அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவே சரணம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். அகத்தியம் என்பது
பெருங்கடல். அதில் நாம் தினமும் சிறிது நீர்துளிகளை மட்டும் பருகி
வருகின்றோம். ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் வந்த பிறகு, நாம் தூசி கிராமத்தில்
உள்ள நம் குருநாதர் பற்றி அறிந்தோம்.நேரில் நம்மை எப்போது அழைப்பாரோ என்று
வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தோம். நினைப்பது நடக்கும்..கேட்டது கிடைக்கும் என்பதற்கேற்ப சென்ற ஆண்டில் நேரில் தரிசனம் பெற்றோம். விரைவில் தனிப்பதிவில் தரிசனம் பற்றி பேசுவோம். சரி. இன்றைய பதிவிற்குள் செல்வோமா?
தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் அகத்திய பெருமானுக்கு 8 ஆம் ஆண்டு தெய்வீக விவாஹ விழா
ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள்
முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும்,
சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள்
சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம்,
சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி
பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில்
பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர
நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி
அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை
அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில
பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம்
பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும்
கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில்
எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு
(காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம்
அருகில்) அமைந்து உள்ளது.

ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின்
முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில்
காட்சி அளிக்கிறார்.
எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
இவ்வுலகம் உய்யும் பொருட்டு எம் ஐயன் ஆற்றி வரும் பணி அளப்பரியது.நாடி
வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து வீடுபேறும் அளித்திட பல
ஊர்களில் கோயில் கொண்டுள்ளார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் அருகில் தூசி எனும் ஊரில் அபிராமி சமேத
அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தம் இல்லாள் லோபமுத்ரா தேவியுடன் வீற்றிருந்து
அருள்கிறார்.
நன்மக்கள் ஒன்று கூடி "அகத்தியர் குழுமம் "ஆகி பல திருப்பணிகள் செய்து வருகிறார்கள். அவற்றில் ஒன்று "அகத்தீஸ்வரர் திருக்கல்யாணம்".
சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தர் மகான் ஸ்ரீஅகத்தியப்பெருமான் லோபமுத்ரா தேவி திருக்கல்யாண வைபவத்தை காண கண் கோடி வேண்டும்.
சிவபெருமான், முருகப்பெருமான், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் அனைவரும்
பார்த்திருப்போம். ஐயன் அகத்தியப் பெருமான் திருக்கல்யாணம் ஐயன்
வீற்றிருக்கும் தலங்களில் ஒரு சில தலங்களில் மட்டுமே வெகு விமரிசையாக
நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு மேலே இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.
இச்சரிதம்
ஸ்ரீ அகஸ்திய பெருமான் அவர்கள் ஸ்ரீ லோபமாதா தேவி அவர்களை மனைவியாக
ஏற்றுக்கொண்டதையும்,தீவினைகளிலிருந்து உலகை மீட்க சக்தி உபாசனையை
உலகெங்கும் பரப்பும் பணியை மேற்கொண்டதையும்,ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியால் ஸ்ரீ
லலிதா சகஸ்ரநாம தோத்திரம் உபதேசிக்கப்பட்டதையும் பற்றி விளக்குகிறது,இந்த
சரிதத்தை முழுமையான நம்பிக்கையோடும்,பக்தியோடும் படிப்பவர்களுக்கு ஸ்ரீ
அகஸ்திய லோபமாதா தேவி அவர்களின் ஆசிர்வாதமும்,கருணையும் பரிபூரணமாக
கிடைக்கும்.
"ஸ்ரீ அகஸ்தியர் லோபமாதா திருக்கல்யாணம் "
அகிலாண்டகோடி
பிரம்மாண்ட நாயகனாம் சிவபெருமானின் சித்தத்தில் என்றும் உறையும்
சித்தர்களின் தலைமை பீடாதிபதி ஸ்ரீ அகஸ்தியர் லோபமாதா தேவி திருக்கல்யாண
வைபவம்.
ஸ்ரீ
லோபாமுத்ரா தேவி,காசி ராஜாவின் அருமைப் புதல்வி சிவ பூஜையில் உன்னத நிலையை
அடைந்தவள்,சதா சர்வ காலமும் சிவ தியானத்தில் திளைப்பவள்.அந்த தேவிக்கும்
ஒரு இருந்தது.அது என்ன? தான் சிவ பூஜையிலும்,சிவ தியானத்திலும் உன்னத
நிலையை அடைந்தது போலவே சக்தி பூஜையிலும் பரிபூரண நிலையை அடைய
விரும்பினாள்.அதற்காக தன இஷ்டதெய்வமான சுயம்பு மூர்த்தியைப் பல்லாண்டு
காலமாக காராம் பசுவின் பாலைக் கறந்து அதன் சூடு ஆறும் முன் சுவாமிக்கு
அபிஷேகம் செய்து பிராத்தனை செய்து வந்தாள்.ஸ்ரீ லோபாமுத்ரா தேவியின் அயராத
பூஜைகளால் மகிழ்வுற்ற ஈசன் அசரீரீ வாக்காய் "மகளே !உன்னுடைய பூஜையால் யாம்
மகிழ்வுற்றோம்.உனது திருமண வைபவத்தில் உன்னுடைய விருப்பம் நிறைவேறும்
!உன்னை மணக்கப் போகும் மணாளன் சக்தி உபாசனையில் உன்னத நிலையைப்
பெற்றவன்.அவன் நேத்திர தீட்சையால் உன்னுடைய சக்தி பூஜை பூரணமடையும்,அதுவரை
வசின்யாதி வாக் தேவதைகளை வழிபாடு செய்து வருவாயாக !"என்று அருளினார்.
ஸ்ரீ
லோபமாதா தேவி ஈசனுக்கு நன்றி தெரிவித்து விட்டு அன்றிலிருந்து எட்டு
வசின்யாதி வாக் தேவதைகளையும் உபாசித்து வந்தாள்.ஸ்ரீ லோபாமுத்ரா தேவி உரிய
திருமண வயதை அடைந்தவுடன் காசி ராஜா தன் ஆருயிர் மகளின் திருமணத்தை
நிறைவேற்ற எண்ணம் கொண்டு ஸ்ரீ லோபாமுத்ரா தேவியின் விருப்பத்தை கேட்க
தேவியும்,"தந்தையே சக்தி உபாசனையில் உன்னதம் பெற்ற ஒருவரையே நான் மணக்க
விரும்புகிறேன்.அவர் ராஜாவாக,ரிஷியாக,முனிவராக இருந்தாலும் அவர் சக்தி
உபாசனையாலேயே தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்!"என்று தன் உயர்ந்த பண்பை
வெளிப்படுத்தினாள்.
காசி
ராஜனும் அருமைப் புதல்வியின் தெய்வீக நிலை கண்டு மகிழ்ந்து தன்னுடைய குல
குருவை நாடி லோபாமுத்ராவின் எண்ணத்தைக் கூறினார்.குலகுரு அதை
ஆமோதித்து,"சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்தவர் ஸ்ரீ அகஸ்தியர்
ஒருவரே.ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியிடமே மந்திர உபதேசம் பெற்றவர்.ஸ்ரீ லலிதா
பரமேஸ்வரியின் பரிபூரண அருளைப் பெற்றவர்.ஸ்ரீ பராசக்தியின் அனைத்து
பீடங்களிலும் எழுந்தருளி நித்ய பூஜைகளை முறையாக நிறைவேற்றுபவர்.ஸ்ரீ
தேவியின் திருமணக் கோலங்களை பல்வேறு தலங்களிலும் தரிசிக்கும் பேறு
பெற்றவர்.அவரே நமது லோபாமுத்ரா தேவிக்கு ஏற்ற மணவாளன் ",என்று ஸ்ரீ
அகஸ்தியரின் பெருமைகளை எடுத்துரைத்தார்.இதனால் பெரிதும் மகிழ்வுற்ற காசி
ராஜா குருவின் அனுமதியுடன் பரிவாரங்கள் புடை சூழ பொதிய மலை சென்றடைந்தார்.
பொதிய
மலை அடிவாரத்திலேயே தங்கி ஹோமம்,வேள்விகளை நிகழ்த்தி வேதியர்களுக்கும்
ஏழைகளுக்கும் தான தர்மங்களை அளித்து வந்தார்.ராஜாவாக இருந்தாலும் ஸ்ரீ
அகஸ்திய பெருமானை அவரது ஆஸ்ரமத்திற்கு சென்று பார்க்கும் தகுதி தனக்கு
இல்லை என்று நினைத்து ஸ்ரீ அகஸ்தியரின் கருணைக் கடாட்சம் தன் மேல் விழும்
வரை இங்கேயே காத்திருப்போம் என்ற மன உறுதியுடன் தன் வழிபாடுகளைத் தொடர்ந்து
நடத்திக் கொண்டிருந்தார்.என்ன ஒரு பணிவு அடக்கம் பார்த்தீர்களா?
அன்னையின் அன்புக் கட்டளை
அங்கே
ஆசிரமத்தில் ஸ்ரீ அகஸ்தியப் பெருமான் பிரம்ம முகூர்த்த பூஜைகளை தன்
சீடர்களுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது சிவபெருமான் சக்தி சமேதராய்
எழுந்தருளி,"அகஸ்திய முனியே! பன்நெடுங் காலமாக எமது திருமணக் கோலத்தைப்
நாங்கள் காண விரும்புகிறோம்",என்று அருளினார்.தேவியும் ,"குழந்தாய் !
வரப்போகும் யுகங்களில் தர்மம் குறைந்து அதர்மம் பெருகும்.தீவினைகளிலிருந்து
உலகை மீட்க சக்தி உபாசனையே பெரிதும் உதவும்.சக்தி உபாசனையை பரப்பும்
திருப்பணியை உமக்கு அளிக்க இருக்கின்றோம்".
மோட்ச
சாம்ராஜ்யத்தைத்.தந்து இகபர சுகத்தையளிக்கக் கூடிய லலிதா சகஸ்ரநாம
தோத்திரமும் சரஸ்வதியின் குருவான ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியால் உனக்கு தக்க
தருணத்தில் உபதேசிக்கப்படும்.சிவ சக்தி ஐக்கியம் உன்னதம் பெற்ற தாம்பத்திய
வாழ்வே கலியுகத்திற்குரிய தர்மமாக விளங்குவதால் சக்தி உபாசனையின்
மகத்துவத்தை உலகிற்கு உணர்த்த நீயும் சம்சார தர்மத்தை ஏற்பாயாக !"என்று
திருவாய் மலர்ந்தருளினார்.
ஸ்ரீ
அகஸ்தியப் பெருமான் கண்களில் நீர் மல்க அம்மையாரைப் பல முறை சாஷ்டாங்கமாக
வீழ்ந்து வணங்கினார்.அம்மையப்பரின் திருவிருப்பத்தை நிறைவேற்றுவதைவிட இந்த
அடிமைக்கு வேறு பணி உண்டா என்று ஸ்ரீ அகஸ்தியர் வியந்து அடுத்து தான் ஆற்ற
வேண்டிய செயலைப் பற்றித் தியானிக்க காசி ராஜா மலையடிவாரத்தில் தன் மகளை
ஸ்ரீ அகஸ்தியருக்கு மணமுடிக்க காத்திருப்பதை அறிந்து எம்பெருமானின் கருணையை
எண்ணி எண்ணி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.
ஸ்ரீ
அகஸ்தியர் சீடர்கள் மூலம் தன் விருப்பத்தை சொல்லி அனுப்பிட காசி ராஜாவும்
ஒரு புனிதமான நாளில் ஸ்ரீ அகஸ்தியர் லோப முத்ரா தேவியின் திருமண வைபவத்தை
இனிதே நிறைவேற்றினார்.
திருமண
வைபவத்தில் ஸ்ரீ அகஸ்திய பெருமானின் திவ்ய நேத்ர திருஷ்டி ஸ்ரீ லோப மாதா
தேவி மேல் விழ இந்த தெய்வீக திருநேத்ர தீட்சையால் ஸ்ரீ லோப முத்ரா
தேவியின் சக்தி வழிபாடு பரிபூரணமடைந்தது.ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியே
மும்மூர்த்திகள்,வசின்யாதி வாக் தேவிகளுடன் நேரில் பிரசன்னமாகி மணமக்களை
ஆசிர்வதித்தாள்.
லோப முத்ராவே லோப மாதா!
வசின்யாதி
வாக் தேவதைகள் ஸ்ரீ லோப முத்ரா தேவியை ஆசிர்வதித்து சக்தி உபாசனையில் அவள்
அடைந்த நிலையை உன்னத நிலையைப் போற்றி லோபாமாதா என்று அழைத்து
மகிழ்ந்தனர்.இதை பின்பற்றியே எமது ஆஸ்ரமும் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர்
ஆஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது.
திருமண
வைபவத்தில் மணமக்களுக்குப் பரிசளிக்கும் வழக்கம் உண்டல்லவா? எனவே தேவாதி
தேவர்களும்,காசி ராஜாவும்,மற்ற தேசத்து ராஜாக்களும்,சக்ரவர்த்திகளும் பல
அற்புதமான பரிசுப் பொருட்களை ஸ்ரீ அகஸ்தியருக்கு அளிக்க முன் வந்தனர் .
ஸ்ரீ அகஸ்தியர் அனைத்து பரிசுப் பொருட்களையும் இறைவனுக்கே
அர்ப்பணித்துவிட்டார்.
தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் அகத்திய பெருமானுக்கு 8 ஆம் ஆண்டு தெய்வீக விவாஹ விழா நாளை நடைபெற உள்ளது. அன்பர்கள் தங்களால் இயன்ற கைங்கர்யம் செய்து குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
No comments:
Post a Comment