"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 26, 2020

பாண்டிச்சேரி சித்தர்களின் பாதம் பற்றுவோம்

 அனைவருக்கும் வணக்கம்.

சித்தர்கள்.

நம்மை வாழ்விக்க வந்தவர்கள். பார்ப்பதற்கு பித்தர்கள் போன்று தோன்றலாம். சிவத்தை ஜீவனில் உணரும் போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர் குருவாக, சிலர் சற்குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம் போதிக்க வருபவர்கள். சென்னையில் மட்டுமா சித்தர் பரம்பரை உள்ளது என்று நினைத்த நமக்கு தமிழ் நாடு என்ற அளவில் விரிந்து பார்த்தோம். அத்தனையும் தாண்டி பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக சித்தர்களின் அருளை உணர முடிகின்றது.

சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி. இந்த உலகிலே எங்கெங்கோ நாம் பிறந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் பிறந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது நம் முன்னோர் செய்த புண்ணியமே. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது அதனினும் புண்ணியமே.

தமிழ்நாடு முழுதும் ஜீவன் முக்தர்களின் அரசாட்சி தான். திரும்பிய இடமெங்கும் உயிர்நிலை கோயில்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை சித்தர்களின் ராஜ்ஜியம் தான். அந்த வரிசையில் சென்னை என்றால் நமக்கு மிக மிக நெருக்கமாக சதானந்தர். இவரைத் தாண்டி பாரத்தால் சென்னையில் சாங்கு சித்தர், வேளச்சேரி மகான், பட்டினத்தார் என நீளும் பட்டியலில் திருஒற்றியூர் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.

அந்த வரிசையில் நாம் பாண்டிச்சேரி சித்தர்களைப் பற்றி பல முறை கேள்வியுற்றோம். ஆனால் தரிசிக்க ஏங்கினோம். அப்போது தான் வில்லியனூரில் உள்ள  ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் சென்று இரண்டு முறை ஆயில்ய ஆராதனை கண்டோம். அப்போது திரு.சுவாமிநாதன் ஐயாவின் வழிகாட்டலின் படி, மூன்று உயிர்நிலை கோயில் தரிசனம் பெற்றோம். சென்ற மாதம் அகத்தியர் ஜெயந்தியை  ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தில் கொண்டாடினோம். வெகு நாட்கள் கழித்து நம் TUT நண்பர்களோடு ஆன்மிக யாத்திரை. அன்றைய தினம் முழுதும் அவனருள் கிடைத்தது. சுமார் 4 சித்தர் கோயில்களை தரிசித்தோம்.





முதலில் அருட்குரு தேங்காய் சுவாமிகள் தரிசனம் பெற்றோம் .














புதுவையிலுள்ள மூலகுளம் பகுதியிலிருந்து சுவாமிகள் வந்ததாக கூறுவர்.மணவெளி கிராமத்திற்கு அருகிலுள்ள தண்டுகரை மேடு என்ற பகுதியில் சிறு குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார். அங்கு தீவிரமான ஆத்ம சாதனையில்  ஈடுபட்டிருந்தார்.பிரச்சனைகளால் பாதிக்கபட்ட மக்களுக்கு குறைகளை தீர்த்து வைத்துள்ளார்.

பக்தர்களை தேங்காயை கொண்டு வரச்செய்து அதை உடைத்து பார்ப்பாராம். தேங்காயினுள் நீல நிறத்தில் எழுத்துக்கள் தெரியுமாம். அதைப்படித்து பக்தர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாராம்.அதனாலேயே ”தேங்காய் சித்தர்” என்ற பெயர் வந்ததாம். பில்லி சூன்யம் –ஏவல் முதலியவற்றை விரட்டி அடிப்பாராம். பச்சிலை மூலிகைகளைக் கொண்டு கை தேர்ந்த வைத்தியம் செய்வாராம்.அவர் கை பட்டாலே நோய் பறந்து விடுமாம்.



சில ஆண்டுகளுக்கு பிறகு வில்லியனூரில் மரத்தடியில் அமர்ந்து முக்தி அடைந்து விட்டார்.அவருக்கு அங்கேயே சமாதி எழுப்பி வழிபாடு செய்து வருகின்றனர்.சுவாமிகளுக்கு தேங்காயை வைத்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது. .




அடுத்து அருட்குரு ஸ்ரீ சக்திவேல் பரமானந்தர் சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.

ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள்,தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள கடலூரில் 175 ஆண்டுகளுக்கு முன் அந்தண மரபில் தோன்றினார்.

அந்தண மரபுப்படி வேத பாராயணங்கள்,உபநிஷத்துக்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டன.சாஸ்திரங்களின் வலிமையை உணர உணர மந்திர சக்தியின் அற்புதம் அவருக்குத் தென்பட்டன. தேவியை பூஜிக்க இயந்திரங்களை பயன்படுத்தினார். அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் தன்னுள் இருப்பதை அறிந்துணர்ந்தார்.

இளம் வயதில் தந்தையை இழந்தார்.சகோதரர்களிடையே சொத்து தகராறு தோன்றியது. நம்மை அழிக்கும் சக்திக்கு பங்கு போட்டுக் கொள்ள சண்டையிடும் துன்மர் கூட்டத்தினிடையே நாமிருப்பது வீண் என்று வீட்டை விட்டு புறப்பட்டார்.



ஆத்ம ஞானமே நமக்குத் தேவை. ஆத்ம தரிசனமே தாம் காண வேண்டிய காட்சி என்று கங்கை, காசி,ஹரித்துவார்,பண்டரிபுரம், காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கெல்லாம் சுற்றிச் திரிந்தார். இதன் விளைவாக மன உளைச்சல் நின்றது. கடைசியாக புதுவை வந்து சேர்ந்தார்.

எங்கும் இறைவன் மயம் என்ற உணர்ச்சி அவருள் பொங்கி வழிந்தது.

அனைத்திலும் இறைவனைக் கண்டார். அதனால் தரையில் கால் வைத்து நடக்கவும் கூசினார்.மக்கள் பேசுவதைப் பார்த்து இறைவன் அவர்கள் உருவில் பேசுகிறார் என்பார். நாய் குரைப்பதைப் பார்த்து இறைவன் அந்த உருவத்தில் பேசுகிறார் என்பார்.

கதிரவனின் பிரகாசத்தைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவார்.

கடலின் அழகையும் ,ஆழத்தையும் பார்த்து “இறைவா-உன்னை உணர முடிகிறதே “ என்பார். நெருப்பில் கையை விட்டு “இறைவா- உன்னை தொட முடிகிறதே” என்பார்.

” இறைவா- நீ எங்குமிருக்கிறாய்-உன்னை நான் எங்கும் பார்க்கிறேன், உன்னிடம் பேசுகிறேன் -விளையாடுகிறேன். இதைவிட எனக்கு என்ன வேண்டும்-இப்படியே இருந்தால் போதும்” என்று ஆனந்தக்கண்ணீர் விடுவார். கண்ணீர் தாரை தாரையாக வழியும்.சதா சர்வ காலமும் அவர் கண்ணீர் விட்டுக் கொண்டேயிருப்பார்.

இறைவன் மேல் ஒரே அன்பு மயமாக ஆனந்த மயமாக இருப்பார்.

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருகி இராப்பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனை
தினபன் கடிப்பன் திருத்துவன் தானே
— திருமூலர்





சுவாமிகள் ஏகாந்தத்தில் நிலைத்த உடன் சத்துவ குணத்திலிருந்து நிர்குணத்திற்கு வந்தார்.இத்தருணத்தில் ஓம் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகளின் சந்திப்பு ஏற்பட்டது.இமயமலையில் இருவரும் ஆத்ம சாதனை பயிலும் போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பிறகு சுவாமிகள் புதுவைக்கு வந்து தங்கியிருக்கும் பொழுது, ஞானானந்த சுவாமிகளின் சந்திப்பு மீண்டும் ஏற்பட்டது.

சுவாமிகள் ஆனந்தமயமாக காட்சியளித்தார். அவரின் லட்சுமிகடாட்சமான முகத்தை கண்டு-மக்கள் அவரின் சக்தியை உணர்ந்தார்கள். சுவாமிகளிடம் ஆசி பெற்றவர்களின் நோய் குணமாகியது.அப்பகுதி மக்களின் துன்பம் சிறுக சிறுக மறைந்தது.யாராவது தங்கள் கஷ்டத்தை சுவாமிகளிடம் சொன்னால்-இதோ இறைவன் இருக்கிறானே,கஷ்டமெங்கே, ஆனந்தமாக இருக்கிறான்” சந்தோஷமாக போ” என்பார். வந்தவரின் கஷ்டம் அக்கணமே மறைந்து விடும்.











சுவாமிகளை தரிசனம் செய்தால் அன்று பூராவும் சந்தோஷமாக இருக்கும் என்பதை மக்கள் கண்டுணர்ந்தார்கள். நம்பிக்கையும் ஏற்பட்டது. அவரின் பேரன்பு பிரபஞ்ச முழுவதும் பரவத் தொடங்கியது. ஒரு நாள் மாலை அப்படியே உட்கார்ந்திருந்தார். எதையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.ஒரு திக்கையே நோக்கி தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்தவர்கள் ஆச்சரியத்தோடு வினவினார்கள். ”அங்கே ஆண்டவன் சிரிக்கப் போறான்டா – ஆயிரமாயிரம் பேர் வாழப் போறாண்டா “ என்று துள்ளிக் குதித்தோடினார். தன் வேட்டியை எடுத்துக் காட்டி, “துணி வரப் போகுதடா-துணி வரப் போகுது” என்று சிரித்தார்.சற்று நேரம் கழித்து மீண்டும் “எல்லோரும் ஏறிப் போக பெரிய வண்டி வரப்போகுது- எப்போதும் ஓடும் “ என்று சிரித்துக் கொண்டிருந்தார்.

சில காலம் அமைதியாக இருந்தார்.இரவிலும் பகலிலும் தூங்குவது இல்லை.ஒரு நாள் விடியற்காலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு தரிசிக்க வருவோரையெல்லாம் “ நாளைக்கு வாங்கோ- நாளைக்கு வாங்கோ”என்றார். ஒவ்வொருவரையும் பார்த்து கரம் கும்பிட்டு சொன்னார். இதைப் பாத்தவர்களுக்கு உடல் சிலிர்த்தது. சுவாமிகள் ஏதோ முக்கியமான செய்தி சொல்லப் போகிறார் என்று நினைத்தனர்.








சுவாமிகள் சொற்படியே மறுநாள் சுவாமிகளைப் பார்க்க வந்தார்கள்.

ஓம் ஸ்ரீ பரமானந்த சத்குரு சுவாமிகள் பரமானந்தத்தில் திளைத்து சமாதியில் மூழ்கி விட்டார்.

செய்தி காட்டுத்தீ போல பரவியது.ஆத்ம சாதகர்கள், பக்தர்கள், ஞானிகள் என அனைவரும் கூடி விட்டனர்.புதுவை முதலியார்பேட்டை,காராம

ணிக்குப்பத்தில் சுவாமிகளின் அருளுடலை அடக்கம் செய்தனர்.சுவாமிகள் வழிபாடு செய்த லிங்கம் சமாதியின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுவாமிகள் பூஜித்த இயந்திரமும் அங்கேயே உள்ளது.

சுவாமிகள் குறிப்பிட்ட படியே அந்த இடத்தில் “நெசவாலை” ஒன்றும் ரயில் தண்டவாளமும் பிற்காலத்தில் உருவானது.

சுவாமிகள் வாழ்ந்த காலத்தைச் சரியாக கணக்கிடுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை.இருப்பினும் கி.பி. 1830 லிருந்து கி.பி.1860 வரை அல்லதுகி.பி. 1870 லிருந்து கி.பி.1890 வரை இருக்கலாம் என்று செவிவழிச் செய்திகள் செப்புகின்றன.

 












அடுத்து கோயிலில் உள்ள தியான பீடம் சென்று சிறிது மனதில் அமைதி கண்டோம்.





 இதோ.. அடுத்த சித்தர் தரிசனம் கீழே.


அருள்லிகு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.










அடுத்து தவத்திரு ஸ்ரீ குருசாமி அம்மையார் தரிசனம் பெற்றோம்.












ஸ்ரீ குருசாமி அம்மையார் பீடம் விழுப்புரம் பெருஞ்சாலையில் உள்ள புதுவை மாநிலம் அரியூரில், சாலையின் வலது புறத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற வளைவுடைய கட்டிடத்தில் அமைந்து உள்ளது.

இங்குள்ள சிறப்பு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மிளகாய் அரைத்து நீரில் கரைத்து குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்வார்களாம். தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.


அடுத்து தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.













மகான் படே சாஹிப் சுவாமிகள் ஒரு இஸ்லாமிய ஆத்ம ஞானி.புதுவை, சின்ன பாபு சமுத்திரம் என்ற
ஊருக்கு அருகில் வாழ்ந்து சமாதியடைந்ததாக வரலாறு கூறுகிறது. அவரது பூர்வீகம் என்ன- தாய் தந்தை யார், அவர் எங்கிருந்து, எப்படி புதுவை வந்தார் என்ற விபரம் ஏதும் இல்லை.உண்மைப் பெயர் என்ன என்பதும் தெரியவில்லை. மிகப் பெரிய ஞானி என்பதை-உருதுவில் மஹான் படே சாஹிப் என்று மக்கள் இவரை அழைக்கிறார்கள்.

இறைவனின் பேராற்றலை உணர்ந்த பிறகு சாதி, மதம், இனம் அறவே மறைந்துவிடும். படே என்றால் பெரிய என்று பொருள். உயர்ந்த இத்தகைய நிலையில் இருந்த உத்தமராக விளங்கியதால் இவரை பாபா படே சாயபு என்று அழைத்தனர்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.

இவர் யாரிடமும் பேச மாட்டார்.மௌனமாகவே இருப்பார்.சதா இறை சிந்தனையில் மௌனமாக இருப்பார்.புதுவையிலுள்ள திருக்கனூர் என்னும் சிற்றூரில் சில காலம் தங்கியிருந்துள்ளார். திருக்கனூருக்கும், சின்ன பாபு சமுத்திரத்திற்கும் இடையிடையே சென்று வருவதுண்டு.

இறைவனின் கருணையால்,சித்துக்கள் கைவரப்பெற்றார்.ஆற்றல் பெருகியது. மக்கள் இவரது ஆற்றலை உணர்ந்து இவரை தஞ்சமடைந்தார்கள்.பாமர மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள்.தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறைகளை
மகானிடம் கூறுவார்கள்.சற்று நேரம் கழித்து தலையசைப்பார்.நோய் குணமாகிவிடும். அங்குள்ள ஒரு மரத்தைச் சுற்றும்படி ஜாடை காட்டுவார்.சுற்றுவார்கள். நோய் குணமாகும்.விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகளிடம் செல்வார்.

ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொடுத்துக் கையை மூடச் சொல்வார்.பின் தாம் அங்குள்ள குழியில் உட்கார்ந்துக் கொண்டு மேலுள்ள மண்ணைப் போட்டு தம்மை மூடச் சொல்வார். குழந்தைகளும் அவ்வாறே செய்து விட்டு கையை திறந்து
பார்க்க -கையிலுள்ள மண் சர்க்கரையாக மாறியிருக்கும். இந்த அதிசயத்தை-தங்கள் பெற்றோரிடம் சொல்வார்கள்.ஊர் மக்கள், திரண்டு வந்து மண்ணால் மூடப்பட்ட மகானை -காப்பாற்ற மண்ணை எடுத்துவிட்டு பார்ப்பார்கள்.மகான் இருக்க மாட்டார். ஒரு சிலர் மகானை வேறு இடத்தில் பார்த்ததாக சொல்வார்கள்.அங்கு சென்று தேடினால் அங்கும் இருக்க மாட்டார். ஊர்மக்கள்,வருத்தமுற்று இருக்கையில் கூட்டத்தினின்று திடீரென்று வெளிவந்து காட்சி கொடுப்பார்.

ஒரு நாள் இறைவனிடமிருந்து தனது ஆத்ம சாதனை முடிந்த குறிப்பு கிடைத்தது.இறைவனோடு கலப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.குழந்தைகளை குழி தோண்டச் சொன்னார்.குழந்தைகள் கையில் மண்ணை அள்ளிக் கொடுத்துவிட்டு கையை மூடிக் கொள்ளச் சொல்லிக் குழியில் இறங்கினார். தன் மேல் மண்ணைப் போட்டு மூடச் சொல்லிவிட்டு கையை திறந்துப் பார்க்கச் சொன்னார்.குழந்தைகள் கையை திறந்துப் பார்த்தனர்.கையில் மிட்டாய் இருந்தது.

இம்முறை,உண்மையிலேயே மகான் சமாதியடைந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.சில நாள் கழித்து பம்பாய் சுவாமி என்னும் மகானின் சீடர் மகானின் சமாதி மேல் கட்டிடம் எழுப்பி-மக்கள் வந்து வழிபட வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் தினமும் சமாதியில் வழிபாடு நடத்துகின்றனர்.பிரதி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சமாதிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.மகான் படே சாஹிப்- ஒரு இஸ்லாமிய ஞானியானாலும், அனைத்து மத மக்களும் வழிபாடு செய்வது-ஞானபூமியாகிய நமது புதுவையின் பெருமையாகும்.

சமாதி முன் அணையா விளக்கு எப்போதும் ஒளிவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. காற்றிலும், மழையிலும் கூட அணைவதே இல்லை.ஒரு சமயம் விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டது.விளக்கு அணையப் போகும் சமயம்,அப்போது அங்கு படுத்திருந்த ஒருவரின் கனவில் சொல்லி எண்ணெய் ஊற்றச் செய்தார்.மக்கள் தங்கள் குறைகளை சமாதிமுன் நின்று மனம் விட்டுசொல்லி அழுகின்றனர்.அவர்களின் பெருந்துயர் தீர்கிறது.சிலர்,அத்திருக்கோயிலிலேயே இரவு தங்கியிருந்து வேண்டிக் கொள்கின்றனர்.சிலர் நேர்த்திக் கடனாக பிஸ்கட்டும்,அன்னதானமும் வழங்குகின்றனர்.

ஆண்டுதோறும் மகான் படே சாஹிபிற்கு குருபூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. குருபூஜையன்று ஒரு பெரிய அண்டாவை வைத்து விடுகின்றனர்.மக்கள், தங்கள் வசதிகேற்ப, தங்கள் வீட்டிலேயே சாதம் கிண்டி அந்த அண்டாவில் கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர்.
அச்சாதத்தை எல்லோருக்கும் அன்னதானமாக கோவிலார் கொடுக்கின்றனர்.

   இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகிறார். அவ்வூரில் மகான் படேசாகிப் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. 

ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ணகுப்பத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வரப்பில் படுத்துக் கொண்டிருந்த ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக் கண்டு அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் போய்க் கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி, விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணகுப்பம் போய்ச் சேர்ந்தார்கள்.

இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல் உறங்காமல் கவலையோடு இருந்தனர். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் புதல்வனிடத்தில், ஞான சொரூபமான பெரிய பிள்ளையினிடத்தில் உள்ளாழ்ந்த வலுவான எண்ணத்தைச் செலுத்தினார். இமைகள் மூடிக்கொண்டன. நிஷ்டை நிலைக்கின்றது. ஒன்றும் ஒன்றும் ஒன்றில் ஒன்றாகிவிட்டது. ஒரே ஏகாந்த நிலை கூடுகின்றது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்தெய்துகிறது.



அப்போது அவரைத் தீண்டிய அதே கருநாகம் ஆனந்தமாக கோயிலுக்குள் நுழைந்தது. பக்கத்திலுள்ளவர்கள் அலறியடித்து எழுந்தார்கள். மகான் ஆனந்த அனுபூதியில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் எதுவும் செய்யவில்லை. மகான் அருகில் வந்தது, அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டிய இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சியது. உடனே விநாயக பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவரகளை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின்மேல் ஏறி படம் எடுத்தது. மறுபடியும் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது. ஒருமணிநேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறன்தன. நிஷ்டை கலைந்தது. தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் கருநாகத்தைப் பார்த்தார். அது உடனே அவர் கண்களை நோக்கி தன் உடம்பை சுருட்டி தலையைக் குனிந்து வணங்கியது. பின்னர் அவர் பாதத்தில் அப்படியே குனிந்தபடியே தன் உயிரை விட்டது.




அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்ச பதவியளித்தார். அதன் பூவுடலுக்கு தன் கைகளாலேயே இறுதிச்சடங்குகளும் செய்து முடித்தார். மக்கள் பிரமிப்புடன் இந்த நிகழ்ச்சியை கண்டனர். மரணத்தை வெல்லக்கூடிய சக்தி மகான் அவர் கையிலேயே வைத்திருந்தார் என்பதை புரிந்து கொண்டனர். கொடிய விஷத்தை கொடுத்த கருநாகத்திற்குகூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது.மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாதபடியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணையிட்டு ஆசீர்வதித்தார். மக்களின் மனதில் அந்த ஆத்மஞானி தெய்வம் என்ற நிலையில் வைத்து போற்றப்பட்டார். இன்றளவும் போற்றப்படுகிறார்.



 ஒவ்வொரு வாரமும் வருகிற செவ்வாய்கிழமையும், ஒவ்வொரு மாதம் வருகிற ஆயில்ய நட்சத்திரமும் சித்தர் பீடத்தின் முக்கிய விசேஷ நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வருகிற ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் பீடத்தை மகான் தேரில் பவனி வருகிறார். ஒவ்வொரு வாரம் வருகிற வியாழன், ஞாயிறு விசேஷ நாட்கள் ஆகும். கொடிய தொற்று நோய்கள், தீராத வியாதிகள் போன்றவற்றால் அவதியுறுவோர் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளில் தரிசனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் நீர்மோர், பிஸ்கட், பழவகைகள் தானம் செய்தால் உத்தமமான பலன் கிடைக்கும். வேண்டுதலுடன் வருவோர் 5 செவ்வாய் கிழமை சித்தர் பீடத்தில் இரவு தங்கி சென்றால் உத்தமமான பலன் கிடைக்கும்.

மகான் படேசாகிப் சின்ன பாபுசமுத்திரத்தில் வெட்ட வெளியில் கி.பி.1868 பிப்ரவரி மாதம் 12-ம் தேதி செவ்வாய்க்கிழமை சமாதியடைந்தார்.


ஒரு முறை அல்ல..அல்ல..பல முறை நேரில் சென்று சுவாமிகள் தரிசனம் பெற இந்நாளில் நாம் குருவிடம் பிரார்த்திக்கின்றோம்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி... - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_14.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment