"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, May 17, 2020

குருவே சரணம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு என்ற சொல்லை வார்த்தையில் சொல்வதை விட, வாழ்க்கையில் சொல்ல வாருங்கள். இந்த உலகில் குருவை விட உயர்ந்த பொருள் எதுவும் கிடையாது. ஜபம்,தவம், பூஜை, புனஸ்காரங்கள், அர்ச்சனை, சாஸ்திரம், மந்திரங்கள் அனைத்தும் குருவை விட சிரேஷ்டமானவை அல்ல. ஆம். இன்று நாம் கைக்கொள்ள வேண்டியது குரு - சீடன் உறவு ஆகும். 

குரு சீடன் உறவு எப்படி இருக்க வேண்டும்? குருவும் சீடனும் சேர்ந்து வாழ்வது நல்லதல்ல. ஏனெனில் அன்றாட வாழ்வை கடக்கும் நாம் குருவையும் சாதாரணமாக நினைத்து விடுவோம். இது சீடனுக்கு பாதகமாகவே அமையும். எனவே குருவிடமிருந்து விலகி இருத்தலே சீடனுக்கு நன்று; இதற்காக குருவை சந்திக்காமலும் இருக்க கூடாது. அவ்வப்போது குருவை சந்திப்பதே குரு சீடன் உறவின் சிறப்பு ஆகும்.

ஒருத்தருக்கு ஒரு குரு தான் வேண்டுமா?  இல்லை..ஒருவருக்கு பல குருக்கள் இருக்கலாம் என்பது பற்றி நம் தளத்தில் ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். ..அட...! இன்று  தத்தாத்ரேயர் ஜெயந்தி குருவருளால் குருவைப் பற்றி இன்று பேசுகின்றோம் என்றால் இது தான் குருவருள் ஆகும். 

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரப்ரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு என்பதே. கிடையாது. ஏனெனில் அனுமனைப் போல் நித்ய சிரஞ்சீவியாக தத்தாத்ரேயர் போற்றப்பட்டு வருகின்றார்.

அத்ரி மகரிஷியும், அவரது மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசூயாவின் பணி, விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகள் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசூயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.

எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசூயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே, நீ திகம்பர (நிர்வாணம்) நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவ்ரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.


கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, “நான் என் கணவருக்குச் செய்யும் பணிவிடைகள் சத்யம் எனில், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி,  அவர்கள் மேல் தெளித்தாள்.

உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்ரி முனிவர், தன் ஞான த்ருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒருசேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தரக் கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன் உங்களுக்கு திரும்பக் கிடைக்கவேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்ரி மகரிஷி.

உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே, உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்.

தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்று  கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்ரப்பிரதேசத்தில் “குரு மூர்த்தி” என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. ப்ரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்தா ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள். இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை.

பித்ரு தோஷங்கள் நீங்க தத்தாத்ரேயர் வழிபாடு செய்வது அவஸ்யம். குருசரித்ரம் பாராயணம் செய்வது மிகுந்த பலன் தரும். 1008 (ஸ்ரீ குரு தத்தாத்ரேய நமஹ) என்று சொல்லலாம்.. “ஓம் ஸ்ரீ குருதேவ தத்தா” என்றும் சொல்லலாம். நம் மனதையும் ஆன்மாவையும் தூய்மையாக்கும் மந்த்ரம்.  குருசரித்ரம் முழுவதும் மூன்று நாளில் படிக்க முடிந்தால் படிக்கலாம்.

குருவே சரணம் என்ற தலைப்பில் இன்றைய பதிவில் மீண்டும் குருவைப் போற்ற விரும்புகின்றோம்.ஆம். ஸ்ரீ அகத்திய பெருமான் குரு சீடர் உறவில் இவருக்கென்று தனி இடம் உள்ளது. ஸ்ரீ கண்ணைய யோகியார்  ஸ்ரீ அகத்தியர் மகரிஷியும் நேரடி மாணவராவார். இங்கே நாம் சீடரை தொட்டுக்காட்ட விரும்புகின்றோம். ஸ்ரீ கண்ணைய யோகியாரின் சீடர் தெய்வத்திரு. ராஜயோகி ராஜ்மோகன் ஐயா அவர்கள் பற்றி பேச விரும்புகின்றோம். ஸ்ரீ அகத்தியர் பெருமான் தொடர்பான தேடலில் நாம் தற்போதும் இருந்து வருகின்றோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேடலில் நமக்கு ஆத்ம ஞான யோக சபா பற்றிய அறிமுகம் கிடைத்தது.

பின்னர் நாம் ஆத்ம ஞான யோக சபா நடத்திய வகுப்பில் கலந்து கொண்டோம். இந்த வகுப்புகளை ஸ்ரீ குரு ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்கள் நேரடிப் பயிற்சி வழியாக வழங்கி வந்தார்கள். இதில் நாம் கலந்து கொண்ட அனுபவத்தை இங்கே சொல்ல விரும்புகின்றோம்.

மதுரகவி ஆழ்வார் உதித்த தமிழ் புத்தாண்டு திங்கள், திரு நட்சித்திர முழுமதி நாளில், மாமகரிஷி அகஸ்தியர் அருளிய காவிரி பாயும் திருச்சி மாவட்ட பொன்மலையில் திரு. ராதாகிருஷ்ணன் - கோமளம் அம்மாள் தம்பதியினருக்கு குருவாரத்தில் சுக்கிர - எண் வாரிசாக பிறந்தவர்.

இளம் வயதிலேயே தந்தைவழி மூதாட்டியால் ஸ்ரீ கிருஷ்ண உபாசகனான ராஜகணேஷ பிரியர், தன் முற்பிறவியில் பவானியில் பிறந்து, அதே ஆசானிடம் இப்பிறவியிலும் தொடர்ந்து சித்த - ராஜயோக வித்தை பயின்று, ரயில்வே தலைமை செயலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதும், டாக்டர் பண்டிட் கண்ணய்யா யோகியாரால் ஆகர்ஷணிக்கப்பட்டு, தன் குடும்பத்தினருடன் 1௦ ஆண்டுகளுக்கு மேலாக குரு சேவையாற்றிய பேறு பெற்றவர்.

களிறு தானீன்ற வாரிசுக்கு வையகத்தில் வாழப் பயிற்சி அளிப்பது போல், தன் குருநாதரால் யோக ரகசியங்கள் கற்பிக்கப்பட்டு தெய்வான்மீக சீடனாக உருவாக்கப்பட்டவர்.

ஸ்ரீ சக்ரபிரிய வாசினி, ஸ்ரீ காயத்ரி மந்திர பிரம்ம உபதேசம் பெற்று, எப்போதும் தன் குருநாதரின் மானசீக அருள்தொடர்பு கொண்டு, ஆத்ம ஞான யோக சபையின் தலைவராக தொண்டாற்றிய கண்ணையதாசன்.


அன்றைய தினம் யாம் நேரில் ஸ்ரீ குரு ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்களை சந்தித்தோம். அமைதியாக பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார். எந்தவொரு வெற்று ஆராவாரம் இல்லை. மீண்டும் மீண்டும் சந்தேகம் கேட்ட போதும் பொறுமையாக சொல்லிக்கொடுத்தார். மந்திரங்களின் மகிமை பற்றி பேசினார். சில உபதேசங்களையும் நல்கினார். இன்னும் அவை நம்முள் பல ஈர்ப்பை கொடுத்து வருவதை கண்கூடாக கண்டு வருகின்றோம். இன்றைய குரு ஜெயந்தி நன்னாளில் சில உபதேசங்களை இங்கே பகிர விரும்புகின்றோம்.

ஸ்ரீ கண்ணையா யோகியாரின் சித்த ராஜ யோகம்
ஆக்கம் - ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்

 நியமம்

 நியமத்தில் முதலாவது புனிதம் (purification) : தனது எண்ணங்களில் பேச்சில், செய்கைகளில் புனிதத்தன்மையை கடைப்பிடித்தல். இந்த மூன்றில் புனிதத்தன்மை இல்லையானால் அவை உடலில், மனதில், இயக்கச் சக்தியில் விஷத்தன்மையை கலக்கச் செய்திடும். இவற்றில் புனிதம் காக்கப்படுமேயானால் தன்னை அறியும் வழியில், பள்ளமில்லாது ஒளிபொருந்திய, பேரின்ப பாதையில் நடந்து செல்ல யோகப் பயணம் தொடங்கும்.

சௌத்யா - சு - அத்தியா : நல்ல நூல்களை படித்தல் - யோக நெறியில் முன்னேற , பயிற்சி பெற உதவும் நூல்களை படித்தல்.

"அர்த்தகரிச்ச வித்யா " - ஒரு மருத்துவர் தான் பாண்டியத்துவம் பெற மருத்துவம் சம்பத்தப்பட்ட நூல்களை படித்தால் தெளிவு பிறக்கும். அதேபோல தான் மேற்கொண்டிருக்கும் கலைக்கு சம்பந்தப்பட்ட தெய்வீக ஆன்மிக நூல்களை படித்தல். (சுயகட்டுப்பாடு)

சந்தோஷம் : தெய்வப் புலவர் கூறிய " இன்னல் வருங்கால் நகுக என்ற எண்ணத்தை அச்சாரமிட்டு, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருத்தல். மனசஞ்சலங்கள், மனதில் துன்ப நினைவுகள் குடிகொண்ட மாணவன் மனதை கட்டுப்படுத்த முடியாது. எனவே எப்போதும் சந்தோஷமாக இருக்க பழகுவோம்.

 ஈஸ்வர பிரநிதானம்

ஆண்டவனிடம் நம்பிக்கை கொண்டு அசைக்க முடியாத ஆஸ்திகனாக வாழ்தல்.
ஒவ்வொரு மதமும் , இனம், சாதி , நாட்டுடையார் கடவுளுக்கு இலக்கணம் பல வகுத்து குழப்பங்களை தெளிவித்திருந்தாலும், கடவுள் என்றால் என்ன ? கடவுள் யார் ? அவன் எங்கே இருக்கிறான்? போன்ற வீண் வாக்குவாதங்கள், சந்தேகங்கள் கொள்ளும் நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு எல்லா அண்டங்களிலும், ஜீவராசிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாஅறிவு சக்தி நிலைபெற்ற , அந்த மகாசக்தியை துணை கொண்டால் தன் உடல், மனம், ஆத்மாவை துன்ப பெருங்கடலை நீந்தி , ஆனந்த பெருவாழ்வு வாழ்வோம் என்ற மன உறுதியுடன் அடுத்த படிக்கு அடியெடுத்து வைப்போம்

அபரிகிரஹ - (வேண்டாத) தேவைகளை கட்டுப்படுத்தல்

அபரிகிரஹ - (வேண்டாத) தேவைகளை கட்டுப்படுத்தல் - தன்னிடமில்லாத, தனக்கு தேவையற்ற ஒன்றை அடைய விரும்பி அதற்காக வாழ்நாளை செலவழித்தல். கோடிஸ்வரன் உலகமனைத்து செல்வங்களை தானே பெற்றிட முயல்வது, பரம ஏழை சொகுசுகளை விரும்புவது நடைமுறைக்கு ஒவ்வாதது தானே?

மனிதனின் ஆசைக்கு எல்லையே இல்லை! என அறிவோம் - தனது நல்வாழ்விற்க்கு அவசியத் தேவைகளை ஏற்று , "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து " என நினைத்து வாழ்தல். தனக்கு ஒவ்வாத தேவையற்றவைகளின் மீது காமம் கொள்ளுதலில் யோக மாணவ - மாணவியின் மனதில் நிலைபெற்றால், எப்படி யோக சாதனைகளை செய்ய முடியும்?

நேர்மையில் தான் பெற்றதை வைத்து மன அமைதி பெற்ற வாழ்வே பெருவாழ்வு என்பதனை அறிவுறுத்தி யமம் என்ற முதல் படியை கடந்து அடுத்த படிக்கு முன்னேறுவோம்.

 எனது தனிப்பட்ட குறிப்பு - வரதராஜா குமரகுரு

இங்கு கூறப்பட்டுள்ள யம, நியம விளக்கங்கள் ஆழ்ந்து நடைமுறை பரிசோதனை முறையில் பின்பற்ற வேண்டிய விடயங்கள். அதே நேரத்தில் தெளிவான சிந்தனையும், வாழ்வியல் சந்தர்ப்பங்களுக்கு பொருந்தும் விதமாக இவற்றை அமைத்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக அகிம்சை பற்றிய விளக்கத்தில் " அந்தந்த நாடு, நாகரீகங்களுக்கு தக போதனைகளை அருளியிருக்கிறார்கள்” என்பது வாழ்வியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதனையும்,

"உடல் , மனம், வாக்கால் துன்புறுத்தாது வாழ்வேன் என்ற குறிக்கோளை மனதில் நிலைநிறுத்தினால் , துன்புறுத்த பட்டோர் , அவனுடைய நெருங்கியோர்,பழிதீர்க்கும் படலத்திலிருந்து காப்பாற்றி கொள்ள முடியும்" என்பது சித்தத்தில் உரிய உணர்வினை கொண்டு மனதினை வழிநடத்தி கர்மத்தினை மாற்றி அமைக்கும் ஆற்றலையும்,

"சத்தியம்" உண்மை உரைத்தல் என்பது ஓர் கோட்பாடு, உண்மை உரைத்தலால் பகைமை, பிரச்சினைகள் நேர்கொள்ள நேரலாம். ஆனால் " வாய்மையே வெல்லும்" சத்தியம் உரைத்தல் என்பது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதனையும் அறிவுறுத்துகிறது.

இவைகளை பற்றி விரிவான விளக்கம் வேண்டுமாயின் Practical -Theory முறையில் ஒரு புத்தகமே வடிவெடுத்துவிடும். மேலதிகமாக கற்க விரும்புவோர் " ஸ்ரீ கண்ணையா யோகியாரின் ஆன்மிக படைப்புகள்" புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

                                           

                                           

ஸ்ரீ குருப்யோ நமஹ என்று கூறி பதிவினை முழுமை செய்வோம். இன்றைய தத்தாத்ரேயர் ஜெயந்தி நன்னாளில் ஸ்ரீ தத்தாத்ரேயர் பற்றியும், அருள் ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்களை பற்றியும் சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்கின்றோம். 


தற்போது வரை இந்தப் பதிவு இன்று குருவருளால் படைக்க உள்ளோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் குருவருள் நம்மை கூட்டுவித்துள்ளது. மேலும் இன்றைய நன்னாளில் நமக்கு நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானிடம் இருந்து  நம் குழுவிற்கு ஆசிகள் கிடைத்துள்ளது. இதுவும் குருவருள் என்று தான் நமக்கு உணர்த்தப்படுகின்றது. குரு என்பவர் குணங்களையும் , ரூபத்தையும் கடந்த பரப்பிரம்மமே ஆவார்.இதனைத் தான் குருவே சிவம் என முன்னரே தொட்டுக் காட்டினோம்.

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி"

ஸ்ரீ குருப்யோ நமஹ 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

பாலகுமாரனின் பார்வையில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_4.html 

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

No comments:

Post a Comment