"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 17, 2019

மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று மார்கழி 2 ஆம் நாள். மார்கழி மாத ஆலய தரிசனம் தீராத பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கவல்லது. உங்கள் ஆன்மபலத்தை அதிகரித்து அனைத்து நற்பலன்களையும் கொட்ட வல்லது. ராகு-கேது, சனி, என தோஷமிருப்பவர்கள் அனைவரும் தயங்காது சோம்பல்படாது இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம்  மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம்.  கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.

அது பீடை மாதம் அல்ல… பீடுடைய மாதம் (அதாவது செல்வம் மிகுந்த மாதம்) என்பது தான் மருவி நாளடைவில் பீடை மாதம் என்றாகிவிட்டது.  நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், இம்மாதத்தில் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும்.

மார்கழி மாதத்தில் இறைவனை வணங்கி வழிபட்டு நோன்பிருந்து பயன் பெற வேண்டி இந்த மாதத்தை இறை உணர்விற்கும் பக்திக்கும் என ஒதுக்கியுள்ளார். ஆகையால்தான் இந்த மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை. இந்த மாதத்திற்கு மற்றொரு ஏற்றம். மிகவும் பக்தி சிரோன்மணியாவும், தன் எஜமானனைத் தொழுபவர்கள் துன்பத்தை எல்லாம் துடைத்தருளும் வள்ளலாகவும் விளங்கும் ஆஞ்சநேய ஸ்வாமிகள் திரு அவதாரமும் இந்த மாதத்தில்தான்.

 இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.


வருடத்தில் மற்ற நாட்களில் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

இதோ நம் தளம் சார்பிலும் தினமும் திருப்பாவையும், திருவெம்பாவையும்  பதிவிட்டு வருகின்றோம்.

திருப்பாவை-2 வையத்து வாழ்வீர்காள் 




வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!.

முதல் பாட்டில் ஆய்ப்பாடி சிறுமிகளை அழைத்ததற்கு ஏற்ப கூடிய கோபிகைகளின் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து “வையத்து வாழ்வீர்காள்!” என்று ஆச்சரியப்பட்டு அழைத்து நாம் செய்ய வேண்டிய நோன்பிற்கு செய்யவேண்டிய கிரியைகளை கேளுங்கள் என்கிறாள்.

சேஷத்வமே நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் சொன்ன ஆண்டாள் அதை அடையும் மார்க்கத்தில் எதை செய்ய வேண்டும் – எதை செய்யக்கூடாது என்று க்ருத்யா – அக்ருத்ய விவேகம் சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் – இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழலுவோம் என்று விவரமாக சொல்கிறாள்.

லோகாயதத்தில் நாஸ்தீக வாதம் செய்து – கண்டதே காட்சி, கொண்டதே கோலம் – கடன் வாங்கியாவது வாழ்க்கையை அனுபவி – நெய் சேர்ந்த அன்னம் உண்டு, குறளை பேசி திரிவதே இன்பம் என்று திரிவர்கள் – இது அக்ருத்யம் – செய்யத்தகாதது என்கிறாள். உன் அடியே நாடும் நாங்கள் நெய்யுண்ணோம் – பாலுண்ணோம் – மையிட்டு, மலரிட்டு, செய்யாதன செய்து, தீக்குறளை பேசி திரியமாட்டோம்.

எங்களிடம் இருப்பதையும் தான தருமமாக கொடுத்து விடுகிறோம்! ஐயம் என்பது நம்மைவிட உயர்ந்த ஆசார்யர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் சமர்ப்பணம் செய்வது. பிச்சை என்பது ஏழைகளுக்கும், ப்ரஹ்மசாரிகளுக்கும் தர்மமாக தருவது. இவை இரண்டுமே மிக உயர்ந்த காரியங்களான படியால் இவற்றை செய்வோம். பாற்கடலில் பைய துயிலும் பரமனே உய்யும் ஆறு என்று எண்ணி உகந்து அவனடியை பாடுவோம் என்கிறாள். அதென்ன ‘பைய’ துயிலுவது? ஆம், அகில உலகத்தையும் ஈரடியால் அளந்தான் – இந்த பூவுலகை தாங்கி தூக்கினான் – அப்பேர்ப்பட்டவன் சிறிய ஆலிலைக்கும் இலேசாக மிதக்க வல்லவனல்லவா?

இந்த பாசுரத்தின் முதல் பதங்களான வையத்து வாழ்வீர்காள்! என்ற விளியை எடுத்துக் கொண்டு பூர்வாசார்யார்கள் விசாரிக்கிறார்கள். வையத்திலே ஏது வாழ்ச்சி? பரமனோ பாற்கடலில் பைய துயிலுகின்றான். அவனுடைய சேஷிகளான நாம் இங்கே பிரிந்து மாயையில் சிக்கி உழலுகிறோம் – இப்படி இருக்க வாழ்ச்சி ஏது?

வையத்திலேதான் வாழ்ச்சி உண்டு – வைகுந்தத்தில் இல்லை என்பதற்கு சில காரணங்களை பூர்வாசார்யர்கள் சொல்லுகிறார்கள். அவைகளை பார்ப்போம்…

அந்த வைகுந்தனே “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே” என்று ஸ்ரீவைகுந்தத்திலே விரக்தி அடைந்து அங்கேயே இருக்கவொட்டாது இங்கே புவிக்கு ஓடி ஓடி வந்துவிடுகிறான்… அப்படி அவன் செய்ய பூமி உகந்ததாகவும் உயர்ந்ததாகவும் இருப்பதால் தானே?

ஜகத் காரணனான பகவான், செளலப்யன், செளசீல்யன், தயாளன், கருணா சாகரன் என்றெல்லாம் வேதங்கள் கோஷிக்கின்றன. ஆனால் தனது அந்த எளிய செளலப்ய தன்மையையோ, கருணை யையோ வைகுந்தத்திலே யாரிடம் காண்பிப்பது? எளியவர்களிடம் தானே கருணையும் எளிமையும் காட்டமுடியும்… அது இந்த வையகத்திலேதானே இயல்பாக அமையக்கூடியது… அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் நந்தகோபாலா என்று இரைஞ்சக்கூடியவர்கள் இங்கேதானே இருக்கிறார்கள்…!

அடுத்து சொல்கிறார்கள்,
கால அவசரங்களும், கலக்கங்களும் நிறைந்த இந்த உலகத்தில் ஆடாத அசையாத ஆழ்ந்த பக்தி செலுத்துவதுதானே கடினமானதும், பெருமை வாய்ந்ததும் ஆனது? ஆகவே வைகுந்தத்தை விட வையகத்திலேதான் வாழ்ச்சி – அதனால் வையத்து வாழ்வீர்காள்! என்று பெருமை பொங்க ஆண்டாள் அழைக்கிறாள்!

அடுத்து 
திருவெம்பாவை -2


பக்தியோடு இறைவனைத் தொழுவதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள இறைவனின் வடிவமாகிய இந்த மாதத்திலே யாவரும் நோன்பு இருந்து, பக்தி மார்க்கத்தை கடைபிடித்து, கோதை நாச்சியாரும், மாணிக்க வாசகரும் அருளிய பாடல்கள் அறிந்து பாடி, பூமிக்கு பாரமில்லாமல் இருப்போமாக!'

இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம் மற்றய காமங்கள் மாற்று'என வேண்டி, அவன் தான் வணங்கி, அருள் பெற்று இன்புறுவோமாக!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

மாதங்களில் நான் மார்கழி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_21.html

ஆகாயத்தில் ஒரு ஆலயம் - ஸ்ரீ பர்வத மலை கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_16.html

யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html

2 comments:

  1. மிக பெரிய அற்புதத்தை நிகழ்த்தியதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து
      நன்றிகள் ஐயா

      ரா.ராகேஸ்
      கூடுவாஞ்சேரி

      Delete