"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, March 13, 2020

நெற்றிக்கண்ணுடன் ஐஸ்வர்யங்கள் அருளும் ஸ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹ பெருமாள் திருக்கோயில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை என்று சொல்வார்கள். இது மேம்போக்கான செய்தி அன்று. மிக மிக ஆழ்ந்து நோக்க வேண்டிய செய்தி ஆகும். திருமாலின் தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரம் தவிர மற்ற அவதாரம் ஆற, அமர தோன்றி தம் அவதார நோக்கை நிறைவேற்றினார்கள். ஆனால் நரசிம்மர் அவதாரம் அப்படிப்பட்டதல்ல. தன் பக்தன் பிரகலாதனை காப்பாற்ற தூணில் இருந்து , உடைத்துக் கொண்டு நொடியில் காட்சி அளித்தவர். அவர் அவதாரமே உக்கிரம் தான். எனவே தான்  ஆபத்தான காலங்களில் நரசிம்மரை வேண்டுவது நலம் பயக்கும் என்பார்கள்.

மிக ஆபத்தான சூழ்நிலையிலும் சங்கடமான நிலையிலும் மானமே போய்விடுமே என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயிலும் கீழ்கண்ட ஸ்துதியை இதயபூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகிப் பிரார்த்தனை செய்து கொண்டால் அருள்மிகு அஹோபிலவல்லி சமேத ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் ஓடோடி வந்து நம்மைக் காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவ பூர்வமாகக் கண்டறிந்த பேரின்பம்.

ஜிதந்தே மஹாஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ! 
ஜிதந்தே ஜகத்ரக்ஷணார்தாவார
ஜிதந்தே ஹரே! பாடலாத்ரௌ நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத

நமஸ்தே ஜகந்நாத விஷ்ணோ முராரே 
நமஸ்தே ந்ருஸிம்ம அச்யுதானந்த தேவ
நமஸ்தே க்ருபாலோ சக்ரபாணே
நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதார

பரப்ரஹ்ம்ரூபம் ப்ரபுத்தாட்டஹாஸம் 
கரப்ரௌல சக்ரம் ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸன்னம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ 
சான்மேக காத்ரம் ந்ருசிம்ஹம் பஜாம்

கிரிஜந்ருஹரிமீசம் கர்விதாராதி வஜ்ரம்
பரமபுருஷமாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்
அபயவரத ஹஸ்தம் சங்க சக்ரேததாநம் 
சரண மிஹபஜாம் சாச்வதம் நாரஸிம்ஹம்


ஸ்ரீந்ருஸிம்ஹ! மஹாஸிம்ஹ! திவ்யஸிம்ஹ! கிரிஸம்பவ! தேவேச! ரக்ஷமாம் சரணாகதம்

நரசிம்ம ஜெயந்தி சீரும் சிறப்புமாக கொண்டாப்படும் தலங்களில் சென்னை அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலும் ஒன்று. இன்று சிங்கப்பெருமாள் கோயில் தரிசனம் காண இருக்கின்றோம்.


சிங்கபெருமாள் கோவில் சிறிய குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர். நெற்றிக்கண்ணுடன் (முக்கண்ணுடன்) பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் அருள்புரிகிறார். ‘பாடலாத்ரி’ என்றால் செந்நிறக் குன்று என பொருள். இத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. பாடலம் என்றால் சிவப்பு என்றும் அத்ரி என்றால் மலை என்றும் பொருள்.எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றா

குடைவரையாக திகழும் கோவில் கருவறையில் அருளும் சுவாமியுடன், ஸ்ரீஅஹோபிலவல்லித் தாயார், ஸ்ரீதேவி – பூதேவியுடன் உத்ஸவர் ஸ்ரீபிரகலாதவரதர் ஆகியோரையும் தரிசிக்கலாம். கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.



நரசிம்ம அவதாரக் காலத்தில் இத்தலம், அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. அக்காட்டில் ஜபாலி என்னும் முனிவர் தவம் செய்துவந்தார். பெருமாளை நரசிம்மராகக் காண வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவு செய்யும் வகையில் நரசிம்மர் இரணியனை வதம் செய்தவுடன் உக்கிர நரசிம்மராக (கோபமூர்த்தியாக) முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இரணிய வதத்திற்குப்பின் இரத்தக்கறை படிந்த கரங்களை இத்தலத்திற்கு அருகிலுள்ள செங்குன்றக்குளத்தில் கழுவிய பின் இங்கு வந்ததாகக் கூறுவர். முனிவரின் ஆசைப்படி நரசிம்ம வடிவத்தோடு சிவனைப் போன்று முக்கண்ணுடன் (நெற்றிக்கண்) காட்சி கொடுத்தார் நரசிம்மர்.
மூலவரான நரசிம்ம மூர்த்தியின் நெற்றியிலுள்ள நாமத்தை விலக்கும் பொழுது நெற்றிக்கண்ணைத் தரிசனம் செய்யலாம்.




பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். ஒரு கையில் சங்கும், மறு கையில் சக்கரமும் ஏந்தி, வலது கை அபயம் அளிக்க, இடது கையைத் தொடையில் வைத்துள்ளார். வலது காலை மடித்து வைத்தும் இடது காலைத் தொங்கப் போட்டுக் கொண்டும் நெற்றிக் கண்ணுடன் (த்ரிநேத்ரதாரியாய்) திருமார்பில் மகாலட்சுமியுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

1008 சுலோகங்கள் பொறித்த வெள்ளியால் செய்யப்பட்ட சஹஸ்ரநாம மாலையுடனும் அரக்கு நிற சாளக்ராம மாலையுடனும் அருள்புரிகிறார். மூலவர் பஞ்ச மூலிகைகளால் உருவாக்கப்பட்டதால் அபிஷேகம் கிடையாது. தாயார் அஹோபிலவல்லி, உற்சவர்- பிரகலாத வரதன், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். தல விருட்சம்- பாரிஜாதமாகும். ஆண்டாள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கு தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன. சந்நிதித் தெரு முனையில் அனுமாருக்கு (சிறிய திருவடி) சந்நிதி உள்ளது.

 குடைவரையாகத் திகழும் கோயில் கருவறையில் அருளும் சுவாமியுடன், குன்றையும் சேர்த்து கிரிவலமாக வருவது இத்தலத்தின் சிறப்பம்சம் ஆகும். பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

நரசிம்ம அவதாரம் பிரதோஷ நேரத்தில் நடந்ததால் பிரதோஷ காலத்தில் நரசிம்ம பெருமாளை வழிபடுவது சிறப்பு. பிரதோஷ காலத்தில் இங்குள்ள ஸ்ரீபிரதோஷ நரசிம்மருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிப்பது பெரும் புண்ணியம் ஆகும். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சுவாதி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.



திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.









பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது.

இதோ..நாமும் ஸ்ரீ நரசிம்மர்  தரிசனம்  கண்டு கிரிவலம் செல்ல இருக்கின்றோம்.










நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை 





கிரிவலம் வரும் போது அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம். இங்குள்ள பெருமாளை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகள் விரைவில் அனுகூலமாக தீரும்; கடன் தொல்லைகள் அகலும்; மகப்பேறு உண்டாகும்; திருமணத்தடை நீங்கும். பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் குன்றினை ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள். வெல்லம், சுக்கு, ஏலக்காய், எலும்மிச்சம் பழச்சாறு, நீர் கலந்து தயாரிக்கப்பட்ட பானகத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.










மலையை ஒரு முறை வலம் வந்த காட்சி நீங்கள் காணலாம்.


ஏற்கனவே கூறியது போல் நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாத சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் .


வழக்கம் போல் எப்போது சிங்கப்பெருமாள் கோயில் ஊருக்கு சென்றாலும் ஸ்ரீ நரசிம்மர் தரிசனம் பெறுவோம். நம் தல அன்பர்கள்  அனைவருக்கும் பிரார்த்தனை சமர்பித்தோம். சனிக்கிழமை என்றாலே பெருமாளுக்கு உகந்த நாள். இன்று சனிக்கிழமை. மிக மிக சிறப்பு வாய்ந்த ஐஸ்வர்யங்கள் அருளும் ஸ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹ பெருமாள் திருக்கோயில்  தரிசனம் நம் பதிவின் மூலம் பெறும் அனைவரின் வாழ்விலும் ஐஸ்வர்யங்கள் பெறுக நாம் வேண்டுகின்றோம்.

எப்படி செல்வது ?

தாம்பரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலமாகவும், நடந்தும் செல்லலாம்.

மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html

பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_96.html

No comments:

Post a Comment