அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
எம்பெருமான் அப்பன் முருகனின் பெருந்தொண்டர் கிருபானந்த வாரியார் சாமிகள் பிறந்த தினம் இன்று. ஐயாவின் புகழை இந்தப் பதிவில் போற்றுவோம். திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது பிறந்தவர் இவர். செங்குந்த வீர சைவ மரபினர்.
இன்றைய நாளில் கிருபானந்த வாரியார் அருளிய 7 நாள் துதி இங்கே பகிர உள்ளோம்.இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?
முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள்
அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை
இயற்றியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும்
முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு
வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே
தரப்பட்டுள்ளன.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை :
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை :
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை :
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை :
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை :
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை :
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை :
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
அடுத்து இன்று நடைபெற்று வரும் விழாவின் அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.
No comments:
Post a Comment