அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவரையும் இன்றைய பதிவில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். TUT தளத்தின் மூலமாக கொரோனா தொற்றுக்காலத்தில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை ஜூம் செயலியில் ஆரம்பித்தோம். குருவருளால் தற்போது டெலிகிராம் செயலியில் வார நாட்களில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. சுமார் 430 நாட்களை தாண்டி தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம் என்றால் இது குருவருளால் தான் என்பது திண்ணம்.
ஆரம்ப காலங்களில் விநாயகர் வழிபாடுதான் கூட்டுப் பிரார்த்தனை தொடங்கியது. முதல் நாளில் ஒளவையார் அருளிய விநாயகர் அகவலுடன் , நக்கீரர் அருளிய விநாயகர் அகவல் பாடி பிரார்த்தனை செய்தோம். பொதுவாக விநாயகர் அகவல் என்றாலே ஒளவையார் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் நக்கீரரும் விநாயகர் அகவல் அருளியுள்ளார் என்பது பின்னர் தான் தெரிந்தது. நாளொரு மேனியாக அப்படியே திருவாசகம் படிக்க ஆரம்பித்தோம். அடுத்து கரு முதல் திரு வரை நூல் என ஒவ்வொரு நாளாக தமிழ் மொழியில் திளைக்க ஆரம்பித்தோம். சில நூட்களை இங்கே தொட்டுக்க காட்ட விரும்புகின்றோம்.
1. விநாயகர் அகவல் - ஒளவையார் & நக்கீரர்
2. கணபதி கவசம்
3. விநாயகர் அட்டகம்
4. திருவாசகம்
5. கரு முதல் திரு வரை
6. ஸ்ரீ அகத்தியர் தேவாரத் திரட்டு
7. கந்த ஷஷ்டிகவசங்கள் - 6
8. கந்தர் அனுபூதி
9.கந்தர் அலங்காரம்
10. கந்தர் அந்தாதி
11. அபிராமி அந்தாதி
12. முருகவேள் பன்னிரு திருமுறை - 1
13. முருகவேள் பன்னிரு திருமுறை - 2
14. முருகவேள் பன்னிரு திருமுறை - 3
15. முருகவேள் பன்னிரு திருமுறை - 4
16. சித்தர் வழிபாடு தொகுப்பு
17. ஸ்ரீ ரமண கீதம்
என பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இந்த தினசரி கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு சில அன்பர்கள் கோரிக்கை அனுப்புவது உண்டு. இவற்றையும் குருவின் பாதத்தில் சிரத்தையோடு சமர்ப்பித்து வருகின்றோம். குருநாதர் அருளால் நிறைவேறிய கோரிக்கைகளுக்கு நன்றி சொல்லியும் வருகின்றோம். மிக விரைவில் மேலே நாம் படித்த நூற்களை தனி தனி பதிவாக தர விரும்புகின்றோம். அந்த வரிசையில் இன்று இந்த பதிவை நாம் அளிப்போம் என கனவிலும் நினைக்கவில்லை.இன்று காலை திருவாசகம் பற்றிய இணைப்பில் குருவருளால் இன்றைய பதிவை வழங்குகின்றோம்.
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து, குருபரனாய்
ஆட்கொண்ட கோமகனார் திருவடிகள் போற்றி ! போற்றி ! 1
தெள்ளு செந்தமிழின் தொடை புனைந்த வள்ளல்
மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி | போற்றி | 2
பெருவாய்மைத் தமிழ் பாடிய
திருவாதவூராளி திருவடிகள் போற்றி | போற்றி | 3
தீதிலா திருவாசகத் தேன்மொழி நாதனார்
மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி | போற்றி | 4
எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நமச்சிவனைப் பாடிய அருளாளர்
திருவடிகள் போற்றி | போற்றி | 5
பெருந்துறையில் குருந்த நிழல் பெருமான் இன் அருள் பெற்றுத்
திருந்துமறைப் பொருள் எமக்குச் செந்தமிழால் தெருட்டி,
வாழ்வு தந்த, பரந்தபுகழ்த் திருவாதவூரர்
பதுமலர் திருத்தாள் போற்றி | போற்றி | 6
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ
செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகர்
சேவடிகள் போற்றி | போற்றி | 7
தெள்ளு செந்தமிழில் தொடை புனைந்து
திவ்வியம் பழுத்த வாசகம் செய்த,
வள்ளலார் மாணிக்கவாசகப் பெருமான்
மலரடிகள் போற்றி | போற்றி | 8
சிற்றம்பலக் கோவையும் திருவாசகத் தேனமுதும் கற்றைச்
சடையார்தம் கழலடிக்கே ஆக்கி ,வினை செற்ற பெருமான்
வாதவூரர் குறைகழல் சேவடிகள் போற்றி | போற்றி | 9
கற்றைச் சடையார் கழலடிக்குச் சிற்றம்பலக்கோவை பாடிய
திருவாதவூரர் திருவடிகள் போற்றி | போற்றி | 10
அன்னைப்பத்து பாடி முன்னை வினை அறுத்த
அண்ணலார் அருட்கமலங்கள் போற்றி | போற்றி | 11
குயிற்பத்து பாடி உயிர்க்கு உறுதி செய்த
கோமகனார் குரைகழல்கள் போற்றி | போற்றி | 12
பிடித்தபத்து பாடி, மலம் முடித்து வைத்த
பெருந்தகையார் பூங்கழல்கள் போற்றி | போற்றி | 13
பொற்பதம் பொருந்தக் காட்டும் அற்புதப்பத்து பாடிய
அருளாளர் நற்பதங்கள் போற்றி | போற்றி | 14
பாத்திரம் சிவனென்று பணியச்செய்யும் யாத்திரைப்பத்து
பாடிய அருளாளர் பாதமலர்கள் போற்றி | போற்றி | 15
பிழைக்க நாம் வழிகாட்டி குழைத்தபத்து பாடிய
குணக்குன்றார் சீரடிகள் போற்றி | போற்றி | 16
திருவேசறவு பாடியருளி நம் கருவேர் அறுத்த
திருவாதவூரர் திருவடிகள் போற்றி | போற்றி | 17
கடையுகத்தில் உயிரெல்லாம் கடைத்தேற படையெழுச்சி
பாடிய பண்பாளர் பாதங்கள் போற்றி | போற்றி | 18
முந்தியே முதல்வன் திருவருள் பெறவே, உந்தியார்
பாடிய உத்தமனார் ஒண் மலரடிகள் போற்றி | போற்றி | 19
நோயில் உயிர்கள் நொந்திடா வண்ணம்,
கோயில் பதிகங்கள் பாடிய குலவு பெருந்தகையார்
திருவடிகள் போற்றி ! போற்றி ! 20
மானோக்கும் மங்கைபங்கர் மலரடிக்கே நமைச் சேர்க்கும்
தோணோக்கம் பாடிய தொழுந்தகைப் பெருந்தகையார் தூய
பொன்னடிகள் போற்றி ! போற்றி! 21
வெள்ளேனம் காணாத விரைமலர்ச் சேவடிக்குத் தெள்ளேணம்
பாடிய திருப்பெருகு சீருடையார் திருவடிகள் போற்றி! போற்றி! 22
வேண்டிய யாவும் மேயச் செய்யும் பாண்டிப்பதிகம் பாடிய
பைந்தமிழ்க் கொண்டல் பைங்கழல்கள் போற்றி | போற்றி | 23
உண்டான பிறப்பை உடனே ஒழியச் செய்யும்
பண்டாய நான்மறை பாடிய பார்புகழும் வாசகர்
தண்மலர்க் கழல்கள் போற்றி | போற்றி | 24
தானந்தம் இல்லாத் தனிப்பெரும் தலைவனுக்கு
ஆனந்த மாலை அழகுற சாத்திய அருளாளர்
தேனுந்து மலர்ப்பாதம் போற்றி | போற்றி | 25
வேத நீதி விளங்க புத்தரை வாதில் வென்ற
வாதவூர் மாதவர் மலரடிகள் போற்றி | போற்றி | 26
முற்றும் உணர்ந்த முனிவர் திருவடிகள் போற்றி | போற்றி | 27
முன்னம் கருத்து, மொழி, உடம்பு மூன்றும் அன்பாய்த்
தோன்றிய முனைவர் திருவடிகள் போற்றி | போற்றி | 28
செங்கனல் தாங்கும் தில்லைப் பெருமான்
அங்கழல் தாங்கள் திருவடிகள் போற்றி | போற்றி | 29
மேருவில்லவன் அருள்பெற்ற வேதியர் பெருமான்
விரைமலர்ச் சேவடிகள் போற்றி | போற்றி | 30
நச்சரவு அசைத்த நம்பனைப் பாடும் பொச்சமில் அன்பர்
பூங்கழற் சேவடிகள் போற்றி | போற்றி | 31
திருவாசகத் தேன் தந்த மணிவாசகர்
செம்மல் திருவடிகள் போற்றி | போற்றி | 32
அரிய பொருளாம் அவிநாசி அப்பனைத் தெரியச் செய்த
பெருந்தகை பெய்கழல்கள் போற்றி | போற்றி | 33
உள்ளமலம் மூன்றும்மாய உகுபெரும் தேன்
வெள்ளம் தந்த வள்ளல் மலரடிகள் போற்றி | போற்றி | 34
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி,
எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்த
சோதியார் திருவடிகள் போற்றி | போற்றி | 35
வையகத்தே வந்து, மணிவார்த்தை தந்து,
மெய்யகத்தே இன்பம் மிகுத்த விமலர்
விரைமலர்ச் சேவடிகள் போற்றி | போற்றி | 36
உறவு செய்து குருவாய் வந்து உய்யக் கொண்ட உத்தமர்
ஒண்மலர்ச் சேவடிகள் போற்றி | போற்றி | 37
குற்றாலத்துக் கூத்தன் குரைகழற்குக்
கற்றாவின் மனம்போலக் கசிந்து உருகிய
கலைவேந்தர் கழலடிகள் போற்றி | போற்றி | 38
தேன்ஆய் இன்னமுதமும் ஆய்த் தித்திக்கும்
திருபெருந்துறைக் கோனார் திருவடிகள் போற்றி | போற்றி | 39
மூலபண்டாரம் வழங்கிய ஆலமுண்டான்
அடித்தொண்டன் அடிமலர்கள் போற்றி | போற்றி | 40
வானோர் அறியாத வளம் நிறைந்த தேனார் திருவாசகம்
செய்த கோனார் திருவடிகள் போற்றி | போற்றி | 41
பத்திமையும் பரிசும்இலாப் பசுபாசம் அறுத்த
வித்தகர் பாதமலர்கள் போற்றி | போற்றி | 42
சித்தம் எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
அத்தர் திருவடிகள் போற்றி | போற்றி | 43
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட
தந்தையார் திருவடிகள் போற்றி | போற்றி | 44
சீலம்ஏதும் அறிந்திராத என்சிந்தை வைத்த
சிகாமணி திருவடிகள் போற்றி | போற்றி | 45
திருந்திய பொழில் சூழ் திருப்பெருந்துறையின்
அருந்தவர் திருவடிகள் போற்றி | போற்றி | 46
செழுமலர்க் குருந்தம் மேவிய அழுமலர்க் கண்ணராம்
அண்ணல் திருவடிகள் போற்றி | போற்றி | 47
கலங்குகின்ற அடியேன் கலக்கம் தீர
இலங்குகின்ற சேவடி காட்டும் எம்பிரான்
இணையடிகள் போற்றி | போற்றி | 48
மெய்யன்,விகிர்தன், விமலன், மெய்யன்பர்,
ஐயன் திருவடிகள் போற்றி | போற்றி | 49
அந்தமில் அமுது, அரும்பெரும் பொருள்,
ஆர் அமுது அடிமலர்கள் போற்றி | போற்றி | 50
சிவன் உய்யக் கொள்ளும் வழிகாட்டி,
அவனியில் புகுந்து எமை ஆட்கொண்ட
வள்ளல் திருவடிகள் போற்றி | போற்றி | 51
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!
No comments:
Post a Comment