"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 8, 2020

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் ஆருத்ரா தரிசன விழா 2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் என்று ஒரு பதிவு அளித்து இருந்தோம். கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் பற்றி சில கருத்துக்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். குருவின் அருளால் நமக்கு மீண்டும் இந்தக்கோயிலில்  நடைபெற உள்ள  ஆருத்ரா தரிசன விழா அழைப்பிதழ் கிடைத்தது.எனவே மீண்டும் இந்தப் பதிவின் மூலம் ஆதி கும்பேசுவரர் கோயில் தரிசனம் பெற உள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் வெறும் கற்களால் கட்டப்பட்டதல்ல. நம் முப்பாட்டனின் கலாசாரத்தாலும், நால்வர் பெருமக்களின் ஆசியாலும் கட்டப்பட்டது. இவை நம் தமிழின் பெருமை பேசும் வாழ்வியல் கூடங்கள். பக்தியை பறைசாற்றும் உயிர் ஆலயங்கள். நாம் தலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று ஒரு தொடர் அளித்து வருகின்றோம். சும்மா..ஏனோ தானோ என்று தான் நாமும் முதலில் நினைத்தோம். ஆனால் ஒவ்வொரு பாடல் பெற்ற தல தரிசனமும் நம் தலை எழுத்தை மாற்றும் சக்தி படைத்தவை என்று நாம் கருதுகின்றோம். ஒவ்வொரு தல பயணமும் நமக்கு இன்னும் வாழ்வியலை ஊட்டுகின்றது. தல யாத்திரைக்கு சென்றால் அவசரம் காட்டாது மிக மிக பொறுமையாக தரிசனம் செய்து வரவும். தலங்களின் எண்ணிக்கையில் தரிசனம் செய்வதில் ஒன்றுமே பயனில்லை. ஒரு விடுமுறை தினத்தில் ஓரே ஒரு தலம் தரிசனம் செய்தாலும் அது நமக்கு ஓராண்டு முழுதும் தெம்பை தரும்.

மாதம் ஒரு பாடல் பெற்ற தலத்திற்கு என்று திட்டமிடுங்கள். இல்லையேல் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது இது போன்ற பாடல் பெற்ற கோயில்களுக்கு சென்று வாருங்கள். இன்னும் திருநெடுங்களம் கோயிலுக்கு நாம் சென்று வந்தது ஆச்சர்யமாக உள்ளது. வாகன வசதி இல்லாத வழித்தடத்தில் எப்படியோ சென்று சேர்ந்தோம். கோயில் திறந்ததும் ஒவ்வொரு சந்நிதியாக சென்று தரிசித்து, அங்கு பெருமக்கள் பாடிய பாடலை பாடி வழிபட்டோம். அப்போது தான் நமக்கு இந்த தலம் திருப்புகழ் தலம் என்றும் தெரிந்தது. அங்கே கல்வெட்டில் இருந்த பதிகங்களை படித்து தான் வந்தோம். இது போல் எத்தனையோ தலங்கள் உள்ளன. ஒவ்வொரு தலத்திலும் பொறுமையாக தரிசனம் செய்து, நெய் விளக்கேற்றி, பதிகம் படித்து தரிசித்து வாருங்கள். நாம் சொல்ல வருகின்ற செய்தி உங்களுக்கு புரியும். இனி கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் தரிசனம் தான்.

கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.


இதோ தல வரலாறு இனி காண இருக்கின்றோம்.பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொன்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன.

இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதிகும்பேசுவரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.



இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்றப் பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள்.





இந்தக் கோயில் பற்றிய புராணக்கதைச் செய்திகளைக் காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார்.

திருக்குடந் தையாதி கும்பேசர் செந்தா
மரைக்குளங் கங்கை மகங்கா – விரிக்கரையின்
ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார்
சாரங்க பாணி தலம்

இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் - திருக்குடந்தை ஆதி கும்பேசர் செந்தாமரைக்குளம் கங்கை மகம் காவிரிக்கரையின் ஓரம் கீழ்க்கோட்டம் காரோணமங்கை நாயகியார் சாரங்கபாணி தலம் . (காரோணம் = மந்திர மேடை, மந்திர பீடம்)











இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்திய (விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட) கல்வெட்டு கூறும் செய்தி பின்வருமாறு அமையும்:

கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில், திருநாகேஸ்வரம்- திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறுகிராமம் எலந்துறை. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் கிழக்கே அமைந்த ஊர் திருமலைராஜபுரம். திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்காக அளித்ததை அறியமுடிகிறது. கி.பி.1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள எலந்துறையில புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது.




மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். 

வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. 

மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது.





 கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். இவ்விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா தற்போது நடைபெறுகிறது. இதற்கான வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை
தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், தாராசுரம்
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி
கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர்
மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், மேலக்காவேரி
சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை


இதோ ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆருத்ரா தரிசன விழா 2020 அழைப்பிதழ் கீழே பகிர்கின்றோம்.




வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் -https://tut-temples.blogspot.com/2020/01/9.html

2 comments:

  1. களப்பணியில் நான் கண்ட, என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டிலும், பிற கட்டுரைகளிலும் என்னால் குறிப்பிடப்பட்டுள்ள கும்பேஸ்வரர் கோயில் கல்வெட்டினைப் பற்றிய செய்தியை இக்கட்டுரையில் கண்டேன். இது தொடர்பாக மேலும் செய்திக்கு மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் மகாமகத்தின்போது நான் எழுதிய இணைப்பைக் (https://ponnibuddha.blogspot.com/2016/03/blog-post.html) காணவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா
      வணக்கம். தங்களின் ஆய்வுப்பணி போற்றுதலுக்குரியது. தங்களின் கட்டுரை இணைப்பு எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.இது போன்ற வழிமுறை எங்களை செம்மைப்படுத்தி வழிநடத்துகிறது.

      தங்களின் கருத்திற்கு தலை வணங்கி மகிழ்கின்றோம்.
      தொடர்ந்து நம் தளத்தை பார்வையிட்டு தங்கள் உள்ளக்கருத்தை தெரிவிக்க வேண்டுகின்றோம்.

      நன்றி
      வணக்கம்

      Delete