"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, April 27, 2020

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பொன்னான நன்னாளாம் சித்திரை திருவாதிரையில் ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது.

 இன்று சித்திரை திருவாதிரை. ஒரு அற்புதமான நன்னாள். சைவம்,வைணவம் என்று நாம் கொண்டாடவேண்டிய திருநாள். நமக்கு இந்த பாகுபாடு கிடையாது. சைவத்திற்கென விறன் மிண்ட நாயனார் பூசையும், வைணவத்திற்கென ராமானுஜரின் பூசையும் இன்று தான். குருமார்களை உருவமாக பார்த்தால் நமக்கு பல பேதங்கள் ஏற்படும். அவர்களின் சூட்சும சரீரம் பாருங்கள். பின்னர் நீங்களே குருவின் நிலையை பற்றிக் கொள்வீர்கள்.இந்நாளில் ராமானுஜரின் திவ்ய சரிதத்தை பாற்கடலில் சிறு துளியை பருகிய பூனையைப் போல் தருகின்றோம்.





இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.

 இராமானுசர் திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்.

ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைணவர்கள் நம்பிக்கை. பின்னர் ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர்.

• சித்தித்ரயம்: இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது.

• ஆகம ப்ராமாண்யம்: இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம்.

• மஹாபுருஷ நிர்ணயம்: இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன் தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது.

• கீதார்த்த சங்கிரகம்: இது கீதைக்கு பொருளுரை.

யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவர் என்று உலகுக்குக் காட்டியவர்.

யமுனாச்சாரியாரின் அழைப்பை பெரிய நம்பிகள் மூலம் கேள்வியுற்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடி வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாத நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன. அந்த பிரமாணங்களாவன:

• பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;

• விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரரின் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;

• வேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.

இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100 ம் ஆண்டு முடித்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார், இவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது. மூன்றாவதாக தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவி இருக்கும்படிச் செய்தார்.

யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடம் என்றதற்கு இராமானுசர் எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கும் செல்வதும் பாக்கியமே என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே "எம்பெருமானார்" என்று மகிழ்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார்.

இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கநாதன் இராமானுசரை "உடையவர்" என அழைத்தார்.

இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த காந்திமகானும் "ஹரிஜன்" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.

வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை:

• வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.

• வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.

• கீதா பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.

• நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.

• கத்யத்ரயம். இவை மூன்று உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. வைகுண்ட கத்யம் மகாவிட்டுணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

இராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளை தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.

இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமானந்தர் (1300-2015) விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ரவிதாசர் தான் இராசபுதனத்து மீராவை பக்தி மார்க்கத்தில் இழுக்கக் காரணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்தவர் ஆவார்.



 தானுகந்த திருமேனி........!!!
(ஸ்ரீபெரும்புதூர்)

தானுகந்த திருமேனி (தான் உகந்த திருமேனி) இரண்டம் திருமேனி  ஸ்ரீபெருபுதூரில் நிறுவப்பட்டது. ஸ்ரீராமானுஜர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்ரீராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் ஸ்ரீராமானுஜர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.

பின்பு ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள். ஸ்ரீராமானுஜர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் ஸ்ரீராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும்
ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட ஸ்ரீராமானுஜரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.

 ஸ்வாமி ராமானுஜரின் 3 திருமேனிகள் (விவரம்)

1) தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)
2)தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்)
3)தமருகந்த திருமேனி (திருநாரயணபுரம்)....

1) தானான திருமேனி:

தானான திருமேனி திருவரங்கத்தில் உள்ளது. இராமனுசர் பரமபதம் அடைந்த பின்னர் அவர் பூத உடலை திருப்பள்ளி(புதைத்தல்) படுத்தினர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், துறவிகளை எரிப்பது கிடையாது.மாறாக திருபள்ளிப் படுத்துவார்கள். அவ்வாறு திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி இத்திருமேனியை தானான திருமேனி என்று பெயர்.

2) தானுகந்த திருமேனி:

இராமானுசர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது இராமானுசரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.

பின்பு இராமானுசர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள். இராமானுசர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுசரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.

3) தமருகந்த திருமேனி:

தமர் உகந்த திருமேனி கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் உள்ளது. இவ்விடத்தில் சுமார் 12 ஆண்டுக் காலம் தங்கி இருந்து கைங்கர்யம் மேற்கொண்டார். திருவரங்கம் செல்வதற்காக இவ்வூர் சீடர்களிடம் விடைபெற்றபோது, இராமானுசரை பிரிந்து வாழ முடியாது என்று அவர்கள் கூற, அவர்கள் குறையைப் போக்குவதற்காக, சிற்பியை வரவழைத்து, தன் உருவத்தை சிலையாக வடிக்கச்செய்து, தன் சக்திகளை பாய்ச்சினார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இதனால் இச்சிலை தமருகந்த திருமேனி என்று அழைக்கப்படுகிறது.

ஆசார்யன் திருவடிகளே சரணம்.

உய்ய ஒரே வழி... உடையவர் திருவடி...

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html


 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment