"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, November 7, 2019

வினைகள் தீர்க்கும் வேல்மாறல்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கந்த ஷஷ்டி திருவிழா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. அனைத்தும் அவன் அருளன்றி வேறில்லை. இந்த பதிவை சற்று காலம் தாழ்த்தி தருவதாக இருந்தாலும், முருக அடியார்கள் அனைவரும் அறிய வேண்டிய தகவல் இது. கந்த ஷஷ்டி திருவிழா காலத்தில் முருகன் புகழ் பாடுவது,கேட்பது,படிப்பது நம்மை கந்தனின் அருட்கடலில் ஆழ்த்தும். கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்கள் என தினமும் பாராயணம் செய்வது சிறப்பு. அந்த வரிசையில் நாம் வேல்மாறல் பற்றி இந்தப் பதிவில் உணர உள்ளோம். ஏற்கனவே நம் தலத்தில் வேல்மாறல் பற்றி பேசி இருந்தாலும் மீண்டும் இங்கே ஆங்கில மொழியோடு பொருளையும் தர உள்ளோம்.







வேல்மாறல்!

வேல்மாறல் என்று இணைய வெளியில் கிடைத்த தொகுப்புகளில் இருந்த ஒரு முக்கியமான,அடிக்கோடிட்டு உணரவேண்டிய வார்த்தை - வினைகள் தீர்க்கும் வேல்மாறல் என்ற பதமே. நாம் செய்த தீவினையை அறுப்பதற்கு வேல்மாறல் என்ற சர்வ ரோக நிவாரணி உதவும் என்பது இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இது கவசமாய் இருந்து நம்மை காக்கும்.கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரமே ஆகும்.மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.





 கலியுகத்தில் தர்மதேவதையின் நிலை!

தர்மமானதை ஒரு பசுவாக முதலில் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.
நான்கு யுகங்களில் முதல் யுகம், கிருத யுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் யாவரும் தத்தமது தர்மங்களை பூரணமாக கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு இருக்கும்.


அடுத்த யுகமான திரேதா யுகத்தில், மனிதர்களுக்கு தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில், பசு ரூபத்தில் உள்ள தர்ம தேவதை தனது ஒரு காலை இழந்து மற்ற மூன்று கால்களுடன் சிரமப்படும். அதாவது தர்மம் உலகில் முழுமையாக இல்லாது ஆங்காங்கு குறைந்துகாணப்படும்.

அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறையும். மனிதர்களில் துர்குணம் கொண்டவர்கள் மிகுதியாக இருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும். இரண்டு கால்களோடு ஒரு பசு எவ்வளவு சிரமப்படும் என்று யோசித்து பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்திற்கு ஏற்படும்.

தற்போது நடப்பது நான்காவது யுகமான கலியுகம். இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலுடன் திண்டாடும். அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு ஓங்கியிருக்கும். அதாவது ஆங்காங்கே தர்மம் திண்டாடிக்கொண்டிருக்கும். இப்போது கலியுகம் தொடங்கி 5100 வருடங்கள் ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை உணர முடிகிறது. இன்னும் கலியுகத்தில் பாக்கி ஆண்டுகள் இருக்கின்றன.
இனி போகப் போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பதை காண முடியும்.
கண்ணிருந்தும் குருடர்களாக மக்கள் வாழும் காலகட்டம் இது.


இப்படி தர்மத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் பற்றுக்கள் குறைந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் ‘வேல்மாறல்’ போன்ற ஒரு சர்வ ரோக வினை நிவாரணியை பற்றி உங்களுக்கு தெரியவருகிறது, அது குறித்த செய்திகள் பற்றி  அறிந்து கொள்ளும் வாய்ப்பு  கிடைக்கின்றது  என்றால், நீங்கள் பாக்கியசாலிகள் தானே?

வேல் வினைகளை வேரறுக்க வல்லது. ‘வேலுண்டு வினையில்லை” என்பது அருளாளர் வாக்கு. ‘அச்சம் அகற்றும் அயில் வேல்’ எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். ‘வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்’ என்று கந்தரநுபூதியும், ‘வினை எறியும் வேல்’ என்று திருப்புகழும் போற்றுகின்றன.

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.
பாம்பன் சுவாமிகள் இதனை 'படை அரசு’ என்று போற்றுவார். 'படைநாயகம்’ என்றும் பெயருண்டு. வேலைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவை: அயில், ஆரணம், உடம்பிடி, எஃகம், எஃகு, குந்தம், சக்தி, ஞாங்கர், மதங்கு, வாகை, விட்டேறு.

முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். அதற்கு 'வேற்கோட்டம்’ என்று பெயர். 'கோடு’ என்றால் மலை (கிளை என்றும் பொருள் உண்டு. பல கிளைகளால் அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் என்றும் கூறுவர்). அக்காலத்தில் மலைப் பகுதியில் அமைந்த கோயிலை கோட்டம் என்று அழைத்தனர்.
ஆக, வேலாயுதத்தைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் நீங்கும். ‘வேலின்றி கந்தனைப் பூஜை செய்தால் பயன் வீண்படுமே… (வேல் அலங்காரம்)’, ‘வேல் வடிவாம் தெய்வமே’, ‘வேல் தெய்வமே’ ‘அயில் தெய்வமே’ என்றெல்லாம் குறிப்பிடுவதால் வேலனே வேலாகும்; வேலே வேலனாவான் என்பது புலனாகும். வேல் வழிபாடே திருவருளை எளிதில் பெறச் செய்யும்.

வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம்.

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: சீர்பாத வகுப்பு  – மணி வகுப்பு 2. தேவேந்திர சங்க வகுப்பு -  மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு -  ஔஷத (மருந்து) வகுப்பு.

இவற்றுள் உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது ‘வேல் வகுப்பு’ என்று வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார்.

வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16×4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.




இந்த பாராயண முறை அமைப்பை அறியுமுன் வேல்வகுப்பு பாடலைக் காண்பது அவசியம்.
வேல் வகுப்பு


1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கருத்தகுழல் சிவத்தஇதழ்
    மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்

2. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து) இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

3. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும்

4. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்   
    புசிக்கஅருள் நேரும்

5. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக  பதிக்கும் விதிதனக்கும்அரி தனக்கும்நரர்
    தமக்கும்உறும்   இடுக்கண் வினை சாடும்

6. சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப அலை அடக்குதழல் 
    ஒளிப்பஒளிர்  ஒளிப்பிரபை வீசும்

7. துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்   நினைக்கின்அவர் 
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்கொர்துணை ஆகும்

8. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரைஅடுத்தபகை அறுத்தெறிய 
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்

9. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் 
    படைத்தஇறை  கழற்குநிகர் ஆகும்

10. தலத்தில்உள கணத்தொகுதி  களிப்பின்உண வழைப்பதென மலர்க்கமல 
      கரத்தின்முனை  விதிர்க்கவளை வாகும்

11. தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு  வலத்தும்இரு புறத்தும்அரு 
      கடுத்திரவு  பகற்றுணைய தாகும்

12. சலத்துவரும் அரக்கர்உடல்  கொழுத்துவளர் பெருத்தகுடர் 
      சிவத்ததொடை எனச்சிகையில்  விருப்பமொடு சூடும்

13.திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும் உடைப்(பு)
    அடைய அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும்

14. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்ததென 
     முகட்டின்இடை பறக்கஅற விசைத்ததிர ஓடும்

15. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
      சிரித்தெயிறு கடித்துவிழி  விழித்தலற மோதும்

16. திருத்தணியில் உதித்தருளும்  ஒருத்தன்மலை   விருத்தன் என 
      துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

வேல் வகுப்பு பொழிப்புரை:

1. ஆழ்ந்த அகன்ற நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். (வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)

2. பனை மரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.

3. சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வெளியேற்றும்.

4. பசியினால் துன்பமுற்றுப் பேய்கள் அங்கங்களை விசைத்தும், விதிர்த்தும், முடக்கியும், உதறியும் புலம்பி உணவு வேண்டி அழுவதைத் தவிர்த்து, அசுரர்களின் வளமிக்க ரத்தத்தையும் சதைகளையும் அவை உண்டு களிக்குமாறு அருளும்.

5. தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரமன், திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிடும் துன்பத்தையும், அதற்கு மூலகாரணமான பூர்வகர்ம வினைகளையும் தாக்கி அழிக்கும்.

6. ஒளிவிடும் சூரியன், குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன், கடல் பொங்கிக் கரைகடந்து சென்று உலகத்தை அழிக்காதபடி அதனை அடக்கிக் கொண்டி ருக்கும் வடவாமுகாக்கினி ஆகியவற்றை, ‘வேலின் ஒளிப் பிரபாவத்தின் முன் நம் ஒளி எம்மாத்திரம்’ என்று வெட்கப்பட்டு நாணி ஒளியச் செய்யும் வண்ணம், தனது பேரொளிச் சோதியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும்.

7. தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்ற பெருந் துணையாகி அருள்பாலிக்கும் (ஆகவே, வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.)

8. சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும்

திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, கோபித்து ஆக்ரமித்துக் கிளம்பும்.

9. அலங்கார ஆரவாரத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம் பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று உதவும்.

10. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே… அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருள்களை விளைத்துச் சேகரித்து வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும். (வேல் பசியைப் போக்கும்; வறுமையின்றி வாழ வைக்கும்; நமது கருத்தறிந்து முடிக்கும்; நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும்)

11. துணையின்றித் தனியாகச் செல்லும் எனது வலது இடது பக்கங்களிலும், முன் – பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்போதும் துணையாக நின்றருளும்.

12. சினந்து வந்த அசுரர்களின் உடம்பில் கொழுத்துத் தடித்திருந்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போல் தனது முடியில் ஆவலோடு சூடிக்கொள்ளும். (வினைகளையும் அடியோடு அழிப்பது வேல் ஒன்றே)

13. அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரையெல்லாம் ஒரு நொடியில் குடித்தும், அந்த உடைப்பு முழுவதையும் அடைத்து அங்கு அசுரர்களின் ரத்தத்தை நிரப்பியும் விளையாடும்.

14. குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளில் இருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி விரைந்து செல்லும். (வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)

15. சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க் களத்தில் அளவற்ற அறுப்பட்ட தலைகள் சிரிக்கும்படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும், அசுரர்களோடு சாடும்.

16. திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான… திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!

இனி ஆங்கில மொழிபெயர்ப்போடு சேர்த்து தருகின்றோம்.

Vel maral verses meaning:
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்த நகை கறுத்த குழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்

ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். (வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)

The wide, deep and sharp 'Vel' or Spear is like the eyes of the brave hunter lass Valli who has heavy bosoms, slender waist, gleaming white teeth, black tresses, and red lips.

பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நிகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

பனைமரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.

Murugan's vel is the saw that cuts through the locks on the chain that Surapadman put on the ankles of Indra whose vehicle is the white Airavata elephant with a trunk that is suspended like a palm tree, with its forehead caparisoned with decorative clothes and with cheeks down which flow the masth water; .

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு) உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்

சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வேல் வெளியேற்றும்.

Murugan's vel pounded the Tirupparangiri mountain and rescued Nakkeeran and other poets from the cave (where they were imprisoned by a ghost called Karkimukhi) after being touched by the musical renderings of the peerless Nakkeeran, the head of the ancient Tamil Sangam board which is renowned for its knowledge;

பசித்தலகை முசித்தழுது முறைப் படுதல் ஒழித்தவுணர்
உரத்துதிர நிணத்தசைகள் புசிக்க அருள் நேரும்

பசியினால் துன்பமுற்றுப் பேய்கள் அங்கங்களை விசைத்தும், விதிர்த்தும், முடக்கியும், உதறியும் புலம்பி உணவு வேண்டி அழுவதைத் தவிர்த்து, அசுரர்களின் வளமிக்க ரத்தத்தையும் சதைகளையும் அவை உண்டு களிக்குமாறு வேல் அருளும்.

The Spear mercifully stops the hungry ghosts from crying aloud and complaining about the lack of food by giving them the blood-soaked fatty flesh of the asuras; ,

சுரர்க்கு(ம்) முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும்
அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்

தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரமன், திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிடும் துன்பத்தையும், அதற்கு மூலகாரணமான பூர்வகர்ம வினைகளையும் வேல் தாக்கி அழிக்கும்.

The Spear destroys the evils of karma that cause grief to celestials, sages, Indra, Brahma, Vishnu and the humans; .

சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப அலை
அடக்குதழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப்பிரபை வீசும்

ஒளிவிடும் சூரியன், குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன், கடல் பொங்கிக் கரைகடந்து சென்று உலகத்தை அழிக்காதபடி அதனை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுகாக்கினி ஆகியவற்றை, ‘வேலின் ஒளிப் பிரபாவத்தின் முன் நம் ஒளி எம்மாத்திரம்’ என்று வெட்கப்பட்டு நாணி ஒளியச் செய்யும் வண்ணம், தனது பேரொளிச் சோதியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும் வேல்.

The Spear spreads the resplendence of Knowledge and makes the radiant sun, the cool moon with its cooling rays, and the vadavamukhagni that checks the seas from destroying the world hide themselves in shame;

துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர் நினைக்கின்
அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கோர் துணை ஆகும்

தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்றப் பெருந்துணையாகி வேல் அருள்பாலிக்கும் (ஆகவே, வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.)

The Spear is the guardian who would destroy the entire clan of anybody who thinks of harming those who worship it.

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை
அறுத்தெறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்

சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும் திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, வேல் கோபித்து ஆரவாரத்துடன் கிளம்பும்.

The Spear establishes dharma by ferociously uprooting those hostile to people who chant/recite the ineffably beautiful tiruppugazh songs;

தருக்கி நமன் முருக்கவரின் எருக்கு மதி தரித்த முடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும்

அலங்கார ஆர்ப்பாட்டத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம்பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று வேல் உதவும்.

The Spear is as praiseworthy as the auspicious feet of the victorious Lord Shiva who wears arka (erukkam) flower and the crescent moon on His tresses and who offers sanctuary to the devotees when Yama approaches them arrogantly to take away their lives;

தலத்தில் உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்பதென
மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளை வாகும்

உலகத்தில் உள்ள எல்லா கணங்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே, அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருட்களை வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும். (வேல் பசியைப் போக்கும்; வறுமையின்றி வாழ வைக்கும்; நமது கருத்தறிந்து முடிக்கும்; நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும்)

The Spear being in the Lord's lotus hands, makes an inviting gesture whenever the Lord moves His finger tips to invite the people under His patronage to partake food;

தனித்துவழி நடக்கும் என திடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும்
அருகடுத்திரவு பகற்றுணைய தாகும்

துணையின்றித் தனியாகச் செல்லும் எனது வலது இடது பக்கங்களிலும், முன், பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்போதும் வேல் துணையாக நின்றருளும்.

The Spear will be the unseen support to me during day and night, whenever I walk on a lonely road without anyone.

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

சினந்து வந்த அசுரர்களின் உடம்பில் கொழுத்துத் தடித்திருந்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போல் தனது முடியில் ஆவலோடு வேல் சூடிக்கொள்ளும்.

The Spear wears with delight on its crown, a red garland of the fatty intestines of the fat asuras who charge angrily (in the battle field);.

திரைக் கடலை உடைத்து நிறை புனற்கடிது குடித்துடையும்
உடைப்படைய அடைத்துதிரம் நிறைத்து விளை யாடும்

அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி, வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும்.

The Spear tears the wavy sea, closing the breach everywhere so that water is dammed; drinks it swiftly, and again fills it with the blood from the asuras and plays in it;.

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்ததென
முகட்டின்இடை பறக்கஅற விசைத்ததிர ஓடும்

குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளிலிருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி வேல் விரைந்து செல்லும். (வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)
பண்டை காலத்தில் மலைகள் அனைத்தும் சிறகுகளுடன் பறந்து உலகோருக்கு கேடு விளைத்து வந்தன. இதை அறிந்த இந்தரன், வஜ்ராயுத்தால் மலைகளின் சிறகுகளை அறுத்து எறிந்தான். அன்று முதல் மலைகளனைத்தும் நிலத்தில் அழுந்தி, 'பூதரம்' எனப் பெயர் பெற்றன. பின்பு முருகனுடைய வேற்படை அண்ட உச்சியில் அதிவேகத்தோடு பறந்தபோது, உலகெல்லாம் கிடுகிடு என அதிர்ந்தன. மீண்டும் மலைகளுக்கு சிறகுகள் முளைத்தனவோ என உலகோர் அஞ்சினர் என்கிறார்.

The Spear flies with infinite swiftness across the the crest of the cosmic sphere making the universe quiver and appear as if all the mountains in the eight directions had regenerated their wings that were cut once by Indra;
Once upon a time, all the mountains had wings and would fly haphazardly. Indra cut their wings with his vajrayudha. Thereafter the mountains fixed themselves to the ground. When the Lord's lance flashed across at incredible speed, the mountains appeared to have regained the wings and started flying once again!.

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத் தலைகள்
சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்

சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க்களத்தில் அளவற்ற அறுப்பட்ட தலைகள் சிரிக்கும் படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும் வேல் சாடும்.

The Spear smashes and beheads the asuras in the battle field, so that the severed heads laugh devilishly, grind their teeth, glare and scream;

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான, திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!

All these praiseworthy feats are those of the 'vel' in the hands of the One who rises (like the Sun of Knowledge) at TiruththaNi and is the Old Man of the Hill, who resides in my heart and whose vehicle is the peacock..

வேல்மாறல் பாராயணம் பற்றிய கோப்புகள் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணைப்பின் மூலம் உபயோகம் செய்யவும்.(பதிவின் நீளம் கருதியே )

வேல்மாறல் பாராயணம் - doc வடிவில்

வேல்மாறல் பாராயணம் - PDF வடிவில்

வேல்மாறல் பாராயணம் செய்வதற்கு உதவியாக youtube வீடியோ இணைத்துளோம். இந்த காணொளியில் பாராயணம் செய்வதற்கு வசதியாக  பாடல் வரிகளும் இணைத்துள்ளார்.




மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ கந்த ஷஷ்டி விழா (3) - https://tut-temples.blogspot.com/2019/10/3.html

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temples.blogspot.com/2019/10/60-2.html

சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேல்மாறல் அகண்ட பாராயணம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_9.html


No comments:

Post a Comment