"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, April 19, 2020

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)

 TUT தள  வாசகர்களே...

இன்றைய பதிவில் தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு சார்பில் நடைபெற்று வரும் மற்றொரு சேவை பற்றி அறிய இருக்கின்றோம். இந்த சார்வரி ஆண்டில் 4 ஆம் ஆண்டில் குருவருளால் அடியெடுத்து வைக்கின்றோம். இதனை சிறப்பிக்கும் பொருட்டு  தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழுவின் அன்னதான சேவை, உழவாரப் பணி சேவை ,ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை என பார்த்தோம். இன்றைய பதிவிலும் நம் குழுவின் மூலம் நடைபெற்று வரும் ஆலய தரிசனம், மலை யாத்திரை பற்றி தொடர உள்ளோம். அன்னதானம், உழவாரப் பணி , ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு, மோட்ச தீப வழிபாடு  என தொடர்ந்த நாம்,  மலை யாத்திரை  மூலம் குருவருளைப் பற்றிடவும், பெற்றிடவும் முடிகின்றது. அவ்வப்போது நம் தளத்தில் யாத்திரை மேற்கொண்டு வந்தாலும், இது நமக்கு ஆன்ம தரிசனம், இறையுணர்வு, அறநெறி, இயற்கை வளம் என பல வழிகளில் நம்மை செப்பனிட உதவுகின்றது.

2016 ஆம் ஆண்டில் நாம் அன்னதானம், உழவாரப்பணி என்று ஆரம்பித்த நாம் 2017 ஆம் ஆண்டில் தேடல் உள்ள தேனீக்களாய் - (TUT) குழுவிற்கென்று வலைத்தளம் ஏப்ரல் 14 ம் தேதி ஆரம்பித்தோம். இதனை அப்படியே நம் ஆண்டு விழா என்று கணக்கில் வைத்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டில் தான் ஆயில்ய பூசை நமக்கு குருவருளால் கிடைத்தது. 2016 முதல் நமக்கு ஜீவ நாடி அறிமுகம் கிடைத்தது. ஜீவ நாடி உத்தரவுப்படி சில வழிபாட்டு முறைகளை நாம் தொடங்கினோம். அதுவரையில் கூடுவாஞ்சேரியில்  உள்ள ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் பற்றி யாம் அறியவில்லை. ஆனால் கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் அப்போது ஆகி விட்டது. பின்னர் ஒரு நாள் நமக்கு ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் கிடைத்து. அன்று தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனமும் கண்டோம். அப்போது தான் ...அடடா..குருநாதரை நம் வீட்டு அருகிலே இருப்பது அறியாது இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமோ என்று தோன்றியது. இது தான் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதை என்றும் தோன்றியது. பின்னர் முதல் வழிபாடாக  ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு  2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8 ம் நாள் (21.08.2017) திங்கட்கிழமை நடைபெற்றது. அடுத்து வந்த ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தியை அதாவது மார்கழி மாத ஆயில்ய பூசையை 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். இங்கிருந்து தான் நமக்கு தீப வழிபாடு பற்றி உணர்த்தப்பட்டது.

சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானகுடில் மூலம் கோவை பச்சாபாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில்  நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள்.அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் 2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை (11.08.2018) அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020 ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக நடைபெற்றது. வருகின்ற சித்திரை மாத மோட்ச தீப வழிபாடு தற்போதுள்ள 144 தடை உத்தரவால் நடைபெறவில்லை. ஆனால் குருநாதரின் அருளால் அன்றைய தினம் ஆத்ம தீபம் ஏற்ற உள்ளோம். எனவே அனைவரும் வீட்டிலிருந்த படியே பிரார்த்தைனை செய்து கொள்ள வேண்டுகின்றோம்.

சரி..இந்த சேவையில் நமக்கு இயல்பாக அமைந்தது ஆலய தரிசனம் ஆகும். நம் தளத்தில் உழவாரப்பணி செய்வதற்கு நமக்கு குருவருள் அவ்வப்போது சில ஆலயங்களை தரிசனம் செய்ய கூட்டுவிக்கும். பின்னர் நாம் அவற்றை நம் தளம் சார்பில் ஆலய தரிசனமாக எடுத்துக்கொள்வோம். இது ஒரு புறமிருக்க, சித்தன் அருள் வழங்கும் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பில் உள்ள யாத்திரைகளை நாம் அவ்வப்போது தரிசனம் செய்து வருவது வழக்கம். இவற்றில் சில மலை யாத்திரையும் அடங்கும்.

முதன் முதலாக நாம் நம் தளம் சார்பில் சுமார் 8 பேருடன் பர்வத மலை யாத்திரை சென்று வந்தோம். அடுத்து அகத்திய அடியார்களோடு கல்யாண தீர்த்தம் மற்றும் அத்திரி மலை யாத்திரை சென்று வந்தோம். அடுத்து தேடல் உள்ள தேனீக்களாய் குழு மூலம் மீண்டும் கல்யாண தீர்ததம் தரிசனம் மேற்கொண்டோம்.

சென்ற மாதம் கல்யாண தீர்த்தம் செல்லும் போது அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற தல யாத்திரைகளுக்கு சென்று வாருங்கள். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் காலை முதல் மாலை 5 மணி வரை அபிஷேகம், அலங்காரம் என்று கல்யாண தீர்த்தத்தில் தரிசனம் பெற்றதுண்டு. ஆனால் இப்போது கல்யாண தீர்த்தம் தரிசனம் பெறுவதற்கு முறையான அனுமதி பெற வேண்டி உள்ளது.



1. பர்வத மலை
2. ஓதி மலை
3. சதுரகிரி
4. அத்திரி மலை
5 .வெள்ளியங்கிரி
6. வள்ளிமலை
7. திருஅண்ணாமலை
8. நம்பி மலை
9. சபரி மலை
10. பொதிகை மலை
11. தேனி சண்முகநாதன் மலை
12. தேவதானப்பட்டி மிருகண்ட மகரிஷி மலை
13. கோவில்பட்டி அருகே குருமலை
14. சதாசிவ கோனா மலை
15.தோரண மலை
16. மருத மலை
17. மங்கலதேவி கண்ணகி கோவில்

என  பல யாத்திரைகள் சென்று வந்துள்ளோம். இதில் பருவத மலை யாத்திரை 4 முறையும், சதுரகிரி 2 முறையும், சபரி மலை 5 முறையும், வள்ளிமலை 4 முறையும், வெள்ளியங்கிரி 3 முறையும் சென்று வந்துள்ளோம். எண்ணைக்கையில் என்ன இருக்கின்றது ? எண்ணத்தில் தான் அத்தனையும் இருக்கின்றது. இனி சில தரிசன அனுபவங்களை இங்கே பகிர்கின்றோம்.

இந்த யாத்திரை சேவையில் பாண்டிச்சேரி அகத்தியர் ஞான இல்லமும் நாம் பெற்று வருகின்றோம்.
ஒவ்வொரு அகத்தியர் ஜெயந்தி வழிபாட்டின் போதும் நாம் பாண்டிச்சேரி அகத்தியர் ஞான இல்ல தரிசனமும், அதனை சேர்த்து பாண்டிச்சேரி சித்தர்கள் தரிசனமும் பெற்று வருகின்றோம்.

4 சித்தர் கோயில்களை தரிசித்தோம்.





 அடுத்து அருட்குரு ஸ்ரீ சக்திவேல் பரமானந்தர் சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.






 இதோ.. அடுத்த சித்தர் தரிசனம் கீழே.


அருள்லிகு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.




 அடுத்து தவத்திரு ஸ்ரீ குருசாமி அம்மையார் தரிசனம் பெற்றோம்.









அடுத்து தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.






அடுத்து கண்ணகி கோயில் யாத்திரை தரிசனம் 







பர்வதமலை யாத்திரை காட்சிகள் இனி பெறலாம் 

 யாரையும் பயமுறுத்த இங்கே படங்களை பதிவிடவில்லை. மலை ஏறி சென்று ஈசனை தரிசிக்க முடியாதவர்களுக்காகவே இங்கே பதிவிட்டு வருகின்றோம்.





ஓரளவு மலை உச்சி வந்து விட்டோம் 


மனதை அந்த பரத்திடம் ஒப்படைத்து விட்டு, வேறெந்த எண்ணமும் மனதில் இருத்தாது, திக்கற்ற எமக்கு நீரே துணை என்று வேண்டிக் கொண்டு மலை ஏறினோம்.

 இது போன்ற மலை தலங்களுக்கு செல்லும் போது கூடுமானவரை பிளாஸ்டிக் தவிர்க்கவும். அப்படி நீங்கள் கொண்டு சென்றால் அவற்றை மீண்டும் அடிவாரத்திற்கு கொண்டு சென்று குப்பையில் சேர்த்து விடுங்கள். இப்படி செய்பவர்களைத் தான் சித்தர்கள் விரும்புவார்கள். என்ன தான் நாம் பூசை செய்தாலும், ஊர் ஊராக சுற்றினாலும் இது போன்ற மாற்றங்களை செய்தால் தான் நாம் சித்தர்கள் வசம் செல்ல முடியும்.

அடுத்து அப்படியே கோயிலுக்குள் சென்று தரிசனத்தில் ஈடுபட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் சென்றது. தற்போது பல மாற்றங்கள் அங்கே உணர்ந்தோம். 18 சித்தர்கள் இடையே எம் பெருமான் தரிசனம் வழங்கிய காட்சி ..கீழே பகிர்கின்றோம்.



 காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.




 விளக்கேற்றி வழிபாடு செய்தோம். தாயை தயை கூர்ந்து  வணங்கினோம்.





இனி வெள்ளியங்கிரி மலை யாத்திரை தரிசனம் பெற இருக்கின்றோம்.




 இதோ. பாம்பாட்டி சித்தர் குகை கண்டோம். நன்றாக தரிசித்தோம்.








இறங்கி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை.ஏனெனில் இறங்கி வரும் போது சூழ்நிலை நமக்குத் தெரியாது.எனவே கொண்டு சென்று நெய்யை அங்கிருந்த அகலில் ஊற்றி, தீபமேற்றி, ஒவ்வொருவராக உள்ளே சென்று தியானித்தார்கள். நம் TUT குழுவின் உறவுகள் அனைவருக்குமான பிரார்த்தனை செய்யப்பட்டது.





மனம் அங்கிருந்து அகலவில்லை.  இருப்பினும் வெளியே வந்து மீண்டும் யாத்திரை தொடர்ந்தோம்

இதோ அடுத்த நாள் காலை மலையேற்ற காட்சிகள்.



குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். கை கால்கள் மறத்து இருந்தது. அப்படியே நடையைக் கட்டினோம். இப்படி ஒரு இன்ப நிலையை நாம் இது வரை அனுபவித்ததில்லை.



திருக்கோயில் செல்ல உள்ள நுழைவாயில் கண்டதும் அனைவரும் ஆனந்தம் கண்டோம். அப்படியே குழு காட்சிப்படம் எடுத்து விட்டு அங்கிருந்த அந்த பெரிய பாறையைப் பார்த்து, அங்கு எத்தனை எத்தனை சூலாயுதம் மற்றும் மணிகள் என கண்டு, பார்த்து அப்படியே உள்ளே சென்றோம். பனி தன் பணியை செய்து கொண்டிருந்தது.

 ஒவ்வொருவராக சென்று ஆசி பெற்ற காட்சி. இவர் இங்கே பல்லாண்டுகளாக இருந்து பூசை செய்து வருகின்றார். இவரிடம் ஆசி பெற்றது மிகவும் மகிழ்வாக இருந்தது. காரணம் இவரை நாம் தொலைக்காட்சி பதிவில் பார்த்திருக்கின்றோம். சிவன் அடியார் இவரிடம் ஆசி பெற்றது எத்துனை எத்துணை பெரும் பேறு என்று யாம் அறிந்திலோம் இறைவா !





இதோ..உங்களுக்காக..தெள்ளத் தெளிவாக அந்த ஈசனின் அருட்காட்சி. கண்டு மகிழுங்கள். இந்தப் பராமனைக் காணத் தான் 10 மணி நேரம் நடந்தோம். கண்டதும் அனைத்தும் பறந்து போய் விட்டது. மனம் மிக மிக லேசாக மாறிவிட்டது. இயற்கையின் இன்பம் உணர்த்தப்பட்டது. தென்றலை ஸ்பரிசித்தோம். மழையில் நனைந்தோம். சிவத்தின் அருளில் ஊறினோம். கைலாய வாத்தியம் விண்ணைப்பிளக்க, கயிலாயத்தில் கால் ஊன்றி, இது கனவா? நனவா? என்று நம்மை நாமே தொட்டுப் பார்த்தோம். இதற்குத் தானே ஆசைப்பட்டோம் இறைவா ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று நெக்குருகினோம்.

அடுத்து தேனி சண்முகநாதர் மலை தரிசன காட்சிகள் 


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் ஊரில் உள்ள கமயக்கவுண்டன் பட்டி அருகில் இருந்து குழந்தைவேலர் தரிசிக்க மலை என்ற வேண்டும். மலையேற்றம் என்றவுடன் மிகப் பெரிய மலை என்று நினையாதீர். தூரம் மிக மிக அதிகம். மலை ஏற்றம் குறைவே. ஆனால் நிறைவாய் தரிசனம். சென்ற பதிவில் மலை யாத்திரை மேற்கொண்டு, மலை ஏறி நாம் பார்த்தது அந்த வெற்றிவேலைத் தான். வெற்றிவேல் தரிசனம் கண்டு, அப்படியே நேரே சென்றால் திருக்கோயிலை அடையலாம்.



கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பதற்கேற்ப. சிறிய கோயிலை இருந்தாலும், அங்கே வெளிப்படும் முருகன் அருள் மூவுலகும் பெறும் என்பதே உண்மை. பார்க்கும் இடமெல்லாம் பசுமை. பசுமை முருகனுக்கு மிகவும் பிடிக்கும் அன்றோ? பசுமை நம் எண்ணத்திலும் நிறைந்தது.




 கற்கள்,பாறைகள் என தாண்டி தாண்டி சென்றோம். தீர்த்தம் வந்து கொண்டிருந்தது. எப்போதும் இந்த தீர்த்தத்தில் நீர் இருக்கும். கண்ணகித் தாய் மதுரையை எரித்து இங்கே வந்த போது, குழந்தை முருகன் இங்கிருந்து அவளை மகிழ்வித்தாராம். குழந்தையைக் கண்டால் கோபம் தணியும் அல்லவா ? மேலும் கண்ணகித் தாயின் தாகம் தீர்க்க, முருகன் அம்பு விட்டு,இங்கு தீர்த்தம் உருவாக்கினார் என்பதும் தொன் நம்ம்பிக்கையாக உள்ளது.





அங்கிருந்த பாறைகளுக்கு நடுவில் ஒரு சிறிய குகை இருந்தது. இங்கு சித்தர்கள் வாசம் எப்போதும் உண்டு என்று கூறினார்கள்.இவர்களை இங்கு வழிபட்ட பின் தான் நாம் கோயிலில் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறினார்கள். நம்மால் உள்ளே செல்ல முடியவில்லை. தீபம் இட்டு வழிபாடு செய்த காட்சி மேலே உங்களுக்காக இணைத்துள்ளோம்.



எத்துனை சிறப்பு வாய்ந்தது முருகா! எனும் நாமம். இத்தகைய முருகனை தேனியில் உள்ள சண்முகநாத மலையில் தரிசித்தது நம்மை இன்னும் நம்மை முருக அடியாராக ஆக்கிவிடும் என்பது திண்ணம்.












  ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை தரிசனம் பெறலாமா?

இதான் அந்த அடிவாரக் கோவில்.ஒரே ஒரு நுழைவு வாயில் என்ற வளைவு மட்டும் தான் இருந்தது.இப்போது மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. தொடர இருக்கும் மலைப் பாதை சற்று கடினமாக இருக்கும் என்று. காலணியோடு தான் நடக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். இது போன்ற யாத்திரைகளில் நாம் அதை விரும்புவதில்லை.எனவே அவற்றை கழட்டி வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை வணங்கி விட்டு, பயணத்தை தொடர்ந்தோம்.

 மேலே பார்த்தீர்களா? பாதை இப்படித் தான் இருந்தது. மற்ற மலைகளில் நாம் பாதை இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியும்.இங்கே நம்மால் சொல்ல இயலாது. கல்லும்,மண்ணும் கலந்த கூரான கற்கள் கொண்ட பாதை. நமது மனமும் இப்படித்தானே இருக்கின்றது. பேராசைகளும்,எதிர்மறை எண்ணங்களும், சினம்,கடும்பற்று,முறையற்ற பால்கவர்ச்சி,வஞ்சம் ,தான் என்ற பொருள் பற்று,தனது என்ற அதிகார பற்று என்று நிரப்பி அல்லவா வைத்திருக்கின்றோம் இவை அனைத்தும் நம்மை விட்டு அகல, மலை கடவுளிடம் தஞ்சம் வேண்டும்.




 சற்று மலை வறண்டு காணப் பட்டாலும்,பசுமையின் போர்வையில் நமக்கு மன மகிழ்வாய் இருந்தது.
மேலே செல்ல செல்ல,பாதையும் கற்களும்,முட்களும்,சரளைக் கற்களுமாக இருந்தது.



இங்கிருந்து படிக்கட்டு பயணம் போல் இருந்தது. மனதார படிக்கட்டுகள் போட்ட நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறி மலை ஏறினோம். முழுதும் இது போல் இருக்கும் என்று எண்ணினோம்.ஆனால் இது சற்று தூரம் தான்.மீண்டும் புதிய பாதை...நாம் ஏற்கனவே சொன்னோமே அந்த பாதை தான்.

 கோவிலை ஒட்டிய பகுதிக்கு இந்தோ வந்துவிட்டோம்.ஒவ்வொருவராக வருவதை கவனியுங்கள்.




இதோ கோவில் வந்து விட்டோம். நேரே கோவில் சென்று, சிவ பெருமானை தரிசித்து விட்டு, அப்படியே கோவிலை சுற்றிப் பார்த்தோம்.கட உள் நம்மிடம் வசமாகிய உணர்வாய் அந்த பரமே வசமானால், பரவசம் தானே.சிறிய கோவில் தான் என்றாலும், நெஞ்சை விட்டு அகலாத கோவில்.முதலில் விநாயகரை தரிசித்தோம்.  நவகிரக நாயகர்களை வேண்டினோம்.அங்கிருந்து பின்னால் பார்த்தால் சோத்துப்பாறை அணைக்கட்டு தெரிந்தது.ஏறி வந்த பாதையும், மேலே கண்ட கோவிலும்..கோவிலைக் கண்டதும் உடல் வலி அனைத்தும் பறந்து போய் விட்டது.


நவக்கிரக சன்னதி 

சோத்துப்பாறை அணைக்கட்டு 

                                                            கோவிலின் முன்புறத் தோற்றம்

சுமார் 1 மணி அளவில் கோவில் அடைந்து விட்டோம். அப்படியே கோவிலை சுற்றி வந்தோம்.என்னவொரு தாகத்தில் நடந்து வந்தோம். 
மேலே வந்த உடன்,மழையின் சாரலில் தாகம் இல்லை.அப்படியே சுற்றி வரும் போது ,நீர் சுனைகள் கண்டோம்.பாசி படிந்து, பச்சையாய் இருந்தது.நடந்து வந்த களைப்பு நீங்க ஒரு குளியல் போட்டோம்.பச்சைத் தண்ணீர் என்று சொல்லி,கேட்டு இருப்போம்.
இங்கு..உண்மையிலே பச்சைத் தண்ணீர் தான்.





                                                           இங்கே தான் குளியல் 
அனைவரும் பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு வந்து இருந்தார்கள்,அதை கோவில் குருக்களிடம் கொடுத்துவிட்டு, இளைப்பாறினோம்.2 மணி வரை தரிசனம் செய்த அனுமதி. 2 மணிக்கு மதிய உணவு. அதற்குள் சுவாமி தரிசனம் பெற உள்ளே சென்றோம்.
கோவிலின் வெளியே விநாயகர் சன்னதி 
                                                                    கோவிலின் உள்ளே 

 சிறிய சத்சங்கம் நிறைவு பெற்ற  பின்பு, சுமார் 1 மணி நேரம் ஓய்வெடுத்தோம்.பின்பு 5 மணி அளவில் மலையிலிருந்து கீழே இறங்குவதாக திட்டம்.அதற்கு முன்பாக இறங்குபவர்கள், சொல்லிவிட்டு இறங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.இரண்டு மணி நேரம் மீண்டும் ஐயன் தரிசனம்,இங்கு எப்போதும் விளக்கு ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்.எனவே,வருகின்ற அடியார் பெருமக்கள் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.


அடுத்து வள்ளிமலை தரிசனம் பெறலாமா?

 வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.




வள்ளிமலையில் நாம் கிரிவலம் செய்துள்ளோம்.

 அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்த உடன்,  வள்ளியம்மை தவப்பீடம் கண்டோம். உள்ளே சென்று  விரும்பியது.உடனே உள்ளே சென்று வழிபாடு .செய்தோம்.

 2019 ஆம் ஆண்டை நாம் இங்கே தான் வள்ளிமலை கிரிவலத்தோடு ஆரம்பித்துள்ளோம். முதல் தீபமும் இங்கே தான் ஏற்றினோம். அனைத்தும் குகன் அருளால் தான். இனி நம் தல அன்பர்களுக்கு குறையில்லை. குறை இருந்தாலும் அதனை நிறையாக மாற்றித்தரும் படி இங்கே அன்னையிடம் வேண்டினோம்.







தரிசனம் . முடித்து மீண்டும் கிரிவலம் ஆரம்பித்தோம்.




இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் என்று நமக்கு தெரியவில்லை. காலைக் கதிரவன் கண் சிமிட்ட ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் வேகமாக நடந்தோம்.






இன்னும் கொஞ்ச நேரத்தில் வள்ளிமலை அடிவாரம் அடைந்து விடலாம் என்று மனதுள் தோன்றியது.







அருள்மிகு இடும்பன் ஆலயம் கண்டோம். அடுத்த முறை உள்ளே சென்று வழிபட மனதுள் சங்கல்பம் செய்தோம்.இதோ. கிரிவலம் முழுமை பெற உள்ளது.





மீண்டும் மூத்தோனை கண்டு வழிபட்டு நன்றி கூறினோம். முதல் முதலாக வள்ளிமலை கிரிவலம் முத்தாய்ப்பாக அமைந்தது.





மீண்டும் நம் குழுவோடு ஒரு முறை வள்ளிமலை கிரிவலம் செல்ல வேண்டினோம். வேண்டுதல் வேண்டாமை இலாதவனிடம் இது போன்ற சில விஷயங்களை வேண்டித்தான் பெற வேண்டும்.



வள்ளிமலை தரிசனம் பெற நீங்கள் மலை ஏறும் போது நாம் இளைப்பாற ஒரு மண்டபம் வரும். இது சாதாரண மண்டபம் அல்ல. இங்கே சித்தர்களின் சூட்சும தரிசனத்தை உணரலாம்.இதை யாம் சொல்லவில்லை. தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் தான் இதை கூறினார்.வள்ளிமலை கோயிலின் திருப்பணியின் போது நேரில் உணர்ந்து சுவாமிகள் நமக்கு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்த இடம் தான் சித்தர்களின் அருளை உணரும் இடம். கூட்டத்தோடு கூட்டமாக சென்றால் நமக்கு ஒன்றும் புரியாது. காலை சுமார் 7 மணி அளவில் தனிமையில் இங்கே சென்று விளக்கேற்றி சித்தர்களை மனதில் நினைத்து தியானியுங்கள். ஆற்றலை நீங்கள் உணர்வீர்கள். நாமும் இங்கே விளக்கேற்றி வழிபாடு செய்தோம்,


சிறிது நேரம் கழித்து , மேலே மலை ஏறினோம். இங்கே படிக்கட்டுகள் இருப்பதால் மலை ஏற வசதியாக உள்ளது.


இன்னும் சற்று தூரம் தான் போலிருந்தது. இதோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் நுழைவாயில் தெரிகின்றது.

இந்த நுழைவாயில் கடந்ததும் திருக்கோயில் தான். முருகா என்று வேண்டினோம்.




நாம் சென்ற போது கொடிமரம் இல்லை.  இதோ வள்ளியம்மை சன்னிதி உள்ளே சென்றோம்.


அடுத்து  நம் முருகப் பெருமான் தரிசனம் தான்.

ஆறுமுகனே தெய்வம்
அன்னோன் குருசாமி
வேறு தெய்வம் சொல்லில் விருதாவே
நூறு தரம் மெய் சொன்னேன்
மெய் சொன்னேன் வேத முடிவிதுவே
பொய் சொன்னால் வாய் புழுத்துப் போம்

என்று தண்டபாணி சுவாமிகள் பாடி இருக்கின்றார். நாம் இப்போது தான் முருகனின் அருட்கடலை சிறு துளியாக பருகி வருகின்றோம். முருகன் அருளை வள்ளிமலையில் நாம் பெற்ற போது, இனி வருடத்திற்கு ஒரு முறை நாம் வள்ளிமலை கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதுள் இறுத்தினோம்.


இதோ .வள்ளிமலை ஆண்டவர் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து விட்டோம். இங்கே படியின் மூலம் மீண்டும் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம்.













அடுத்து மலையில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினோம். வள்ளிமலையில் திருப்புகழ் ஆஸ்ரமம் இருப்பதாக கேள்விப்பட்டோம் .எங்கே ? எப்படி செல்வது என்று தெரியவில்லை.


அப்போது தான் அங்கே கீழே இறங்கிய பாதையில் ஒரு கிளைப்  பாதை பிரிந்தது, மேலும் அங்கே விசாரித்தோம்.இந்த பாதை வழியே செல்லுங்கள் என்று சொன்னார்கள்.





அட..காட்டுக்குள்ளே திருவிழா என்பது போல் இருந்தது. கற்கள்,மண் கொண்ட பாதை வழியே நடக்க தொடங்கினோம்.



இந்த பாதை வழியே நடக்கும் போது மனம் ஆனந்தக் கூத்தாடியது. இந்த பசுமை நமக்கு எங்கே கிடைக்கும்? நகர வாழ்க்கையில் இருந்து சற்று மனதுள் பசுமை தருவது இது போன்ற மலை யாத்திரைகளே.


நீங்கள் எந்த கடவுளை வழிபட்டாலும் நீங்கள் இது போன்ற பாதையில் செல்லும் போது கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்றோ, உங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் ஓதியோ நடக்க, வலி தெரியாது. நடக்க நடக்க இன்பமாகும்.






சற்று தூரத்தில் கற்கள் கொண்ட பாதை வந்தது. இது போன்ற யாத்திரை நம் உடல்நலம் பற்றி நம்மிடம் பேச வைக்கும். நம் மன நலம் பற்றியும் பேசும்.


 அப்படி என்ன தான் இருக்கின்றது வள்ளிமலையில் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகின்றது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். இந்த குன்றில் குமாரனோடு வள்ளியும் இருப்பதால் வள்ளிமலை மிக மிக பிரசித்தி பெற்றது. மலை என்றால் வலம் செல்வது நன்றாம். இங்கு கிரிவலம் செல்வது நம் வளங்களை தரும் என்பது திண்ணம். திருஅண்ணாமலை போன்று வணிக கடைகள் கிரிவலப் பாதையில் இல்லை. எனவே நாம் நம் விருப்பப்படி கிரிவலம் செல்லலாம். சுமார் 1 மணி நேரம் போதுமானது. இயற்கை காற்று, பசுமை காட்சிகள், வள்ளி பிறந்த இடம் என அனைத்தும் ஒருங்கே சேரும் போது வள்ளிமலை ...வளங்களை அள்ளித்தரும் மலை தான்.

வள்ளிமலை பற்றி அருணகிரிநாதரும், வாரியாருக்கு சொன்னதை படித்தீர்களா? திகட்டாத இன்பம் தருவது வள்ளிமலை. யாரெல்லாம் பெண்களுக்கு தோஷம் செய்து இருப்பதாய் உணர்கின்றீர்களோ, அவர்கள் அனைவரும் வள்ளிமலை முருகனிடம் சரண் அடையுங்கள்.

பதிவின் நீளம் கருதி, பதிவை நிறைவு செய்கின்றோம். இனி தனி தனி பதிவுகளில் நம் மலை யாத்திரை தரிசனம் பற்றி பேசுவோம். ஆரம்ப கால ஆலய தரிசன, மலை யாத்திரைகளில் நாமும் அவசர கதியாக இருந்தோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சில வழிகாட்டுதல்கள் நமக்கு நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானால் கிடைத்தது.தற்போதைய ஆலய தரிசங்களில் பொறுமையாக அந்தந்த யாத்திரை முன்கூட்டியே முன்னேற்பாடு வழிபாடுகளாக தீப வழிபாடு, அன்னசேவை என செய்து வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றோம்.

 இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு ஆலய தரிசனம், மலை யாத்திரை    வழிபாட்டின் போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.
எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,
அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 

நன்றி 

மீண்டும் ஒரு முறை  வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.


- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment