"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 6, 2019

தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் கரக்கோயில் தரிசனம் பெற இருக்கின்றோம். தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு கரக்கோயில் இது தான். இந்தப்பதிவை நாம் பாடல் பெற்ற தலங்கள் என்ற தொடர் பதிவிலும் தரலாம். நால்வரில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவரால் பாடல் பெற்ற தலம்.
இந்தப் பதிவை ஏன் இன்று தருகின்றோம்? பதிவின் இறுதியில் சொல்கின்றோம்.

தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும், இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும். வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும். 

இந்த கோயிலில் நடைபெறும் குறைவிலா பூசை ..அதாவது பிரதோஷ பூசை மிகவும் பிரசித்தி பெற்றது. 2016 ம் ஆண்டு நடைபெற்ற சிவ ராத்திரி நிகழ்வில் நாம் அங்கே இருந்தோம். சிவ புண்ணிய தலம். இயந்திர வாழ்விலிருந்து விடுபட்டு,இது போன்ற கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் மனம் களிப்புறும். வாழ்வின் உன்னதம் தெரியும். இப்பதிவில் இணைத்துள்ள காட்சிப் படங்கள் சென்ற ஆண்டு எடுக்கப் பட்டவை. சென்ற ஆண்டு 2016 சிவராத்திரியின் போது இந்த கரக்கோவில் சென்றோம்.ஆச்சர்யம்,ஆனந்தம் தந்து நம்மை பிரம்மிப்பாகிய கோயில் என்று சொல்லலாம். மிக அதிக நாள் கழித்து,இந்த பதிவை அளிப்பதால், அனுபவித்த ஆனந்தத்தின் அளவு குறைந்து விட்டது. எனவே ஆங்காங்கே காட்சி படங்களை இணைக்கின்றோம்.மேலும் நமக்கு சென்ற ஆண்டில் ஆலய தரிசனத்தின் ஆனந்தம் பற்றி சிறிதளவே எட்டியது. இதோ இந்த ஆண்டில் தான் ஏப்ரல் 14 முதல் குருவருளால் ஆன்ம பலம் தரும் ஆலய தரிசனத்தின் மேன்மையை உணர்ந்து வருகின்றோம். 




கடன் தீர்க்கும் கடம்பவனநாதர் எழுந்தருளியிருக்கும் தலம்

  1. ஆயுள் பலம் தரும் அமிர்த கடேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம்
  2. கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான்
  3. அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்
  4. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன் எழுந்தருளியிருக்கும் தலம்
  5. கடம்பவன தலமாதலால் சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
  6. காலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும் ஸ்ரீவித்யுஜோதிநாயகி
  7. சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை
  8. அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர் தலம்
  9. ஸ்ரீ முருகப் பெருமான் சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்ற தலம்
  10. பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.
  11. பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி தலம். பிரதோஷ காலத்தில் மட்டும் தரிசனம் தரும் ஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி
  12. கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்ற சிற்பக்கலை சிறப்பு மிக்க கரக்கோவில் ஆலயம்
  13. பொன்னியின் செல்வன் வரலாற்று நிகழ் களம்
  14. மூவர் பெருமக்களால் பாடல் பெற்ற  தலம்ச
  15. சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம் 
என்று இத்தல பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.இந்த தல சிறப்புகளை கீழ்காணும் தகவலில் இருந்து பெறலாம்.










மேலே நீங்கள் காண்பது திருக்கோயிலின் வெளிப்புற கோபுரம், அறிவிப்பு பதாகை.கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.. திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 34வது சிவத்தலமாகும்.

மூலவர்: அமிர்தகடேசுவரர்
தாயார்: சோதிமின்னம்மை
தல விருட்சம்: கடம்ப மரம்
தீர்த்தம்: சிவதீர்த்தம், சக்தி தீர்த்தம்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

திருக்கோயில் அமைப்பு :

கருவறை குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தை நினைவூட்டும் மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.



கரக்கோயில்

தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும், இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். அதென்ன கரக்கோயில்? திருக்கடம்பூர் கோயில் அமைப்பு கரக்கோயில் அமைப்பு என்று திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறியிருக்கிறார். (திருக்கடம்பூர் கோயிலில் இளங்கோயிலும் ஒன்று உண்டு.) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கடம்பூர்க் கரக்கோயிலைக் குறிப்பிடுகிறார்.

கரக்கோயிலைக் கற்கோயில் என்னும் சொல்லின் திரிபு என்று சிலர் கருதுவது தவறு. கரக்கோயில் என்பது கோயில் வகையில் ஒரு விதத்தைக் குறிக்கிறது. விஜயம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டட அமைப்பு, கரக்கோயிலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. தேர் போன்ற வடிவில் சக்கரங்களுடன் கூடிய கருவறையும், வட்டமான விமானத்தையும் (சிகரத்தை) உடைய கோயிற் கட்டடத்திற்கு கரக்கோயில் (விஜயம்) என்று சிற்ப நூல்கள் பெயர் கூறுகின்றன.
மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும். வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.




இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்

இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை

தலமரம்: கடம்ப மரம்

தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்

கோயில்: கரக்கோயில்

லிங்கம்: சுயம்பு

பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை

நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி

வழிபட்டோர்: அகத்தியர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடல்கள் பாடி வழிபட்ட தலம்.







 இத்திருக்கடம்பூரின் ஞானசம்பந்தர் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், நாவுக்கரசரின் பதிகங்கள் 5ம் திருமுறையிலும் தொகுக்கப்பட்டுள்ளன.

 சிவபெருமானை கயிலை மலைக்குச் சென்று வழிபடும் தேவர்கள், எண் குலமலை தேவர்களும் அதன் தலைவன் மலையரசன், திங்கள், கதிரவன், தேவர்தலைவன், சித்தர்கள் முதலானோர் கடம்பூர் கோயிலும் கயிலை ஒத்தது என இங்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபாடு செய்தனர் என்ற செய்திகள் அந்தந்தச் சிற்பங்களின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.


ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில் என்பதால் பல ஆண்டுகட்கு மேலாக கோயில் உள்ளதாக அறியலாம். தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது. முற்கால சோழர்களின் காலத்தில் சிவாலயங்களில் சிவன் சன்னதி மட்டுமே இடம் பெற்றிருந்தன. ராஜேந்திரன் காலத்தின் பின்னரே அம்மன் சன்னதி அமைக்கும் வழக்கம் தொடங்கியது. இக்கோயிலின் ஈசானிய மூலையில் இருந்த அம்மன் சன்னதியை சுமார் வருடங்களுக்கு முன் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணியின் போது கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கட்டப்பெற்றது.

மேலக்கடம்பூர் திருக்கோயில் சிற்பக் கலைக்கோயிலாகவும் உள்ளது. கர்ப்பகிரக வெளிசுவற்றில் எண்ணிலடங்கா சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே மேலே நாம் பல காட்சி படங்களை இணைத்துள்ளோம்.பார்க்க பார்க்க சிற்ப கலையின் நுட்பம் நமக்கு தெளிவாக புலப்படும். சிவராத்திரி அன்று நிலவின் ஒளியில் இவை எடுக்கப்பட்டவை.




முதலாம் குலோத்துங்கனால் கட்டபெற்றக் கருவறை வெளிச்சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. தெற்கில் மங்கைபங்கனும் (அர்த்தநாரீச்வரர்) ஆலமர்செல்வனும், மேற்குக் கோட்டத்தில் திருமாலும், வடக்கில் நான்முகனும், அணைத்தெழுந்த நாதரும் (ஆலிங்கனமூர்த்தி) கொற்றவையும் (துர்க்கை) உள்ளனர்.

ஒவ்வொரு தேவகோட்டமும் இரண்டு சிம்மத் தூண்கள் தாங்கிய முகப்பு மண்டபமாக உள்ளது. மண்டபத்தின் மேல் வரந்தையோடு கூடிய கொடுங்கையும், நடுவிமான முதற்தளம் எண்கோண வடிவிலும் உள்ளது. அதனை யாளிகள் தாங்குகின்றன. முதல் தளத்தின் எண்கோண வடிவு கட்டுமானத்தினைச் சுற்றி நான்கு சிகரங்கள் உள்ளன. நடுச் சிகரத்தின் விமான பாகத்தில் எட்டுதிக்கு பாலகர் வீற்றிருக்க தேவகோட்டத்தில் மூர்த்திகள் உள்ளனர்.

கர்ப்பக்கிரக தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் காளை மீது அமர்ந்து ஞானமூர்த்தியாகவும், முதல் தளத்தில் நின்றபடி வீணாதரராகவும், முறையே திருமால் சிவலிங்க வழிபாடு செய்பவராகவும், முதல் தளத்தில் பாம்பணையில் சாய்ந்த கோலமும் நான்முகன் சிவலிங்க வழிபாடு செய்பவராகவும் முதல் தளத்தில் யோக நிலையிலும் காட்சிதருகிறார். கருவறை புறச்சுவர் முழுவதும் நாயன்மார் புராண சிற்பமும், நாட்டிய கரணங்களும், மகேஷ்வர வடிவங்கள், முக்கோடி தேவர் வழிபடும் காட்சி, ராமாயண கிருட்டின லீலைகள் என சைவ வைணவ சிறப்புக்கள் அடங்கிய சிற்பத் தொகுப்புகள் பலவற்றினைக் காணலாம்.


இக்கோயிலின் அதிட்டானம் பத்மபந்தமாகவும், உபபீடமானது மஞ்சபத்ரமாகவும் உள்ளது.
உபானம்,உபோபானம்,பத்மோபானம்,சூத்ரகம்பு,ஜகதி,ஊர்த்துவபத்மம்,கம்பு,அதபத்மம்,
கடகவிருத்தம்,குமுதம்,ஊர்த்துவபத்மம்,கம்பு,கண்டம்,ஊர்த்துவகம்பு,அதபத்மம்,மகாபட்டிகை,
ஊர்த்துவபத்மம்,வாஜனம்என்னும் 18 அதிட்டான அங்கங்களுடன் திகழ்கிறது.


தல புராணம் சொல்லும் காட்சிகள் 


திருக்கோயில் மூர்த்திகள்

ஆரவார விநாயகர்

திருக்கோயிலின் நந்தவன வாயிலைக் கடந்து நந்தவனமும், அதில் இடதுபுறம் கடம்ப மரத்தினடியில் கடம்ப நாதரும், வலது புறத்தில் மாரியும் சர்ப்பமும் உள்ளன. மூன்றுநிலை கோபுரவாயில் கடந்து வலப்புறம், கோயில் மூலட்டானத்தின் பின்பகுதியில் மேற்கு திருமாலப்பத்தி உள்ளது. இதில் ஆரவார விநாயகர் சன்னதி உள்ளது, அடுத்து வள்ளி தெய்வானை சகிதமாய் மயில் மீதமர்ந்த ஆறுமுகன் சன்னதி, அடுத்த சன்னதியில் சமய குரவர் நால்வர், அதனையொட்டி தேவர்தலைவனின் குற்றம் (பாபம்) போக்கிய குற்றம்போக்கிய நாதர் (பாபஹரேசுவரர்) மீனாக்ஷி சகிதராய் காட்சியளிக்கிறார். அதன் இருபுறமும் கலைமகள், நிலமகள் (வனதுர்க்கை) வீற்றிருக்க, திருமகள் தனிச் சன்னதியில் உள்ளார். திருமஞ்சன கிணற்றின் அருகே மேற்கு நோக்கிய வைரவர் மண்டபம். யோகபட்ட அமர்வில் பெருஞ்சாத்தன்(சப்தமாதர் காவலன்), நின்ற கோலத்தில் கால வைரவர் மற்றும் வைரவர் சிலை அடுத்து கதிரவன், திங்களவன் சிலைகள்.









அடுத்து இடபவாகனர், தேவர் தலைவன் இத்தல இறைவனைப் பெயர்த்து செல்லும் காட்சியின் சிலைவடிவம். அதனையொட்டி மேற்கு நோக்கிய சனி பகவான், காக்கைக்கு பதில் கழுகு வாகனத்தில். அருகிலேயே கரண்ட மகுடம் தரித்து இறைவனை வணங்கியபடி வைரவி சிலை உள்ளது. அடுத்து மகாமண்டபத்தில் அதிகார நந்தியும் பலிபீடமும் உள்ளது. வலப்புறம் ஜோதிமின்னம்மையும், இடதுபுறம் ஆடல்வல்லான்–சிவகாமசுந்தரியும் கற்சிலாரூபமாய் உள்ளனர். அம்மையின் எதிரில் மால்விடையும் (நந்தி) இடதுபுறம் ஒன்பதுகோள்களும் பள்ளியறையும் உள்ளன. உள் வாயிலில் திண்டி, முண்டி காவலர்களைத் தாண்டி சென்றால் உற்சவ மூர்த்திகளும் அதனைத் தாண்டி குபேர வாயில் கடந்தால் யுகம் கடந்து நிற்கும் அமிர்தகடேசுவரரைக் காணலாம். ஊரின் நான்கு எல்லைகளில் ஈசானியத்தில் விநாயகரும், தெற்கில் காளிசன்னதியும், தென்மேற்கில் திரௌபதியும், முருகன் கோயிலும், வடமேற்க்கில் அய்யனாரும், வடக்கில் வேளாளர் குலதெய்வம் வீரபத்திரரும் உள்ளனர்.


இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது “புகழ் மாது விளங்க” எனத்தொடங்கும் முதலாம் குலோத்துங்கனுடையது, இக்கோயிலை கட்டுவித்து இறையிலி நிலங்கள் வழங்கியமை குறித்தும், மற்றொன்று கடம்பூர் கோயிலை சேர்ந்த மகேசுவரர்கள் ஆறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு நந்தா விளக்கெரியவிட ஒப்புக்கொண்டமை குறித்தும், மேலும் கடம்பூரினை உத்தம சதுர்வேதி மங்கலம் என சிறப்பு பெயர் பெற்ற தகவலை காணலாம்.

இந்திரன் வழிபட்டு பாப விமோசனம் பெற்ற பாபஹரேசுவர லிங்கம். அங்காரகன் வழிபட்டசெவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்.சூரனை அழிக்க வில் பெற்ற தலம்எமன், சித்திரகுப்தனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் பிரம்மன்.அனுமன், கருடனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் மகாவிஷ்ணு..
பிறவிக்கடன் தீர்க்கும் கடம்பநாதர்.கங்கை படையெடுப்பின் போது கொண்டு வரப்பட்ட வலம்புரி ஆரவார விநாயகர்.அர்த்தநாரியின் கீழ் பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள மகாவிஷ்ணு.
கங்கைக்கு சமமான புண்ணிய தீர்த்தம் சக்திதீர்த்தம், இங்கு அஸ்தியினை கரைத்து புண்ணியம் பெறலாம். இத்தகு சிறப்பு பெற்ற  ஒரே ஒரு கரக்கோயில் நம் தமிழ் நாட்டில் இருப்பது நமக்கு பெருமை அன்றோ!

அதனால் தான் பதிவின் ஆரம்பத்தில் சொன்னோம். சுற்றுலா செல்வதை விட இது போன்ற பேரதிசயம் கொண்ட தலங்களுக்கு செல்லுங்கள்.ஆன்மிகமும் பெறலாம், நம் கலாச்சாரம்,பண்பாடு போன்ற செய்திகளும் அறியலாம்.ஏனெனில் பண்டைய கோயில்களை தான் கல்வி,மருத்துவம் போன்ற அனைத்தும் தருகின்ற கலாச்சாரக் கோட்டம்.





சென்ற ஆண்டு மகா சிவராத்திரி அன்று அனுபவித்த ஆனந்தம். பல சிவனடியார்கள் அமர்ந்து சிவ பூஜை செய்து கொண்டு இருந்தார்கள். சைவ முழக்கம், சிவ பூஜை என்று கயிலாயத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தார்கள் என்றால் அது மிகையாகா.திருநீறு,உத்திராக்கம்,நமச்சிவாய ஜோதி  என்று ஆனந்தக் களிப்புற்றோம்.

இங்கு நடைபெறும் குறைவிலா நாள் பூசை சிறப்பாக இருக்கும்.அதைப் பற்றிய குறிப்பாக
மிகச்சரியாக 4.30-6.00 வரை
4.50 வரை பல்வகை திரவிய நீராட்டல்
5.00 DPRTM தரிசனம்
5.20 அலங்கார தீப காட்சி
5.40 சந்திரசேகரர்-உமையவளுடன் பிரகார உலா
6.00 கோபுரவாயில் ஐங்கிளை தீப காட்சி

DPRTM தரிசனம் உங்களுக்காக கீழே






பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல், இன்றைய சுந்தரர் குரு பூஜை இங்கே நடைபெற உள்ளது. ராமருக்கு அணில் உதவியது போல், நம் தளம் சார்பில் ஒரு சிறு தொகையை அளித்துள்ளோம்.


மீண்டும் சிந்திப்போம் 


மீள்பதிவாக:-

 பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

2 comments: