"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, June 6, 2019

தெய்வ மணக்குஞ் செய்யுளெ லாம் - சேக்கிழார் குரு பூஜை (07/06/2019)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் பெரியபுராணம் தந்த பெரியோர் சேக்கிழார் பற்றி அறிய உள்ளோம்.



அடியார்கள் என்றால் என்ன அவ்வளவு எளிதா? சிவ பெருமான் இந்த அடியார்களின் அன்பை பெற என்னென்ன செய்துள்ளார்? படிக்க படிக்க பேரானந்தம். அடியார்களின் அன்பு,அடியார்கள் பற்றி படிப்பது பெரிது என்பதால் தான் இந்த புராணத்திற்கு "பெரிய புராணம்" என்று பெயர் வழங்கலாயிற்று.

பெரியது என்ற உடன் தான் கீழ்க்கண்ட செய்தி நினைவிற்கு வருகின்றது. பெரியது எது? என்று சிந்தித்து விட்டு, இம்மாத அடியார்கள் பூசைக்கு செல்வோம்.



அநபாய சோழரின் அமைச்சராக இருந்த வெள்ளியங்கிரி அங்குமிங்கும் உலவுவதைக் கண்ட அவரது மகன் அருண்மொழித் தேவர் ஆச்சரியப்பட்டார். (இராஜராஜ சோழன் நினைவாக அவரது இயற் பெயரை தன் மகனுக்கு வைத்தார்).

நாடாளும் ராஜாவின் ஆலோசகரான அவரது முகத்தில் இத்தகைய குழப்பத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை. தந்தையே! தங்கள் முகத்தில் ஏன் இந்தக் கலவரம்! வழக்கமாக, அதிகாலையே நீராடி, இறைவழிபாடு முடித்து அரண்மனைக்கு கிளம்பி விடுவீர்களே! இன்று ஏன் இன்னும் செல்லவில்லை! ஒருவேளை, பகைவர்கள் யாராவது சோழநாட்டிற்குள்.... என்று தொடர்ந்து பேச முயன்ற மகனை சைகையால் நிறுத்தினார் தந்தை. அருண்மொழி! மாமன்னர் அநபாயச் சோழனை எதிர்க்க இப்பூவுலகில் திராணி யாருக்குண்டு! என் பிரச்னையை உன்னிடம் சொல்வதால் பயனில்லை. ஏனெனில், அதை உன்னால் தீர்த்து வைக்க முடியாது,. தந்தையே! அப்படி முடிவு கட்டிவிட வேண்டாம். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் தானே!. தந்தை அந்த இக்கட்டான நிலையிலும் சிரித்தார். அருண்மொழி! அந்த மூன்று கேள்விகள் தான் என் குழப்பத்திற்கு காரணம்! அதற்கு இரவு முழுவதும் பல நூல்களில் இருந்து பதில்களைத் தேடினேன்! கிடைக்கவில்லை! என்ன மூன்று கேள்விகள்? யார் உங்களிடம் கேட்டது? மாமன்னர் தான் கேட்டார்.

மலையை விட பெரியது எது?
கடலை விட பெரியது எது?
உலகை விட பெரியது எது? 
என்று! இவற்றுக்குப் பதில் தேடும்முயற்சியில் தோற்றுப் போனேன்! அரசரிடம் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்!

அருண்மொழி கலகலவென சிரித்தார். சரியாப்போச்சு! இந்த எளிய விடைகள் தெரியாமல் தானா இந்தக் குழப்பம்! கொஞ்சம் பொறுங்கள், என்றவர் ஒரு ஓலையை எடுத்தார். 3 பதில்களையும் எழுதிக் கொடுத்தார். தந்தை அதைப் படித்தார். கண்கள் வியப்பில் விரிந்தன. ஆம்... ஆம்... இவை தான் விடைகள்! உணர்ச்சிவசப்பட்டு கூவினார். அரசரிடம் சென்று ஓலையை நீட்டினார். அரசர் ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். ஆலோசகரே! விடைகள் மிகப் பொருத்தமானவை. ஆனால், இதை எழுதியது நீர் அல்ல என்பது கையெழுத்திலிருந்து புரிகிறது! இந்த பதிலைச் எழுதியவர் யார்? என் மகன் அருண்மொழித்தேவர். அரசர், உடனடியாக அருண்மொழித்தேவரை தகுந்த மரியாதையுடன் பல்லக்கில் ஏற்றி வர ஏவலர்களுக்கு ஆணையிட்டார். அருண்மொழியும் வந்து சேர்ந்தார்.

தாங்களே! இந்த பதில்களைப் படியுங்கள் என்றார் அரசர்.
அவை வேறொன்றும் இல்லை நம் திருவள்ளுவர் எழுதிய குறள்கள் தான்.

மலையை விட பெரிது?

“நிலையிற் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”

-எந்தச் செயலை எடுத்தாலும் அதை நிலையான தைரியமான மனதுடன் யார் செய்கிறானோ, அவனது மனம் மலையை விட உறுதியானது.

கடலை விட பெரிது எது?
“பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”

-தனக்கு என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு, கடலை விடப் பெரிது.

உலகை விட பெரிது எது?
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

-ஒருவனுக்கு தேவைப்படும் போது, சரியான சமயத்தில் கிடைக்கிற சிறிய உதவி உலகத்தை விட பெரிது.

அருண்மொழித்தேவர் இதை வாசித்துவிட்டு அரசரை ஏறிட்டுப் பார்த்தார். அறிவிற் சிறந்தவரே! தாங்களே இனி இந்நாட்டின் அமைச்சர், என ஆணையிட்டார் மன்னர். இவரே அநபாயனிடம் உத்தமச்சோழ பல்லவர் என்ற பட்டம் பெற்றவர். பிற்காலத்தில் ஆன்மிகத்தின் தலைமகனாக, சேக்கிழார் என்னும் பெயர்தாங்கி, பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணம் என்னும் பெருங்காவியத்தைப் படைத்தார்.

இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை. ஓராண்டில் 4286 பாடல்களுடன் திருத்தொண்டர் வரலாற்றினை புராணமாக தந்தார்.
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.




சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.

பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.

சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார். 


இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.


புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.




மீள்பதிவாக:-

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
 வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html


சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html
ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html
 அற்றார் அழி பசி தீர்த்தல் - அன்னம்பாலிப்பு சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_27.html


No comments:

Post a Comment