இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
முருகன் என்றால் தமிழ். தமிழ் என்றால் முருகன் என்று கூறும் அளவிற்கு நம் கந்தக் கடவுளிற்கு எத்தனை,எத்தனை பாடல்கள் என்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு முருக அருளாளர் பாடியுள்ள பாடல்களை நாம் படிக்கும் போது எத்தனை கோடி இன்பம் வைத்தாய் முருகா! என்று மனதுள் தோன்றுகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழ், பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்கள் என்று தான் நமக்கு தோன்றுகின்றது. ஆனால் சற்று ஆராய்ந்தால் இந்த பட்டியல் நீளும்.
நக்கீரர், முருகம்மையார் , கச்சியப்ப சிவாச்சாரியார் , அருணகிரிநாதர், குமரகுருபரர், பகழிக்கூத்தர், கச்சியப்ப முனிவர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சிற்றம்பல நாடிகள், கந்தசஷ்டிக் கவசம் பாலதேவராய சுவாமிகள் , வடலூர் இராமலிங்க சுவாமிகள்,மாம்பழக் கவிராயர்,வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள்,வள்ளிமலை சுவாமிகள்,திருமுருக கிருபானந்த வாரியார் என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அருளிய நூற்களை எல்லாம் படிக்க இப்பிறவி போதுமா? என்று தெரியவில்லை. இதில் அருணகிரிநாதரின் மொழியில் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி படித்து வருகின்றோம்.
கந்தர் அனுபூதி ஒரு மந்திர நூலாகும். நமது மனதை திறப்படுத்தும் நூல் ஆகும். முருகப் பெருமான் அருள அருணகிரிநாதர் கிளி ரூபம் கொண்டு பாடிய நூலாகும். இந்த நூலைப் பற்றி தாயுவான சுவாமிகள் கூறியுள்ள செய்தியாக,
கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி சொன்ன
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ?
- தாயுமானவர்
அனைவரும் கந்தர் அநுபூதி படிக்கும் பொருட்டு, ஒரே தொகுப்பாக தருகின்றோம். நம் சொந்தக்கடவுளாம் கந்தக் கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். கந்தர் அநுபூதி பாடல் கீழே இணைத்துள்ளோம்.
முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!
என்று வேண்டி பணிந்து கந்தர் அநுபூதி படிப்போம். கந்தர் அநுபூதியில் முதல் 5 பாடல்களை இன்றைய பதிவில் படிக்க உள்ளோம்.
பாடல் 1 ஆடும் பரிவேல் ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியானை சகோதரனே! ......... சொற்பிரிவு ......... ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் தேடும் கயமாமுகனைச் செருவில் சாடும் தனியானை சகோதரனே! ......... பதவுரை ......... 'ஆடிவரும் [குதிரையைப்போன்ற] மயில்வாகனமே! வேலாயுதமே! அழகான சேவலே!' என்று துதிசெய்து திருப்பாடல்களைப் பாடுவதையே அடியேனின் வாழ்நாட்பணியாக இருக்கும்படி அருள்புரிவீராக! 'கஜமுகாசுரன்' எனப்படும் ஓர் அசுரன் பெரியதொரு யானையின் முகத்தையுடையவனாகத் தோன்றி [விண்ணோர்களைப் பகைவர்களாகக் கருதி அவர்களைத்] தேடிச்சென்றபோது, போர்க்களத்தில் அவனைக் கொன்றழித்த திருவிநாயகப்பெருமானின் சோதரனாகிய [கந்தப்பெருமானே!]. |
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீ யலையோ
எல்லாமற என்னை இழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே!
......... சொற்பிரிவு .........
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே!
......... பதவுரை .........
திருமுருகப்பெருமானே! விண்ணோர்களின் மன்னரே! உள்ளக் களிப்பும் கலக்கமின்மையும் அற்று, பல்வகை யோக-மார்க்க வழிகள் சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியைத் தருபவர் தேவரீர் ஒருவரே அன்றோ! எல்லாவிதமான பந்தங்களும், 'யான்', 'எனது' எனப்படும் ஆணவ மலங்கள் அழிந்து தொலைவதற்குரிய மேலான ஆன்மிக உபதேசங்களை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக!
பாடல் 3 - வானோ புனல்பார் வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வது சண் முகனே? ......... சொற்பிரிவு ......... வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோதயமோ நவில் நான்மறையோ யானோ மனமோ எனையாண்ட இடம் தானோ பொருளாவது சண்முகனே? ......... பதவுரை ......... ஆறுமுகக் கடவுளே! 'பரம்பொருள்' என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? 'நான்' என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? ['நீயேநான்-நானேநீ' என்று கூறி] அடியேனை ஆட்கொண்ட தேவரீரோ? |
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூ உரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே!
......... சொற்பிரிவு .........
வளைபட்ட கை மாதொடு மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழு சூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!
......... பதவுரை .........
வளையல் அணிந்த கைகளையுடைய மனைவியொடு மக்கள் என்று சொல்லப்படும் [குடும்பப்] பந்தத்தில் அகப்பட்டு [அடியேன்] அழிந்துபோவது நியாயமாகுமோ? அசுரர்களாகிய தன் சுற்றத்தினர் சூழ [போரிடுவதற்கு] எழுந்த சூரபன்மனின் மார்பையும் [அவன் தன் சுற்றத்தினருடன் ஒளிந்திருந்த] கிரவுஞ்ச மலையையும் தொளைத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே!
மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங்குவதே!
......... சொற்பிரிவு .........
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறு மொழிந்து மொழிந்திலனே!
அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே!
......... பதவுரை .........
[இவ்வுலக வாழ்க்கையைச் சார்ந்த பொய்யான காட்சிகளாலும் நம்பிக்கைகளாலுமான] பெரிய மாயையை நீக்கவல்ல கடவுளான திருமுருகப்பெருமான் தன் ஆறு திருமுகங்களாலும் பல வழிகளில் உபதேசித்து அருளிய தத்துவங்களை, அந்தோ, [மீண்டும் நினைவுகூர்ந்து] சொல்லாமற் போய்விட்டேனே! 'வீடு-துணிமணி-மாதர்கள்' ஆகியவற்றால் [இறுதியில் பெரும் வருத்தத்தைத் தரும் பொய்யான] இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கின்றேனே!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டிப் பணிவோம்.
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment