை தம்பதிகளின் குமாரன் அவிநாசிலிங்கம் மற்றும் அவனது நண்பன் தாமரைக்குளம் என்னும் தடாகத்தில் நீராட சென்றபோது அவிநாசிலிங்கத்தை முதலை விழுங்கியது. மூன்றாண்டுகளுக்கு பின் அவிநாசிலிங்கத்தின் நண்பனுக்கு உபநயனம் நடந்தது. அது சமயம் அவிநாசியப்பரை வழிபட சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது பரிவாரங்களுடன் திருப்புக்கொளியூர் அடைந்தபோது, ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. அவிநாசிலிங்கம் பெற்றோர்களை சந்தித்து விவரமறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் குளக்கரைக்கு சென்று `’எற்றான் மறக்கான்’ என்று தொடங்கும் தேவாரப் பதிகம் பாடி மூன்றாண்டுக்கு முன் முதலையுண்ட பாலகனை (அவிநாசிலிங்கம்) மூன்றாண்டு வளர்ச்சியுடன் வரவழைத்து அற்புதம் நடத்திய தலமாகும். இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் 3-வது நாளில் நடைபெறுகிறது. 

தல அமைப்பு:

7 நிலை ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நர்த்தன கணபதி சிலைகள் உள்ளன. மண்டபத் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்த தாண்டவர் மற்றும் தில்லை காளியின் சிலைகள் உள்ளன. இத்தலத்தின் மூலவர் அவிநாசியப்பர். இவர் சுயம்பு  லிங்கமாக அருள்பாலிக்கின்றார். இவருக்கு அவிநாசிநாதர், அவிநாசி ஈஸ்வரர், அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிலிங்கம். பெருங்கேடிலியப்பர் என்ற திருப்பெயர்களும் உள்ளன. அம்பிகை கருணாம்பிகை என்ற பெருங்கருணை நாயகியின் சந்நிதி மூலவரின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் உள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதனால் விஷ ஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. விஷ ஜந்துக்கள் கனவிலோ, நேரிலோ வந்து பயம் கொள்ள வைக்காது.

திருப்புகழ் தெய்வமான முருகப்பெருமான் இத்தலத்தில் சுப்பிரமணியர் என்ற திருபெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக பேரழகு திருக்கோலத்தில் மூலவருக்கு பின்னால் வடமேற்கு கோஷ்டத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். உள்பிரகாரத்தில் கன்னி கணபதி, வட கிழக்கில் காரைக்கால் அம்மையார், 63 நாயன்மார் சிற்பம், பாலதண்டாயுதபாணி, செந்திலாண்டவர், ஆஞ்சநேயர், காலபைரவர், நவக்கிரகங்கள், சந்நிதிகளில் அருள்கின்றனர். நடராஜர் மண்டபத்தில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் உள்ளார். பஞ்ச தாண்டவ தலங்களில் இதுவும் ஒன்று.

திருவிழா:

சித்திரை பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்,   ஆடிப்பூரம், நவராத்திரி, தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி

பிரார்த்தனை;

கேட்டாலே முக்தி பெற, அழிக்க முடியாத சக்தி அருள, பயங்கள் விலக, தோல் நோய்கள், விஷக்கடி குணமாக, சனி தோஷம் விலக, திருமணப்பேறு, மாங்கல்ய பாக்கியம் வேண்டி, குடும்ப பிரச்னை தீர, தொழில், வியாபாரம் செழிக்க, புதிய கணக்கு தொடங்க, பிறவாத்தன்மை, அழியாப்புகழ் பெற, கலைகளில் தேர்ச்சியடைய  

நேர்த்திக்கடன்: 

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 6-1 மதியம் 4-8



படம் 2 - அழியாப்புகழ் கிடைக்க அருளும் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் வள்ளி தெய்வானையுடன் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருங்கருணை நாயகி சமேத  அவிநாசியப்பர் மற்றும் முருகப்பெருமானை ஓருங்கே வணங்கினால் அழியாப்புகழ் பெற்றிடலாம்! 

வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

 திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா - 30.08.2023  - https://tut-temples.blogspot.com/2023/08/30082023.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

Wednesday, August 30, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, இன்றைய குரு நாளில் இன்று முதல் தினமும் ஒரு முருகன் ஆலய தரிசனம்,தல புராணம், தினம் ஒரு திருப்புகழ் என காண இருக்கின்றோம்.  இதற்கு உறுதுணையாக கோயம்புத்தூரை சேர்ந்த திரு. முத்துக்குமரன் ஐயாவிற்கு நன்றி கூறி மகிழ்கின்றோம்.  இன்றைய பதிவில் நாம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி காண உள்ளோம். இத்திருத்தலம் திருப்புகழ் தலமாகவும் அமைந்துள்ளது. எனவே வாக்கிற்கு அருணகிரி என போற்றப்படும் திருவலிதாயம் திருப்புகழ் படித்து பதிவை தொடங்குவோம்.

திருப்புகழ் 685 மருமல்லி யார்  (திருவலிதாயம்)

தனதய்ய தானதன ...... தனதான

......... பாடல் .........

மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்

மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்

இருநல்ல வாகுமுன ...... தடிபேண

இனவல்ல மானமன ...... தருளாயோ

கருநெல்லி மேனியரி ...... மருகோனே

கனவள்ளி யார்கணவ ...... முருகேசா

திருவல்லி தாயமதி ...... லுறைவோனே

திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.




குரு தோஷம் போக்கும் திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

தலமகிமை:

சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 4 கிமீ தொலைவில், ஆவடி செல்லும் சாலையில், பாடி லூகாஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள படவேட்டம்மன் கோவிலுக்கெதிரே உள்ள சாலை வழியாகச் சென்றால் குரு தோஷம் நீக்கும் திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவிலை சென்றடையலாம். குரு பகவான், பரத்வாஜர் (வலியன்-கருங்குருவி), மகா விஷ்ணு, பிரம்மா, ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், அக்னி பகவான், நட்சத்திர தேவதைகள் முதலானோர் இத்தல் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார்கள். இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.

தற்போது சென்னையில் உள்ள 'பாடி' என்னும் இடமே 'திருவலிதாயம்' என்னும் பெயர் பெற்ற தலமாகும். இத்திருத்தலம் தேவாரம் (திருஞானசம்பந்தர்) மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில் இது 21-வது தலமாகும். 274 சிவாலயங்களில் இது 254-வது தேவாரத்தலமாகும். அருணகிரியார் இத்தலத்து திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து ‘மருமல்லி யார்குழலின்……மடமாதர்’ எனும் தொடங்கும் திருப்புகழ் பாடலில் “திருவல்லிதாய மதி……லுறைவோனே’ என்று போற்றி பாடியுள்ளார்.

இத்தல தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போது சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் கிட்டும். எனவே இத்தலத்தை குரு பரிகாரத் தலம் என்கின்றனர்.

பிரம்மாவுக்கு கமலி, வல்லி என இரு பெண்கள் தோன்றினர் என்றும், அவர்களை விநாயகர் மணந்து கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் மணக்கோலத்தில் உள்ள விநாயகருக்கு மாலை அணிவித்து வழிபட்டால், நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கியிருந்து, சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வியாழ பகவான் எனப்படும் குரு, தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தார். அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவித்தவர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார். இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார். அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார்; அச்சாபம் நீங்க இத்தலத்து வந்து தீர்த்தம் உண்டாக்கி, இறைவனைப் பூசித்துச் சாபம் நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறு.

தல அமைப்பு:

இக்கோவில் ராஜகோபுரம் 3 நிலைகள் உடையது. இந்த ஆலயத்தின் கருவறையில் மூலவர் வலிதாயநாதர், வல்லீஸ்வரர் என்ற திருப்பெயர்களில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இவருக்கு மேல் உள்ள விமானம் கஜ பிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது. இறைவி தாயம்மை என்ற பெயரில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர், வரசித்தி விநாயகராக அருள்கின்றார். குரு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். மேலும் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சூரியன், சோமாஸ்கந்தர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரத்வாஜ் முனிவர் வழிபட்ட சிவலிங்கம், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்கின்றனர்.

உள் பிரகாரத்தை சுற்றி வருகையில் கருவறையின் பின்புறம் திருப்புகழ் நாயகன் சுப்பிரமணிய சுவாமி ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் வள்ளி, தெய்வானை உடனிருக்க தனி சந்நிதியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருணகிரி பெருமான் இப்பெருமானை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார்.

திருவிழா:

சித்திரை பிரம்மோற்சவம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், குருப்பெயர்ச்சி, பிரதோஷம், பவுர்ணமி

பிரார்த்தனை:

குரு தோஷம் போக்க, வாழ்வில் திருப்பம் பெற, திருமணத்தடை அகல, நோய்கள் நீங்க, ஞானம் சிறக்க, நற்பேறு கிட்ட

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்

திறக்கும் நேரம்:

காலை 6.30-12 மாலை 4.30-8.30

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்

திருவலிதாயம்

பாடி

சென்னை-600050

சென்னை மாவட்டம்

இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 4 கிமீ, சென்னை சென்ட்ரல் 12 கிமீ

மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடைய நாயனார், திருவலிதாயநாதர்

அம்பாள்: ஜெகதாம்பிகை, தாயம்மை

திருப்புகழ் நாயகன்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை மரம்

தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம்

புராணப்பெயர்: திருவலிதாயம்

பாடியவர்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1)

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

திருப்பம் தரும் திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் மற்றும் சுப்பிரமணிய சுவாமியை சென்னி மேல் சூட்டி வணங்குவோம்!

நன்றி: https://muthukumaranbami.blogspot.com

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா - 30.08.2023  - https://tut-temples.blogspot.com/2023/08/30082023.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா - 30.08.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆவணி பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மேல் திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா திருவேடகம் ஏலவார் குழலியம்மன் சமேத ஏடகநாதர் திருக்கோயிலில் இன்று நடைபெற உள்ளது. திருமுறைகளை நம் உயிர்த்துணையாக கொண்டு இருக்கும் ஒவ்வொரு அடியாரும் இன்றைய திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா பற்றி அறிய வேண்டும் என்றே இந்தப் பதிவை அறிய தருகின்றோம். 

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.


பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:


  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம். இவற்றுள் வைகை ஆற்று வெள்ளத்தில் நீந்தியதை திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழாவாக இன்றைய ஆவணி பௌர்ணமியில் கொண்டாடி வருகின்றார்கள்.

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார் குழலியம்மன், ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஆவணி உற்சவம் நடக்கிறது. 

"ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த மன்னன், வெப்ப நோயால் பாதிக்கப் பட்டார். நோய் நீங்கி மன்னன் சுகமடைய, திருஞானசம்பந்தர் மதுரை வந்தார். அங்கு சமணர்களுக்கும், திருஞானசம்பந் தருக்கும் அனல்வாதம், புனல் வாதம் நடந்தது. இதில் வைகை ஆறு தண்ணீரில் விடப்பட்ட ஞானசம்பந்தரின் "திருப்பாசுர பதிக ஏடு', நீரை எதிர்த்து நீந்தி நின்றது. அந்த இடத்தில் சிவன் ஆலயம் இருந்தது. அதனால் "திருஏடு நின்ற இடம்' என அழைக்கப் பட்டது. காலப்போக்கில் இது திருவேடகம் என மாறியது'. இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், பல ஆண்டுகளாக நடக்கும் இந்த "ஏடு எதிரேறிய' திருவிழா, ஆக.30 ஆவணி பவுர்ணமியன்று மாலை ஆறு மணிக்கு திருவேடகம் வைகை ஆற்றில் நடக்கிறது. காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், பஞ்சமூர்த்திகளுடன் வீதிஉலா சென்று, வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பார். 




Read more at: https://m.dinamalar.com/detail.php?id=68380





ஆவணி பௌர்ணமி  அன்று வையை ஆற்றில் ஏடு எதிரேறிய நன்னாள்.

"எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்" என்று தம்பிரான் திருமகனார் , திருவுடைய பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு , பொருபுனல்  வையை ஆற்றில் நீர் கிழித்து போய் , இருநிலத்தோர்க்கெல்லாம் "இது பொருள்" என்று காட்டி 

ஆற்றின் தென்கரையை தீக்ஷ மண்டபமாக்கி , தென்னவனுக்கு திருநீறளித்து , மதுரை மக்களும் அணிந்து, சைவ சமயமே மெய்ச்சமயம் என்று ஏற்றுப்போற்றி ஒழுகிய தினம்.

மேற்படி நிகழ்வு , ஆவணி பௌர்ணமியில் தான் நடந்தது என்று பெரிய புராண பிரமாணம்  இல்லாதெனினும் , திருவேடக சிவாலயத்தின் ஐதீக மரபின் வழி இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

இந்நாளில் மதுரை மக்கள் எந்நாளும் போற்ற வேண்டிய இருபெரும் தகையோர்

1, வளவர்கோமான் திருவுயிர்த்தருளுஞ் செல்வப் பாண்டிமாதேவியாரும் 

2, குரைகழல் அமைச்சனாராங் குலச்சிறையாரும் 

ஆவர்.

அன்னோர்களின் அளவற்ற கருணையினாலன்றோ பாலறா வாயர் , தமிழ்நாட்டிற்கு எழுந்தருளி சைவ ஸ்தாபனம் செய்ததும், அற்புதம்! அற்புதம்! என அரும்பெரும் பொருந்திசைத் திருப்பதிகம் பாடி நம்மையெல்லாம் உய்வித்ததும் ஆம்.

திருஞானசம்பந்த சுவாமிகள்  - திருக்கடைக்காப்பு  

3 -ஆம் திருமுறை  - திருஆலவாய் (மதுரை) பதிகம் 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்

பண் - கௌசிகம்   

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! [ 1]

அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே? [ 2]

வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ! [ 3]

ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார் [ 4]

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே [ 5]

ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே? [ 6]

கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே! [ 7]

வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்
ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே! [ 8]

பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே! [ 9]

மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே! [ 10]

அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே! [ 11]

நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!  [12]

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக .

பாச ஞானத்தாலும் , பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர் . பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து , நெருப்பேந்திய கையர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியவர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர் . ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர் . அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ?

இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர் . தந்தையும் , தாயுமில்லாதவர் . தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர் . அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது .

இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும் , பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும் , சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன . ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா . எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும் , தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது . தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை .

இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா . அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும் , அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன் . அவனை விரைவில் வந்து சார்ந்து , மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் . இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் .

இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா , மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின் , இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம் . இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம் .

சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவபூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?

வேதத்தை அருளிச் செய்தவனாய் , வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு , குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க , பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும் .

கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட , அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி , தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து , தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ?

திருமாலும் , நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும் , பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி , பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு , தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான் .

சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி , மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர் . சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல , வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில் , இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும் . ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு . ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும் , அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும் .

சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மெய்யன்பர்களால் நன்கு வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள் பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும் . இதனை ஓத வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர் .

நன்றி: http://thevaaram.org

திருஞானசம்பந்ததேவ நாயனார் திருவடிகள் போற்றி!

ஸ்ரீ மங்கையற்கரசி அம்மையார் பொற்பாதங்கள் போற்றி!!

ஸ்ரீ குலச்சிறை நாயனார் திருவடிகள் போற்றி!!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Read more at: https://m.dinamalar.com/detail.php?id=68380

Tuesday, August 29, 2023

TUT தளத்தின் 1000 ஆவது சிறப்புப் பதிவு - குருவே சரணம்!

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்...

இன்று ஆவணி மாதம் பௌர்ணமி ஆகும். இன்று நம் தளத்தில் 1000 ஆவது பதிவை காண இருக்கின்றோம். எப்படி இது சரியாக நிகழ்கின்றது? அனைத்தும் குருவருளால் தான் என்று கண்கூடாக கண்டு வருகின்றோம். பெளர்ணமி நாளில் தெய்வக சக்திகள் அதிகரித்து காணப்படும் என்பதால், அந்த நாளில் விரதம் இருந்து குலதெய்வத்தையும், மற்ற தெய்வங்களையும் வழிபடுவதால் சந்ததிகள் நலம் பெருகும். குறிப்பாக இந்த நாளில் பெண் தெய்வ வழிபாடு செய்வது அதிக பலனை கொடுக்கக் கூடியதாகும். 12 பெளர்ணமிகள் தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் பெற செய்யும். இந்த நாளில் செய்யப்படும் தெய்வ தரிசனம் மற்றும் தெய்வ வழிபாட்டிற்கு சக்தி அதிகம்.


இன்றைய நாளில் அனைவருக்கும் ஆவணி அவிட்டம் நல்வாழ்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம். உண்மையில் ஆவணி அவிட்டத்தின் நோக்கமே வேதங்களை படிக்க தொடங்குவதே. இன்றைய நாளில் ஏதேனும் ஒன்றை படிக்க தொடங்குங்கள். குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அல்லது உங்களுக்கு பிடித்த மகான்களை மனதில் இருத்தி, ஏதேனும் அக வழிபாட்டை சாதனையாக தொடங்குங்கள். தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகள், திருவாசகம் போன்றவற்றை தினமும் வழிபாட்டில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். சரி..இனி வழக்கம் போல் சிறப்பு பதிவை காண்போமா?

இப்பொழுது தான் TUT தளம் ஆரம்பித்து 100 ஆவது பதிவு கண்டது போல் இருந்தது. ஆனால் இன்று குருவின் அருளால் 1000 ஆவது பதிவை நெருங்கி விட்டோம். இது குருவின் அருளால் மட்டுமே சாத்தியம். இன்றைய பதிவில் என்ன பேசப் போகின்றோம்? என்ன அறியப் போகின்றோம். நாம் இங்கே தருகின்ற பதிவுகள் அனைத்தும் நம் கையில் இல்லை. படைப்பது அவனே. இன்று இந்த பதிவு எழுதலாம் என்று நினைப்போம். ஆனால் நடப்பது ஒன்றாக இருக்கும். உதாரணத்திற்கு நேற்றும் நாம் திருஅண்ணாமலை பற்றி பேச நினைத்து பதிவை பார்த்தோம் ஆனால் சுற்றுப்புற குப்பையகற்று என்ற பதிவு முழுமை பெற்று பகிரப்பட்டது. இது போல் தான் ஒவ்வொரு பதிவுகளும், அதற்கு பின் நடைபெறும் நிகழ்வுகளும், சேவைகளும் குருவருளால் நடைபெற்று வருகின்றது.


தளத்தின் 1000 ஆவது பதிவு குருவைப் பற்றி பேசுவோம். உங்களை சுற்றி உள்ள உறவுகளிடம்,நட்புகளிடம் ..ஏன் ? உங்களிடம் கேட்டுப் பாருங்க..ஆன்மிகம் என்றால் என்ன? என்று

உடனே பல தடாலடி பதில்கள் தான் வரும். ஆன்மிகம் என்பது

வானத்தில் பறப்பது, நீரில் நடப்பது,செப்பிடுவித்தை காண்பிப்பது,காயகல்பம் செய்வது, பின்னால் ஒளி வட்டம் தெரிவது,குண்டலினி எழுப்புவது,வாசியை வசப்படுத்துவது என்று அடுக்குவார்கள்.இதுவா? உண்மை ஆன்மிகம்.இல்லை ..இல்லவே இல்லை. இப்படித்தான் நம் சைவமும்,வைணவமும்,சித்தர் நெறியும் சொல்கின்றதா?

நம்மை சாதாரணமாக.. மிகவும் சாதாரணமாக..இருக்கச்செய்வதே ஆகும். கற்பனையில் மிதக்கும் நம்மை நிஜத்தில் சாதாரணமாக நடக்கச் செய்வதே ஆன்மிகம்.அமைதியே இல்லாத நம்மை....சிறப்பாகவும் முழுமையாகவும் அமைதியாகவும் வாழச்செய்வதே ஆன்மிகம்". இதைத் தவிர ஆன்மிகம் வேறு ஒன்றுமே இல்லை. வாழும் நிலையுணர்ந்து,தொண்டாற்றி இன்பம் கண்டு வாழும் நிலையே ஆன்மிகம்.

அன்பர்களே இப்போது புரிந்து கொண்டீர்களா? இது தான் உண்மையான ஆன்மிகம். இந்த ஆன்மிகத்தில் அடுத்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியது குருவின் அருள்.ஒரே ஒரு குரு என்று இங்கே காட்டாமல், நமக்கு அருளிய சில குருமார்களை பற்றி இங்கே உணர்வோம். 




முதலில் யோகி ராம் சூரத் குமார்.



திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்... என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நாராதாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-ம் ஆண்டில் ராம்தத் குவார் - குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார்.இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் என இரு சகோதரர்கள். குழந்தைப் பருவத்திலேயே யோகிகளையும் துறவிகளையும் சந்திப்பதில் ஆர்வத்துடன் இருந்தார். கங்கை ஆற்றாங்கரையில் உலவுவது, துறவிகளுடன் உறவாடுவது என இருந்தார்.



ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தவருக்கு ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. `இவரே... இவரே... இவரே என் குரு’ என்றவருக்கு, மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார். அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் சித்தி அடைந்தார்  என்பது தெரியவர, இடிந்துபோனார்.



மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த பப்பா ராமதாஸை நோக்கி பயணத்தைத் தொடங்கினார் ராம்சுரத். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமத்தை உபதேசித்தார். ''இடையறாது ராம நாமம் சொல்'' என்றார். ராம்சுரத்குமார் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி  பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.



உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை `பித்து’ என்று வர்ணிக்கப்படும். `பைத்தியக்காரன்’ என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குமாருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால் ராம்சுரத்குமார், ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.
உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்குப் போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.




உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் தொடர்பான விஷயம்தான். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த 'தான்' என்பதை அனுபவிக்கிறபோது, வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தைவிட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.



திருவண்ணாமலைக்கு வந்தவர், ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.கங்கை நதி மீது அவருக்கு இருந்த பக்தி, காசியில் தகனம் செய்யப்படும் உடலைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஞானத்தேடல், புத்தரின் நினைவாக தனது மகளுக்கு `யசோதரா’ என்று பெயர் சூட்டியது, பகவான் ரமணரைச் சந்தித்தது, அரவிந்தரைச் சந்தித்தது... இப்படி யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கையே ஆன்மிகத் தேடலாக இருந்துவிட்டது.



ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு ராமதாஸரிடமிருந்து, 'ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' எனும் மந்திர தீட்சை பெற்றார்.யோகி ராம்சுரத்குமார் சித்தியடையும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தார். தமிழ் மண்ணில் பிறக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஒரு மகான் வடக்கில் பிறந்து, தெற்கில் நம் மண்ணில் வந்து சித்தி அடைவதென்றால் ஏன்?  நமக்காக தானே. நாம் உண்மை நிலை உணர தானே. யோகியின் வழியில் நாமும் மந்திர ஜெபத்தை பிடிப்போம்.









இங்கு பதிவேற்றம் செய்து  உள்ள காட்சிகள் சென்ற ஏப்ரல் மாதம் நாம் கண்டது. நம்  அன்பர் திரு.ஹரிஹரன் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக நம்மை கூடுவாஞ்சேரியில் யோகியாரின் ஆசிரமம் உள்ளது,சென்று தரிசியுங்கள் என்றார். நாமும் எங்கெங்கோ தேடி கடைசியில் கண்டோம், அருள் பெற்றோம்.



இந்த பதிவின் மூலம் திரு.ஹரிஹரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்து நம் வாழ்வில் திக்குத் தெரியாது இருக்கும்  போது வழி காட்டிக் கொண்டிருக்கும் மகா பெரியவா தரிசனம்.



மகா பெரியவாவின் அருள் மொழிகளோடு பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஐந்தறிவு ஜீவன் உணர்த்தும் சம்பவத்தை அப்படியே தருகின்றோம்.


1927 ஆம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும் அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதை குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும் பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்துவிட்டால் அது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த மகா பெரியவா ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், “நாய்க்கு உணவு கொடுத்தாகிவிட்டதா?” என்று வாஞ்சையுடன் கேட்பார்.


சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்துவிட்டால் பட்டினியாகவே கிடக்கும். பெரியவா உபவாசம் (விரதம்) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.

பெரியவா மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லகில் செல்லும்போது,  பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும்.

ஒரு நாள், பெரியவா ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோது சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குறைத்துக்கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், “நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்துவிடுங்கள்,” என்று உத்தரவிட்டனர்.

ஊழியர்களும் அதை பிடித்துக்கொண்டு, 40 கி.மீ. தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டுவிட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன,,,, கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்துவிட்டது.

அன்று முதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகா பெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம் இந்த அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள்.


பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்… நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கு நன்றி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத் தருகிறது.



* மக்களுக்குத் தொண்டாற்ற விரும்புபவர்களின் மனதில் சாந்தமும், ஊக்கமும் இருக்க வேண்டும். முகத்தில் புன்னகை தவழ வேண்டும்.

* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். இது மிகச் சிறந்த தர்மம்.

* தர்மத்தை பலன் கருதிச் செய்ய வேண்டாம். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.

* பக்தி செய்வதால் கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. எல்லாம் நமக்குத் தான்.

* தர்மம் செய்வதாக இருந்தால் நினைத்தவுடன் உடனே செய்து விடுங்கள். தாமதித்தால் மனம் மாறிவிட வாய்ப்புண்டு.

* அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை.

* நமக்கு இரு கைகள் இருக்கின்றன. ஒருகையால் கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.

* பணத்திற்காக அலைவது மட்டுமே வாழ்க்கையல்ல. தினமும் கொஞ்சநேரமாவது இறைசிந்தனையுடன் இருக்கவேண்டும்.

எப்பேர்ப்பட்ட சிந்தனைகளை நம் பேசும் தெய்வம் அருளி உள்ளார்கள். மீண்டும் மீண்டும் படித்து வாழ்வின் புரிதலை உணர்வோமாக


நம் அன்பர் திரு.சுதன் காளிதாஸ் அவர்களின்  கை வண்ணத்தில் மிளிரும் அருள் காட்சிகளை மேலே இணைத்துள்ளோம். அவரருக்கு நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.

அடுத்து வள்ளலார் தரிசனம். நம் தளத்தில் அவ்வப்போது வள்ளலார் பற்றி தொட்டுக் காட்டி இருக்கின்றோம். சன்மார்க்கம் என்பது பெரிய கடல். அந்த கடலில் இருந்து சில துளிகளைத் தான் அவ்வப்போது நம் தருகின்றோம். அண்மையில் வள்ளலார் பற்றிய  ஒரு செய்தி  கிடைத்தது. அதனை அப்படியே இங்கு பகிர்கின்றோம்.





வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..எப்படி என்று கீழ்க்கண்ட பட்டியல் விளக்கம் தருகின்றது. நமக்கெல்லாம் இந்த செய்திகள் தேனில் ஊறிய பலா போன்றது தான்.


  • பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.
  • காவி ஆடை உடுத்த மாட்டார்.
  • உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.
  • ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.
  • கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்.
  • கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்.
  • சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.
  • கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.
  • சிம்மாசனத்தில் அமரமாட்டார்.
  • ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.
  • தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்.
  • அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.
  • உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்.
  • கை நீட்டி பேசமாட்டார்.
  • எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்.
  • எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்.
  • தீட்சை என்பன போன்ற காரியங்களை செய்ய மாட்டார்.
  • சத்தம் போட்டு பேசமாட்டார்..
  • சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..
  • ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.
  • உயிர்க்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..
  • புலால் உண்பதை  ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.
  • மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
  • பணத்தை கையிலே தொடவே மாட்டார்.
  • தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.
  • உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.
  • எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர். வாழ வேண்டும் என்று சொன்னவர்.
  • வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்.
  • ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.
  • உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.
  • ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..
  • வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசங்கள்,சாத்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.
  • கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது என்றவர்.
  • மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்.
  • தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.
  • கடவுளைத்தேடி காடு,மலை,குகை,குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.
  • கடவுள் ஒருவரே ! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கூறியவர்.
  • அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே, ஒளியான கடவுள் என்றவர்.
  • தன்னை இயக்கும்  ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.
  • தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.
  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.
  • மூட நம்பிக்கைகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..
  • எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.
  • ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்,கடைபிடிக்க வேண்டும் என்றவர்.
  • தவத்திலேயே மூழ்க கூடாது என்றவர்.
  • தற்சோதனையும் வேண்டும் என்றவர்.
  • உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.
  • ஆலய வழிபாடு, உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.
  • பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற பொய்யான காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .
  • எவரையும் தொடமாட்டார்,தொட்டு பேசவும் மாட்டார்.
  • உண்மைக் கடவுளை தனக்குள்ளே  கண்டவர்.
  • உணவு உட்கொள்ளாமலே,வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..
  • நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..
  • கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.
  • ஏழைகளின் பசிப்பிணியை  போக்குவற்காக  சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை தோற்றுவித்தவர்.
  • ஒளி வழிப்பாட்டிற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..
  • தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தோற்றுவித்தவர்..
  • சங்கத்திற்காக மஞ்சள் வெள்ளை வண்ணத்தில்  தனிக் கொடியை அறிமுகப் படுத்தியவர்.
  • மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி.சமய.மதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.
  • உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..
  • ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி,வாழ்ந்தும் காட்டியவர்.
  • உலக மக்களுக்காக உண்மை நூலான  திருஅருட்பாவைத் தந்தவர்.
  • மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
  • இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..
  • மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.
  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.
  • தன் பெயருக்கு முன்னால் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கைஎழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறு பட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள். படிக்க படிக்க மூச்சு முட்டுகின்றதா?அவர் பெருமையைச் சொல்லி மாளாது. இன்னும் வள்ளலார் வழியில் வாழ பழகுவோம்.



இன்னும் இந்த வரிசையில் ஏகப்பட்ட குருமார்கள் இருக்கின்றார்கள். பதிவின் நீளம் கருதி மூவர் தரிசனத்தோடு முழுமை செய்வோம். யோகியார், மகா பெரியவா, வள்ளலார் என மூன்று முத்தான குருமார்கள் தரிசனம் இங்கே பெற்றுள்ளோம். அவர்கள் சொல்லிய கருத்துக்களை  நடைமுறை வாழ்வில் பின்பற்ற நாம் முயற்சி செய்வோம்.

குருமார்களின் அருள் தொடரும்...

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

நல்வினையாற்ற 19 வழிகள் - சுற்றுப்புற குப்பையகற்று

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்...

பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள்  என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.


 சரி. பதிவின் உள் செல்வோமா?


முதல் முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.


வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.

எதிர்பார்த்தல் ஏமாற்றமே தரும். இன்று குடும்பங்களில் நடைபெறும் பல குழப்பங்கள், சண்டைகள்,சச்சரவுகள் என அனைத்திற்கும் காரணம் எதிர்பார்ப்பே ஆகும். அதுவும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இந்த எதிர்பார்ப்பினால் வரும் ஏமாற்றம் இருக்கின்றதே..அப்பப்பா..வார்த்தையால் இதனை சொல்ல இயலாது. 

சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் இந்த எதிர்பார்ப்பு, ஆசையில் இருந்து தோன்றுகிறதா? இல்லை பேராசையில் இருந்து தோன்றுகிறதா? என்று சரியாக சொல்ல முடியாது.இந்த எதிர்பார்ப்பை தவிர்த்தாலே பல பிரச்சினைகள் சரியாகி விடும்.எப்படி தவிர்ப்பது? இங்கே ஒரு நாள் முழுக்க எதிர்பார்ப்பை தவிர் என்று சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் எடுத்த உடனேயே இது சாத்தியமல்ல. முதலில் சிறு சிறு நிகழ்வுகளில் இந்த எதிர்பார்ப்பை தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்க்க பழகினால் தான் ஒரு நாள் முழுக்க இதனை கடைபிடிக்க முடியும்.

இந்த வரிசையில் இன்று நாம் காண இருப்பது தானம் செய்யப்  பழகு என்பதாம்.


என்னப்பா? இதெல்லாம் ஒரு குறிப்பா? என்று ஏளனமாக நினைக்காதீர். இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் தேவையைத் தாண்டி தான் பொருட்கள் வைத்திருக்கின்றோம். அலைபேசி வந்த புதிதில் அனைவரிடமும் ஒன்றே ஒன்று இருந்தது. "ஜியோ" வந்த பின்பு அனைவரிடமும் இரண்டு,மூன்று அலைபேசிகள் ( நம்மையும் சேர்த்து தான் )..ஆனால் ஒரு அலைபேசியை நாம் உபயோகித்தால் போதுமானது. இது போல் தான் ஆடைகள். அனைத்து உபயோகமற்ற ஆடைகளை எடுத்து மூட்டையாக கட்டி வைத்திருப்போம்.  அவற்றை தானமாக கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்துக்  கொண்டே இருப்போம். எல்லா நாளும் நல்ல நாளே.

இங்கே அணியாத ஆடைகளை தானமளி என்று சொல்லி இருக்கின்றார்கள். இதனை நாம் செய்ய செய்ய அடுத்து நாம் மற்ற தானங்களையும் செய்ய பழகுவோம். 


நம் சுற்றுப்புற குப்பையகற்று. இது புறத்தில் நிகழ, நாம் முதலில் அகக் குப்பையகற்ற வேண்டும். அகமும்,புறமும் வேறு வேறு அல்ல என்று நாம் உணர வேண்டும். முதலில் புறக் குப்பை அகற்றுவதில் இருந்து தொடங்குவோம்.




சுற்றுப்புற குப்பையகற்று என்று நாம் பார்க்கும் போது , நம்மால் தான் சுற்றுப்புறம் சீர்கெட்டு வருகின்றது. நாம் தானே குப்பைகளை போட்டு வருகின்றோம். தினமும் குப்பைகளை அள்ள சேவைப்பணியாளர்கள் வந்து நம்மிடம் பெற்று செல்கின்றனர். இத்தோடு நம் செயல் முடிந்து விடுகின்றது.ஆனால் ஒவ்வொரு நாளும் சேரும் குப்பைகள் இருக்கின்றதே? சொல்லி மாளாது. அவ்வளவு குப்பைகளை நாம் சேர்த்து வருகின்றோம். 

இயற்கைச் சீற்றம், இயற்கைச் சீற்றம் என்கிறோமே அதைச் சீண்டுவது யார்? நாம் தானே... அண்டங்களையெல்லாம் மாசுபடுத்திவிட்டு, ஐயோ அம்மா என்று அலறினால்… எப்படி?விஞ்ஞான வெளிச்சத்தில் இருக்கும் நாம் சுற்றுச் சூழல் விஷயத்தில் கொஞ்சம் சரிந்து தான் இருக்கிறோம். ஆம் காடுகளை அழித்தோம் கேடு வந்தது. மரங்களை வெட்டிச் சாய்த்தோம் மழை நின்றது. இன்று கிணற்றுக்குள் வாளியை விட்டால் தண்ணீர் வருவதில்லை. கண்ணீர் தான் வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்து நம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறது. மழை நீர் சேகரிப்பே இதற்கு மாற்றுவழி. அணுமின் கழிவு தொழிற்சாலைக் கழிவுமனிதக் கழிவு. இவைகளெல்லாம் நல்ல சுற்றுச் சூழலுக்கு எதிரானவைகள், எதிரணிகள்.


இன்று நாம் அனுபவித்து வரும் அனைத்திற்கும் நாமே காரணம். தேவை என்ற நிலையில் இருந்து ஆடம்பரம் என்ற நிலைக்கு நாம் நகர்ந்து விட்டோம். இதனால் நாம் நுகரும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதன் மூலமாக குப்பைகளும் அதிகமாகி வருகின்றது. இந்த குப்பைகளை நாம் நிலத்தில் வீசி, தினமும் சேவையாளரிடம் ஒப்படைத்தால் போதும் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் இதனால் என்ன பயன் என்று நாம் சிந்தித்ததுண்டா? குப்பைகளை அகற்றுவதை நாம் குப்பைகளை உருவாக்குவதை குறைப்பதின் மூலம் பயன் அடைய முடியும்.

சுற்றுச்சூழல் மாசடைவுகளை நாம் தடுக்க வேண்டுமாயின் தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தமது சுற்றுசூலை சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும்.கழிவுகளை குப்பை கூடைகளில் கொட்டி உரியமுறையில் அகற்றுதல் வேண்டும் வாரத்துக்கு ஒரு தடைவயேனும் தமது சுற்றுசூழலை சுத்தமாக வைக்க சிரமதானங்களை மேற்கொள்ளல்.வாழிடங்களை துப்பரவாக கூட்டி கழுவி கிருமி அகற்றி வைத்திருத்தல், பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருத்தல். இவை போன்ற நடவடிக்கைகளால் சுற்றுப்புற மாசடைவுகளை தடுக்க முடியும்.







இது ஒருபுறமிருக்க, எலக்ட்ரானிக் குப்பை ஒன்றும் சேர்ந்து வருகின்றது. இதனை ஈ - குப்பை என்றும் சொல்லலாம். இந்த ஈ - குப்பையில் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி, ஏசி, மின்னணு உதிரி பாகங்கள் போன்றவை அடங்கும். இவற்றை பிளாஸ்டிக்குகள் போல மறு சுழற்சி செய்ய முடியாது என்பதால் பழைய பொருள்கள் வேன்குபவர்கள் யாரும் வாங்க முன் வருவது கிடையாது. இத்தகைய நிலையில் இவை பொது குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு மக்கவும் முடியாமல், மறுபடியும் பயன்படாமல் உள்ளன. இதிலுள்ள லெட், கேட்மியம், மெர்குரி போன்ற இரசாயனங்கள் 60 முதல் 100 சதவீதம் வரை இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், தீங்கு உண்டாக்குவதுடன் மண்ணை அதிக அளவில் விஷமாக்கி சுற்றுச்சூழலுக்கு மாபெரும் ஆபத்தாய் மாறிவருகின்றன. வரும் காலங்களில் புவி வெப்பமயமாவதையும், கடலில் நீர்மட்டம் உயர்வதையும் தடுக்க இதனால் முடியாது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..

இதனை எப்படி அகற்றுவது என்று பார்க்கும் போது நாம் ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து தேவை என்ற நிலைக்கு கண்டிப்பாக மாற வேண்டும். அப்போது தான் நாம் இவற்றை குறைக்க முடியும். தற்போது நிலவி வரும் பருவ கால மாற்றத்திற்கு இந்த குப்பைகளும் ஒரு காரணம் ஆகும். தற்போது வெயில் காலம் குறைந்து இருக்கும் வேண்டும். ஆனால் சித்திரை மாத வெயிலை விட அதிக வெயிலை அனுபவித்து வருகின்றோம். இதே போன்று பருவம் பொய்த்து மழை பெய்து, மழை நீரை நாம் பெற முடியாமல் வீணாக்குகின்றோம். இவை அனைத்தும் சுற்றுப்புற குப்பையால் தானே?

இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கும் போது  சுற்றுப்புறம் என்றால் நிலம் மட்டுமல்ல . நிலம், நீர் ,காற்று ,ஆகாயம் என அனைத்தும் அடங்கியது. இவை அனைத்தும் ம்,மாசுடன் தான் இருக்கின்றது. இவை அனைத்தும்  தூய்மை பெற நாம் குப்பைகள் போடுவதை குறைக்க வேண்டும்.இதற்கு முதலில் நம் அகம் சுத்தம் பெற வேண்டும். அக சுத்தம் பற்றி பின்பு பேசுவோம்.

குருவருளால் 1000 ஆம் பதிவை நெருங்க இருக்கின்றோம். இதற்கு முந்தைய நல்வினையாற்ற 19 வழிகள் தொகுப்பில் எதையாவது புதிதாய்ப் படை என்ற தலைப்பில் புது வலைத்தளம் உருவாக்கினோம். ஆனால் பதிவுகள் எதுவும் அளிக்க இயலவில்லை. 1000 ஆம் பதிவிலும் எதையாவது புதிதாய்ப் படைக்க வேண்டி குருவிடம் பணிந்து வேண்டி நிற்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நல்வினையாற்ற 19 வழிகள் - எதையாவது புதிதாய்ப் படை - https://tut-temples.blogspot.com/2022/01/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - உளம் ஆற உழவாரப் பணி செய்திடுவோம் - https://tut-temples.blogspot.com/2021/01/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html