"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, June 24, 2019

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று நமக்கு கிடைத்த செய்தியை அப்படியே இங்கே பகிர்கின்றோம். நல்லவே எண்ணல் வேண்டும். எண்ணம் தான் அனைத்திற்கும் ஆதாரம். உண்ணும் உணவு எப்படி நம் உடல் முழுதும் பாய்கின்றதோ, நாம் எண்ணும் எண்ணம் எங்கும் பாயும். சரி,.விசயத்திற்கு வருவோம்.

நல்லதே நினை! நல்லதே செய்! நல்லதே நடக்கும்!

இது நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு செயலையும் அணுகினால் இமயமலைகூட இடுப்பளவு உயரம்தான்!

நம்முடைய எண்ணங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் இவையே நம்முடைய வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும். நம்முடைய எதிர்பார்ப்புகள் பாசிட்டிவாக இருந்தால், முடிவும் அப்படியே அமையும். ‘இது நடக்கவே நடக்காது, என்னால் முடியாது’ என்று நமக்கு நாமே நெகட்டிவ்வாக நினைத்தால் முடிவும் தோல்வியிலேயே முடியும்.

ஒருமுறை சுமார் இருபது பேர் கொண்ட குழுவுக்கு பயிற்சி தந்துகொண்டிருந்தேன். பயிற்சியின்போது ஒரு சின்ன ‘ஆக்டிவிட்டி டெஸ்ட்’ தந்தேன். எல்லாரையும் வட்டமாக நிற்கவைத்து, கண்ணை மூடும்படிச் சொன்னேன். அவர்கள் தங்கள் பர்ஸிலிருந்து கைக்கு வருகிற ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அவர்களின் முன்பு இருக்கிற பெட்டியில் போட வேண்டும்.

இந்தப் பயிற்சியை செய்யும்போது எல்லோருக்கும் செம டென்ஷன். அந்த ரூபாய் நோட்டை நான் ஏதாவது செய்து எரித்துவிட்டால் என்ன செய்வது என்று பலரும் பயந்தார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, 20, 500, 100, 5 என ரூபாய் நோட்டுகளைப் போட்டார்கள். ஒருவர் ஒரு டாலர் நோட்டையும் போட்டார்.

இதன் பிறகு நான் அவர்களிடம் சொன்னேன். “இப்ப நான் இந்தப் பெட்டியை நன்கு குலுக்கப்போகிறேன். ரூபாய் நோட்டெல்லாம் கலந்திருக்கும். இப்ப பழையபடி கண்ணை மூடிக்கிட்டு அந்தப் பெட்டியிலிருந்து அவங்கவங்க ரூபாய் நோட்டு ஒன்றை எடுக்கலாம். எந்த நோட்டு அவங்க எடுக்குறாங்களோ, அது அவங்களுக்கே சொந்தம்”னு சொன்னவுடன் எல்லோருக்கும் ஷாக். கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் போட்ட பணத்தை அவர்களால் எப்படி திரும்ப எடுக்க முடியும்?

இருந்தாலும், ஒவ்வொருவராக ரூபாயை எடுத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நோட்டு கிடைத்தது. ஆனால், டாலர் போட்டவருக்கு மட்டும் அதே டாலர் வந்தது. 500 ரூபாய் போட்டவருக்கு 100 ரூபாய் வந்தது. டாலர் போட்டவரிடம் அவரது எண்ணத்தைக் கேட்டேன். “நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம். அது எனக்கே திரும்பக் கிடைக்கும்னு நம்பினேன். அதேமாதிரி வந்துடுச்சு” என்றார்.

500 ரூபாய் போட்டவர், “பணத்தைப் போட்டுட்டு, பர்ஸைத் தொறந்து பார்த்தப்பதான், அய்யய்யோ, 500 ரூபாயைப் போட்டுட்டேனே. திரும்பி வருமா?ன்னு சந்தேகப்பட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரியே ஆயிடுச்சு” என்றார். இதில் இருந்து பயிற்சி பெற வந்திருந்தவர்களுக்கு நான் புரியவைக்க நினைத்த விஷயம் இதுதான்; “நம்புங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்!”

சிலர், வாழ்க்கையில் நம்ம ஒண்ணு நினைச்சோம். வேற ஒண்ணு நடக்குதேன்னு கவலைப்படுகிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள் தாங்கள் நினைத்த விஷயத்தில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், உடனே வாழ்க்கையே வெறுத்துப் போய்விடுகிறார்கள். பரீட்சைக்குப் போகும்போது, “ஆல் தி பெஸ்ட்” என்று யாராவது சொன்னால், “என்னத்த ஆல் தி பெஸ்ட், எப்படியும் ஃபெயில்தான்” என்று சொல்லிக்கொண்டே பரீட்சைக்குப் போகிறார்கள். ஆபீஸில், “குட் மார்னிங்”னு யாராவது சொன்னால், “என்னத்த குட் மார்னிங் ஒரே பேட் மார்னிங்தான்” என்று மூஞ்சியைத் தொங்கவிட்டு வேலை பார்க்கிறார்கள்.

இவர்கள் தங்களிடம் இருக்கிற நெகட்டிவ் மூடை மற்றவர்களுக்கும் தந்துவிடுகிறார்கள். இப்படி செய்யாமல், ஆல் தி பெஸ்ட் சொன்ன நண்பனிடம், “டேய், நான் டெஸ்டுக்கு படிக்கலைதான். ஆனா, டெஸ்டுல என்ன கேள்விதான் கேக்குறாங்க பார்த்துடலாம்னுதான் எக்ஸாமுக்குப் போறேன். அந்த எக்ஸ்பீரியன்ஸை வச்சு அடுத்தமுறை நல்லா ப்ரீப்பேர் பண்ணலாம் இல்லையா”ன்னு பதில் சொல்கிறவரிடம் தென்படுகிற நம்பிக்கை அவருக்கு அடுத்தமுறை நிச்சயமாக வெற்றியைத் தேடித்தரும்.

காலையில் வணக்கம் சொன்ன அலுவலக நண்பரிடம், “குட் மார்னிங் சார், இன்றைக்கு நல்லதே நடக்கும்னு நம்புவோம்” என்று சொன்னால், அன்றைய தினம் நிச்சயம் பல வெற்றிகளைத் தருகிற புதிய தினமாக இருக்கும்.

ஆனால், வெறும் நம்பிக்கை மட்டுமே நம்மிடம் வெற்றியைக் கொண்டுவந்து சேர்த்துவிடுவதில்லை. நடைமுறையில் யதார்த்தமான விஷயங்கள் குறித்த நம்பிக்கைகளே நம்மை ஜெயிக்க வைக்கும். யதார்த்தமற்ற, நேர்மைக்கு புறம்பான விஷயங்களை எவ்வளவு நம்பினாலும் நடக்காது. தவிர, வெறும் நம்பிக்கை மட்டுமே நம்மை ஜெயிக்க வைக்கும் என்று நம்புவது அறிவீனம். உழைப்பு மிகமிக அவசியம். அது இல்லாத நம்பிக்கை எந்தவகையிலும் பிரயோஜனமில்லை.

நம் நம்பிக்கைகள் வெறும் மனவோட்டங்களாக இருக்கக் கூடாது. நாம் அதுவாகவே மாறிவிடும்போது நமக்கு கிடைக்கும் நிச்சய வெற்றி. மகாபாரதத்தில் துரோணர் வில் வித்தைப் போட்டி நடத்தியபோது, மற்றவர்கள் மரத்தின் மேல் அமர்ந்திருந்த கிளியை வெறும் கிளியாகப் பார்த்தனர். அர்ஜுனனோ அதை தனது இலக்காகப் பார்த்தான், வென்றான். இந்த அணுகுமுறைதான் அர்ஜுனனை மற்றவர்களைப் பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது.

ஆனால், தற்போதைய வாழ்வில் உலகம் நிலையானதா என்று கேட்கும் அளவுக்கு, பாதுகாப்பின்மை, நிச்சயமற்ற தன்மை, கவலைகள், வெறுப்புகள், மன அழுத்தங்கள் போன்ற எதிர்மறையான எண்ணங்கள் இளைஞர்களிடம் வேரூன்ற ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலைக்கு காரணம், இளைஞர்கள் பாசிட்டிவ் அணுகுமுறையை மறந்து, நெகட்டிவ் அணுகுமுறையைத் தழுவ ஆரம்பித்ததுதான்.

இனியாவது, குறுக்குப் பாதையில் செல்வதைத் தவிர்த்து, நேர்வழியில் நடக்க முயற்சிப்போம். நேர்மை தரும் வெற்றி, கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் நிரந்தரமாக இருக்கும் என்பதை மனதார நம்புவோம்!

நன்றி - டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம் மற்றும் நாணயம் விகடன் இதழ்



நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

- மீண்டும் சிந்திப்போம்
 
மீள்பதிவாக:-

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

1 comment: