அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று கந்த சஷ்டி வழிபாட்டில் இரண்டாம் நாள். இன்று மதுராந்தக தலத் திருப்புகழ் படித்து முருகப் பெருமான் ஆலய தரிசனம் காண இருக்கின்றோம். நேற்று மாலை குருவருளால் கந்த சஷ்டி முதல் நாள் வழிபாட்டில் ஸ்ரீமத் குமாரசுவாமியம் நூலில் முதல் 100 பக்கங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் முருகப் பெருமானே! என்று தான் தோன்றியது. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டி வருகின்றோம்.
முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!
என்று வேண்டுவதை தவிர நாமொன்றும் அறியோம் முருகப் பெருமானே!
தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர் பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை 5 திருப்புகழ் திருக்கோயில் தரிசனம் கண்டு வந்துள்ளோம்.
1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ்
3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ்
4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்
5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்
6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
8. திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
9. வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில்
10. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
11. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்
12. தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில்
13. தேனி கணேச கந்த பெருமாள் கோவில்
14. குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா!
இதற்கு முந்தைய பதிவில் கர்நாடாகா செண்டூர், பெல்லாரி மாவட்டம், கிரௌஞ்ச கிரி,குமாரசுவாமி கோவில் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம். இன்று குருவருளால் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் பெற்று திருப்புகழ் படித்து மகிழ உள்ளோம்.
திருப்புகழ் 718 குதிபாய்ந்தி ரத்தம் (மதுராந்தகம்)
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
......... பாடல் .........
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று ...... தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த ...... குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
திருப்புகழ் 719 சயில அங்கனைக்கு (மதுராந்தகம்)
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
......... பாடல் .........
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
திருப்புகழ் 720 மனைமாண்சுத ரான (மதுராந்தகம்)
தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான
......... பாடல் .........
மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி
மயமாம்பல வான கணங்குல
மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார்
தமதாஞ்சுத தாப ரசங்கம
மெனவோம்புறு தாவ னவம்படர்
தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே
முனவாம்பத மூடி கவந்தன
முயல்வான்பிடி மாடி மையைங்கரர்
முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு
முககாம்பிர மோட மர்சம்பன
மதுராந்தக மாந கரந்திகழ்
முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே.
இகபர சுகம் அருளும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில்
அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோவில்
மதுராந்தகம்-603306
செய்யூர் தாலூகா
செங்கல்பட்டு மாவட்டம்
இருப்பிடம்: சென்னை 75 கிமீ, மதுராந்தகம் பேருந்துநிலையம் அருகில்
மூலவர்: ஆறுமுகசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
ஈசன்: பாண்டீஸ்வரர்
பாடல்: அருணகிரியார் திருப்புகழ்
தலமகிமை:
சென்னையிலிருந்து 75 கிமீ தொலைவிலுள்ள மதுராந்தகம் பகுதியில் இரண்டு திருப்புகழ் தலங்கள் அமைந்துள்ளன.
1. மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஆறுமுகசுவாமி திருக்கோவில்
2. புலிப்பரக் கோவில் எனும் சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (இதுவே 'வடசிற்றம்பலம்' எனும் தலமுமாகும்).
வெகு காலமாக மதுராந்தகம் முருகன் ஆலயமே வட சிற்றமபலம் என்று தவறாகக் கருதப்பட்டு வந்தது, திரு வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் அரிய ஆய்வினால் 'வட சிற்றம்பலம்' எனும் தலம் ‘புலிப்பரக் கோவிலில் அமைந்துள்ள அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயமே' என்று கண்டறியப் பெற்றுள்ளது.
இனி மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில் குறிப்புகளைக் காண்போம். இந்த ஆலய வளாகம் முழுவதிலும், இத்திருக்கோவிலை வட சிற்றம்பலம் என்றே தவறாகக் குறித்துள்ளனர். திருச்சுவற்றிலும் வட சிற்றம்பலத் திருப்புகழே எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோவில் பாண்டீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மதுராந்தகம் என்று நினைத்தவுடன் ஏரிகாத்த ராமர் மற்றும் கடப்பேரி கந்தனையும் தரிசித்து வணங்க வேண்டும். மேலும் வடச்சிற்றமபலத்து ஈசன் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில் வரும் பக்தர்கள் புலிப்பரக் கோவிலில் அமைந்துள்ள திருப்புகழ் தலமான வியாக்ரபுரீஸ்வரர் கோவிலையும் தரிசிக்க வேண்டும்.
அருணகிரிநாதர் இத்தலத்திற்கென அருளியுள்ள திருப்புகழ் திருப்பாடலில்
மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு. வம்பராதி
………….
……………
மதுராந்தக மாந கரந்திகழ்
முருகாந்திர மோட மரும்பர்கள். தம்பிரானே”
என்று போற்றிப் பரவுகின்றார்.
தல வரலாறு:
ஆதிக் காலத்து முருகப்பெருமானை நோக்கி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருப்புகழ் பாடி பெருமை படுத்தியுள்ளார். ஆதி மூலவர் சிலை சிதிலமடைந்ததால், புதிய ஆறுமுகசுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, ஆதி மூலவர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
தல அமைப்பு:
திருக்கோவில் மூலஸ்தானம் கருவறையில், திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள், ஆறுமுகசுவாமி என்ற திருப்பெயருடன் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க அற்புதமாய் திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆதியில் அமைந்திருந்த, அருணகிரியாரால் பாடல் பெற்றுள்ள மூல மூர்த்தியின் திருமேனி சிறிது பின்னப்பட்டு விட, புதியதொரு திருமேனியைச் செய்வித்துப் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆதி மூலவரை அருகில் ஒரு சிறு ஆலயம் போன்ற அமைப்பில் எழுந்தருளச் செய்துள்ளனர். ஆலய வளாகத்தில் அருணகிரிநாதர். வள்ளலார் ஆகிய இரு அருளாளர்களும் ஒரே சந்நிதியில் அருகருகே எழுந்தருளி இருக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
இகபர சுகம் வேண்டி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, மனம் தெளிவடைய
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 8-10 மட்டும்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமியை அனைவரும் தரிசிக்க வேண்டும்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டிப் பணிவோம்.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment