"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 4, 2019

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நவராத்திரி விழாவின் தொடக்கத்தை திருக்கச்சூரில் உள்ள கோயிலில் நம் தல அன்பர்களால் ஆரம்பித்தோம். சற்று நேரத்தில் குருக்கள் அடியவர்கள் பாட, யாம் கேட்க வேண்டும் என்றார்கள். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த போது, திரு.செல்லப்பன் அவர்கள் திருப்புகழ் ஒன்றை பாடுவதாக சொல்லி ஆரம்பித்தார். அந்த திருப்புகழை அனைவரும் பாட... குறைந்தபட்சம் படிக்காவாவது வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். அடுத்து கைத்தல நிறைகனி என்ற பாடலும், சாய் பாபா பாடலுமாக தொடர்ந்தோம். எமது தந்தையும் மாசில் வீணையும் என்ற பதிகமும், சில திருக்குறளும் பாட நவராத்திரி எங்களுக்கு குதூகலமாக ஆரம்பமானது.

திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா  உன் வேல் தடுக்கும்
நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ்  எடுத்தது -அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகா முருகா.

நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது

சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன்
சரவணத்தில்  உருவெடுத்ததால்  வேதமானவன்
முருகா முருகா முருகா

கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன்
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!





திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிதாக சொல்ல முடியுமா? திருப்புகழ் யார் பாடியது? இன்று குருபூஜையில் அருள் தரும் அருணகிரிநாதர் பாடியது. ஏற்கனவே அவரைப் பற்றி சிறிது பார்த்தோம். இன்றைய நன்னாளில் மீண்டும் திருப்புகழ் பற்றி சிந்திப்போம்.

திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

'முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ்னாலும் கூட, அதில் மற்ற சுவாமிகள் பற்றியும் உருகி உருகிப் பாடியிருக்கார் அருணகிரிநாதர்.'' என்பது கூடுதல் சிறப்பு.

திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.


திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலைசுவடிகளில்  எழுதி வைக்கவில்லை. யாத்திரையாக சென்று ஆலய தரிசனம் செய்த கோயில்களில்  இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. அறிவால் இப்படி பாட முடியுமா ?




முருகன் அருளால் பாடினார்.  அருளால் பாடியதால் தான் திருப்புகழ் இன்னும் அருள் தருகின்றது.தமிழில் எந்த நூட்களுக்கு திரு என்று பெயர் சேர்ந்து வருகின்றதோ, அவையெல்லாம் இறையால் அருளப்பட்டவை, திருக்குறள்,திருவாசகம், திருப்புகழ் என் கூறலாம். திருப்புகழை முருகன் அருணகிரியை வைத்து  பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு. சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் ஒருங்கே பெற்றது திருப்புகழ்.

இது மட்டுமா?

வேதம் வேண்டாம்,சகல வித்தை வேண்டாம்
நாதம் வேண்டாம்,நாத நூல் வேண்டாம், ஆதி
குரு புகழை மேவுகின்ற கொற்றவன்தாள்
போற்றும் திருப்புகழை கேளீர் தினம்

என்பது ஆன்றோர் வாக்கு. சரி.வாருங்கள் மூழ்கி சில முத்தெடுக்கலாம்.




கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

விநாயகர் துதி யுடன் திருப்புகழ் தொடங்குகின்றது. இந்த பாடலில் ஒரு சிறப்பு உள்ளது. இத்திருப்புகழில் உள்ள உயிர் எழுத்துக்களை மட்டும் கூட்டினால் 200 எழுத்துக்கள் வரும். சில ஊர்களில் 100 என்பதை பிள்ளையார் என்று கூறுவது மறைவு.இங்கு 200 வருகின்றது..எனவே இத்திருப்புகழை "இரட்டைப் பிள்ளையார்" என்பார்கள்.


அட..ஆரம்பமே அருமையாக உள்ளது. நமக்குத் தெரிந்த வரை "முத்தைத்தரு பத்தித் திருநகை" சில முறை கேட்டிருக்கின்றோம். இன்று "நாத விந்துக லாதீ நமோநம" என்ற பாடல் கேட்டோம். இன்னும் ஒரு நிகழ்வோடு பதிவை முழுமை செய்வோம்.

முருகனை வழிபடும் அடியாரைக் கண்டால் எமனும் பயப்படுவார். அருணகிரிநாதருக்கு அப்படியே. 
முருகன் அருள் பெறுவதற்கும் முன் அப்படியே பயப்படுகிறார்.

தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ழுந்தும் 
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ 
மைந்தருஞ் சோக முற்றி ரங்க மரணபக் குவமாநாள்
என்று கூறுகின்றார். தமிழ்க் கடவுள் முருகன் அருள் பெற்ற பின்னர் எமனுக்கே சவால் விடுகின்றார்.
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலுனக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே.

என்று எமனையே முடிந்தால் என்கைக்கு எட்டும்படி வந்து பார் என்று சவால் விடுகின்றார் என்றால் அது முருகன் அருள் முன்னிற்கத் தான். இதன் மூலம் நாம் உணர்வது யாதெனின் வேலும் மயிலும் சேவலும் துணையிருக்க பயமேன்?

இது போன்ற திருப்புகழ் செய்திகளை இனிவரும் பதிவுகளில் அறிய முருகன் அருள் புரியட்டும். சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் பொருந்திய திருப்புகழைப் பாட பாட வாய் மட்டுமா மணக்கும்? பாடுபவர்களின் வாழ்க்கையும் மணக்கும்.


வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
     மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
     மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
     ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
     தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
     நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
     நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
     சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள்
     மாயம் அது ஒழிந்து ...... தெளியேனே.

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து,
     மாபதம் அணிந்து ...... பணியேனே.

ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள்
     ஆறுமுகம் என்று ...... தெரியேனே.

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
     ஆடும் மயில் என்பது ...... அறியேனே.

நாதமொடு விந்து ஆன உடல் கொண்டு
     நானிலம் அலைந்து ...... திரிவேனே.

ந அகம் அணிகின்ற நாத! நிலை கண்டு
     நாடி அதில் நின்று ...... தொழுகேனே.

சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற
     ச அகம் அது தந்து ...... எனை ஆள்வாய்.

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.
பதவுரை
      சூரர் குலம் வென்று --- சூரபன்மனாதி அவுணர் குலத்தை அழித்து வெற்றி பெற்று,
     வாகையொடு சென்று --- வெற்றிமாலை சூடிச்சென்று,
     சோலை மலைநின்ற --- பழமுதிர்சோலை என்னும் திருமலை மீது எழுந்தருளி நின்ற,
     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
      வாதினை அடர்ந்த --– வாது புரியும் தன்மையே நிறைந்த,
     வேல்விழியர் தங்கள் --- வேல் போன்ற கண்களுடைய பெண்களினால் வரும்,
     மாயம் அது ஒழிந்து --- மாயத்தை அறவே நீங்கி,
     தெளியேன் --- அடியேன் தெளிவடையவில்லை;
     மாமலர்கள் கொண்டு --- பெருமையுடைய மலர்களைக் கொண்டு,
     மாலைகள் புனைந்து --- திருமாமலைகள் தொடுத்து,
     மா பதம் அணிந்து --- தேவரீருடைய பெருமைமிக்க திருவடிகளிற் சூட்டி,
     பணியேன் --- அடியேன் ஒருபோதும் பணிந்திலேன்,
     ஆதியொடும் அந்தம் ஆகிய நலன்கள் --- முற்றறிவுடைமை முதலாக முடிவிலாற்றலுடையை ஈறாகவுள்ள ஆறு அருட்குணங்களே
     ஆறுமுகம் என்று --- தேவரீருக்கு ஆறுமுகங்களாக அமைந்திருக்கின்றன என்பதை,
     தெரியேன் --- அடியேன் இதுகாறும் தெரிந்து கொள்ளாதிருந்தேன்,
     ஆன தனி மந்தரரூப நிலை கொண்டு --- எல்லாக் கலைகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் பிறப்பிடமாக விளங்கும் ஒப்பற்ற ஒருமொழியாகிய ஓங்கார வடிவத்தைக் கொண்டு,
     அது ஆடும் மயில் என்பது அறிவேன் --- அந்த மயில் ஆடும் என்பதை அடியேன் அறிந்துகொண்டேனில்லை;
     நாதமொடு விந்து ஆன உடல் கொண்டு --- நாதவிந்துக்களான உடம்பை நிலையெனக் கொண்டு,
     நால் நிலம் அலைந்து --- நான்கு வகையான திணைகளுடன் கூடிய பூ மண்டலத்தில் வீணே அலைந்து,
     திரிவேன் --- அடியேன் திரிந்து கெடுகின்றேன்.
     ந அகம் அணிகின்ற நாத --- நான் அல்ல என்று அன்பர்கள் அர்ச்சிக்கும் சீவபோதமாகிய மலரை அணிகின்ற தலைவரே!
     நிலைகண்டு --- தேவரீருடைய நிலையைக் கண்டு,
     நாடி அதில் நின்று --- அந்நிலையை உற்றுப்பார்த்து அவ்வகப் பார்வையில் நிலைத்துச் சலனமற்று நின்று,
     தொழுகேன் --- ஒருபோதும் தொழுதேனில்லை;
     சோதி உணர்கின்ற வாழ்வு --- அருட்சோதியை உணர்கின்ற சுகவாழ்வே,
     சிவம் என்ற --- மங்கலம் என்று கூறுகின்ற,
     ச அகம் அது தந்து --- அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து,
     எனை ஆள்வாய் --- அடியேனை ஆட்கொண்டருள்வீர்.

பொழிப்புரை

         சூரபன்மனாதி அவுணர்களின் குலத்தை வேருடன் களைந்து வெற்றிமாலை சூடிக்கொண்டு வந்து பழமுதிர் சோலையென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         வாது செய்யுந் தன்மை நிறைந்த வேல் போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் மாயையை அறவே ஒழித்து தெளிவு பெற்றேனில்லை;

     பெருமை தங்கிய நறுமலர்கள் எடுத்து திருமாலைகளாகத் தொடுத்து தேவரீருடைய பெருமைமிகுந்த திருவடிகளில் அணிந்து தொழுகின்றேனில்லை;

     முற்றறிவு முதலாக முடிவிலாற்றலுடைமை ஈறாகவுள்ள அருட்குணங்கள் ஆறுமே ஆறு திருமுகங்களாக அமைந்தன என்பதை அறிந்தேனில்லை;

     எல்லாக் கலைகட்கும் பிறப்பிடமான ஓகாதவடிவத்தைக் கொண்டு தேவரீருடைய ஊர்தியாகிய மயில் ஆடுகின்றது என்ற நுட்பத்தையும் அடியேன் உணர்கின்றேனில்லை;

     நாதவிந்துக்களான இவ்வுடம்பை விடாதுகொண்டு குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை யென்று நான்கு வகையாகப் பிரித்துள்ள உலகில் அவமே அலைந்து திரிகின்றேன்;

     நான் அல்ல என்று சீவபோதத்தை மலராக அன்பர்கள் அர்ச்சிக்க அம்மலரினையணிகின்ற தலைவரே!

     உமது திருவருள் நிலையை ஊன்றிப் பார்த்து அந்நிலையில் உறைத்து நின்று தொழுகின்றேனில்லை.

     அருட்சோதியை யுணர்கின்ற சுகவாழ்வே சிவானந்தப் பேறு என்று தெளிந்து அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து அடியேனை யாட்கொண்டருள்வீர்.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment