"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 7, 2020

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் கண்டு வருகின்றோம். அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், போகர், ஸ்ரீ ரோம மகரிஷி , ஸ்ரீ சதானந்த சுவாமிகள், ஸ்ரீ சுப்பையா சுவாமிகள், மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லையா சுவாமிகள், ஸ்ரீ காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் என தொட்டுக்காட்டி வருகின்றோம். இன்றும் ஒரு மாபெரும் ஞானி பற்றி காண இருக்கின்றோம்.எப்போது அழைப்பாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதற்கு முந்தைய பதிவில் திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அவதாரம், சுவாமிகளின் அருள் நிலை என்று அறிந்தோம். மீண்டும் அங்கிருந்து இந்தப் பதிவில் தொடர விரும்புகின்றோம்.

திண்டுக்கல்லில் சௌராஷ்டிர பிராமணர் ஒருவர் வசித்து வந்தார்.  திருமணாகி, குழந்தையே இல்லை.  சுவாமிகளின் மேல் கொள்ளைப்பிரியம்.  தீவிரமான பக்தர்.  சுவாமிகளை தரிசிக்கவில்லை என்றால்  அவருக்கு உணவு செல்லாது; தூக்கம் வராது.  தங்கள் வீட்டில் மழலை ஒலி கேட்க, குழந்தை வரம் வேண்டி, சுவாமிகளை அவ்வப்போது பிரார்த்தனை செய்வார். விதியின் போக்கை யார் அறிவார்?  பூர்வ வினைகளின் காரணமாகக் காச நோய் அந்த சௌராஷ்டிர பிராமணரைத் திடீரெனப்பற்றிக்கொண்டது.  குடும்பத்தினர் அதிர்ந்து விட்டனர்.  மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.  ஒரு டாக்டரது சிகிச்சை பலன் தரவில்லை என்றால் இன்னொரு டாக்டரைப் பார்த்தனர்.  ஆனாலும், சிகிச்சையினால் எந்தப் பலனும் விளையவில்லை.  ஒரு கட்டத்தில் அனுபவித்தில் முதிர்ந்த டாக்டர்களே, இது தீர்க்க முடியாத வியாதி, உயிர் பிழைப்பதே சிரமம்.  இருக்கும்வரை அவர் சந்தோஷமாக இருக்குட்டும்.  வீட்டுக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை.... மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மகானே துணை!  அந்த சௌராஷ்டிர பிராமணர், ஒத  சுவாமிகள் இருந்து வரும் குகைக் கோயிலுக்குப் போய் வழிபட ஆரம்பித்தார்.  தினமும் மனமுருகப் பிரார்த்திப்பார்.  இப்படித்தொடர்ந்து ஒரு மண்டலம் வழிபட்டார்.  



ஆனாலும், பிராமணரின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை, ஒரு நாள் மனம் வெறுத்துப்போனார்.  சுவாமிகளை வழிபட்டும் உடல் நிலை தேறவில்லை என்றால், இந்த உடல் இருந்து என்ன பயன்?  என்று தீர்மானித்தவர் அந்தக் கோயிலேயே தன் உயிரை விட முடிவெடுத்தார். அன்றைய தினம் நள்ளிரவு வேளையில் தன்னை மாய்த்துக் கொள்வதாக இருந்தார். பிராமணர். மனைவியைப் பிரிகிறோமே என்கிற வேதனையும் இல்லாமல், தன் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு நேரம் பார்த்துக் காத்திருந்தார்.  குகைக் கோயிலின் ஏதோ ஒரு மூலையில் சுவாமிகள் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். மனமுருக அவரைப் பிராத்தித்துக்கொண்டார்.  மற்றப்படி வேறு எவரும் அங்கே இல்லை. தன் பக்தன் ஒருவன் , இப்படி உயிரை மாய்த்துக்கொள்ள ஒத சுவாமிகள் விரும்புவாரா? சித்து வேலைகளைத் துவக்கினார்.  அந்த நள்ளிரவு வேளையில் பிராமணரின் வீட்டுக்குப் போனார். கதவைத் தட்டினார். மனைவிதான் கதவைத் திறந்தார். (கணவர்தான் உயிரைப் போக்கிக்கொள்வதற்காக இங்கே குகைக் கோயிலில் அமர்ந்திருக்கிறாரே!). அகால வேளையில் சுவாமிகளைப் பார்த்தும் பதறிப் போனார் மனைவி.  பிறகு, தோபாரம்மா .... உம் புருஷன் அங்கே உக்கார்ந்து என் நிஷ்டையைக் கெடுத்துக்கொட்டிருக்கான்.  அவனை அந்த இடத்துக்கு இனிமே வரச் சொல்லாதே. அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை.  தேவை இல்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்கறான்.  கூடிய சீக்கரமே உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கப் போகுது.  உடனே கௌம்பிப் போய், அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடு.  அதுதான் நல்லது என்று சொல்லி, மனைவியையும் ஆசிர்வதித்து மறைந்தார்.

அதே நேரத்தில் குகைக் கோயிலில், உயிரை விடத் தயாராகத் இருந்த பிராமணருக்கு முன் திண்டுக்கல்லில் பிரபலமாக விளங்கிய ஒரு மருத்துவர் தோன்றினார்.  (அவரது பெயர் டாக்டர் தண்டபானி என்று சுவாமிகளின் சரித நூல் சொல்கிறது).ஏனப்பா இங்கே கிடந்து அல்லாடுகிறாய்?  உனக்கு  எந்த வியாதியும்  இல்லை.  நல்லாருக்க நீ. கௌம்பு வீட்டுக்கு என்று சொன்னார்.  டாக்டர். பிறகு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்.  பிராமணருக்கு ஒரே ஒரு சந்தேகம் உதித்தது.  என்னதான் டாக்டராக இருந்தாலும், இந்த நள்ளிரவு வேளையில் இங்கே எப்படி வந்தார்?  எந்த விதமான பரிசோதனையும் செய்யாமல் தனக்கு எந்த வியாதியும் இல்லை என்று ஏன் சொல்லவேண்டும் என்று குழம்பிய பிராமணர், சட்டென எழுந்து டாக்டரைப் பின் தொடர ஆரம்பித்தார்.  ஒரு திருப்பத்தில் பிராமணரை மெள்ளத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த டாக்டர், பொசுக்கென மறைந்துபோனார்.  அதன் பின் டாக்டரைத் தேடியும் அவர் அகப்படவில்லை.  திடீரென ஏதோ தோன்ற, விறுவிறுவென்று வீட்டுக்கு ஒடினார் பிராமணர். வீட்டைப் பூட்டிக்கொண்டு கணவனைத் தேடக் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவரின் மனைவி.

இருவரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை அந்த நேரத்தில் பகிர்ந்துகொள்ள.... இவை அனைத்தும் சுவாமிகளின் திருவிளையாடல் தான் என்று அறிந்து தெளிந்தனர்.  அடுத்த நாள் அதிகாலை சுவாமிகளின் கோயிலுக்குச் செல்வதற்கு முன் டாக்டரின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார் பிராமணர். தூக்கத் கலக்கத்தில் இருந்து எழுந்து வந்தார் டாக்டர். பிரமணர் டாக்டரைப் பார்த்து, சார்.... நேத்து நள்ளிரவு நீங்க எதுக்கு குகைக் கோயிலுக்கு வந்தீங்க?  எனக்கு வியாதியே இல்லைன்னு சொன்னீங்களே.... என்று கேட்க.... டாக்டர் நெளிய ஆரம்பித்தார்.  குழம்ப ஆரம்பித்தார்.  தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அவரது முகம் சொன்னது. அதன் பின் முதல் நாள் நள்ளிரவு  நடந்த முழுச் சம்பவத்தையும் அவரிடம் சொன்னார் பிராமணர்.  டாக்டர் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்.  இதெல்லாம் சுவாமிகளின் திருவிளையாடலாகத்தான் இருக்கும் என்று நெகிழ்ந்து அவர்களை அனுப்பி வைத்தார். அடுத்து வந்த நாட்களில், பிராமணருக்கு இருந்த காச நோய், போயே போய் விட்டதை மருத்துவ சோதனை மூலம் அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது அவரது குடும்பம்.  கிட்டதட்ட இதே காலத்தில் அவர் மனைவியும் கருவுற்றார். ஓத சுõவமிகளைச் சந்தித்து அவருடைய திருப்பாதங்களில் விழுந்து, கண்ணீரால் நனைத்தனர்.  சுவாமிகளும் புன்னகைத்து அவர்களை ஆசிர்வதித்தார். சரியாக பத்து மாதம் கழித்து சௌராஷ்டிர பிராமணரின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.  சுவாமிகளின் திருப்பெயரான சுப்பையா என்பதை நினைவுக்கூரும் வகையில் சுப்பம்மாள் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் தம்பதியர்.

சுவாமிகளின் ஆசி பெற்ற ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆன கதையைப் பார்ப்போமா? மகான்களின் அருள் இருந்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.  மடுவும் மலையாகும்; எழுத்தறிவே இல்லாத ஒருவன் சிறந்த கல்விமான் ஆவான்; குடிசைக்கு வழி இல்லாத ஒருவன் மாட மாளிகைக்குச் சொந்தக்காரன் ஆவான்.  என்ன ஒன்று... எதையும் எதிர்பார்க்காமல் மகான்களிடம் - குருமார்களிடம் தன்னை ஒப்படைக்கவேண்டும். திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் சாதாரண முன்சீப்பாக இருந்தவர் சதாசிவ ஐயர்.  ஓத சுவாமிகள் தன் அருளை இவர் மீது பொழியவேண்டிய வேளை வந்தது போலும்! சதாசிவ ஐயருக்கு அப்போதுதான் திருமணம் ஆகி இருந்தது.  பஞ்சக்கச்சமும் மேல்வஸ்த்திரமும் அணிந்து மிகவும் ஆச்சாரமாகக் காணப்படுவார்.  ஒரு நாள் இவருடைய வீட்டுக்கு  ஒத சுவாமிகள் வந்தார்.  வாசல் திண்ணையில் அமர்ந்தார். வீட்டின் உள்பக்கம் திரும்பி, டேய் சதாசிவா...  என்று குரல் கொடுத்தார். வெளியே வந்த சதாசிவம.  சுவாமிகளை பார்த்தார். சுவாமிகளைப் பற்றி ஒரளவு அறிந்திருந்தாலும் அவரது லீலைகளை அறிந்துருக்குவில்லை சதாசிவம்.

ஒரு மேல்வாஸ்திரம் கொண்டு வா.  எனக்குத் தேவைப்படுகிறது என்றார்  சுவாமிகள்.  வீட்டின் உள்ளே போன சதாசிவம் ஒரு புது அங்கவஸ்த்திரத்தை எடுக்கப்போனார்.  பிறகு, முற்றும் துறந்த ஞானிக்கு ஏன் புது வஸ்திரம்?  பழைய வஸ்திரம் ஒன்றையே கொடுக்கலாமே என்று முடிவெடுத்து, பழைய வஸ்திரம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கி, இப்படியும் அப்படியும் பிரித்துப் பார்த்த சுவாமிகள்.  மீண்டும் பழையப்படி மடித்துக் கக்கத்தில் வைத்துக்கொண்டு புன்னகைத்தாவறே புறப்பட்டு போனார். சுவாமிகளின் இந்த செயல் சதாசிவ ஐயருக்கு வித்தியாசமாகத் தோன்றினாலும், அதற்கான பொருள் அப்போது புரியவில்லை.  மறுநாள் வெளியே புறப்படுவதற்காக பீரோவைத் திறந்து அங்கவஸ்திரம் எடுக்கப் போன சதாசிவ ஐயர் திகைத்தார்.  அனைத்து அங்கவஸ்திரங்களும் செல்லரித்துப் போய், மடிப்புகள் கலைந்து கிழிந்த நிலையில் காணப்பட்டன.  மனைவியை அழைத்து இந்த விவரத்தைச் சொல்லி விளக்கம் கேட்கலாம் என்று பெயர் சொல்லி அழைக்கப் போனவரை, ஏதோ ஒரு சக்தி தடுத்தது. வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.  அவரையும் அறியாமல் அவரது கால்கள் வாசல் பக்கம் நோக்கி நகர்ந்தன.

அப்போது அங்கே அவர் பார்த்த காட்சி நிலைகுலைய வைத்தது.  சுவாமிகளின் தலை மட்டும் தனியாக ஒரிடத்தில் காணப்பட்டது.  உடலின் மற்ற பாகங்கள் அனைத்தும் ஆங்காங்கே துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்தன. பதறிய சதாசிவம் ஒவென்று பெருங்குரல் எடுத்துக் கதறத் தொடங்கும் முன், அனைத்து உறுப்புகளும் சரசரவென்று ஒன்று சோர்ந்தன.  தூக்கத்தில் இருந்து எழுந்து நடப்பதுபோல் சாலையில் நடக்க ஆரம்பித்தார் சுவாமிகள்.  குறுகுறுப்புடன் சதாசிவ ஐயரைத் திரும்பிப் பார்த்துக் கை உயர்த்தி ஆசிர்வதிக்கவும் செய்தார். ஓத சுவாமிகள் சாதாரணப்பட்டவர் அல்ல.... பெரிய மகான் என்று தெளிந்து, அவர் நடந்து சென்ற திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் சதாசிவ ஐயர்.  அதே வேகத்துடன் வீட்டினுள் வந்து பீரோவைத் திறந்து பார்த்தவருக்கு ஆச்சிரியம்.  அனைத்து வஸ்த்திரங்களும் புத்தம் புதிதாகக் காணப்பட்டன.  சற்று முன் செல்லரித்துப் போய்ப் பார்த்ததற்கும், இப்போது இருக்கும் பொலிவுக்குமான காரணம் சுவாமிகளே என்று உணர்ந்து, அவரின் தீவிர பக்தரானார் சதாசிவ ஐயர்.

கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பதவிக்கான இடம் காலியாக இருப்பதை அறிந்தார் சதாசிவம்.  முன்சீப்பாக இருக்கும் தனக்கு, நீதிபதி ஆக வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கினார்.  ஒத சுவாமிகளின் ஆசி கிடைத்துவிட்டால்.  தான் நீதிபதி ஆகிவிடலாம் என்று எண்ணி, அவரை தரிசிக்க வீட்டை விட்டுக் கிளம்பினார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, வழியிலேயே சுவாமிகளைப் பார்த்துவிட்டார் சதாசிவம்.  விறுவிறுவென ஒடிப்போய் நடுரோட்டிலேயே விழுந்து அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.  எழுந்திரு சதாசிவம்.  அதான் ஐகோர்ட் ஜடஜ் ஆகப் போகிறாயே.... நீ நீதி தலை வணங்க கூடாது என்று வலது திருக்கரம் உயர்த்தி ஆசிர்வாதம் செய்ய... நெகிழ்ச்சியின் உச்சக்கட்டமாக சதாசிவ ஐயரின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருகியது. இதை அடுத்து சில நாட்களிலேயே சதாசிவம், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார்.  ஊருக்கு வரும்போதெல்லாம் சுவாமிகளை தரிசிக்க சதாசிவம் என்றும் மறந்தில்லை.  இந்த அபரிமிதமான பக்தியின் காரணமாக, தான் ஸித்தி ஆகப் போகும் வேளையில் சதாசிவ ஐயரை ஆட்கொள்ளத் திருவுளம் பூண்டார் சுவாமிகள்.  நீதிபதி சதாசிவ ஐயரின் கனவில் ஓரு நாள் சுவாமிகள் தோன்றி, சதாசிவ.... இன்னும் சில நாட்களுக்குள் நான் ஸித்தி ஆகப் போகிறேன்.  நிரந்தரமாகக் குடிகொள்ள எனக்கென்று ஒரு இடத்தைத் தேர்வு செய் என்று சொல்லி மறைந்தார்.

இதன் பிறகு தற்போது அதிஷ்டானம் அமைந்துள்ள இடத்தை - அதாவது சுவாமிகள் அதிகம் நடமாடிய இடத்தைத் தேர்வு செய்தார்.  சட்டப்படி அந்த இடத்தை அப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்திடம் இருந்து பெற்று சுவாமிகள் பெயருக்கே பதிவு செய்து கொடுத்தார்.  பின்னர், இந்த பத்திரம் சுவாமிகளின் பக்தரான அய்யாத்துரை செட்டியாரிடம் வந்து சேர்ந்தது.  ஓத சுவாமிகள் 1906-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ஸித்தி ஆனார். அன்று திருவாதிரை நடசத்திரம்.  சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருப்பூரில் வசித்து வருபவர் ரஞ்சனி கணபதி.  சுவாமிகள் பற்றித் தன் முன்னோர்கள் சொன்ன சில அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார்.  ரஞ்சனி கணபதி.  இனி அவரே சொல்கிறார். ஓத சுவாமிகள் திண்டுக்கலில்தான் அதிக காலம் வசித்தார்.  அவர் எந்தக் கடைக்கப் போய் கால் வைத்தாலும் அங்கே வியாபாரம் அன்றைய தினத்தில் அமோகமாக நடக்கும்.  இதற்காக வியாபாரிகள், தங்கள் கடைக்கு வந்து பாதம் பதிக்கும்படி சுவாமிகளிடம் வேண்டுவார்கள்.  ஆனால், எங்கே போகவேண்டும் என்று தோன்றுகிறதோ, அந்தக் கடைக்குத்தான் சுவாமிகள் செல்வார். சுப்பையா செட்டியார் என்பவரின் எண்ணெய்க் கடைக்குத்தான் சுவாமிகள் அதிகம் செல்வார்.இன்றும் சுப்பையா செட்டியாரின் பேரனான சுப்பையா என்பவர். அதிஷ்டானத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார். திண்டுக்கல்லில் சுவாமிகள் வசித்தபோது தன் அண்ணாவின் (பெரியப்பா மகன்) வீட்டுக்கு அதிகம் போவார்.  பால் கொழுக்கட்டை என்றால் சுவாமிகளுக்கு ரொம்ப பிடிக்கும்.  சுவாமிகளின் அண்ணியார் தன் வீட்டில் பால் கொழுக்கட்டை தயார் செய்துவிட்டு, அவரை நினைத்துக்கொள்வார்.  அடுத்த நிமிடமே சுவாமிகள் அங்கே பிரசன்னமாகிவிடுவார்.  ஒரு தட்டில் பால் கொழுக்கட்டைகளை வைத்து மிகுந்த அன்புடன் அவருக்குக் கொடுப்பார் அண்ணியார்.  ஆசை ஆசையாக சுவாமிகள் சாப்பிடும் அழகையே கண் கொட்டாமல் பார்த்து நெகிழ்வார். அண்ணியார்.

சுவாமிகளுக்கு கணபதி ஐயர் என்ற தம்பி இருந்தார்.  இவர் மனைவியின் பெயர் திருமதி நாகம்மாள்.  இவர்கள் இருவரும் பழநிக்கு அருகிலுள்ள பாலசமுத்திரம் என்ற ஊரில் வசித்து வந்தார்கள்.  இந்தத் தம்பதிக்கு ரொம்ப நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை.  வேண்டாத தெய்வம் இல்லை.  ஒரு நாள் இருவரும் சுவாமிகளை தரிசித்து, தங்கள் மனக்குறையை அவரிடம்   வைத்தார்கள்.  வீட்டுக் கொல்லைப்புறத்தில் போய்ப் பார் என்று தன் வலக்கையை உயர்த்தி மூன்று விரல்களை அவர்களிடம் காட்டினார் சுவாமிகள். வீட்டுக்கு வந்து கொல்லைப்புறம் போய்ப் பார்த்தில், மூன்று அம்மிக் குழவிகள் அங்கே திடீரென முளைத்திருந்தன.  சுவாமிகள் காட்டிய மூன்று விரலுக்கும், இந்த மூன்று குழவிக்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று கருதிய தம்பதியர், அவற்றை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்தார்கள்.  இதை அடுத்த சில காலத்தில் நாகம்மாள் கருவுற்றார்.  முதலில் சுப்பிரமணியன் பிறந்தான்.  அடுத்த சில காலத்தில் கோபலகிருஷ்ணன் பிறந்தான்.  மூன்றாவாதகப் பிறந்தவர்தான் என் மாமனாரான பரமேஸ்வரன். முத்தான மூன்று மகன்கள் பிறக்கும் என்பதை சுவாமிகள் அழகாக உணர்த்தி இருந்தார் தன் தம்பிக்கு.  சுவாமிகளின் அருளால் இந்த மூவருமே நன்றாகப் படித்து, நல்ல நிலைமைக்கு வந்தார்கள்.  இன்றும் எங்கள் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், முதலில் சுவாமிகளை வணங்கி உத்தரவு கேட்டுக் விட்டுத்தான் அடுத்த வேலைகளைக் கவனிப்போம். என்றார் ரஞ்சனி கணபதி.

திண்டுக்கல் நகரத்தில் ஒரு சிறு சந்தில் எண்ணெய்க் கடை நடத்தி வந்தார். அய்யாத்துரை செட்டியார். தீடீரென இவரது கடைக்குள் நுழைவார் ஓத சுவாமிகள்.  பெரிய பெரிய அண்டாக்களிலும் பாத்திரங்களிலும் எண்ணெய் நிரப்பட்டிருக்கும். ஒரு பெரிய அண்டாவுக்குள் சொம்பு ஒன்றை உள்ளே விட்டு எண்ணெயை முகந்தெடுப்பார் சுவாமிகள்.  அப்படியே அதைத் தன் தலையில் ஊற்றிக்கொண்டு விறுவிறுவென வெளியே ஒடிவிடுவார் சுவாமிகள்.  செட்டியார் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும். அன்றைய வியாபாரம் அமோகமாக இருக்கும்.  செக்கில் ஆட்டி வைத்திருந்த எண்ணெய் ஒட்டுமொத்தமும் காலியாகிவிடும். செட்டியாருக்குச் சொந்தமாகச் சில செக்குகளும் இருந்தன.  சொந்தச் செக்கிலேயே எள்ளை ஆட்டி நல்லெண்ணெய் விற்று வந்தார் அய்யாத்துரை செட்டியார். ஒருமுறை, ஏதோ ஒரு விசேஷத்தை முன்னிட்டுத் தன் கடையில் எண்ணற்ற அண்டாக்களில் எண்ணெய் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தார் செட்டியார்.  நன்றாக வியாபாரம் ஆகும் என்று எதிர்ப்பார்த்தார்.  ஆனால் செட்டியாருக்குப் பலத்த ஏமாற்றம். வியாபாரமே ஆகவில்லை. மிகுந்த வருத்துடன் அப்போது சுவாமிகளை மனமார பிரார்த்தித்தார் செட்டியார்.  அடுத்த நிமிடமே அந்த ஆபத்பாந்தவன் அங்கே பிரசன்னமானார்.  செட்டியாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  வழக்கமான நடைமுறையை சுவாமிகள் அமல்படுத்துவார் என்று எதிர்பார்த்து. ஒரு சொம்பை எடுத்து சுவாமிகள் கையில் கொடுத்தார் செட்டியார். ஆனால் அந்தச் செம்பைத் தூர எறிந்தார் சுவாமிகள்.  செட்டியார் முதலில் அதிர்ந்தாலும், சுவாமிகள் ஏதோ லீலை நிகழ்த்தப்போகிறார் என்று அமைதியாக இருந்தார்.

பெரிய பெரிய அண்டாக்களில் இருந்த எண்ணெய் அனைத்தையும் கீழே சாய்த்துக் கொட்டினார்.  சுவாமிகள். செட்டியார் தவித்தார். உடனிருந்த அவரின் மனைவியும் கைகளைப் பிசைந்துக்கொண்டு தவித்தார்.  இருவரும் தடாலென சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்தனர். அவர்களை ஆசிர்வதித்த சுவாமிகள், இதோ பார்.... இங்க இருக்கிற எல்லா காலி அண்டாக்களிலும் தண்ணீரைப் பிடிச்சு வை.  இன்னொண்ணும் பண்ணு.  உன் வீட்டுல இருக்கிற எல்லா காலிப் பாத்திரங்களையும் கொண்டுவந்து.  அது எல்லாத்துலயும் தண்ணீரைப் புடிச்சு வை.  வீட்டுக்குப் போய்ப் படு.  நாளை காலைல வந்து கடையைத் திற.  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் சுவாமிகள்.  அவரின் பேச்சுக்கு மறுபேச்சு எதுவும் பேசாமல் கடையில் இருந்த காலிப் பாத்திங்களிலும்வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பாத்திரங்களிலும் நீரை நிரைப்பினர். செட்டியாரும் அவர் மனைவியும், அதன்பின் வீடு திரும்பினர்.

மறுநாள் காலை செட்டியாரும் அவர் மனைவியும் வந்து கடையைத் திறந்தனர்.  முதல் நாள் இரவு தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களைப் பார்த்த அவர்கள் முகத்தில் பிரகாசம்.  தண்ணீர் முழுதுவதும் எண்ணெயாக மாறியிருந்த ஸித்து வேலையைக் கண்டு பிரமித்தனர்.  பிறகென்ன... அன்றைக்குத் துவங்கிய கோலாகலமான வியாபாரம்.  செட்டியாரின் செல்லவாக்கை ஒஹோ வெனக் உயர்த்தியது.  இதற்கு நன்றிக்கடனாக சுவாமிகளின் பெயருக்கே ஒரு வீட்டை வாங்கி அவருக்கு அர்ப்பணித்தார் செட்டியார்.  இன்றைக்கும் அந்த வீட்டிலிருந்து வரும் வருமானம் சுவாமிகளின் அதிஷ்டானத்துக்குப் பயன்பட்டு வருகிறது.  சுவாமிகளின் எத்தனையோ ஸித்து வேலைகள் செய்து, பல நல்ல உள்ளங்களின் வாழ்வு மேம்பட ஆசிர்வதித்து வந்தாலும், மகனின் நடவடிக்கைகளில் அந்தத் தாயாருக்கு திருப்தி இல்லை மகனது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று புலம்பினார். தன் தகப்பனார் காலமாகிவிட்ட பின், வீட்டை விட்டு வெளியேறினார் சுவாமிகள்.  புறப்படும் முன், தன் தாயாரிடம், எப்போது நீ என்னைக் கூப்பிடுகிறாயோ, அப்போது நான் உன் முன்னே வருவேன் என்று உறுதிமொழி கூறிவிட்டு வெளியேறினார்.  காலம் உருண்டோடியது.  சுவாமிகளின் தாயார் இறைவனடி சேரவேண்டிய வேளை நெருங்கியது.  அந்த தாயின் கண் முன்னால் காலதேவன் தோன்றி, அழைத்துச்செல்லத் தயாராக இருந்தான்.  உறவினர்களும் அண்டை அயலர்களும் கூடினர்.  தாயின் மனம் மகனை நினைத்து ஏங்கியது.  ஒரு கட்டத்தில் சுப்பையா .... என்று வாய் விட்டு உரக்க அழைத்தார்.  

அடுத்த விநாடியே, வந்துவிட்டேன் அம்மா என்று வீட்டினுள் நுழைந்தார் சுவாமிகள். கூடி இருந்த பலரும் அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டனர்.  தாயை நோக்கி நடந்த சுவாமிகள்.  அந்தப் புனதவதியின் தலையை மெள்ளத் தூக்கித் தன் மடிமேல் வைத்துக் கொண்டார்.  தாயின் மனம் குளிரிந்தது.  பாடசாலைக்குப் போகாமலே சுவாமிகளுக்கு அத்தனை  வேதங்களும் அத்துப்படி ஆகியிருந்தது.  சாம கானம் ஓதுவதில் சுவாமிகள் மிகவும் தேர்ந்தவர்.  தாயின் மனம் சந்தோஷப்படும்படி அழகாக ஏற்ற இறக்கத்துடன் சாம வேத கானம் பாடினார்.  மகன் உடலின் கதகதப்பு, அந்த தாய்க்கு இதமாக இருந்தது.

 இதைவிட ஒரு தாய்க்கு வேறென்ன சுகம் வேண்டும்!

 தாயின் முகத்தை ஏறிட்டார் சுவாமிகள்.  அம்மா.... கயிலாயம் செல்லத் தயாராக இருக்கிறாயா? என்று பரிவுடன் கேட்டார். ஆம் மகனே என்றார் தாயார். அடுத்த கணம் அந்த வீட்டின் முன் ஒரு ரதம் தோன்றியது.  சுவாமிகளின் கண்களுக்கு மட்டும் இந்த ரதம் தெரிந்தது. அதைச் செலுத்தி வந்த சிவ தூதர்களிடம், சிவ கணங்களே.... என் தாயரை வெகு ஜாக்கிரதையாகக் கயிலாயம் அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். சுவாமிகள் யாரிடம் இப்படிப் பேசுகிறார் என்று குழம்பினார்கள் அங்கிருந்தவர்கள். அடுத்த விநாடி, தாயாரிடம் இருந்து இறுதிமூச்சு வெளிப்பட்டுப் பிரிந்தது.  ரதத்ததில் சுவாமிகளின் அம்மா புறப்பட்டார்.  இறுதிக் காரியங்களை நிறைவேற்றும் பொருட்டு, அங்கிருந்தபடியே  சூரிய பகவானைப் பிரார்த்தித்தார் சுவாமிகள்.  தாய்க்கு உண்டான இறுதிக் கடனை நிறைவேற்றிய திருப்தியுடன் அங்கிருந்து மறைந்தார். பயணம் சென்று தரிசிக்க முடியாத இடங்களுக்கும் பலரைத் தன் சித்து வேலை மூலம் கூட்டிச் சென்று தரிசனம் செய்து வைத்தவர். சுவாமிகள்.

 தேச விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, சுவாமிகளின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். விடுதலைப் போரட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் சுப்பிரமணிய சிவா, ஆன்மிகத்தின் பக்கம் நாட்டம் செலுத்த விரும்பி, சுவாமிகளுடனேயே சுற்றிக்கொண்டிருந்தார்.  நீ நாட்டுக்குச் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. தேசம் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. என்று அவரை திருப்பி விட்டவர் சுவாமிகள். சுப்பிரமணிய சிவாவின் தங்கை ஞானாம்பாளும், சுவாமிகளின் தரிசனம் பெற்றவர். வயது முதிர்ந்த காலத்தில் ஞானாம்பாளுக்கு காசி, கயா, ஹரித்வார், ரிஷிகேஷ், அமர்நாத், கேதார்நாத் போன்ற புனிதத் திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது.  தன் விருப்பத்தை சுவாமிகளிடம் தெரிவித்தார்.  புன்னகைத்த சுவாமிகள், ஞானாம்பாளைக் கண்களை மூடிக்கொள்ளச் சொன்னார்.  சில நிமிடத்திதுளிகளுக்குள் அந்த அம்மையார் ஆசைப்பட்ட தலங்களுக்குக் கூட்டிச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.

இதுபோல் திண்டுக்கல்லில் இருந்தப்படியே ராயர் ஒருவரின் மகனுக்கு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் காட்சியை தரிசிக்கச் செய்தார். ஒருமுறை தன்னைச் சுற்றி நின்ற பக்தர்களை அண்ணாமலைக்கு அரோஹரா என்று உச்சரிக்க சொன்னார்.  அன்று திருக்கார்த்திகை தீபத் திருநாள்.  அவர்கள் முழங்கிய அடுத்த கணம் அங்கே திருவண்ணாமலை தீபக்காட்சி தத்ரூபாமகத் தெரிந்தது.  திண்டுக்கல்லில் இருந்த அந்த பக்தர்கள் கூட்டம் தீபக் காட்சியை தரிசித்தபடியே பரவசமானது. வயதான தன் உறவினர்களை இதுபோல் கண் மூடிக் கண் திறப்பதற்குள் காசிக்குக் கூட்டிப் போய் கங்கையில் ஸ்நானம் செய்வித்து, காசி விஸ்வநாதர், அன்னை விசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகிய தெய்வங்களை தரிசிக்க வைத்தார். காசிக்குப் போனால் மட்டும் போதுமா? ராமேஸ்வரத்தையும் தரிசித்தால்தானே யாத்திரை பூர்த்தி ஆகும்? எனவே, காசியை தரிசனம் செய்து முடித்த அடுத்த நிமிடமே அவர்களை சேது சமுத்திரத்தில் ஸ்நானம் செய்ய வைத்து, ஸ்ரீராமநாதரையும் தரிசிக்க வைத்தார்.

ஒரே நேரத்தில் சுவாமிகளை இரண்டு மூன்று ஊர்களில் தரிசித்தவர்களுக்கு உண்டு. ஸ்ரீமத் ஓத சுவாமிகளின் சரித்திரத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணற்ற அருள் நிகழ்வுகள் அவரது வாழ்கையில் உண்டு. எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினால், நாம் மற்ற சித்த புருஷர்களை தரிசிக்க இயலாது.  எனவே, அந்த மகானின் குருவருளோடு இத்துடன் நிறைவு செய்வோம். சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ள இந்த மலைக் குøக் கோயிலில் ஸ்ரீலிங்கோத்பவர். ஸ்ரீஅமிர்தாம்பாள். ஸ்ரீவிநாயகர், நாகர்கள் போன்ற திருமேனிகளுக்கும் சந்நிதி உண்டு. அதிஷ்டானத்தின் இன்றைக்கும் ஜீவித்திருந்து தன் பக்தர்களைக் காத்து வரும் ஸ்ரீமத் ஓத சுவாமிகளுக்கு திருவாதிரை, கேட்டை நட்சத்திர நாட்கள் மற்றும் அமாவசை, பௌர்ணமி தினங்களில் அவரின் பக்தர்களால் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டுவருகின்றன.  அன்னதானங்களும் சிறப்பாக நடந்து வருகின்றன.  சுவாமிகளை தரிசித்து அவரது அருளுக்குப் பாத்திரமான யோகி ஸ்ரீ சாரங்கு ரங்கநாத சுவாமிகளிள் என்பவருக்கும் இங்கே ஒரு அதிஷ்டானம் உண்டு. 

திண்டுக்கல்லில் ஜீவித்துவரும் ஸ்ரீமத் ஓத சுவாமிகளின் அதிஷ்டானத்தை தரிசித்து நலம் பெறுவோம்.

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

2 comments:

  1. ஓம் ஸ்ரீ தலைப்பாகட்டு சுவாமிகள் - சுகமே சூழும்!!!

    மக்களோடு மக்களாக வாழ்ந்து அற்புதங்கள் பல செய்து வரும் சிறப்பான மகான் இவர்.
    எப்போதும் அவர் தலையில் தலைப்பாகைகட்டிக்கொண்டு இருப்பார், அதனால் அவரை அனைவரும் தலப்பாகட்டு சுவாமிகள் என்று அழைப்பார்கள்.
    மூக்குப்பொடி சித்தர், தாடிக்கார சித்தர், தலையாட்டி சித்தர், மவுன சித்தர் என்று சமீப காலத்தில் வாழ்ந்த சித்தர்களும், அவர்களது செயல்பாடுகளாலேயேதான் அந்த பெயர்களால் அழைக்கப்பட்டனர். அந்த வரிசையில் ஸ்ரீ தலப்பாகட்டு ஸ்வாமிகளையும் சொல்லலாம்.

    சுவாமிகள் அவர்கள் ஒரு நாள் உங்கள் வீட்டில் வந்து விஜயம் செய்தல் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகள் தன்னுடைய தவ வலிமையால் அனைத்தும் தீர்ந்துவிடும், ஆனால் அவருடைய விஜயம் அவர் நினைத்தால் மட்டுமே சாத்தியம்.

    அவரை வீட்டிற்கு அழைத்து அவரிடம் ஆசி பெற்றால் வீட்டில் குலதெய்வத்தின் ஆசியும் மற்றும் அனைத்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா

      ஓம் ஸ்ரீ தலைப்பாகட்டு சுவாமிகள் திருவடி போற்றி

      Delete