குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 வாக்கினுள் செல்ல உள்ளோம். தினசரி பதிவுகளை பார்க்கும் போது அங்கொன்றும் , இங்கொன்றுமாக இருக்கின்றதே என்று தோன்றுகிறதா ? பதிவினை நன்கு ஊன்றி கவனித்து படிக்கும் போது நாம் சொல்ல வரும் கருத்து புரியும்.
(அனைத்து
திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், திருமணம் வேண்டுதல் வைத்து வந்த அனைவரும்
நாடியின் முன் வந்தனர். கருணைக்கடல் குருநாதர் ஆசியால் பல ஆலயங்களுக்குச்
சென்றாலும் கிட்டாத மகத்தான வாய்ப்பு இந்த திருமணம் ஆகாத பெண்களுக்குக்
கிட்டியது.)
குருநாதர்:- அம்மையே பின்
அவர்களுக்கும் நிச்சயம் எது என்றும் அறிய அறிய ஈசன் எதிர்பார்த்தபடியே எது
என்று உணர்ந்து உணர்ந்து , ஈசராக ( ஆதி ஈசனாக ) பாவித்து இவ் அம்மையிடம்
ஆசிர்வாதம்.
( கருணைக்கடல் முன்னிலையில் இவ்
மூதாட்டியின் மனதில் ஆதி ஈசனே உள்ளதால், இவ் மூதாட்டியை ஈசனாக பாவித்து
அனைவரையும் நல்ல மனம் மகிழும் திருமண வாழ்க்கை கிடைக்க ஆசிர்வாதம் வாங்கச்
சொன்னார்கள். இவ் மூதாட்டியிடம் அவ் அனைத்து பெண்களும் ஒவ்வொருவராகத்
திருநீறு நெற்றியில் வாங்கிக் கொண்டு ஆசிர்வாதங்கள் வாங்க ஆரம்பித்தனர்…..)
ஆதி ஈசனை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- வாழ்க வளமுடன்…எண்ணம்போல் வாழ்க…
(
என்று கூறி அனைவரையும் ஒவ்வொருவராக ஆசிர்வதிக்க ஆரம்பித்தார்கள்… சில
நிமிடங்கள் இந்த மகத்தான புண்ணிய நிகழ்வு நடந்தது…இது போன்ற பல அன்புச் சிவ
அடியவர்கள் மனதில் ஆதி ஈசன் மன நிறைவோடு வாழ்ந்து கொண்டுதான் உள்ளார் அவ்
அடியவர்களே அறியாமல்…இவை எல்லாம் சித்தர்கள் அருளால் ஆசியால் மட்டுமே
தெரிந்து கொள்ள இயலும். )
குருநாதர்:- அப்பனே
அனைவருக்குமே சொல்கின்றேன். அனைவருமே இருக்கின்றார்கள் இங்கு. ஏன் எதற்காக
இவ் அம்மையிடம் ஆசீர்வாதம் வாங்கச் சொன்னேன்?
அடியவர்:- இவ் அம்மை வயதில் மூத்தவர்கள். இவ் அம்மை மனதில் ஈசன் இருப்பதனால், இவ் அம்மை சொன்னால் அனைத்தும் நடக்கும். அதனால்….
குருநாதர்:- அம்மையே இது சரியா? சரியாக ஆராய்ந்து கூறு?
அடியவர் 16:- அவர்கள் வாழ்வின் எல்லா நிகழ்வுகளாலும் பக்குவப்பட்டவர்கள்.,,
குருநாதர்:-
அம்மையே புரிகிறதா? இனிமேலும் எது என்பதை அறிய பின் கஷ்டங்கள் வந்தால்
எந்தனுக்குக் கஷ்டங்கள் வருகிறதே என்று சொல்லக்கூடாது. நிச்சயம் அவ்வாறு
பின் கஷ்டங்கள் வந்தால்தான் பக்குவங்கள் பட முடியும். அம்மையே அப்பொழுது
உந்தனுக்குக் கஷ்டங்கள் கொடுக்கலாமா?
அடியவர்
16:- கொடுக்கலாம்….( சில நொடிகள் கழித்து உடன் சுதாரித்துக் கொண்டு )
ரொம்பவும் கொடுத்தால் தாங்க முடியாது. இது வரைக்கும் கொடுத்ததே ரொம்ப (
கஷ்டம் ) கொடுத்திருக்கின்றார். அதனால..
அடியவர்கள் :- ( இவ் அம்மையின் வெகுளித்தனமான கள்ளம், கபடம் இல்லாத பதிலைக் கேட்டு அடியவர்கள் பலத்த சிரிப்புக்கள் இங்கு … )
ஆதி ஈசனாரை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- பக்குவங்கள் பெறக் கஷ்டங்கள் கொடுக்கின்றார்…
குருநாதர்:-
அம்மையே நிச்சயம் யான் வழி நடத்துகின்றேன். கவலைகள் இல்லை. அதனால்தான்
அம்மையே பக்குவங்கள் கொடுத்தால்தான் உயர்ந்த இடத்திற்குச் செல்ல முடியும்.
பக்குவம் இல்லையென்றால் பின் அம்மையே ஏமாந்து தான் உண்டு.
அதனால்
தான் பின் சோதனைகள் கொடுக்கின்றான் அம்மையே. இறைவனே சோதனை கொடுக்கின்றான்
அம்மையே, அப்பனே. மீண்டும் சொல்கிறேன். இறைவனே சோதனை கொடுக்கும் பொழுது
மீண்டும் இறைவன் இடத்தில் சென்றால் அவன் சிரிக்கின்றான். அவ்வளவுதான்
வாழ்க்கை.
அடியவர் 16:- பிள்ளைகள் அப்பா அப்பாவிடம் தான் தன் குறைகளைச் சொல்லுவார்கள். ( அது போன்று இறைவனிடம் முறையிடுகின்றனர்)
குருநாதர்:- அம்மையே தெரியாமலே கேட்கின்றேன். உன் பிள்ளை இருக்கின்றாள் அம்மையே. அவள்தன் தீய வழியில் சென்றால் நீ என்ன செய்வாய்?
அடியவர் 16:- அவர்களைத் திருத்த வேண்டும்.
குருநாதர்:-
அதனால்தான் அம்மையே. திருத்துவதற்கே கஷ்டங்கள் அம்மா மனிதர்களுக்கு. இது
சரியா தவறா? இப்பொழுது இறைவன் செய்வது நல்லதா கெட்டதா ?
அடியவர்
16:- இறைவன் செய்வது நல்லது என்று தெரிகின்றது. இறைவன் கஷ்டம் எவ்வளவு
கொடுக்கின்றார்களோ அவ்வளவு பக்குவம் அடைய வைக்கின்றார் என்று புரிகின்றது.
ஒரு சூழ்நிலைக்கு மேல் அந்த பக்குவத்தை, கஷ்டங்களைத் தாங்க முடியாமல்
நெஞ்சு அதாவது மூச்சு அப்படியே நின்று போவது போன்று உள்ளது…... ( தாங்க
முடியாத கஷ்டம் )
குருநாதர்:- அம்மையே கஷ்டத்தைக்
கடைசியில் சொன்னாயே, அப்பொழுது தான் இறைவன் அழகாக அம்மையே பக்குவமாக
உன்னைக் கையிலே தாங்குவான் அம்மையே. அப்பொழுது இறைவன் உன்னைக் கையில்
தாங்க வேண்டுமா, வேண்டாமா?
அடியவர் 16:- கண்டிப்பாக. நிச்சயமாய் கையில் தாங்க வேண்டும். அவர் காலடியில் என்னைச் சேர்த்து விடுங்கள்.
குருநாதர்:- அதனால்தான் அம்மையே. அனைவருக்கும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இறைவனுடைய விருப்பம்.
ஆனால்
அம்மையே அதைச் சரியான வழியில் பயன்படுத்துவதில்லை. அதனால் தான் கஷ்டங்கள்
அம்மையே. கஷ்டங்கள் எது என்பதை அறியாமலேயே கஷ்டங்களுக்கு, பரிகாரங்கள்,
பரிகாரங்கள் என்று பின் ஓடினாலும் இறைவன் சிரிப்பான். பைத்தியக்காரனே
இவன். நம் தனையே சில கஷ்டங்கள் இவன்தன் திருந்துவதற்காக கொடுத்துக்
கொண்டிருக்கின்றோம். நம் தனையே அதாவது மீண்டும் மீண்டும் நம்மிடையே வந்து
அடைகின்றானே!!!. இவனை என்னதான் செய்வது என்று இவன் தனக்கு என்ன
கொடுத்தாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று அப்படியே இறைவன் பின் தன்
வேலையைப் பார்த்து விட்டுச் செல்வான். புரிகிறதா அனைவருக்கும்.?
அடியவர் 16:- புரிகின்றது.
நாடி அருளாளர்:- யார் கஷ்டம் கொடுக்கின்றார்?
அடியவர்கள்:- இறைவன்.
குருநாதர்:- அம்மையே நிச்சயம் இன்பமே ஒன்று இருந்தாலும் அனைவருமே தீய வழியில் சென்று விடுவார்கள் அம்மையே.
அப்பொழுது இறைவனுக்குத் தீய வழியில் பின் செல்பவர்கள் பார்ப்பது நல்லதா என்ன?
ஆதி ஈசனாரை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- நல்லது. துன்பம் கொடுப்பது.
குருநாதர்:-
அதனால்தான் அம்மையே திருமணம் (நடக்கவில்லை) இல்லை என்று சொல்கின்றார்கள்.
ஏன் என்று அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. அதனால் தான் இறைவன் ஒவ்வொரு
மனதையும் ஆராய்ந்து இவன் தனக்கு எது கொடுத்தாலும் நன்மை எது கொடுத்தால்
தீமை என்றெல்லாம் யோசித்துக்் கொண்டிருக்கின்றான் அம்மையே. நீங்கள் அதாவது
அனைவருமே இங்கு வந்து கொண்டிருக்கின்றீர்கள். அகத்தியனை அதைக் கேட்கலாமா?
இதைக் கேட்கலாமா? என்று. ஆனால் இறைவன் எவ்வளவு பெரியவன், எப்படி பின்
உங்களுக்கு யோசித்துக் யோசித்து கொடுக்க மாட்டானா என்ன?
அடியவர்கள்:- நிச்சயமாக, கண்டிப்பாக இறைவன் கொடுப்பார்.
குருநாதர்:-
அம்மையே சுபகாரியம் நடக்கும் அதிவிரைவிலே. இதற்காக ஓடி ஓடி வந்தாய்
அம்மையே. அவ்வளவுதான் அம்மையே. பின் நடக்கும்போது நீளும். ஆனாலும் யான்
நடத்திவைக்கின்றேன் உந்தனுக்கு. போதுமா? அதனால் கவலையை விடு. ராகு
கேதுக்களால் சில சில வினைகள். யான் அகற்றிவிட்டேன்.
இதனால் துன்பம் கொடுப்பதே சிறந்தது என்று சொல்கின்றேன் யான். நீங்கள் சொல்லுங்கள்?
அடியவர்கள்:- சரிங்க அய்யா.
குருநாதர்:-
அதனால் நிச்சயம் துன்பம் கொடுத்தால் , பரிகாரங்கள் செய்தாலும் முடியாது
என்று யான் சொல்கின்றேன். முடியும் என்று யாராவது சொல்கின்றீர்களா என்று
சொல்லுங்கள்?
அடியவர் 16:- (அகத்தியர்) அய்யா
வழியில் வந்த பின்னர் பரிகாரம், அர்ச்சனை, ஜாதகம் இது எதுவும் எங்களுக்கு
இல்லை. எல்லாமே அவர்தான் என்று விட்டு விட்டோம் ( சரணாகதம் ). ஜோசியம்,
ஜாதகம் என்று எதுவுமே கிடையாது. கோயில் சென்றால் அர்ச்சனை வேண்டாம்.
(அகத்தியர்) அய்யாவிடம் எங்கள் பிரச்சினைகளை விட்டு விட்டோம். அவர்
பார்த்துக்கொள்வார் என்று விட்டு விட்டோம்.
குருநாதர்:- அம்மையே எழுந்து நில். சொல்.
அடியவர் 16:- (எழுந்து நின்று பேச ஆரம்பித்தார் அங்கு உள்ள அடியவர்களுக்கு )
முன்பு
எல்லாம் குடும்பத்தில் கஷ்டம் அல்லது மனக்குழப்பம் இருந்தால் அவர்கள்
(ஜோதிடர்கள்) எங்களுக்கு ஜாதகம் பாரத்து ஒரு அர்ச்சனை செய்யச் சொல்வார்கள்.
அதனால் அந்த குழப்பம் தீருமா என்று பார்ப்போம்.
இல்லை
என்றார் ஏதாவது பரிகாரம்? செய்தால் கல்யாணம், வீடு வாங்குவது போன்ற நல்ல
காரியங்கள் நடக்குமா என்று ஆசைப்பட்டு ஜோசியம், ஜாதகம் பார்ப்போம் நாங்கள்.
இப்போது அய்யா ( அகத்தியர் ) வழி வந்த பிறகு இந்த பையனால் அய்யா வழியில் நாங்கள் வந்து உள்ளோம்.
(
ஓர் அகத்தியர் அடியவரால் இந்த குடும்பமே அகத்தீசரின் தர்ம வழியில் வந்து
உள்ளது என்பதை அடியவர்கள் அறியத் தருகின்றோம். அந்த உயர் புண்ணியத்தைச்
செய்து இந்த குடும்பத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் அவ்
அகத்தீசர் அடியவரை உளமார வாழ்த்துகின்றோம். இதுபோல் அடியவர்கள் ,
அனைவருக்கும் இயன்றவரை எடுத்துச் சொல்லி தர்மத்தின் பாதைக்கு , அகத்தீசர்
அருள் வழியில் திசை திருப்புங்கள். இது அளவில்லா மிகப்பெரிய உயர் நிலைப்
புண்ணியம். )
அகத்தியப்மெருமான் வழி வந்த
பின்னால், ஜோசியம் ஜாதகம் என்று எதுவும் பார்ப்பது இல்லை. கோவிலில் கூட
ராகு, கேது..சனி தசை எங்க பையனுக்கு நடந்து கொண்டு உள்ளது. அந்த
நவகிரகத்துக்கு கூட அர்ச்சனை செய்வது கிடையாது. (அகத்தியர்) அய்யா
இருக்கின்றார். எங்களைப் பார்த்துக்கொள்வார் என்று ஆலயத்தில் ஒரு சுற்று
சுற்றி வீட்டுக்கு வந்து விடுவோம். அய்யா என்ன சொல்கின்றார்களோ அதனை கடைப்
பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் அவர் சில தவறுகள் நாங்கள்
தெரிந்தோ தெரியாமலோ செய்து இருந்தால் அவர் எங்களை மன்னிக்க வேண்டும் என்று
வேண்டிக்கொள்கின்றோம். ஜோசியம், ஜாதகம் எதுவுமே கிடையாது. எல்லாமே
அகத்தியர்தான் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு வருகின்றேன். அவர்
எங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார் என்று தெரியவில்லை.
குருநாதர்:- அம்மையே…..
அடியவர்
16:- ( அம்மை தொடந்து பேசினார்) எங்கள் குடும்பமே அவரை நினைத்து வாழ்ந்து
வருகின்றோம். முன்னால் நாங்கள் அசைவம் உண்டு வந்தோம். அய்யா வழியில் வந்த
பின்பு அவரை நினைத்துக்கொண்டு அதனை அடியோடு நிறுத்திவிட்டோம்.இப்பொழுது
எங்கள் குடும்பமே சைவமாக மாறிவிட்டோம். எங்கள் குடும்பத்தில் அய்யாவையே
சரணம் என்று நினைத்து சரணாகதியாகி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அவர் ஒரு
விசயம் சொன்னால் அது நடக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கின்றோம்.
அதனால்தான் இவ்வளவு தூரம் நாங்க ஓடி வந்தோம். அதுக்குக் காரணமே அய்யாதான்.
அய்யாவைப் பார்த்து விடவேண்டும். ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா என்று
ஏங்கி ஓடி வந்துள்ளோம்.
குருநாதர்:- அம்மையே யான்
அனைவருக்குமே சொல்கின்றேன். ஒரு மகன் தன் தந்தையைக் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டால், தன் தந்தையானவன் அனைத்தும் செய்துவிடுவான்.
இதிலிருந்து என்ன புரிகின்றது?
அடியவர் 16:- அவர்
சொன்னவற்றை வேத வாக்காக நினைத்து அவர் கால்களைக் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டேன். எங்களுக்கு எல்லாமே (அகத்தியர்தான்) அவர்தான். அவர்
செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் எதையுமே ஆசைப்படவில்லை. அதனால் ஒரு
விசயம் கேட்டுச் செய்வதற்காக வந்துள்ளேன்.
குருநாதர்:- அம்மையே ஏற்கனவே (திருமணம் குறித்து) உரைத்திட்டேன் உந்தனுக்கு.
குருநாதர்:- ஏன் இங்கு அனைவரும் அமர்ந்து இருக்கின்றீர்கள்?
அடியவர் 16:- தர்ம செய்வதற்கு அய்யா அழைத்துச்செல்வதாக்க் கூறி இருந்தார்களாம். அதற்காக அவர் வந்து உள்ளார்.
குருநாதர்:- அறிந்தும் அறிந்தும் கூட அவனால் தர்மம் செய்ய முடியாது என்பேன். கேள்.
அம்மையே என்னைத் திரும்பிப் பார்! அவன்தனை அவனாலேயே காப்பாற்றிக் கொள்ளவில்லை. எப்படி தர்மம் செய்வான்?
அடியவர் 17:- ஐயா கொடுப்பார். அதை அப்படியே தர்மத்துக்குக் கொடுத்து விடுவேன்.
குருநாதர்:-
அம்மையே நம்பிக்கை அனைவருக்கும் புரிந்ததே அம்மையே. தன்னிடம் பின் ஏதும்
இருந்தாலும் நிச்சயம் இல்லாவிட்டாலும் கூட நிச்சயம் இறைவன் எந்தனுக்குக்
கொடுப்பான். இறைவன் எந்தனுக்குப் பின் அனைத்தும் செய்வான். இறைவன் என்னைத்
தவிர பின் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறான் என்று பின் தன்னம்பிக்கை
யாருக்கு வருகின்றதோ (இறைவன் அவர்களுக்கு) அனைத்தும் கொடுத்து விடுவான். (
அவர்களுக்கு) எளிதில் அனைத்தும் நடந்துவிடும். ஆனால் அது இல்லையே?
அடியவர்கள்:- ( மௌனம் )
குருநாதர்:- அம்மையே பின் எப்படித்தான் அப்பா வாழ்கின்றாய் என்று (அடியவர் 17) அவனைக் கேள்?
அடியவர் 16:- எப்படித்தான் வாழ்கின்றீர்கள்? தன்னம்பிக்கை இல்லாமலா வாழ்கின்றீர்கள் (அகத்தியர்) அய்யா இருக்கும் போது ?
அடியவர் 17:- நம்பிக்கை இருக்கின்றது.
குருநாதர்:- அம்மையே அவன் தனக்கு யாருமே இல்லை? ஏன் தர்மம் செய்யப்போகின்றான் என்று சொல்லிவிட்டான்.
(
இந்த அடியவருக்கு உள்ள ஒரே உறவு இறைவனும், குருநாதர் மட்டுமே. மனிதர்கள்
யாருமே உறவு முறையில் இல்லை. உதவி புரிய எந்த ஒரு உறவுகளும் இல்லை.
நண்பர்கள், சுற்றமும் இல்லை…..ஏழ்மையின் உச்சம்…)
அடியவர் 17:- எடுத்த (மிச்சம் உள்ள) பிறவி நல்லா இருக்குமா?
குருநாதர்:-
அம்மையே இங்கு வந்திருப்பவர்கள் அனைவருக்குமே எதாவது ரூபத்தில் இறைவன்
கொடுத்திருக்கிறான். ஆனால் அவன் தனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை.
(நாடி
அருளாளர் இதனை எடுத்து விளக்கிய போது, அனைவரும் இந்த அடியவரின் ஏழ்மையான
வாழ்வு நிலைமையை உணர ஆரம்பித்தார்கள் கவலையுடன் என்ன தான் இவர் வாழ்வில்
நடந்திருக்கும் என்று….)
குருநாதர்:- ஆனாலும்
புண்ணியம் செய்கின்றான் என்று எது என்று கூற தலை நிமிர்ந்து சொல்கின்றான்.
ஏன் அதைச் சொன்னான் என்று நிச்சயம் கேள்?
அடியவர் 16:- ஏன் அப்படிச் சொன்னீர்கள்? புண்ணியம் செய்வீர்கள் என்று?
( அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லை என்ற நிலையில் இந்த அடியவர் புண்ணியத்தைப் பற்றி மகத்தான பின் வரும் வாக்கு ஒன்றைச் செப்பினார்…)
அடியவர் 17:- புண்ணியம் செய்தால் இறைவனுடன் ஒன்று சேர முடியும்.
குருநாதர்:- அப்பனே உன் கையிலிருக்கும் பணத்தை அவனிடத்தில் கொடுத்துவிடு.
(அடியவரர்கள் பணத்தைக் கொடுத்தனர்)
குருநாதர்:-
அப்பனை இல்லாதவன் (அடியவர் 17) இங்கே இருக்கின்றான் அப்பா. அதனால் தான்
அதை (பணத்தை) வைத்துக்கொண்டு இரு என்று சொன்னேன்.
அடியவர் 17:-அய்யா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(கருணைக்கடலிடம் இதனைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை இந்த அன்பு அடியவர்…உணர்ச்சிமயமானார் ….)
குருநாதர்:- அப்பனே அவனை எழச்சொல்.
அடியவர் 17:- ( எழுந்து நின்றார் )
குருநாதர்:- அப்பனே, சிறிது அவன் வாழ்க்கையைப் பற்றி எடுத்துரைக்கட்டும் அனைவரிடத்திலும்.
அடியவர்
17:- என்னுடைய வாழ்க்கை அப்பா, அம்மா, அண்ணன் இருக்கின்றார். அம்மா cancer
வியாதியால் இறந்துவிட்டார்கள். அண்ணன் பைத்தியக்காரன் ஆகி திருந்து கொண்டு
இருக்கின்றான். ( குரல் உடைந்து பேச ஆரம்பித்தார்) இந்த சூழ்நிலையில்
நான் வேலைக்குச் சென்று அப்பாவையும், அண்ணனையும் காப்பாற்றிக்கொண்டு
வருகின்றேன்.
( வெளிவராத அழுகையுடன் ஒரு அமைதி )
அய்யாதான் முன்பு கூறினார்கள். சற்று பொறுத்திரு. சில மாதங்கள் கழித்து உன்னைக் கூட்டிக்கொண்டு போகின்றேன் என்று சொன்னார்கள். அதான் கேட்டு விட்டுப்போகலாம் என்று இங்கு வந்துள்ளேன்.
குருநாதர்:- அப்பனே எது என்பதை அறிய இவனைவிட இங்கு (ஏழ்மையில்) கீழானவர்கள் வேறு யார் இருக்கின்றார்கள்?
அடியவர்கள்:- ( ஒருமித்த குரலில் ) யாரும் இல்லை.
குருநாதர்:-
அப்பனே! கவலைப்படாதே அப்பனே! அப்பனே! அனைவரும் புண்ணியம் செய்கின்றார்கள்,
தான தர்மம் என்று வாய் பிதற்றுதான் அப்பனே! ஆனால் அப்பனே! பின் யாருக்கு
எதைத் தரவேண்டும் என்று தெரியாதப்பா. அதனால்தான் அப்பனே வரச்சொன்னேன்.
கொடுத்துவிட்டேன் அப்பனே. இன்னும் கொடுக்கின்றேன். வாழ்ந்து கொள்.
அப்பனே ஆனாலும் விதியை யான் மாற்றுகின்றேன் பொறுத்திரு.
அப்பனே,
தானம், தர்மம் எங்கு போய் விட்டது அப்பா? விதியை மாற்றலாமே! யாரால்?
மனிதனால் முடியுமா? முடியாதப்பா. அதனால் யாங்கள் எது என்று அறிய அறிய
மனிதர்களுக்காக உழைக்க வந்திருக்கின்றோம் அப்பனே. ஆனால் மனிதன் புரிந்து
கொள்ளவே இல்லை. சித்தன் அதைச் செய்கின்றான். இதைச் செய்கின்றான். முதலில்
அப்பனே நல் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அப்பனே மனிதனாக வாழக்
கற்றுக் கொள்ளுங்கள். பின்பு கேட்கும் அனைத்தும்.
அப்பனை
மனிதனாக வாழ கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் பின் என்ன பிரயோஜனம்
அப்பா? கோபங்கள், காமங்கள், பொறாமைகள், அப்பனே போட்டிகள் இவையெல்லாம் எது
என்று கூற பின் மனிதனாக இருந்தால் அவன் மனிதனே இல்லை அப்பா. இறைவன் எப்படி
அப்பா மனிதன் இல்லாதவனுக்குக் கொடுப்பான்? அப்பா. கூறுங்கள் நீங்களே.
அப்பனே
சரியாக நம்பிக்கை. இவ் அம்மை (அடியவர் 16) சொன்னாள். அப்பனே நிச்சயம்
என் அகத்தியன் எந்தனுக்குக் கொடுப்பான் என்று யாரோ ஒருவன் இருக்கின்றானோ
யானே நேரடியாக வந்து கொடுப்பேன். அவ்வளவுதான்.
அப்பனே ( அடியவர் 17) உந்தனுக்குக் கொடுக்கவில்லையா என்ன?
அடியவர் 17:- ஆமாங்க அய்யா
குருநாதர்:-
அப்பனை அப்பொழுது பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே. அப்பனே யான் கொடுக்க
மாட்டேனா என்ன? அனைவருக்கும் நல்லது செய்ய மாட்டேனா என்ன? இவ் அகத்தியன்.
நாடி அருளாளர்:- எல்லோருக்கும் நல்லது செய்வார்.
அடியவர்கள்:- ( ஒருமித்த குரலில் எங்கள் அகத்தியன் எங்களுக்கு அனைத்து நல்லதும் ) எல்லாம் செய்வார்.
குருநாதர்:-
அம்மையே இவ்வளவு பணங்களுக்கு இவன் ( அடியவர் 17) எவ்வளவு கஷ்டங்கள் பட்டு
இருப்பான். ஆனாலும் அப்பனே, அம்மையே இப்பொழுதான் அவ் சந்தர்ப்பம் (
இவனுக்கு - அடியவர் 17) வந்திருக்கிறது. ஆனால் அனைவருக்குமே சந்தர்ப்பங்கள்
வரும்பொழுது இறைவன் சத்தியமாகச் செய்வான்.
இதை நம்புபவர்கள் நிச்சயம் உயர்ந்து விடுவார்கள். நம்பாதவர்கள் கீழ் நோக்கிச் சென்று விடுவார்கள். இவ்வளவுதான் விஷயம்.
ஒரு
விஷயத்தை நன்றாக நம்ப வேண்டும் ஆனால் அதை வேண்டும். இவை இரண்டும் நிச்சயம்
பின் இறைவன் எதாவது நீங்கள் நினைத்தாலும் இறைவன் நிச்சயமாக்க் கொடுக்க
மாட்டான். சொல்லிவிட்டேன். இதை நீங்கள் நிச்சயம் அனைவருமே தெரிந்து கொள்ள
வேண்டும். அவன் நினைத்தானா? இன்று நம்தனக்கு பணம் கொடுப்பான் என்று ஆனால்
யான் கொடுத்து விட்டேன்.
நாடி அருளாளர்:- அய்யா ( அடியவர் 17 ) நீங்கள் பணம் வரும் என்று நினைத்தீர்களா?
அடியவர் 17:- இல்லை அய்யா. அப்படி நான் நினைக்க வில்லை.
குருநாதர்:-
அப்பனே இதைத் தெரிந்து கொள்ளுங்கள். இறைவன் பின்னே சென்றாலும்,
இறைவனுக்குப் பூஜை , அபிஷேகங்கள் செய்தாலும் இறைவன் நினைத்தால் தான் உண்டு.
அதற்கு நம்பிக்கை வேண்டும்.
அவன்தன் (அடியவர்
17) எவ்வளவு நம்பிக்கை அதாவது என்மேல் வைத்திருந்தால் நிச்சயம் அவன்தன்
பின் அதாவது ஒரு வேலைக்கே கஷ்டப்படுபவன் அவன். பின் என்னை நோக்கி ஏன்
வரவேண்டும்?
நாடி அருளாளர்:- அய்யா ( அடியவர் 17) , உங்களைத்தான் கேட்கின்றார்.
குருநாதர்:- அப்பனே சொல்.
அடியவர் 17:- அய்யா என்னைச் சேவைக்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னார்கள். அதற்காக நான் காத்துக்கொண்டு இருக்கின்றேன்.
குருநாதர்:-
அப்பனே இப்போதைக்கு இல்லை என்பேன். அப்பனே உந்தனுக்கு சில விஷயங்கள்
(வாழ்க்கை அனுபவங்கள்) தந்து பின்பு அழைத்துக் கொள்கின்றேன். பொறுத்திரு.
அப்பனே இதனால் நல் கருத்துக்களைக் கூறு அனைவருக்கும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment