அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் இறையின் பாதம் பணிந்து நாளைய ஞாயிற்றுக்கிழமை அன்று பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக! வருக!! என்று அழைத்து மகிழ்கின்றோம். இதற்கு முன்னர் 23.11.2023 அன்று நடைபெற்ற மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் கண்டு மகிழ்ந்தோம். விரைவில் தனிப்பதிவில் அன்றைய தின தரிசன அருள்நிலைகளை பகிர்கின்றோம்.
மேலும் கும்பாபிஷேகத்திற்கு தங்களால் முடிந்த பொருளுதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில் ஆலய திருப்பணியில் ஈடுபட்டால் நம் தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
ஒரு ஆலயம் அமைவது என்பது மனித சக்தியால் நடப்பது அன்று. அதுவும் மலை மேல் ஆலயம் அமைவது அந்த பரம்பொருளின் சக்தியால் மட்டுமே நடக்கும். அது ஒரு ஆலயம், இறை மூர்த்தங்கள் என ஒவ்வொன்றும் நாம் என்ன தீர்மானம் செய்தாலும், இறை உத்தரவு பெற்று அமைவது என்பது கண்கூடு. இறைசக்தியால் தான் இது போன்ற பல ஆலயங்கள். கும்பாபிசேகம் என நாம் பார்த்து வருகின்றோம். இங்கே குறிப்பிட்டுள்ள ஆலயத்தின் ஈசனின் நாமத்தை கேட்கும் போதே நம் உடல் சிலிர்த்து, மனம் அடங்குகின்றது. பொதுவாக பார்க்கும் போது குழந்தை வரம் வேண்டுவோர் இந்த ஆலயத்தை தரிசித்து வந்தால் அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் அருளால் நிறைவேறும் என்று உணர்த்தப்படுகின்றது.
அத்திரி ஈஸ்வரர் என்று நாம் சொன்னவுடன் அத்திரி மலை தான் நம் நினைவிற்கு வருகின்றது. சிறிது அத்திரி மலை தரிசனம் இங்கே நாமும் பெறுவோம்.
அத்திரி மகரிஷி-அனுசுயா தேவியின் அருட்கூடம் -அத்திரி மலை
“பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர்…சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவர் அத்திரி மகரிஷி ஆவார் ..அவர் மனைவி அனுசுயா தேவி- குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலை சிறந்தவள் ...தனது தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தவள் இருவருமே தவ சக்தியில் சளைத்தவர்கள் இல்லை ..
மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்ற போது அனுசுயா தேவியை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார் .மூன்று குழந்தைகளின் ஒருமித்த வடிவே, அத்திரி மகரிஷி, அனுஷ்யா தேவி தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர் ஆவார். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையாகும் .
அத்திரி மகரிஷி, அனுஷ்யா தேவி தம்பதியினரின் மற்றொரு அருந்தவ புதல்வன் யோக சூத்திரத்தை நமக்கு வழங்கிய பதஞ்சலி மாமுனிவர் ஆவார் ..
சித்தர்கள் உலகமெல்லாம் சென்று ஆராய்ந்து கடைசியில் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்..நம் வாழும் பகுதி இறை ஈர்ப்பு சக்தி மிகுந்த புண்ணிய பூமியாகும் .
அத்திரி மலை என்பது பொதிகை மலையின் ஒரு பகுதியாகும்..அத்திரி மகரிஷி மற்றும் அனுசுயா தேவி தவம் செய்த அருட் கூடமாகும்..இங்கே அகத்தியர் மற்றும் கோரக்கநாதரின் இருப்பினை உணரலாம்..பொதிகையில் இருந்தே அகத்திய முனிவர் தமிழை உலகுக்கு உணர்த்தியதாகவும் சொல்லப்படுகிறது... தமிழக மாநில மலர் செங்காந்தாள் பூ ...பொதிகை மலையில் நிறைய பூத்து குலுங்குகிறது ..
அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து செல்லவேண்டும், அல்லது ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஆட்டோவசதி உள்ளது.பயணத்தின் தொடக்கத்தில் வனத்துறையினர் நம்மை சோதனை செய்த பின்பே பயணத்திற்கு ஒரு நோட்டில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள்.
மலைக்குள் நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் ஏற்றம் உள்ளது .. தற்போது மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. மலை ஏற இரண்டு மணி நேரம் ..இறங்க இரண்டு மணிநேரம் ஆகிறது ..
அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை.
கோரக்கர் அமர்ந்து தவம் செய்யும் குகை ஒன்றுள்ளது பார்பதற்கே ரம்மியமாய் இருந்தது. இன்றும் அவர் அங்கு தவம் செய்கிறார் என்றே சொல்லபடுகிறது....அத்திரியும்.. அகஸ்தியரும் மரத்தடியில் தவ கோலத்தில் உள்ளனர் அவர்கள் தரிசிக்க மனம் லகிக்கிறது.. இங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தனமழை பொழியும் என்று கூறுகிறார்கள். அன்று எல்லா சித்தர்களும் இங்கு வந்து ஆகாய கங்கையில் நீராடுவதகவும் கூறுகிறார்கள்.
இயற்கை போற்றி வணங்கி வந்தவர்கள் தான் சித்தர்கள் இங்கே வரும் அடியார்கள் பாலிதீன் பை போன்ற எதையும் பயன்படுத்த வேண்டாம் ..நெய் தீபம் ஏற்றுங்கள் ..நல்ல மலர்கள், பழங்கள் கொண்டு பணியுங்கள்..மழை காலங்களில் கல்லாறு - இடுப்பளவு தண்ணிரை கடந்து செல்ல வேண்டும்.... ஒருமுறை சென்று வாருங்கள்..அருமையான அனுபவங்களை பெறுவீர்கள்.
இங்கே மாதந்தோறும் பௌர்ணமி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வாய்ப்புள்ள அன்பர்கள் அத்திரி மலை சென்று தரிசனம் பெறுங்கள்.
No comments:
Post a Comment