"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 30, 2019

கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ கந்த ஷஷ்டி விழா (3)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் என்றாலே அழகு
முருகன் என்றாலே தமிழ்
முருகன் என்றாலே முக்தி

அனைவரும் கந்த ஷஷ்டி விரதம் இருந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். கந்த ஷஷ்டி விரதம் மிக பிரசித்தி பெற்றது. இதனை முன்னிறுத்தும் விதமாக சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்றும் சொல்வதுண்டு. முருகன் என்று சொன்னாலே ஷஷ்டி விரதம் என்பது நமக்கு உணர்த்தப்பட்டு வருகின்றது. சென்ற ஆண்டில் முதன் முதலாக காப்பு கட்டி,விரதம் இருந்தோம். ஓராண்டு நிறைவில் எமக்கு என்ன வேண்டுமோ அதனை முருகப் பெருமான் இந்த ஆண்டு ஷஷ்டிக்குள் கொடுத்து விட்டார். இதோ..இந்த ஆண்டும் ஷஷ்டி விரதம் இருந்து வருகின்றோம்.இந்த ஆண்டு எம் இல்லத்துணைவியும் இந்த விரதத்தில் இணைந்துள்ளார்கள் என்பது குருவருளால் என்பது திண்ணம்.

சரி..சென்ற ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ கந்த ஷஷ்டி விழாவிற்கு செல்வோமா?





சென்ற ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு முடித்து நாம் கந்த ஷஷ்டி விழாவிற்கு காப்பு கட்ட நமக்கு குருக்கள் பணித்தார். அதே போல் நம் குழுவின் சார்பில் மூவர் காப்பு கட்டிக்கொண்டோம். அன்று முதல் விரதம் இருக்க ஆரம்பித்தோம்.



இதோ..நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்..என்று முருகன் அருளில் திளைக்க நாம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து ஒரு வாரம் வந்தோம்.

 மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு

நூறு முகம் காட்ட இருக்கும் ஆறு முகனை தினமும் தொழுது கொண்டே வந்தோம்.



இதோ..அந்த நாளும் வந்தது. நாமும், சிவசங்கர்,பத்ம குமார் மூவரும் அன்று மாலை கோயிலை அடைந்தோம். முதன் முதலாக சூர சம்ஹாரம் காண இருக்கின்றோம். அன்று மாலை முழுதும் முருகா..முருகா என்று ஒலித்து கொண்டே இருந்தது. 



முருகன் கோயிலின் முன்னே வேல் வைக்கப்பட்டிருந்தது.


பின்னர் உற்சவர் இருக்கும் இடத்திற்கும் சென்றோம். நேரம் செல்ல செல்ல நமக்கு சற்று பதட்டமாக இருந்தது. குருக்கள் பூசையை ஆரம்பித்தார். இதோ சற்று நேரத்தில் வேல் வாங்கி சூர சம்ஹாரம் செய்ய முருகன் புறப்பட இருக்கின்றார். நாமும் முருகனுடன் செல்ல இருக்கின்றோம்.





அழகெல்லாம் முருகனே..அருளெல்லாம் முருகனே..என்று கேட்டிருப்போம், மேலே பாருங்கள்..பார்த்தால் இது புரியும். 





கந்த ஷஷ்டி விழா பற்றி கோயில் குருக்கள் சிறிய உரை நிகழ்த்தினார். மாலை நேரம் இரவு நோக்கி நெருங்கி கொண்டிருந்தது. நாமும் நம்முள்ளே உள்ள தீய குணங்களை சம்ஹாரம் செய்ய முருகனிடம் வேண்டினோம்.


நம் அன்பர் பத்ம குமார் முருகனுக்கு குடை பிடிக்க தயாராகி விட்டார். முருகனுக்கு குடை பிடிக்க இவர் ஒரு வாரம் விரதம் இருந்துள்ளார். சும்மாவா..சாட்சாத் அந்த பரம்பொருளின் கருணை நமக்கு சும்மா கிடைக்குமா என்ன?







இன்னும் சற்று நேரத்தில் முருகன் வேல் வாங்கப் போகின்றார். வேல் வாங்கி விட்டு சூரனை சம்ஹாரம் செய்ய புறப்பட போகின்றார். மூன்று வேல்களை ஒவ்வொன்றாக முருக அடியார்கள் வாங்கினார்கள். நமக்கு கதாயுதம் கிடைத்தது. அப்படியே வாங்கி விட்டு, முருக சரணம் விண்ணப் பிளக்க முருகன் கோயிலை விட்டு வெளியே வந்தார்.




அலைகடலென கூட்டம் வந்துவிட்டது. இதற்கு மேல் நாம் காட்சியை பதிவு செய்யவில்லை. சிவசங்கர் முருகனை ஒருபக்கத்தில் தூக்கி கொண்டு வந்தார். பத்மகுமார் குடையையே அப்படி,இப்படி என ஆட்டிக்கொண்டு வந்தார். நாம் முருகனுக்கு முன்னே மூன்று வேல் உள்ள படையில் ,படை வீரனாக சென்றோம். கோயிலுக்கு வெளியே செல்ல, இருள் சூழ்ந்து விட்டது.
முதலில் சிங்க முகன் முருகனிடம் மோதுவதற்கு ஓடோடி வந்தார். முருகன் ஒரு வேல் சென்று தலையை கொய்தது.இரண்டாவதாக கஜ முகன் ஒரு கை பார்க்க வந்தார். முருகன் சும்மா விடுவாரா என்ன? மீண்டும் கஜமுகன் தலையைக் கொய்து அனுப்பினார். இறுதியில் சூரன் வந்தார். இவர் ஒரே முறை வரவில்லை. மூன்று முறை முருகனிடம் வந்தார். முருகப் பெருமான் மூன்றாவது முறை சூரனை சம்ஹாரம் செய்து சேவலாக மாற்றினார்.இது செய்தியாக பார்த்தால் ஒன்றும் விளங்காது. நேரில் சென்று பார்த்தால் தான் நாம் சொல்ல வரும் விஷயம் புரியும். நாம் அப்படியே கண்ணீர் கடலில் மிதந்தோம். நம்மை முருகப் பெருமான் அவரது போர்ப் படையில் முன்னே நிறுத்தி உள்ளார் என்றால் என்னே நாம் செய்த புண்ணியம். சூர சம்ஹாரம் முடிந்து உள்ளே சென்ற முருகப் பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை என்று தொடர்ந்தது.

நாம் உள்ளே அரோகரா! அரோகரா என்று கோஷமிட்டுக் கொண்டே உள்ளே சென்ற போது, சில அடியார்கள் நம் காலை தொட்டுக் கும்பிட்டார்கள். முருகா சரணம் என்று அவன் புகழ் ஓதி, போர் கருவிகளை வேலொடு கொடுத்தோம்.

மீண்டும் இரவு சுமார் 9 மணி அளவில் கோயில் சென்று முருகனை தரிசித்தோம், 
நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்... என்று நமக்குத் தோன்றியது.




ஆம். நம்மிடம் உள்ள தான், தனது என்ற பற்றுக்களை கொஞ்ச கொஞ்சமாக கந்த ஷஷ்டி சூர சம்ஹாரத்தில் அழித்து விட்டார் என்று இன்று நம்மால் உணர முடிகின்றது.

சென்ற ஆண்டு செப்டம்பரில் கொண்டாடிய போது நமக்கு சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலர் பிரசாதம் கிடைத்தது. இன்னும் ஓராண்டு முழுமைக்குள் தற்போது ஜூலை மாதம் நேரிலே சென்று ஸ்ரீ சிங்காரவேலர் தரிசனம் பெற்று வந்தோம். விரைவில் தனிப்பதிவாக தருகின்றோம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பதும் நமக்கு சத்தியமாக சாத்தியப்பட்டிருக்கின்றது.
எப்படியோ.. நம் கனவிலும் நினையாத கந்த ஷஷ்டி விரதம் நாம் முதன் முதலாக கைக்கொண்டிருக்கின்றோம். அடுத்த ஆண்டில் இன்னும் சீர்பட முருகனருள் வேண்டி நிற்கின்றோம். இந்தப் பதிவின் மூலம் சிவசங்கர் & பத்மகுமார் அவர்களுக்கும், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் குருக்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- மீண்டும் முருகனருள் பெறுவோம்.

மீள்பதிவாக:-

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temples.blogspot.com/2019/10/60-2.html

சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

No comments:

Post a Comment