"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 1, 2020

தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தென்றல் தவழும் தேனி மாவட்டத்தில் எத்தனை எத்தனை சிறப்புகள். வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு வாரம் தேனி மாவட்டம் முழுதும் திருவிழா கோலம் காணும். சபரிமலை ஐயப்பன் விழாக்காலங்களில் தேனி முழுதும் சரண கோஷம் கேட்கும். சித்திரை ஒன்றாம் நாள் வீரப்ப ஐயனார் திருவிழாவிலும் தேனி திக்குமுக்காடும். இது போல் எண்ணற்ற திருவிழாக்கள் தேனி மாவட்டம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது போன்ற ஒரு திருவிழாவாக தேனியில் திருவாசக முற்றோதல் வருகின்ற 05.01.2020 அன்று ஞானப் பெருந்திருவிழா என்று அழைக்கும் வண்ணம் நிகழ உள்ளது.

ஏற்கனவே நம் தளத்தில் முற்றோதல் பற்றி பலமுறை பேசி இருக்கின்றோம். மீண்டும் இங்கே பேசுவோம்.

பொதுவாக முற்றோதல் என்று சொன்னாலே அது திருவாசக முற்றோதல் என்று தான் பொருள் கொள்ளும்படி கூறப்பட்டு வருகின்றது. முற்றோதல் என்று சொல்லும்போது நமக்கு ஒரு சந்தேகமும் வந்துவிட்டது. முற்றோதல் என்பது சரியா? இல்லை முற்றோதுதல் என்பது சரியா? என்று. சரி. நாம் விசயத்திற்கு வருவோம்.

முற்றோதல் என்பது குழுக்களாக தமிழ் மொழியில் உள்ள பக்தி  நூலை ஒருவரே படிக்காமல், குழுவில் உள்ள அனைவரும் படிக்கும் படி செய்வது ஆகும். பொதுவாக சைவ ஆதீனத் திருமடங்கள், கோயில்களில் இந்த முற்றோதல் நடைபெறுவதுண்டு. சைவர்கள் மிகுதியாகக் கையாளும் வழக்கம் இது. திருவாசக முற்றோதல்; திருமந்திர முற்றோதல் வழக்கத்தில் உள்ளவை. நாலாயிரப் பிரபந்த

முற்றோதலும் உண்டு. ஆனால் நாம் திருவாசக முற்றோதல் என்று நிறைய கேட்டிருப்போம். இந்த முற்றோதல் நிகழ்வில் கண்டிப்பாக குழந்தைகள் பங்கு பெற வேண்டும். அப்போது தான் பக்தி வளரும். புத்தி தெளியும். ஐந்தில் வளைத்தால் தான் ஐம்பதில் வளைக்க முடியும். 

முற்றோதல் என்ற நிகழ்வு பற்றி நாம் அறிந்து ஒரு சில முற்றோதல்களிலும் கலந்து கொண்டது இன்னும் நமக்கு இறை பற்றி சிந்திக்க வைக்கின்றது. 

rightmantra.com நிகழ்த்திய அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் நம்மை வலுப்படுத்தியது. அடுத்து தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் கண்டுள்ளோம்.கேட்டுள்ளோம். முற்றோதலில் நாம் திளைக்க திளைக்க நாம் சிவ புண்ணியம் சேர்ப்பது உறுதி, சிவ புண்ணியம் கொஞ்சமாவது இருந்தால் தான் இது போன்ற  முற்றோதல் நிகழ்வுகளில் பங்குபெற முடியும்.
திருவாசகம் மட்டும் முற்றோதல் செய்தல் என்ற நிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். தமிழில் இல்லாத பக்தி நூல்களா? சென்ற நூற்றாண்டில் ஒலிநாடாக்கள் சில தொடங்கின: அபிராமி அந்தாதி - சீர்காழி, டிஎம்எஸ் பாடியுள்ளனர் முற்றோதலாய். பாம்பே சகோதரிகளின் திருமுருகாற்றுப்படை முற்றோதல் ஒலிநாடா கிடைக்கும். திருப்பாவை அரியக்குடி, எம்எல்வி, பாலக்காடு கேவிஎன், வடமொழியில் சுப்ரபாதங்கள் (எம் எஸ்), கீதை முற்றோதல் ஒலிநாடாக்கள் உண்டு, யுட்யூபில் இருக்கலாம். 

இன்று கேட்பொலி (ஆடியோ), காணொளி (யுட்யூப்) போன்றன இருப்பதால் தமிழில்
உள்ள ஏராளமான புராணங்களையும், இலக்கியங்களையும் முற்றோதுவித்து ஏற்றலாம். ஓய்வு நேரத்தில் உலகெல்லாம் உள்ள தமிழர்கள் கேட்டுப் பயன்பெறுவர்.சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முற்றோதலாமே.

முற்றோதல் செயலை பெரியவர்கள் மட்டுமின்றி யாவரும் செய்யலாம்.ஆர்வம், தணியாத வேகம், காதல், தான் ஓதிக்கொண்டுள்ள நூலின் மீது உண்மையான பக்தி--அல்லது பற்று--இவையும் இவற்றுக்கு மேலும் உள்ளவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் பெரியவர்களே என்கிற காரணத்தினால்,வயது,கல்வி தடையின்றி,ஈடுபாட்டின் அடிப்படையில் நடைபெறுவது முற்றோதலாகும்.




இந்த முற்றோதலுக்காக பல ஏற்பாடுகள் செய்து வருகின்றார்கள். தேனி ராம்ஜி ட்ரஸ்ட் திரு.வெங்கட பூபதி ஐயா தேனியில் வரும் அன்பர்களுக்கு பயண ஏற்பாடு வசதிகளை செய்து ஆலோசனை வழங்குகின்றார்கள். நிகழ்வின் முதல் நாள் தங்குவதற்கும் தேனியில் உள்ள மண்டபங்களில் ஏற்பாடு செய்து உள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.அழைப்பிதழில் உள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

முற்றோதல் என்றால் நால்வரின் துதி இருக்கும் அல்லவா!


நால்வர் துதி :

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

- உமாபதி சிவாச்சாரியார்

விளக்கம்:

இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.

சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி

இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.

2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :

இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :

திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.

இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :

உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.





மேலும் விபரங்களுக்கு: +91 78713 67699


எங்கெங்கு முற்றோதல் நிகழ்கின்றதோ, வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சென்று அனுபவியுங்கள். சைவத்தை வாழ்வியலாக்குங்கள். நாமும் நேரில் சென்று முற்றோதல் முழுதுமாக அனுபவிக்க பரம்பொருளிடம் வேண்டுகின்றோம்.


மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_51.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

No comments:

Post a Comment