"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, April 9, 2020

"பேயார்க்கும் அடியேன்" கால் பதித்த தலத்தில் மனம் பதிப்போம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று பங்குனி சுவாதி நட்சத்திரம். "பேயார்க்கும் அடியேன்" என்று அழைக்கப்படும் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை இன்று. சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்டவர். இவருக்கு தனிக்கோயில் காரைக்காலில் உள்ளது. இறைவனின் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தினை கொண்டவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிரகாரத்தில் இருப்பர். அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது. இது மட்டுமா? திருவாலங்காட்டில் இவர்  தங்கியமையால், ஞானசம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார். ஆம். இன்றைய பதிவில் நாம் திருவாலங்காடு சென்று அம்மையார் கால் பதித்த தலத்தில் நம் மனதை பதிக்க இருக்கின்றோம்.



நம் மனதை பதிப்பதன் முதல் படி இன்று நாம் அம்மையார் திருவாய் ,மலர்ந்து அருளிய பதிகங்களை படிப்பதே ஆகும். இதோ. திருவாலங்காடு மூத்த திருப்பதிகம் தந்துள்ளோம். பொறுமையாக படித்து பதிவை தொடர வேண்டுகின்றோம்.



எப்போது ஆலய தரிசனம் வாய்க்குமோ அப்போதே நாம் தரிசனம் மேற்கொள்ள வேண்டும். எதனையும் ஒத்தி போடக்கூடாது. மலை யாத்திரை இதில் கொள்ள வேண்டாம். அது போல் தான் இந்த திருவாலங்காடு யாத்திரையும் நமக்கு கிடைத்தது. 


நம் நண்பர் திரு. சத்யராஜ் அவர்களை அழைத்துக் கொண்டு திருவாலங்காடு சென்றோம். அடடா.. அதோ...தெரிகின்றது அல்லவா? கோயிலின் கோபுரம். இது போன்ற கோயில் வீதிகளில் கோபுர அழகை தரிசிப்பது நமக்கு இன்பமாக இருந்தது. திருவாலங்காடு இதற்கு முன்பாக சென்றிருந்தாலும் இம்முறை குடும்பம் சகிதமாக சென்றோம்.இதோ கோயிலின் அருகே சென்று விட்டோம். அடுத்து உள்ளே செல்லலாம் என்று இருந்தோம். அப்போது அங்கே வெளியே உற்சவர் தரிசனம் பெற்றோம்.



உற்சவர் தரிசனம் நமக்கு சற்று உற்சாகம் தந்தது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து அரக்கோணம் மார்க்கமாக திருவாலங்காடு சென்றோம். அன்றைய தினம் அதிகாலை மழையில் நனைந்து சீக்கிரம் கோயிலுக்கு சென்றோம். அந்த களைப்பு இந்த தரிசனம் பெற்றதும் நீங்கியது.

அடுத்து கோயிலுக்கு உள்ளே செல்ல முயன்றபோது புதிய அன்பர் ஒருவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.அவருடன் நாமும் இணைந்து கொண்டோம்.




அவர் வேறு யாருமல்ல. எழுத்தாளர் திரு.சகாநாதன் ஆவர். இவரை நாமும் ஏற்கனவே அறிந்து இருந்தாலும் அன்று தான் நேரில் சந்தித்தோம். பல செய்திகளை பரிமாறிக்கொண்டோம். அவர் வெளிநாட்டில் வசித்து வருவதால் இங்கே நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி நிறைய பேசினார். இரத்தின சபை ஆதிரை நாயகர் தரிசனம் செய்யும் முன்னர் அன்னை காளியின் அருளாற்றலை பெற சென்றோம்.





அடா..கோயிலின் பக்கத்தில் உள்ள அன்னையின் கோயில். அங்கிருந்த மரம், கோயிலின் அருகே உள்ள குளம் என இயற்கையோடு இணைந்தோம்.இந்த குளத்தை காண்பதற்கே திருவாலங்காடு செல்ல வேண்டும். .இதோ...மீண்டும் இரத்தின சபை தரிசனம் பெற செல்ல உள்ளோம்.

விநாயகர் அருள் பெற்று உள்ளே சென்றோம்.


அப்பப்பா..தூரத்தில் நாம் பெற்ற கோபுர தரிசனம் இங்கே அருகில் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். இந்த திருக்கோயில் அதாவது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும்.இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி ஆவர்.



மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்திற்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்கால் அம்மையார் விழா நடைபெறுகிறது 









இத்தலத்தின் சிறப்புகளை இங்கே தருகின்றோம்.

  • நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.

  • மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.
  • இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.
  • கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் உள்ளன.
  • மூன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

  • இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.

  • சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.
  • காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்த ஆலங்காட்டப்பன் "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார்.
  • சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம். 
  • இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.
  • கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது.
  • கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.

  • பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.




இதோ..இரத்தின சபையின் உள்ளே செல்ல இருக்கின்றோம்.

வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம், ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படுகிறது. வலது காலை உடம்புடன் ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். 

இத்தலத்து நடராஜர், மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப்போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டித் தூக்கி நின்று ஆடாமல், உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக பாதத்தைத் தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளியை, வெட்கித் தலை குனியவைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். 

ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானைவிட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன், காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப்போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.






கிழக்கில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தவுடன், வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது. நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் மூன்று நிலைகளை உடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிராகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும், அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகாரநந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்கால் அம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாக உள்ளது. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பஞ்சபூதத் தலத்துக்கு உரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத்தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள் பிராகாரத்தில் இருக்கின்றன. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார். 

பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தின சபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.





இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. 

ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி (8-ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4-ல் சனி) ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 8, 12 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் அது தோஷமாகக் கருதப்படுகிறது.

அத்தகைய தோஷம், இங்கு மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்வதால் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.

ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் திருவாலங்காடு தலமும் ஒன்றாகும். சென்னைக்கு அருகிலுள்ள இத்தலத்தை நீங்களும் ஒருமுறை சென்று வழிபடுங்கள்.

இதோ. மாந்தி பரிகாரம் செய்ய இருந்த அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் திருப்பதிகம் வழங்கப்பட்டது. அம்மையப்பர் தரிசனம் பெற்று வெளியே வந்த பிறகு நேரே ஆருத்ரா அபிஷேக மண்டபம் எதிரே அமர்ந்தோம்.





அனைத்து அன்பர்களும் ஒன்று கூடி, கூட்டுப்பிரார்த்தனை செய்து, அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பாடி வழிபாடு செய்தோம். முதலில் யார் பாடுவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திரு.சகாநாதன் அவர்கள் பாடினார். நாமும் அப்படியே பின் தொடர்ந்து படித்தோம்.





நேரம் ஆக,ஆக  அன்பர்கள் வந்து சேர்ந்தார்கள். அனைவரும் மீண்டும் மீண்டும் திருப்பதிகம் படித்தோம்.







எப்போது வழிபாடு செய்தாலும் நாம் விளக்கேற்றுவது வழக்கம். இதோ. பதிகம் பாடி முடித்ததும் இனி தீப வழிபாடு காண இருக்கின்றோம்.







உலகில் உள்ள அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டி தீபமேற்றி வழிபாடு செய்தோம். பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரு குழு படம் எடுத்துவிட்டு மீண்டும் அம்மையப்பரை மனத்தால் வழிபட்டு வந்தோம்.



இந்த தலம் நாம் அளித்து வரும் பாடல் பெற்ற தலங்கள் தொடர்பதிவிலும் எடுத்து கொள்ளலாம். நாம் ஏற்கனவே சொல்லியவாறு இங்கே சனி பகவானின் மகன் மாந்தி தனிச் சந்நிதி கொண்டு சுபகிரகமாக அருள்புரிவது இந்தத் தலத்தின் சிறப்பம்சமாகும்.  மாந்திக்கு தோஷப் பரிகாரம் செய்ய விரும்புவோர், பருத்திக் கொட்டையை தரையில் பரப்பி, அதன்மேல் நல்லெண்ணெய் இட்டு பஞ்ச தீபம் ஏற்றி, மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இந்தப் பரிகாரம் ஒவ்வொரு சனிக்கிழமையும் ராகுகாலத்தில் (காலை 9.00-10.30) அபிஷேக ஆராதனையுடன் நடைபெறுகிறது.  இந்த மங்கள மாந்தியை வழிபடுவோர் திருமணத் தடை, வியாபாரத் தடை, உத்தியோகத் தடை, குடும்பச் சண்டை சச்சரவுகள் யாவும் நீங்கி வளம்பெறுவர்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

பாடல் பெற்ற தலங்கள் (12) - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/04/12.html

பாடல் பெற்ற தலங்கள் (11) - திருநணா சங்கமேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/11.html

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temples.blogspot.com/2020/02/10_13.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & 
ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & 
பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html

ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment