இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தமிழ் வருடத்தில் திரு குரோதி ஆண்டில் ஆவணி மாதத்தில் உள்ளோம் நம் குருநாதர் அகத்திய பெருமான் அருளாலும், சித்தர் பெருமக்களின் ஆசியாலும் தொடர்ந்து நம் தளம் சார்பில் சேவைகள் நடைபெற்று வருகின்றது.ஆவணி மாத உத்தரவாக அகத்தியர் பெருமான் அருளிய வாக்கினை இன்று சமர்பிக்கின்றோம். இதன் பொருட்டு, ஆவணி மாதம் நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்று இன்றைய பதிவினை தொடர்கின்றோம். ஆவணி மாதம் பேசுமா? என்பது கற்பனை அல்ல..உண்மையே..! நாம் பரிபூரண சரணாகதியில் இருந்தால் மாதம் என்ன? கல்லும் பேசும்! நாமும் இயற்கையுடன் தினமும் பேசலாம், இறையுடன் ஒன்றி வாழலாம் என்பதே குருநாதர் அகத்திய பெருமான் நமக்கு காட்டி வருகின்ற வழி ஆகும்.
குருநாதர் அகத்திய பெருமான் காட்டி வருகின்ற வழியில் நாம் பயணிக்க வேண்டும் என்றால் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த பதிவு உங்கள் கண்ணில் படும். கண்ணில் பட்டால் மட்டும் போதுமா? கருத்தில் நுழைய வேண்டாமா? அடுத்து கருத்தில் நுழைந்தால் போதுமா? கருத்தை கைக்கொண்டு செயலாக்கம் செய்ய வேண்டும். அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக இருப்பதே புண்ணியம் தான். ஏதோ நாம் செஞ்ச புண்ணியம். நம் பெற்றோர் செய்த புண்ணியம். இவற்றால் நமக்கு குருநாதர் அகத்திய பெருமான் ஆசி கிடைத்து வருகின்றது.
விநாயகர் அகவல் தோன்றிய விதத்தை இனி காண இருக்கின்றோம்.
ஒரு முறை சுந்தரரும், அவரது நண்பரான சேரமான் பெருமானும் திருகயிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் வேண்டி கையிலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வழியில் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவ்வை மூதாட்டியைக் கண்டனர்.
அப்போது அவ்வை அவர்களிடம் “நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அவ்வையிடம் அவர்கள் இருவரும் “நாங்கள் கையிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் பெற போய் கொண்டிருக்கிறோம்.” என்றனர்.
அதனைக் கேட்ட அவ்வைப் பாட்டிக்கும் சிவபெருமானின் கையிலாய தரிசனத்தைக் காணும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் வழிபாட்டினை அவசரமாக முடிக்கத் தயாரானார் அவ்வையார்.
அவ்வையின் எண்ணத்தை அறிந்த விநாயகப் பெருமான் “அவ்வையே என்னைப் பற்றி ஒரு பாடல் பாடேன். நானே உன்னை கையிலைக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்.
அவ்வையாரும் ஞானத்தின் வடிவமான விநாயகப் பெருமானைப் பற்றி சீதக்களப எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். பாடல் பாடி முடித்ததும் விநாயகப் பெருமான் தனது துதிக்கையில் அவ்வையை இறுத்தி கையிலாயத்தில் சேர்த்தார்.
அவ்வையாரும் சுந்தரர் மற்றும் சேரமானுக்கு முன்னால் சிவபெருமானின் தரிசனம் பெற்றார்.
விநாயகப்பெருமானைப் பற்றி அவ்வை பாடிய சீதக்களப எனத் தொடங்கும் பாடலே விநாயகர் அகவல் என்று அழைக்கப்படுகிறது.
விநாயகர் வழிபாட்டில் இப்பாடலைப் பாடி மனமுருகி நல்லவற்றை வேண்டினால் நமக்கு அவற்றை விநாயகப்பெருமான் விரைந்து வழங்குவார்.
அவ்வைப் பாட்டியை கையிலாயத்துக்கு விரைந்து கொண்டு சென்ற பிள்ளையார் திருக்கோவிலூர் என்னும் திருத்தலத்தில் அருள்புரிகிறார்.
இவரது திருநாமம் பெரிய யானை கணபதி என்பதாகும். இத்தல இறைவன் வீரட்டேஸ்வரர் என்பவராவார். அம்மை சிவானந்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் சிவனின் வீரத்திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும்.
இனி அனைவரும் விநாயகர் அகவல் பாராயணம் செய்ய இருக்கின்றோம்.
விநாயகர் அகவல் பாடல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment