"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, February 14, 2020

வாழ்வியல் நீதி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அறம் செய்ய விரும்பு  என்ற ஒன்றே போதும், நம் மண்ணின் அறம் பேசுவதற்கு என்று தோன்றுகின்றது. தமிழில் இல்லாதா பக்தி நூல்களோ? தத்துவங்களா? என்று நாம் எண்ணுகின்ற வேளையில் தமிழ் தாண்டிய மற்ற மொழிகள் மெல்ல நம்முள் ஊடுருவி கொண்டிருக்கின்றது. பிழைப்பதற்கு மற்ற மொழிகள் தேவை தான். ஆனாலும் தாய் மொழி மீதும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தொடரே போதும். நம் வாழ்வியலின் அடிநாதம் பேசுவதற்கு என்றும் தோன்றுகின்றது. இது போல் நம் மண்ணில் பலர் பல சிந்தனைகளை அள்ளித் தெளித்து இருக்கின்றார்கள். நாம் தான் பின்பற்ற தவறிவிட்டோம் என்று தோன்றுகின்றது.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை உள்வாங்காததால் அண்டை வீட்டாருடன் கூட நட்பு பாராட்ட இயலவில்லை. சரி..வாழ்வியல் நீதி சொல்லும் ஒரு கதை ஒன்றை இன்றைய பதிவில் பாப்போம். தெரிந்த கதையாக இருந்தாலும் பரவாயில்லை. மீண்டும் மனதுள் விதைப்போம்.

படிப்பதற்கு மிக மிக சாதாரணக் கதையாகக் கூட தோன்றலாம். ஆனால் கதை சொல்லும் நீதி மிகவும் பெரியது. நமக்கும் சேர்த்துத் தான். தலைமை பண்பிற்கு மிக மிக தேவையான ஒன்று நேர்மை. ஆனால் இன்று நேர்மை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் சூழலில் வாழ்ந்து வருகின்றோம். நேர்மையாக இருந்து என்ன சாதிக்கப் போகின்றோம்? இது அலுவலகத்திலும் சரி! இன்ன பிறவற்றிலும் சரி ! ஏமாற்றமே மிஞ்சும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவே உங்களுக்குத் தான்.

ஒரு மிகப் பெரும் நிறுவனத்தின் முதலாளி ஓய்வு பெறும் காலம் வந்தது. அந்த நிறுவனம் பல சோதனைகளைத் தாண்டி ,சாதனைகளை சத்தியத்தின் பாதையில் நிலைநிறுத்தி வந்தது.எனவே தமக்குப் பின் யாரை நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் நியமிப்பது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

நேரே நிறுவனத்திற்கு சென்று, அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றும் சுமார் 10 நபர்களை அழைத்தார். பின்னர் அவர்களிடம், நான் பொறுப்பில் இருந்து ஓய்வு பெரும் காலம் வந்து விட்டது, உங்களில் ஒருவரை நிர்வாகத்தின் பொறுப்பில் தேர்தெடுக்க உள்ளேன். அனைவரும் ஒவ்வொரு விதத்தில்,ஒவ்வொரு துறையில் சிறப்பாக தலைமை ஏற்று வருகின்றீர்கள். மொத்தமாக நம் நிறுவனத்திற்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு தனித்தன்மை வாய்ந்த விதைகளை ஒவ்வொன்றாக தர இருக்கின்றேன்,

ஒவ்வொருவரும் அந்த விதையை நட்டு, நீர் பாய்ச்சி, உரமிட்டு, ஓராண்டு வளர்க்க வேண்டும்.ஓராண்டு முடிவில் அந்த செடியை இங்கு கொண்டு வந்து காட்ட வேண்டும். நாம் அதனை நன்கு, ஊன்றி கவனித்து யார் சிறப்பாக வளர்த்துளார்கள் என்று பார்த்து,அவருக்கு நம் நிறுவனத்தின் பொறுப்பை கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறி, அனைவருக்கும் ஒரு விதையைக் கொடுத்தார்.

அந்த நிறுவனத்தில் ஒரு நேர்மையான பணியாளர் இருந்தார். அவர் வீட்டுக்கு வந்து, நன்கு அகலமான மண் தொட்டி வாங்கி, இயற்கை உரமிட்டு, உகந்த மண் இட்டு, நிரப்பி, விதையை நட்டு, நீர் ஊற்றினார். தினமும் காலை அல்லது மாலை நீர் ஊற்றி,சூரிய ஒளி படும்படி வெளிச்சத்தில் வைத்து, செடி தொட்டியை பராமரித்தும் வந்தார். ஒரு மாதம் கழிந்தது, விதையில் இருந்து முளை விடவே இல்லை, விருட்சம் தோன்றும் என்று காத்து, மாதங்கள் போனது தான் மிச்சம், 

செடி வளரவும் இல்லை, விதை அப்படியே தான் இருந்தது. கவலை தோய்ந்து காணப்பட்டார். நாம் நன்றாகத் தானே நீர்,சூரிய ஒளி, காற்று என ஒருங்கே அமைத்து பாதுகாத்து வருகின்றோம், பின்னர் ஏன் செடி வளர வில்லை என்று யோசித்தார். நிறுவனத்தில் ஒவ்வொருவரும், அவரவர் விதைகளின் வளர்ச்சியைப் பற்றி பேசுவதே வழக்காமாகக் கொண்டனர். இவரோ, மிகவும் அமைதியாக காணப்பட்டார்.

எவ்ளோ முயற்சிகள் செய்தும் பலன் இன்றிப் போனது. ஓராண்டும் கழிந்தது. அந்த நாளும் வந்தது.பலரும் செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்தார்கள்.ஆனால் நம் கதையின் நாயகனோ, வெறும் மண் தொட்டியைக் கொண்டு வந்தார். இவரைத் தவிர்த்து மற்ற 9 பேரும் செடிகளோடு நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் இவர் மட்டும் கூனிக் குறுகி, மண் தொட்டியுடன். பார்ப்பதற்கே பாவமாக இருந்ததது. அந்த 9 பேரும் பெருங்களிப்பில் வேறு இருந்தனர்.

முதலாளி ஒவ்வொரு செடியாக பார்வை இட்டு, வாவ்..சூப்பர் என பாராட்டிக் கொண்டே வந்தார்.மண் தொட்டியின் முறை வந்தது.என்னப்பா? வெறும் மண் தொட்டியைக் கொண்டு வந்து இருக்கின்றாய்? செடி எங்கே? என்று வினவ, அதற்கு, ஐயா ! நான் எவ்வளோ முயற்சி செய்தும் மண் தொட்டியில் உள்ள விதை முளைக்கவே இல்லை, நானும் என்னால் முடிந்த முயற்சிகளை செய்து விட்டேன். முயற்சிகள் தோற்றது என்று சலித்து பேசினார்.

உடனே அவர், அனைவரும் இங்கே கவனியுங்கள். நம் நிறுவனத்தின் பொறுப்பை இந்த மண் தொட்டியைக் கொண்டு வந்த பணியாளருக்கே கொடுக்கின்றேன். அனைவர் முகத்திலும் ஈ ஆட வில்லை. நான் உங்களுக்கு கொடுத்த விதைகளில் இருந்து செடிகள் வளர வாய்ப்பே இல்லை, ஏனென்றால் நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள்
அனைவரும் அதில் செடி வளரவில்லை என்பதற்காக வேறு விதைகளைப் போட்டு வளர்த்து இங்கே கொண்டு வந்து உள்ளீர்கள்.இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.




இங்கே உள்ள நீங்கள் 9 பேரும் மிகவும் திறமையானவர்கள். அதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு நிறுவனத்தில் தலைவராக இருப்பதற்கு வெறும் திறமை மட்டும் போதாது, நேர்மையும் வேண்டும். தலைவன் எதற்கு தலைவராக இருக்கின்றாரோ, அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிறுவனம் வளர்ச்சி பெறும். அப்படிப்பட்ட ஒரு நேர்மையான பணியாளரை நம் நிறுவனத்தில் கண்டு மகிழ்ச்சி, அவரது தலைமையில் இந்த நிறுவனத்தின் பொறுப்பை தருவதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று கூறி சென்றார்.

இந்த நேர்மை எனும் பண்பு நிறுவனத்திற்கு மட்டும் அல்ல, கட்சி, அமைப்பு, குடும்பம் என அனைத்திற்கும் பொருந்தும், இந்த நேர்மை இல்லாததால் தான் ..என்னத்த சொல்ல, நம் அனுபவிக்கும் அனைத்திற்கும் இது தானே காரணம். பார்க்க சின்ன கதை போல் தான் உள்ளது, ஆனால் கதையின் நீதி..பல நீதிகளை இந்த ஒரே கதை தருகின்றது. 

எனவே சோதனைக் காலங்களில் வெறுப்படையாது, அமைதியாக சூழலுக்கேற்ப பணியாற்றுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே. ஒரு நிறுவனத்தின் பதவிக்கு ஒருவரை நியமிக்கவே பரீட்சை வைத்து நேர்மை சோதிக்கப் படுகின்றது என்றால் ..இந்த அண்ட சராசரங்களை கட்டி, நம்மை ஆளும் இறைவன் ...நேர்மையின் காவலன் தானே. தவறை நாம் செய்து விட்டு, அவரை குறை கூறாதீர்கள்.இந்த நாள் முதல் நேர்மையைக் கடைபிடிக்க முயற்சி செய்வோம்.

 - மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.


மீள்பதிவாக:-

மறைபொருளாய் ஒரு குட்டிக்கதை - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_95.html

பிரார்த்தனை...பிரார்த்தனை... பிராத்தனை..! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_80.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

No comments:

Post a Comment