அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவருக்கும் மீண்டும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம். தற்போது நாம் பஞ்ச பூத தலங்களுள் நிலத்திற்கு உரிய தலமான காஞ்சிபுரத்தில் உள்ளோம். குருவருளால் இன்றைய நம் குழுவின் சேவைகள் சிறப்பாக நடைபெற முழுமுதற் கடவுளாம் கணபதியை வணங்கி தொடங்குவோம். இன்றைய விநாயகர் சதுர்த்தி நன்னாளில் இன்னும் சில விநாயகர் வழிபாட்டிற்கு உரிய பாடல்களை இன்றைய பதிவில் சிந்திக்க உள்ளோம். காஞ்சிபுரம் என்றாலே குமரக்கோட்டம் நினைவில் வருகின்றது அல்லவா? அதிலும் குறிப்பாக நம் சொந்த புராணமான கந்த புராணம் கிடைத்த தலம் குமரக்கோட்டம் ஆகும். அதில் முதல் பாடலான கணபதி வழிபாட்டு பாடலை முதலில் காண உள்ளோம்.
கச்சியப்ப சிவாச்சாரியர் காஞ்சிபுரத்தில் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகரான காளத்தியப்ப சிவாசாரியாரின் குமாரர். வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த கச்சியப்பரின் கனவில் முருகன் தோன்றி தமிழர்கள் கந்த புராணத்தின் பெருமையை தமிழில் படித்து ஆனந்திக்கும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்ற ஆணையிட்டார்.
தன்னால் முடியுமா என்று தயங்கிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு கந்த புராணத்தின் முதல் அடியான ‘திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்னும் பதங்களை அசரீரியாக முருகப்பெருமானே எடுத்து கொடுத்தார்.
‘திகடச் சக்கரம்’ என்றால், ‘திகழ் தசக்கரம்’ என்று பொருள். அதாவது, திகழ்கின்ற பத்து கரங்களை உடையவன், செம்முகம் ஐந்து உடையவன் என்று விநாயகப் பெருமானைக் குறிப்பிடுகிறது இந்த வரி. அதையே தொடக்கமாகக் கொண்டு கச்சியப்பர் பாடத் தொடங்கினார்.
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
விளக்கம் : திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!
இவ்வாறு தொடங்கி கச்சியப்பர் கந்தனின் வரலாறஂறை இனிய பாடல்களாக எழுதத் தொடங்கினார். நாளும் நூறு நூறு பாடல்கள் எழுதி பரமன் தாளில் பணிவுடன் வைப்பார். மறுநாள் ஓலைச்சுவடிகளின் பாடல்களில் மெருகேற்றும் திருத்தங்கள் சில காணப்படும்.
கச்சியப்பர் சங்கர சம்ஹிதையிலிருந்து முதல் ஆறு காண்டங்களாகிய (உபதேச காண்டம் நீங்கலாக) சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் முதலியவை மட்டும் கந்த புராணத்தில் சேர்த்தார். சிவாச்சாரியார் தான் இயற்றிய 10,345 பாடல்களைை மேல் கூறிய ஆறு காண்டங்களாகப் பிரித்தார்.
நூலை இயற்றி முடித்த பின் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கேற்றத்தின்போது, இறைவனை வணங்கி ‘திகட சக்கரம்’ என்ற அந்தப் பாடலை அவர் வாசித்ததும், ஒரு புலவர் 'திகட சக்கரம் எனல் என்ன?’ என்று கேட்டார். ‘திகழ் தசக்கரம் என்று பொருள்,’ என்றார் கச்சியப்பர். 'ழகரமும் தகரமும் சேரும் போது டகரமாக மாறும் சந்தி இலக்கண முறை தொல்காப்பியத்தில் அல்லது பின் வந்த இலக்கண நூல்களில் இல்லை என்று புலவர்கள் வாதித்தனர். ஆகவே, கந்தபுராண அரங்கேற்றம் அப்படியே நின்றது.
அன்று இரவு, அவர் கனவில் மீண்டும் முருகன் வந்தான். ‘நாளை அந்தப் புலவரின் சந்தேகம் சரியான முறையில் தீர்க்கப்படும்‘ என்றான். மறுநாள், அரங்கேற்றம் தொடரவேண்டிய நேரம். புலவர் ஒருவர் சபையில் கையில் வீரசோழியம் என்ற நூலுடன் நுழைந்து அந்த நூலின் சந்திப் படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் “திகடசக்கரம்“ என்று தொடரும் இலக்கண விதி இருக்கிறது என்று எடுத்துரைத்தார். திகழ் + தசக்கரம் = திகட சக்கரம் என்பதற்கான இலக்கணம் அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்தி அடைநஂத புலவர்கள் திரும்பி பார்த்தால், வந்தப் புலவரைக் காணவில்லை. அவையினர் இலக்கணப் பிழை உள்ளதாகச் சொன்னவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க கச்சியப்பரின் காவியத்துக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்த முருகனே நேரில் வந்தது புரிந்து மெய் சிலிர்த்து போனார்கள். இதற்குப் பிறகு நூல் சிறப்பாக அரங்கேறியது. அரங்கேற்றி முடிக்க ஓர் ஆண்டு ஆனது. குமரகோட்டத்துப் பிரபுக்கள் கச்சியப்ப சிவாசாரியாரைக் கந்தபுராண நூலோடு பல்லக்கில் ஏற்றி சிறப்பித்தனர்.
இத்தகு சிறப்புமிக்க விநாயகர் காப்பு பாடலை தினமும் வழிபாட்டில் இணைத்து வளம் பல பெறுவோமாக!
அடுத்து மீண்டும் கந்தபுராணத்தில் இருந்து விநாயகர் பாடலை பாடி மகிழ்வோம்.
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
எல்லாத் தேவர்கட்கும் முன்வைத்துப் பேசப்படுபவனே, யானையின் முகத்தையுடையவனே, முத்தி யின்பத்தின் நலங்களைச் சொன்னவனே, தூய மெய்யான சுகத்தையுடையவனே, மன்னவனே, அறிவான் மேலாயவனே, ஐந்து கைகளையுடையவனே, சிவந்த சடைமுடியை உடையவனே, தன் மயமாக வுள்ளவனே, உன் திருவடி எங்கட்கு காப்பிடமாகும் என்று பொருள்பட வள்ளல் பெருமான் இயற்றிய திருவருட்பா மூன்றாம் திருமுறை இரண்டாம் தொகுதியான சிவநேச வெண்பாவில் இருந்து ஒரு பாடலை காண உள்ளோம்
இந்த வழிபாட்டில் TUT மதுரை யாத்திரையில் நமக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாக கணபதி கவசம் கிடைத்து. இதனை நம் அன்பர் திரு.நாகராஜன் ஏகாம்பரம் அவர்கள் வழங்கினார்கள். இன்றைய பதிவில் கணபதி கவசம் பகிர்கின்றோம். அன்பர்கள் நித்திய வழிபாட்டில் இணைத்து குருவருளும், திருவருளும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ விண்ணப்பம் வைக்கின்றோம்.
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment