"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, March 8, 2020

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் நாம் பல அறப்பணிகள் முருகன் அருளால் செய்து வருகின்றோம். உழவாரப்பணி,அன்னதானம், மோட்ச தீபம், சித்தர்கள் வழிபாடு என நம் சேவைகள் என்றுமே தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு அறப்பணியிலும் நாம் பூஜ்யத்தில் தான் ஆரம்பித்தோம். ஆனால் இன்று அறப்பணியின் சேவை குருவருளால் அர்ப்பணிப்போடு நடைபெற்று வருகின்றது. அன்னதான சேவை முதலில் பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்து வந்தோம். ஆனால் இன்று அமாவாசை, ஷஷ்டி,கிருத்திகை என்று சேவை விரிவாக நடைபெற்று வருகின்றது.
ஆயில்ய வழிபாட்டிலும் தற்போது குருநாதரின் வழிகாட்டலின் படி, ஒவ்வொரு மாதமும் நம் குருநாதர் அலங்காரம் சிறப்பாக கண்டு வருகின்றோம்.இதில் நாம் தற்போது அகப்பூசையிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அன்னதானம் பற்றி நம் குழுவில் விவாதிக்க நேர்ந்தது. அதனை ஒட்டியே இந்தப் பதிவை தருகின்றோம்.

வினா: 

உணவின் மூலம் கர்மா வரும்  என்பது உண்மையா. ...
ஆம் எனில் நாம் இதை தெரிந்து கொண்டே அன்னதானம் செய்து நம் கர்மாவை பங்கிட்டு அனைவருக்கும் கொடுக்கிறோமா??
இது தவறில்லையா??
கர்மாவை கழிக்கும் பொருட்டு அன்னதானம் செய்கிறோ மா? ??
அல்லது ஒருவர் பசியாற்றும் வேலையை செய்கிறோமா. ??
இந்த கேள்விக்கு தயவுசெய்து  யாரவது விளக்கம் அளிக்க வேண்டுமெனகேட்டுக் கொள்கிறேன். 
பிழையிருப்பின் மன்னிக்கவும்..தெரிந்தே கர்மாவை பங்கிடலாமா? ?குழப்பமாக உள்ளது.

உரையாடலில் கிடைத்த பதில்கள்:

பதில் 1: 

ஒவ்வொரு விஷயத்துக்கும் பயந்து வாழ்க்கையில் செயல் பட முடியாது. பொதுவாக அன்னதானம் தானத்தில் சிறந்த்து. கர்ணனுக்கு சொர்க்கம் இல்லேன்னு சொன்னது அன்னதானம் செய்யாத்தால.எனவே நமக்கு அன்னதானம் செய்த சரின்னு படுது. அவ்வளவுதான் அன்னதானம் செய்ய வேண்டியதுதான்

வயதான குருமார்களை சந்திக்கும்போது கேட்டுத்தெரிஞ்சுக்கலாம். அதுவுமே தேவை இல்லங்கறது என்னோட எண்ணம். தானம் நல்ல காரியம்.....அவ்வளவுதான்...go ahead

பதில் 2:

ஓம் அகத்தீசாய நம

நல்ல கேள்வி..

நம்முடைய உயிரே உடலை படைக்கிறது..
உயிரானது உடலை படைக்கும் காரணம்,  இந்த உயிரின் மீது படிந்துள்ள இந்த பிறப்புக்கு காரணமான கர்மாவை கழித்து இறைவனின் கலக்கவே.. .

ஆனால் உணவு என்பது அந்த உடலை படைத்த ஆத்மாவுக்கு கிடைக்கவில்லை எனில் அந்த உடலை படைத்த மூல காரணத்தை அதனால் அடைய முடியாமல் போய்விடும் அதாவது அந்த உணவே அதற்கு காரணமாகிறது.. ஆகவே எவரொருவர் அந்த உணவில்லாமல் வாடும் உடலுக்கு உணவளிக்கிறாரோ அவரை அந்த உடலிலுள்ள உயிரானது அதாவது ஆத்மாவானது வாழ்த்தும்.. ஏனென்றால் முதலில் வயிறு நிறைந்தால் தான் மனிதனானவன் பிற சிந்தனைகள் செய்து செயல் பட முடியும்.. எனவே அன்னதானம் என்பது புண்ணியத்தில் உயந்த புண்ணியம்.. இதை செய்யும் நமது கர்ம கழியும் என்பதும்  உண்மையே.. இதன் பின்னால் உள்ள உண்மை யாதெனில் ஒருவருக்கு நாம் உணவளிக்கும்போது உணவு பெரும் நபர் இதற்கு முந்திய பிறவிகளில் நாம் அவரிடம் உணவோ, உதவியோ பெற்றுள்ளோம் என்பதே, ஆக இந்த பிறவியில் நாம் அவருக்கும் இடும் உணவின் மூலமாக அந்த பழைய கர்மாவை அவரிடம் திரும்ப ஒப்படைக்கிறோம்.. இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர் ஆனால் நமது வாழ்க்கை சில நூறு பேர்களை சந்திப்பதுடன் முடிந்து விடுகிறது.. ஏன் இந்த நூறு பேரை மட்டுமே சந்திக்கிறோம் என்பதே முற்பிறவிகளின் நல் மற்றும் பாவ வினைகளின் கர்ம கணக்கே என்பதே உணரவும்..

ஆக பிறவி என்பது கொடுப்பதுற்கும் பெறுவதற்குமே.. இதில் நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை பொறுத்தே இறைவனிடம் அடையும் காலம் நிச்சயமாகும்..

ஓம் அகத்தீசாய நம..

பதில் 3:

கோவில்களில் பிரசாதமாக கொடுத்தால் வாங்கி உண்ணலாம்.. எந்த உணவானாலும் பிரசாதமாக உண்டால் கர்மா சேராது.. ஏன் வீட்டில் நாமே சமைத்து இறைவனுக்கு படைக்காமல் உண்டால் அதுவே தோஷம்.. ஏனெனில் உணவுப்பொருள் யாவும் நிறைய பேர்களின் கை மாறி வருவதால் அது தோஷங்களும் சேர்ந்து வருகிறது.. அதை நாம் வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைக்காமல் உண்டால் அந்த தோஷமே நம்மை பாதிக்கும்.. எனவே வீட்டிலோ வெளியிலோ அல்லது அன்னதானம் உண்ணும் போது இறையை மனதில் வணங்கி தோஷத்தை நீக்குமாறு பிரார்த்தித்து உண்டால். எந்த குறையும் இல்லாது அது இறையின் பிரசாதம் ஆகிறது..
அதையே பகிர்ந்து உண்டால் பெரிய புண்ணியமாகிறது..


பதில் 4:

எமக்கு தெரிந்த ஒன்றே ஒன்று.

வள்ளலார் ஒருவரே போதும். தோஷம், பாவம் என்றெல்லாம் யோசித்து இருந்தால் அன்னதானம் செய்வது பற்றி 
வள்ளலார் சொல்லி இருக்க மாட்டாரே. இதனையே திருமூலரும் யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்
என்று சொல்லி இருக்கின்றார்.எனவே அன்னதானம் செய்வதும் புண்ணியம்,. பசி இருப்பின் வாங்கி உண்பதும் புண்ணியமே.
பசி என்பது பிணி ஆகும் பிணி தீர்த்தல் பாவத்தில் அடங்கா. மகா பெரியவா அவர்களும் தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)
யில் தர்மங்களில் தலையானது அன்னதானமே! என்று கூறி உள்ளார்.

நம் அனுபவத்திலும் இதனை நாம் கண்டு வருகின்றோம். ஒவ்வொரு அமாவாசை அன்றும் சுமார் 100 பேருக்கு மோட்ச தீப வழிபாட்டில் அன்னதானம் செய்து வருகின்றோம். இந்த தர்மம் வளர்ந்து தான் வருகின்றதே தவிர குறையவில்லை. அன்னதானம் கொடுப்பது என்றால் அவ்வளவு சுலபமா என்ன? பணம் இருக்கும் எல்லோராலும் இதனை செய்ய இயலாது. அன்னதானம் செய்வது அனைத்தையும் கொடுப்பதாகும்.

எம் அறிவிற்கு எட்டிய செய்திகளை இங்கே தந்துள்ளோம். 

பதில் 5:

அடிப்படையிலே தானம் மற்றும் தர்மத்துக்கு வேறுபாடு உண்டு. இது மிகபபெரிய கேள்வி. தர்மம் என்பது மிகவும் சூட்சுமம் நிறைந்தது. அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள கடினம்.  எனவே குரு காட்டியுள்ள பாதையில்  செல்வது மிக முக்கியம்.

பொதுவாகவே சாப்பாட்டுக்கு பெரிய தோசம் வுள்ளது. எனவே எப்பொழுது எங்கு சாப்பிடும் போதும், சிவா அற்பணம் என்றோ அல்லது கிருஷ்ணர்பணம் என்றோ சொல்லி சாப்பிடும் போது, தோசம் கழிகிறது.  வெறும் சாதம், பிரசாதம் ஆகி விடும்.

நீங்களும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக பதிவின் இறுதியில் தரலாம்.
திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி.  மந்திரங்களில் சிறந்தது காயத்ரி அது போல் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இதை எளிதாக சொல்லிவிடலாம் ,ஆனால் அனுபவித்து செய்யும் போது தான் இதன் உண்மை புரியும்.அன்ன தானம் பற்றி மேலும் சிறிது உணர்ந்து விட்டு,அன்றைய அன்னதான நிகழ்வின் துளிகளை பார்ப்போம்.மகா பெரியவா அன்ன தானம் பற்றி கூறிய செய்திகள் தொடர்கின்றது.

தர்மங்களில் தலையானது தானமே! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)


ரந்தி தேவன் கதையிலிருந்தும், உஞ்சவ்ருத்திப் பிராம்மணன் கதையிலிருந்தும் என்ன தெரிகிறதென்றால் தனக்கென்று ஒன்றுமே வைத்துக்கொள்ளாமல் தானம் பண்ண வேண்டும்;தன் ப்ராணனே போனாலும் ஸரி, இன்னொரு ஜீவனை நம் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற த்யாக தத்வம் தெரிகிறது. இன்னொன்று என்ன தெரிகிறதென்றால், ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கிறபோது அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா – கெட்டவரா என்று இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உபகாரத்தைப் பண்ணி, கஷ்டம் நிவ்ருத்தியாவதற்கு ஸஹாயம் பண்ண வேண்டும் என்பது.

வித்யாஸங்கள் பார்க்கவேண்டிய இடத்தில் பார்த்துத்தான் ஆகவேண்டும். சாஸ்த்ரப்படி லோக க்ஷேமத்துக்காக ஏற்பட்ட அதிகார பேதங்களைக் காப்பாற்றத்தான் வேண்டும். ஆனால் கஷ்டம், துக்கம் என்று வருகிற போது வித்யாஸமே பார்க்கக் கூடாது.
குறிப்பாக, அன்னதானத்தைப் பற்றிச் சொல்கிறபோது ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது.

”யாரானாலும் எவரானாலும், நாராயண ஸ்வரூபம்” என்று ரந்திதேவன் அன்னதானம் செய்தான். மஹாதாரித்ரியத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இளையான் குடிமாற நாயனாரிடம் ஒரு சிவனடியார் பிக்ஷை கேட்டு வந்தபோது அவர், ஈஸ்வரனே இப்படி வந்திருக்கிறான் என்று நினைத்தார். கொட்டுகிற மழையிலே வயலுக்குப் போய் அங்கே விதைத்திருந்த நெல்லையே மறுபடி பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து சிவனடியாருக்கு பிக்ஷை பண்ணினார். வாஸ்தவத்திலேயே அந்த சிவனடியார் பரமேஸ்வரன்தான். அப்படியே காட்சி கொடுத்தார். இது பெரியபுராணக் கதை.

எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில் (3.13) எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அநுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். பிறனுக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை, பாபத்தையே புஜிக்கிறான் என்கிற மாதிரிச் சொல்கிறார்.

அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்த்ரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ‘த்ருப்தோஸ்மி : போதும்’ என்று சொல்கிறான். அந்த அளவுக்கு மேல் போய் விட்டால், ”ஐயையோ! இனிமேல் போடாதீர்கள்” என்று மன்றாடவே செய்கிறான். இம்மாதிரி ஒருத்தன் பூர்ண மனஸோடு திருப்தி தெரிவிக்கிறபோதுதான் தாதாவுக்கும் தானத்தின் பலன் பூர்ணமாகக் கிடைக்கும்.

நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து ரக்ஷிப்பதும் அன்னம்தான். அதனால்தான் ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே’ என்று சொல்லியிருக்கிறது. மணிமேகலையில் இப்படி அன்னதான விசேஷத்தைச் சொல்லியிருக்கிறது. இது பௌத்த ஸம்பந்தமான காப்பியம். பௌத்தம், ஜைனம் எல்லாமே கலந்தாங்கட்டியாக வைதிக ஸம்பிரதாயங்களோடு சேர்ந்திருப்பதாகவே தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களிலிருந்து தெரிகிறது. மணிமேகலைக்கு காஞ்சீபுரத்தில் அக்ஷயபாத்திரம் கிடைத்து, அதை அவள் வைத்துக்கொண்டு ஸகல ஜனங்களின் பசிப்பிணியையும் போக்கினாள். இதற்கு அநேக யுகங்கள் முந்தியே இதே காஞ்சீபுரத்தில் ஸாக்ஷாத் அம்பாளும் இதே அன்னதானத்தைப் பண்ணியிருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, ‘இரு நாழி நெல் கொண்டு எண் நான்கு அறம் இயற்றினாள்’ என்று சொல்லியிருக்கிறது.

எண் நான்கு அறம் என்றால் முப்பத்திரண்டு தர்மங்கள். தர்மம் என்றால் மநுஷ்ய வாழ்க்கை நெறிகள் எல்லாமும்தான் என்றாலும், பொது வழக்கில் ‘தானம்’ என்ற ஒன்றுக்குமட்டுமே ‘தர்மம்’ என்ற பேரும் வந்துவிட்டது. தர்மங்களில் இது அத்தனை உசத்தியான இடத்தைப் பெற்றுவிட்டது! ‘தான-தர்மம்’ என்று சேர்த்தே சொல்கிறோம். ‘தர்மம் போடு தாயே!’ என்றுதான் பிச்சைக்காரர்கள் கூடச் சொல்கிறார்கள். தர்மசாலை என்றாலே அன்னசத்திரந்தான். வேதப் பிரமாணத்துக்கு ஸமதையான சிறப்புப் பெற்ற அவ்வை வசனத்திலும் ‘ஈதல் அறம்’ என்று தானத்தையே தர்மம் என்று equate பண்ணியிருக்கிறது.

இதிலே ஒரு வேடிக்கை, அதாவது பரஸ்பர விருத்தம் (முரண்பாடு) மாதிரி ஒரு அம்சம். தானம் என்று பண்ணினால் அதை வாங்கிக் கொள்ளவும் ஒருத்தன் இருந்தாகணும். Donor இருந்தால் Donee-யும் இருக்கணும். ஆனால் தானம் கொடுப்பதை ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிற அதே சாஸ்திரங்களே தானம் வாங்குவதை மிகவும் தாழ்வானதாகச் சொல்லியிருக்கின்றன. ”நான் கொடுக்கிறவனாகவே எப்போதும் இருக்கணும்; வாங்குகிறவனாக ஒருபோதும் இருக்கக்கூடாது”- யாசிதாரச்ச நஸ்ஸந்து மா ஸ்ம யாசிஷ்ம கஞ்சந – என்றே பிரார்த்தனை இருக்கிறது. ஆத்திசூடியிலும் “ஈவது விலக்கேல்” என்றவுடனேயே “ஏற்பது இகழ்ச்சி” என்றும் வருகிறது. ஏற்பதற்கு ஒருத்தன் இல்லாவிட்டால் எப்படி ஈவது? யாசகன் இல்லாமல் தாதா ஏது?

அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தீதி யத் புரா |
ததேவ தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம் ||

என்று ஸ்லோகமிருக்கிறது. ”நாஸ்தி, நாஸ்தி” (இல்லை, இல்லை) என்கிற இரண்டு எழுத்துக்களை* எவன் முன் ஜன்மாவில் சொல்லி யாசகர்களை விரட்டி அடித்தானோ, அவனே மறு ஜன்மாவில் ”தேஹி தேஹி” என்கிற இரண்டு எழுத்துக்களை சொல்லிக்கொண்டு பிச்சைக்காக அலைகிறான் என்று அர்த்தம். இங்கே ஈகையின் சிறப்பு, ஏற்பதன் இகழ்ச்சி இரண்டும் தெரிகிறது. பகவானே யாசகம் கேட்கவேண்டி வந்ததே என்று ‘உடம்பைக் குறுக்கிக் கொண்டு’ தான் வாமனரூபமாக ஆகி மஹாபலியிடம் போனான் என்கிறார்கள்.

இப்படி யாசகம் வாங்குவதை ரொம்பவும் இழிவாகச் சொன்னதற்குக் காரணம் அத்யாவசியமிருந்தாலொழிய பிறத்தியானைப் பிடுங்கக் கூடாது என்பதால்தான். ஸம்பாத்தியம் அவனவனும் உடம்பாலோ புத்தியாலோ உழைத்துப் பெறத்தான் பாடுபடணும். அவனவனுடைய வீட்டின் நல்லது கெட்டத்துகளுக்கான செலவுகளையும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அவனவனேதான் ஸேமித்துக் கொள்ளணும். தவிர்க்கமுடியாத unemployment, வியாதி வக்கை, நிராதரவான நிலையில்தான் யாசகம் வாங்க வேண்டும்.

பொதுக்காரியங்களுக்கு யாசகம் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கும். இங்கே தாதா என்று individual-ஆக (தனி நபராக) ஒருத்தன் இருந்தாலும், ‘யாசகன்’ என்று individual -ஆக எவனும் கீழ்ஸ்திதியில் இல்லை. ஆனால் இந்தமாதிரி பொதுப் பணிகளில்கூட, ஒரு ஆஸ்பத்திரி கட்டுவது, ஆலயத் திருப்பணி செய்வது என்றால்கூட அத்யாவசியத்துக்கு அதிகமாக ஓஹோ என்று plan போடாமல், கலெக்ஷன் என்று பறக்காமல், பல பேரைப் பிடுங்கி எடுக்காமல், அளவாகத் திட்டம் போட்டுக் கொண்டு, கூடிய மட்டும் பஹிரங்கப்படுத்தாமல், அவரவர்கள் தங்களுக்குள்ளேயே செலவுகளைப் பகிர்ந்து கொள்ளப் பார்க்கிறதே சிலாக்யம்.

முன்னாளில் வேதமும் யஜ்ஞமும் பூஜையும் தியானமும் வித்யாதானமுமே ஒரு ப்ராம்மணனின் 24 மணி ‘ஆகுபேஷன்’ ஆகிவிட்டதால், அவனுடைய குடும்ப போஷணைக்காக மற்றவர்கள் தானம் தருவதை வாங்கிக் கொள்ள அவனுக்கு அதிகாரமிருந்தது. ஸந்நியாஸி ஸதாகாலமும் ஸாதனை பண்ணணும்;அதோடு அவனுக்கு பிக்ஷை விதித்திருக்கிறது. மற்றபடி யாசக விருத்தி ரொம்பவும் நிஷித்தந்தான்……..

முப்பத்திரண்டு வகையான அறங்களை, அதாவது தானங்களை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. முதலில் ஜனங்களுக்கு ”உணவீதல்”, அப்புறம் பசுக்களுக்கு இரை கொடுப்பது, இப்படியே சொல்லிக்கொண்டு போய் தர்ம சத்திரம் கட்டுவது, நந்தவனம் வைப்பது, வைத்யசாலை வைப்பது, குளம் வெட்டுவது என்றெல்லாம் சொல்லிக் கடைசியில் ரொம்பக் குறைச்சலான திரவியச் செலவில் செய்கிற தண்ணீர்ப் பந்தல் கைங்கர்யத்தோடு முடித்திருக்கிறது. சிரமும் இதில்தான் குறைச்சல். சிரமமும் செலவும் குறைச்சல் என்றாலும், வாயும் தொண்டையும் வற்றி வருகிறவர்களுக்கு ஜில்லென்று புனர்ஜீவன் தருகிற மாதிரி தண்ணீர்ப்பந்தல் வைத்து மோர்த் தீர்த்தம் தருவது மஹா பெரிய புண்யமாகும். நம் பெரியவர்கள் தலைமுறைத் தத்வமாகச் செய்து வந்த இம்மாதிரியான நல்ல விஷயங்களை, சின்னச் சின்ன ஸூக்ஷ்மமான தர்மங்களையெல்லாம் இப்போது நாம் மறந்து விட்டோம்.

காஞ்சீபுரத்தில் அம்பாள் தானே இந்த தர்மங்களையெல்லாம் நடத்தி நமக்கு வழி காட்டியிருக்கிறாள். அங்கே காமாக்ஷியம்மன் கோயிலில் அன்னபூர்ணிக்கு ஒரு ஸந்நிதி இருக்கிறது. இது தவிர காமாக்ஷியே அன்னதானம் மட்டும் இல்லாமல் முப்பத்திரண்டு தர்மங்களையும் செய்திருக்கிறாள். திருவையாற்றிலும் அம்பாள் தர்மஸம்வர்த்தனியாக, அறம் வளர்த்த நாயகியாக இருக்கிறாள்.

மநுஷ்யர்களுக்குள் ஜாதி, யோக்யதை முதலானவைகளைப் பார்க்காமல் உபகாரம் பண்ண வேண்டும் என்பது மட்டுமில்லை. இம்மாதிரி மனித இனம் மட்டுமின்றி, ஸகல ஜீவராசிகளுக்கும் சிரமங்கள் தீரவேண்டும் என்று சொல்லித்தான் ரந்திதேவன் பஞ்சமனுக்குத் தீர்த்தத்தை வார்த்தான்.

அன்னதானம் ஒரு புண்ணிய காரியம். மகா பெரியவாவின் அருளுரைகளை படித்துவிட்டு,நாம் சும்மா இருக்கலாமா? யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் என்ற வரிகள் நேற்று  நடைபெற்ற அமாவாசை அன்னதானத்தை சற்று நினைவூட்டுகின்றது.

வாருங்கள் அன்பர்களே ! நிகழ்விற்கு செல்வோம்.






மேலே நீங்கள் காண்பது 2020 ம் ஆண்டில் முதல் நாளில் செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சுமார் 20 அன்பர்களுக்கு மதிய உணவு வழங்கிய தருணங்கள்.





இவை கூடுவாஞ்சேரியில் உள்ள அன்பர்களுக்கு வழங்கப்பட்டது 



தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் வழங்கிய தருணம்.




















இவை அனைத்தும் நந்தீஸ்வரர் கோயிலின் முன்னே உள்ள அன்பர்களுக்கு உணவு கொடுத்த போது 



சென்ற வாரம் வாலாஜாபாத்திலும், இளையனார் வேலூர் கோயில் முன்பும் ஷஷ்டி அன்னதானம் வழங்கிய போது 

இவை மட்டுமின்றி , ஒவ்வொரு  தமிழ் மாத அமாவாசை வழிபாட்டில் சுமார் 100 அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் உணவு வழங்கி வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அன்பர்களே. அன்னதானம் செய்து உங்களால் முடிந்த தொண்டில் இணையுங்கள்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் நாமும் வாட வேண்டும் என்ற மனநிலை வருவது தான் மனிதனின் இயல்பு. அன்னதானம் செய்து மனிதனாக முயற்சிப்போம்.

பதிவின் நிறைவாக யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்

மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-


இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html


அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment