இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
முருகன் என்றால் தமிழ். தமிழ் என்றால் முருகன் என்று கூறும் அளவிற்கு நம் கந்தக் கடவுளிற்கு எத்தனை,எத்தனை பாடல்கள் என்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு முருக அருளாளர் பாடியுள்ள பாடல்களை நாம் படிக்கும் போது எத்தனை கோடி இன்பம் வைத்தாய் முருகா! என்று மனதுள் தோன்றுகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழ், பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்கள் என்று தான் நமக்கு தோன்றுகின்றது. ஆனால் சற்று ஆராய்ந்தால் இந்த பட்டியல் நீளும்.
நக்கீரர், முருகம்மையார் , கச்சியப்ப சிவாச்சாரியார் , அருணகிரிநாதர், குமரகுருபரர், பகழிக்கூத்தர், கச்சியப்ப முனிவர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சிற்றம்பல நாடிகள், கந்தசஷ்டிக் கவசம் பாலதேவராய சுவாமிகள் , வடலூர் இராமலிங்க சுவாமிகள்,மாம்பழக் கவிராயர்,வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள்,வள்ளிமலை சுவாமிகள்,திருமுருக கிருபானந்த வாரியார் என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அருளிய நூற்களை எல்லாம் படிக்க இப்பிறவி போதுமா? என்று தெரியவில்லை. இதில் அருணகிரிநாதரின் மொழியில் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி படித்து வருகின்றோம்.
கந்தர் அனுபூதி ஒரு மந்திர நூலாகும். நமது மனதை திறப்படுத்தும் நூல் ஆகும். முருகப் பெருமான் அருள அருணகிரிநாதர் கிளி ரூபம் கொண்டு பாடிய நூலாகும். இந்த நூலைப் பற்றி தாயுவான சுவாமிகள் கூறியுள்ள செய்தியாக,
கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி சொன்ன
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ?
- தாயுமானவர்
(மயக்கம் தீர்ப்பான் முருகன்)
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.
......... பதவுரை .........
குமரன் ... குமாரக் கடவுள்,
கிரி ராச குமாரி மகன் ... மலை அரசனது மகளான பார்வதியின்
புதல்வன்,
சமரம் பொரு தானவ நாசகனே ... போருக்கு வந்த சூரர்களை
அழித்தவன்,
அமரும் பதி ... நான் பிறந்த ஊர்,
கேள் ... உறவினர்கள்,
அகம் ஆம் ... நான் தான் எனப்படும்,
இப் பிரமம் கெட ... இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய,
மெய்ப் பொருள் பேசியவா ... மெய்ப் பொருள் பேசியது என்ன
ஆச்சரியம்.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment