"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, May 20, 2019

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்

அனைவருக்கும் வணக்கம். 

இன்று வைகாசி மூலம்  நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று திருஞானசம்பந்தர் பெருமான் பற்றி அறிந்தோம். வைகாசி மூலம் தனிச் சிறப்பு பெற்றது.திருஞானசம்பந்தர் பெருமான், திருநீலநக்க நாயனார்,திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் என இன்று இவர்களின் குருபூஜை அறியப்படுகின்றது.



அந்த வரிசையில் முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் என்று போற்றப்படும் முருக நாயனார் பற்றி சிறிது உணர்வோம்.


முருக நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.


திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார். 




பூக் கொய்து மாலைதொடுத்துச் சிவனுக்குச் சாத்தல்

சிவனுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பலவகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், ஸ்ரீபஞ்சாக்ஷரம் செபித்தலும், மிகச்சிறந்த புண்ணியமாம். "நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவாநித்தலுமெம் பிரானுடைய கோயில்புக்குப்-புலர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்-தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று-மலைபுனல்சேர் செஞ்சடையெம்மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே." "பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்-நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா-ராக்கைக் கேயிரை தேடி யலமந்து-காக்கைக் கேயிரையாகிக் கழிவரே." என்னுந் திருநாவுக்கரசுநாயனார் தேவாரங்களானும், "முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்-பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்-சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ-ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே." என்னுந் திருவாசகத்தானும், "நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற் பவித்த போதெவையும்-புலத்தி னழுந்தா வன்பினொடும் போதானந்தன் கழற்க ணிந்தோர்-மலத்தி னநாதி முத்தன்மல வயிரி யுறையுஞ் சிவலோகத்-தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்." என்னும் சிவபுண்ணியத் தெளிவானும், உணர்க.

இத்திருப்பணி செய்ய விரும்புவோர், நாடோறும் சூரியன் உதிக்குமுன் எழுந்து, ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரம் தரித்து, சந்தியா வந்தனம் முடித்துக்கொண்டு, சுத்தி செய்யப்பட்டு, நாபியின்கீழ்ச் செல்லாது மேலே உயர்த்த கைகளை உடையராய், திருப்பூங்கூடையை எடுத்துக் கொண்டு, சிவனது திருவடிக்கணன்றிப் பிறிதொன்றினும் சிறிதும் இறங்காத சிந்தையோடு மௌனம் பொருந்தி, சென்று, பத்திர புஷ்பங்கள் கொய்து, திருப்பூங்கூடையில் இட்டுக்கொண்டு வந்து சுத்தி செய்யப்பட்ட காலினையுடையராய், புஷ்பமண்டபத்திற் புகுந்து, விதிப்படி சுத்திசெய்யப்பட்ட பூக்குறட்டில் வைத்து, இண்டை முதலிய திருமாலைகளைச் செய்க. சிவலிங்கத்தைத் தீண்டற்கு உரியார் தாமே சாத்துக. அல்லாதார் அதற்கு உரியாரைக் கொண்டு சாத்துவிக்க. திருப்பூங்கூடையை நாபிக்குக் கீழே பிடியாது ஒரு தண்டின் நுனியிலே கட்டி உயரப்பிடித்துக் கொண்டு வருக. அன்றேல், நாபிக்கு மேலே உயர்ந்த கையினாற் பிடித்துக்கொண்டு வருக. பத்திரபுஷ்பம் கொய்யும்போது மௌனம் வேண்டும் என்பது, "வைகறை யெழுந்து போந்து புனன்மூழ்கி வாயுங்கட்டி-மொய்ம்மலர் நெருங்குவாச நந்தன வனத்து முன்னி" என எறிபத்தநாயனார் புராணத்தில் கூறியவாற்றால், உணர்க. மனம் வேறுபடலாகாது என்பது திருமலைச்சிறப்புச் சூசனத்திற் காண்க. தீக்ஷையில்லாதான், இழிகுலத்தான், மிகுநோயாளன், தூர்த்தன், ஆசாரமில்லாதான், ஆசௌசமுடையான் என்னும் இவர்கள் கொண்டு வரும் பூ, எடுத்து வைத்து அலர்ந்த பூ, பழம் பூ, உதிர்ந்த பூ, காற்றில் அடிபட்ட பூ, கையிலேனும் உடுத்த புடைவையிலேனும் எருக்கிலை ஆமணக்கிலைகளிலேனும் வைத்த பூ, அரையின் கீழே பிடித்த பூ, புழுக்கடி எச்சம் சிலந்திநூல் மயிர் என்னும் இவற்றோடு கூடிய பூ, ஸ்நானம் பண்ணாமல் எடுத்த பூ, பொல்லா நிலம் மயான சமீபம் சண்டாளர் வசிக்கும் இடம் முதலிய அசுத்த ஸ்தானங்களில் உண்டாகிய பூ, இரவில் எடுத்த பூ, இவை முதலாயின சிவனுக்கு சாத்தலாகாது. "எடுத்து வைத்தே யலர்ந்தமலர் பழம்பூக்கண் மற்ற வெருக்கிலையா மணக்கிலையி னிற்பொதிந்த பூக்க-ளுடுத்தபுடைவையிற்கரத்தி னமைந்தநறும் பூக்க ளுதிர்ந்திடுபூ வரையின்கீ ழுற்றவிரைப் பூக்க-ளடுத்தபுழுக் கடியெச்சஞ் சிலந்திமயி ருறுத லங்கை யில்வைத் தங்கைகுவித் திடுதல் கங்குறனிலே-யெடுத்தமலர் நீரமிழ்த்தல் புறங்காட்டி லெய்த லெச்சில்குளி யாதெடுத்த லிழிபெனுமா கமமே." என ஞானப்பிரகாசதேசிகர் புஷ்பவிதியினும், "மடியினிற் பறித்தி டும்பூ மலர்ந்துகீழ் விழும்பூ முன்னா-ளெடுபடு மலரி ளம்பூ விரவினி லெடுத்தி டும்பூ-தொடர்நோயன் றீக்கை யில்லான் றூர்த்தனா சார மற்றோன்-கொடுவரும் பூவனைத்துங் குழகனுக் காகா வன்றே." எனப்பிறிது புஷ்பவிதியினும் கூறுமாற்றால், உணர்க.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்முருக நாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையால் அன்றோ, பரசமயகோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றும், அவராலே "தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்-கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய் கோலங்-கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்-வண்டு பண்செய்யும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே." எ-ம். "ஈசனேறமர் கடவு ளின்னமிர் தெந்தையெம் பெருமான்-பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரின்மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்-வாசமாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே." எ-ம். புகழப்பட்டும், அவருடைய திருமணத்திலே சிவனது திருவடி நீழலை அடைந்தார். "ஏந்து முலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப்-பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக்-காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய்-வேந்தின் றுயர்தவிர்த் தானையெப் போதும் விரும்பு மினே." என்று திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருவந்தாதியிற் கூறினார் நம்பியாண்டார் நம்பி என்க.


இன்று கூடுவாஞ்சேரி மாமரத்து  ஸ்ரீ சுயம்பு சித்தி விநாயகர் விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் எம் பெருமானுக்கு மலர் சூடி வழிபாடு செய்தோம்.



திருச்சிற்றம்பலம்.


மீள்பதிவாக:-



இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html


 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

No comments:

Post a Comment