"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, January 14, 2021

சென்னையில் நெரூர்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் பொங்கல் திருவிழாவின் கொண்டாட்டங்களில் இன்புற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். ஒவ்வொரு திருவிழாவும் அன்பின் வெளிப்பாடே. நேற்றைய பொங்கல் திருநாளில் அக்கம்பக்கத்தார் ஒவ்வொருவரும் பொங்கல், கரும்பு என கொடுத்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தினார்கள். இவற்றைப் பார்க்கும் போது இன்னும் திருவிழாக்கள் உயிர்ப்போடு தான் இருக்கின்றது. இந்த கொண்டாட்ட மனநிலையில் நாம் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னையில் நெரூர் விழா தரிசனம் காண இருக்கின்றோம். சென்னையில் நெரூர் என்று சொன்னவுடன் நமக்கு சென்னையில் திருவையாறு என்ற நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. செய்தித்தாள்களில் , சுவரொட்டிகளில் என பார்க்கும் இடமெல்லாம் சென்னையில் திருவையாறு என்று பார்த்திருக்கின்றோம். நேரில் நாம் சென்று பார்த்ததில்லை. இந்த நிலையில் நமக்கு "சென்னையில் நெரூர்" என்று கேள்விப்பட்டதும் நேரில் சென்று காண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

நமக்கு கிடைத்த  சென்னையில் நெரூர் அழைப்பிதழ் கீழே தருகின்றோம்.




அன்றைய தினம் நாம் கிடைத்த அனுபவங்களை இங்கே காணும் முன்னர், நெரூர் பற்றி இங்கே அறிய உள்ளோம்.


நெரூர்


தீராத வினைகளை தீர்க்கும் சித்தர் கோட்டை எனலாம். நாம் இன்னும் நேரில் சென்று தரிசித்ததில்லை. ஆனால் நெரூர் என்று கேட்ட உடன் அனைவரின் பதிலும் இதுதான். சித்தரின் சாம்ராஜ்யம் இங்கே நடைபெறுகின்றது. இந்தப்பதிவில் நெரூர் நேரில் சென்று தரிசிக்க இயலா அன்பர்களுக்காக சென்னையில் நெரூர் அருள உள்ளார்கள். அழைப்பிதழை இறுதியில் இணைத்துள்ளோம். அதற்கு முன்பாக கீழே தினமலர் இணையத்தில் கண்ட சதாசிவ பிரம்மேந்திரரின் புனித வரலாற்றை  தந்திருக்கின்றோம்..குருவின் வரலாற்றை படிப்பது பல விதங்களில் நலன் தரும். பாபம் போக்கும். படியுங்கள். குருவின் அருளை பெறுங்கள்.

மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார்.



இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார்.  அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா? ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை. வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை!  ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!

வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது.

சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ஓ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது!  சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.


இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே… ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும்

கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம்.



சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல் அவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும் சித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!



இனி "சென்னையில் நெரூர்" பற்றி காண உள்ளோம்.

அன்றைய தினம் காலை 9 மணி அளவில் அங்கே சென்றோம். அன்பர்கள் ஒவ்வொருவராக வழிபாட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள்.

                                         


கோ பூஜை செய்வதற்கு பசு தயார். அன்று நாம் வெகுவாக கோ பூஜையால் ஈர்க்கப்பட்டோம்.




ஒவ்வொரு காட்சியாக கோ பூஜை தரிசனம் காணுங்கள். கோ பூஜை செய்வதது காண்பது மிக சிறந்தது ஆகும். ஜோதிட சாஸ்த்திரத்தில் கோ பூஜை செய்ய பரிகாரமாக செய்ய சொல்வதுண்டு. அது மட்டுமின்றி வீட்டில் சுப காரியங்களில் கோ பூஜை பிரதானம் ஆகும்.



ஈசனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாக திகழ்கிறாள் அன்னை கோமாதா.கோமாதாவை எந்த சூழ்நிலையிலும் எவரும்  அடிக்கவோ, விரட்டவோ செய்யாமல் அன்னையாக கருதி  பூஜிக்க வேண்டும் என்கிறது  வேதம்.

பகவான் பிரம்மன் தனது  சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவை படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் கங்கையும் மகாலட்சுமி இருவரும் தாமதமாக வந்தார்கள். இதனால்  மஹாலட்சுமிக்கும் கங்கைக்கும் பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை என்கிறது தேவிபாகவதம்.


கோமாதாவின் உடலில் இடம்பெற லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். இவர்களின் கெஞ்சுதலைப் பார்த்த கோமாதா, உங்கள் இருவர் மீதும் எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.

வைகுண்டம், ஸத்யலோகம் போன்று கோலோகம் என்று உள்ளது. அதில் ராதிகையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாக இருக்கிறார். அங்கு காமதேவனைப் படைத்து அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில் இருக்கிறது. இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். கோவை லட்சுமியாக பாவித்து வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம: என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து, தூபதீப நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும் பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன் இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள்.







கோமாதாவின்  உடற் பகுதியில் உறையும் தெய்வங்களைப் பற்றியும், தேவகணங்களைப்  பற்றியும் நமக்கு தெரிந்த சில ,தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.

கோமாதாவின்  முகம் மத்தியில்  -சிவன்

 வலக் கண் - சூரியன்

இடக் கண் – சந்திரன்

மூக்கு வலப்புறம் – ஆறுமுகக் கடவுள் முருகன்

மூக்கு இடப்புறம் – முழு முதற்கடவுள் விநாயகர்

காதுகள் - அஸ்வினி குமாரர்

கழுத்து மேல்புறம்  - ராகு

கழுத்து கீழ்புறம்  -கேது

கொண்டைப்பகுதி –நான்முகன்  பிரம்மா                    

 முன்கால்கள் மேல்புறம் – கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்

 முன்வலக்கால் -  பைரவர்      

முன் இடக்கால் -  சல்லின் செல்வர் ஹனுமார்

 பின்னங்கால்கள் -  பராசரர், விஷ்வாமித்திரர்

 பின்னகால் மேல்பகுதி - நாரதர், வசிஷ்டர்

பிட்டம் கீழ்ப்புறம் -  கங்கை

பிட்டம் மேல்புறம் – திருமகளான லக்ஷ்மி

முதுகுப்புறம் - பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி  

வயிற்றுப்பகுதி - ஜனககுமாரர்கள் பூமாதேவி

வால் மேல் பகுதி - நாகராஜர்

வால் கீழ்ப்பகுதி - ஸ்ரீமானார்

வலக்கொம்பு - வீமன்

இடக்கொம்பு – இந்திரன்

முன்வலக்குளம்பு - விந்தியமலை

முன்இடக்குளம்பு - இமயமலை

பின் வலக்குளம்பு - மந்திரமலை

பின் இடக்குளம்பு -த்ரோணமலை

பால்மடி - அமுதக்கடல்





முப்பத்துமுக்கோடிதேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பசுவை காலையில் எழுந்ததும் தொழுவத்தில் காண்பது சுபசகுனமாக கருதப்படுகிறது.











கோமாதாவை வணங்கி , கோமாதாவுள் உறையும் தெய்வங்களை வணங்கி, மஞ்சள்,குங்குமம் வைத்து, புது புடவை சார்த்தி, மலர் தூவி வழிபாடு செய்தோம். கடைசியில் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காண்பித்தி வணங்கினோம்.

கோபூஜையை செய்வதால் சகல சம்பத்துக்களும், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதால்  கோமாதாவை வணங்கி பதினாறு செல்வத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.

கோ பூஜை வழிபாடு முடித்து உள்ளே நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர் தரிசனம் பெற சென்றோம். வார்த்தைகளில் அடக்க முடியாத தரிசனம் பெற்றோம். நாம் சொல்ல வரும் செய்தியை நீங்களே கீழே காணுங்கள்.







மேலே உள்ள தரிசனம் பெற்றதும் சென்னையில் நெரூர் என்பதன் தாத்பர்யம் உணர்ந்தோம். இந்த தரிசனம் பெற்ற பிறகு எப்போது நெரூர் சென்று நேரில் சதாசிவப் பிரம்மேந்திரர் தரிசனம் பெற உள்ளோம் என்று வேண்டி நம் நம் விருப்பத்தை குருவிடம் சமர்ப்பிக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சென்னையில் நெரூர் - அனைவரும் வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_28.html
 
இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

No comments:

Post a Comment