"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 12, 2022

திருஆல வாய்என்று கேட்டவரே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

குருவருளால் நம் தளத்தின் இம்மாத அறப்பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முந்தைய பதிவில் கூறியது போல இம்மாத  கார்த்திகை தீபத்திற்கென இரண்டு டின் இலுப்பெண்ணை கொடுத்ததுடன் 7 ஆலயங்களுக்கு தீபமேற்ற 8 லி நல்லெண்ணெய் கொடுத்தோம். ஒவ்வொரு நொடியிலும் குருவின் அருள் நம்மை வழிநடத்தி வருவதை உணர்ந்து வருகின்றோம். இந்த தீப எண்ணெய் சேவையிலும் நீங்களே பாருங்கள். 

1. அக்கசாலை சித்தி விநாயகர் திருக்கோயில்- தீபமேற்ற 1 லி நல்லெண்ணெய்

2. அருள்மிகு ஶ்ரீ சிவசுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் - தீபமேற்ற 1 லி நல்லெண்ணெய்

3. அருள்மிகு சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் - தீபமேற்ற 1 லி நல்லெண்ணெய்

4. அருள்மிகு காளியம்மன் கோயில் - தீபமேற்ற 1 லி நல்லெண்ணெய்

5. அருள்மிகு பெருமாள் கோயில் - தீபமேற்ற 1 லி நல்லெண்ணெய்

6. தயவு ஆலயம் - வள்ளலார் - இங்கு சமையலுக்கு 1 லி நல்லெண்ணெய், தீபமேற்ற 1 லி நல்லெண்ணெய்

7. அருள்மிகு ஐயப்பன் கோயில் - தீபமேற்ற 1 லி நல்லெண்ணெய்

நன்கு உற்று கவனித்தால் விநாயகர்,முருகப் பெருமான், அம்மன், பெருமாள், வள்ளலார்( குருவாக) ஐயப்பன் என இறைமூர்த்தங்கள் அனைவருக்கும் தீப எண்ணெய் கார்த்திகை தீபத்தன்று  குருவருளால் வழங்கினோம்.பொருளுதவி செய்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி மகிழ்கின்றோம்.

இதே போன்று தான் இன்றைய கார்த்திகை பூச நட்சத்திரத்திலும் குருவருளால் மதுரையம்பதியில் அன்னசேவை நடைபெற்றது. பதிவின் இறுதியில் இன்றைய சேவையைப் பற்றி காண்போம். இனி  திருஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை திருத்தலம் பற்றி சிறிது காண உள்ளோம்.


திருஆல  வாய்என்று கேட்டவரே 

    அறம் பெறுவர்; செல்வம் ஓங்கும் 

திருஆல வாய்என்று நினைத்தவரே 

   பொருள் அடைவர்; தேவ தேவன்  

திருஆல வாய் அதனைக் கண்டவரே 

  இன்ப நலம் சேர்வர்; என்றும் 

திருஆல வாயிடத்து வதிந்தவரே 

  பரவீடு  சேர்வர் அன்றே.

 "திரு ஆலவாய் "என்ற பெயரை பிறர்  சொல்ல கேட்பவர்கள் --தருமத்தை செய்தவர்கள் ஆவார்கள் --அவர்களின்  செல்வம் வளர்ந்துகொண்டிருக்கும் --

"திரு ஆலவாய் "என்று நினைக்கின்றவர்கள் --தான் விரும்பும் பொருள்களை  அடைவார்கள் --

தேவர்களுக்கு எல்லாம் தலைவனான  இறைவன்  உறையும் "திரு ஆலவாயை "நேரில் தரிசித்தவர்கள் தான் --இன்பங்களை அனைத்தும் பெற்று நலம் பெறுவார்கள் --

எப்பொழுதும் "திரு ஆலவாயில் "வசிப்பவர்கள் --முக்தியை  அடைவார்கள் --இதில் மாற்றம் இல்லை.


தென்பாண்டி நாட்டின் தலைநகர். தமிழ் வளர்த்த தலம். வைகைக் கரையில் அமைந்த வளமிக்க பதி. மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் புகை வண்டிகள் மூலமாகவும் பேருந்துகள் மூலவமாகவும் வருவதற்கு நிரம்ப வசதிகள் உள்ளன.

புலவர்களுடன் இறைவனும் ஒருவராயிருந்து தமிழ்ச் சங்கத்தில் தமிழாராய்ந்த தனிச்சிறப்புடைய தலம். இறைவன் அறுபத்துநான்கு திருவிளையாடல்களை - அற்புதச் செயல்களை நிகழ்த்திய அரிய தலம். மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் காத்து மன்னனான கூன் பாண்டியனின் வெப்பு நோயை ஞானசம்பந்தர் மூலம் தீர்த்து வைத்த அவனை நின்றசீர் நெடுமாறனாக மாற்றிய அற்புதத் தலம். கபிலர் பரணர் நக்கீரர் முதலிய தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த பதி. தமிழ்ச் சங்கம் அமைந்த தலம். மூர்த்தி நாயனார் வாழ்ந்த ஊர். இவ்விறைவனே பாண பத்திரர் மூலம் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப்பாசுரம் தந்தருளியவர். திருஞானசம்பந்தர், அனல், புனல் வாதங்களை நிகழ்த்தி, சைவத்தைத் தழைக்கச் செய்த தண்பதி. பல்வேறு இலக்கியங்களிலும் பாராட்டுகின்ற பதி. யோகநிலையில் இத்தலம் 'துவாத சாந்தத் தலம்' எனப்படும். பஞ்ச சபைகளுள் இத்தலம் வெள்ளிச்சபை எனப் போற்றப்படுகிறது. வரகுண பாண்டியனக்காக இறைவன் கால் மாறி ஆடிய அற்புதம் இத்தலத்தில்தான் நிகழ்ந்தது. சங்ககாலப் புகழ்பெற்ற தங்கப்பதி. இறைவியே தடாதகையாக அரசாண்ட தலம். முக்பெருஞ் சக்தி பீடங்களுள் ஒன்று. திருஞானசம்பந்தர் இத்தலத்தில் வந்து தங்கியிருந்து சைவம் பெருக்கிய திருமடாலயம் - மிகப் பழமையான ஆதீனம் (மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்) தெற்காவணி மூலவீதியில் உள்ளது.

குமரகுருபர சுவாமிகள் இத்தலத்துப் பெருமாட்டியின் (மீனாட்சியம்மை) மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார். மாநகராட்சி தகுதியில் உள்ள மக்கட் செறிவு கொண்ட மிகப் பெரிய நகரம் - இங்குக் காமராசர் பல்கலைக் கழகம் உள்ளது. ஊரின் பெயர் - மதுரை. கோயிலின் பெயர் - ஆலவாய். சிவராசதானி, பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல், நான்மாடக் கூடல் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுதத்தால் மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.


இறைவன் - சோமசுந்தரக்கடவுள், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர்.

இறைவி - மீனாட்சி, அங்கயற்கண்ணி.

தலமரம் -கடம்பு.

தீர்த்தம் - பொற்றாமரைக்குளம். கோயிலுள் உள்ளது.


ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புக்கள் திருவாசகத்துள் புகழந்தோதப்பட்டுள்ளன.

இக்கோயில் மிகவும் பரப்புடையது - பெரியது, விண்ணிழி விமானம். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அழகிய கோபுரங்களை நாற்புறமும் பெற்றுள்ள நகரம் தெற்குக் கோபுரமே பிறவற்றினும் உயர்ந்தது. கோயில் நகரின் நடுவே அமைந்துள்ளது. கோயிலை மையமாகக் கொண்டே இத்தலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோயிலுள் அன்னை மீனாட்சிக்கே முதலில் வழிபாடு நடைபெறுகிறதாதலின் அன்பர்கள் பலரும் கீழ விதியிலுள்ள அம்பாள் சந்நிதி வாயில் வழியாகவே ஆலயத்துள் செல்வர்.

மிகப் பெரிய கோபுரம். ஏராளமான சிற்பங்கள். சிற்பக்கலை அழகுடையவை. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் உள்ளது அஷ்டசக்தி மண்டபம். வாயிலில் மீனாட்சி கல்யாணச்சிற்பம் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப எட்டு பெருந்தூண்கள் எட்டு சக்திகளின் வடிவங்களை அழகுறப் பெற்றுள்ளன. திருவிளையாடற் புராணக் காட்சிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன. அடுத்துள்ள நாய்க்கர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள எண்ணற்ற விளக்குகளைக் கொண்ட பித்தளையாலான திருவாசி கண்களைக் கவருகின்றது. அடுத்துள்ள வழியே சென்றால் பொற்றாமரைக் குளத்தை அடையலாம். மிகப்பெரிய குளம் இந்திரன் தன் வழிபாட்டிற்காகப் பொன்மலர் பறித்த குளம் இதுவென்பர். திருக்குறள் நூலை இக்குளத்தில் சங்கப் பலகையில் வைத்துத்தான் சங்கப் புலவர் ஏற்றுக் கொண்டதாக ஒரு வரலாறும் உண்டு. அழகிய படிக்கட்டுக்கள் உள்ள இக்குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப்புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபத்தில் திருக்குறட்பாக்கள் முழுவதும் சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.









பொற்றாமரைக் குளத்தின் மேற்கே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. அழகான கண்ணாடி அறை. வெள்ளிதோறும் மாலையில் சுவாமி அம்பாள் பொன்னூசல் நடைபெறுகிறது. அடுத்துள்ள கிளிக்கூட்டு மண்டபம் அழகான சிற்பக்கலையழகுடையவை. பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன், திரௌபதி, புரஷாமிருகம் முதலிய சிற்பங்கள் இங்குள்ளன. மண்டபத்தின் மேற்பகுதியில் தெய்வங்களின் பல்வேறு தோற்றங்களும், மீனாட்சி கல்யாணமும் வண்ணச் சித்திரங்களாக எழுதப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் திருமலை நாய்க்கர், இருதுணைவியாருடன் உள்ள சுதையாலான சிற்பங்கள் உள்ளன. அரணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் குமரன் சந்நிதியில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தில் உள்ள ஆறுகால பீடத்தில்தான் குமரகுருபர சுவாமிகள் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்யப்பட்டதென்பர்.

மகாமண்டபத்தில் ஐராவதவிநாயகர் சந்நிதியும் முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. அம்பாள் - மீனாட்சி கையில் கிளியுடன் செண்டு ஏந்தி நின்ற திருக்கோலத்தில் நமக்கு அருட்காட்சி வழங்கும் அற்புதம் அநுபவித்தோர்க்கே அருமை தெரியும். திங்கள்தோறும் அம்பிகைக்குத் தங்கக்கவசம், வைரக்கிரீடம் சார்த்தப்படுகிற, அம்பாளை வணங்கிய பின், கிளிக்கூட்டு மண்டபம் வழியாக வந்து கோபுரவாயிலை கடந்து சுவாமி சந்நிதிக்குப் போகும் நமக்கு எதிரில் முக்குறுணி விநாயகர் தரிசனம் கிடைக்கின்றது. எட்டு அடி உயரமுள்ள மிகப்பெரிய திருமேனி. பிராகாரத்தில் சங்கப்புலவர், சம்பந்தர் சந்நிதிகள் உள்ளன.

சுவாமி சந்நதிக்கு எதிரில் உள்ள கம்பத்தடி மண்டபம் சிற்பக்கலையின் கருவூலம் எனலாம். மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடி மரமும் நந்தியும் பலிபீடமும் உள்ளன. சுற்றிலும் உள்ள எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அற்புதமானவை. இவற்றுக்கு முத்தாய்ப்பு அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பமாகும். இச்சிற்ப அழகை எங்ஙனம் வருணிப்பது? அவ்வளவு தத்ரூபமான அமைப்பு. கம்பத்தடி மண்டபத்திற்குப் பக்கத்தில் இரு பெரிய தூண்களில் வடிக்கப்பட்டுள்ள 1) அக்கினி வீரபத்திரர் 2) அகோர வீரபத்திரர் சிலாரூபங்களும், அடுத்துள்ள தூண்களிலுள்ள 1) ஊர்த்துவதாண்டவர் 2) காளியின் சிலாரூபங்களும் கொள்ளையழகுடையன.

சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் இரு பெரிய துவார பாலகர்கள் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். உள் நுழைந்ததும் பிராகாரத்தில் திருவிளையாடற்புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஆறுகால் பீடம் உள்ளது. அறுபத்துமூவர் தரிசனம், கலைமகள் சந்நிதி உள்ளது. காசிவிசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கைச் சந்நிதிகளும் உள்ளன. கடம்பமரம் - தலமரம், வெள்ளிக் கவசமிட்டுப் பாதுகாக்கப்பட்டு கனகசபையும், யாகசாலையும், சாட்சி சொல்லிய வன்னி கிணறும் அடுத்தடுத்து உள்ளன.

வெள்ளியம்பலம், கால்மாறி ஆடிய அம்பலக் கூத்தனின் அற்புத நடன அழகு. தரிசித்து உள்ளே சென்று சோமசுந்தரப் பெருமானைக் காண்கின்றோம். தரிசித்து உள்ளே சென்று சோமசுந்தரப் பெருமானைக் காண்கின்றோம். சுவாமியின் கருவறை - இந்திர விமானம், விண்ணிழி விமானம் என்றழைக்கப்படுகிறது. அஷ்டதிக்கு யானைகளும் முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கும் அமைப்பில் இவ்விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி. ஆலவாய் அழகன் - அழகு மிளிரக் காட்சி தருகிறார். சிறிய திருமேனி. இம்மூர்த்தி தொடர்பான ஒரு செய்தி -

A.H. 1330ல் முகமதிய படையெடுப்பு நடைபெற்றபோது மன்னனாக இருந்த பராக்கிரமபாண்டியன் காளையார் கோயில் சென்று விட்டார். கோயில் ஸ்தானிகர் சிவலிங்கத்தை மூடி, கிளிக்கூடு வைத்து மணலைப்பரப்பி, கருவறைவாயிலையும் கல்லினால் அடைத்து, முன்புள்ள அர்த்தமண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை வைத்து விட்டனர். படையெடுத்து வந்த முகமதிய மன்னன் முன்னால் இருந்த சிவலிங்கத்தை நிஜமானதென்றெண்ணித் தாக்கிச் சிதைத்தான். படையெடுப்பு முடிந்து 48 ஆண்டுகள் கழித்து கம்பண்ணர் படையெடுத்து வந்த முகமதியரை வென்று, கோயில் வந்து ஸ்தானிகருடன் தோண்டிப் பார்க்க, சுவாமி மேற்பூசிய சந்தனம் மணம் மாறாமல், பக்கத்தில் ஏற்றிவைத்த 2 வெள்ளி விளக்குகளும் சுடர் சரிந்து கொண்டிருந்தனவாம், அன்றிருந்து சுவாமிக்கு இன்றுவரை முறையாகப் பூஜைகள் நடைபெறுகின்றனவாம்.

இக்கோயிலில் உள்ள ஆயிரக்கால் மண்டபம் மிகவும் பெரியது. மண்டப வாயிலின் மேற்புறத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் குறவன் குறத்தி முதலிய 'சிற்ப அழகு மிக்க சிலைகள் காணத் தெவிட்டாத கலைச்சுவையுடையன. மண்டபத்தில் எங்கு நின்று நோக்கினாலும் இத்தூண்கள் அனைத்தும் ஓர் ஒழுங்கான வரிசையில் இருப்பதைக் கண்டு வியக்கிறோம். இங்கு நிருத்த கணபதி, சரஸ்வதி, அர்ச்சுனன், ரதி, மோகினி, மன்மதன், கலிபுருடன் முதலிய பல சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள நடராஜரின் சிலை அற்புதமானது. இம்மண்டபத்தில் "கலைக் காட்சியகம்" நடத்தப்பட்டு வருகிறது. தெய்வீகத் திருமேனிகளையும், தொல்பொருள்களையும் இங்குக் கண்டு மகிழலாம்.

ஆயிரக்கால் மண்டபத்திற்குப் பக்கத்தில் மங்கையர்க்கரசி பெயரால் புதிய மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூன் பாண்டியன், மங்கையர்க்கரசி, ஞானசம்பந்தர், குலச்சிறையார் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன. சிவலிங்கத் திருமேனி ஒன்றும் நடுவிலுள்ளது. இதனையட்டி மருதுபாண்டியர் கட்டிய சேர்வைக்காரர் மண்டபமும், அழகிய மரவிதானங் கொண்ட கல்யாண மண்டபமும் உள்ளன.

சுவாமி அம்பாள் புறப்பாடும் நிகழும் iF 'ஆடிவீதி' எனப்படுகிறது. வடக்கு ஆடிவீதியில் பெரிய கோபுரத்தையடுத்து ஐந்து இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் 22 சிறு தூண்கள். இவைகளைத் தட்டினால் விதவிதமான இனிய ஓசை எழுகின்றது. இசைத்தூண்களின் அமைப்பும் அழகும் மிகவும் அதிசயமானவை.

கிழக்குக் கோபுரத்திற்கு எதிரில் வசந்த மண்டபம் உள்ளது. இதைப் புதுமண்டபம் என்கின்றனர். திருமலை நாய்க்கர் கட்டியது. இதில் தடாதகைப் பிராட்டி, மீனாட்சி திருமணம், திருமல நாய்க்கர், கல்யானை கரும்பு தின்னுவது, இராவணன் கயிலையைத் தூக்குவது, முதலிய பல சிற்பங்கள் உள்ளன. புதுமண்டபத்தின் எதிரே ராயகோபுரம் முடிவு பெறாத நிலையில் உள்ளது.

மதுரை செல்வோர் அனைவரும் திருமலை நாய்க்கர மகாலைக் கண்டு மகிழவேண்டும். திருமலை நாய்க்கர் தம் தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றியபோது இதைக் கட்டியதாகத் தெரிகிறது. செங்கல், வெண்சுதைசாந்து ஆகியவற்றைக் கொண்டே (மரம் முதலியவற்றின் தொடர்பின்றிக்) கட்டப்பட்டுள்ள இம்மகால் அழகு வேலைப்பாடுடையது.

மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் - (வண்டியூர் தெப்பக்குளம்) மிகவும் பெரிய அழகான குளமாகும். இங்குத் தைப்பூசத்தன்று நடைபெறும் தெப்பத் திருவிழா மிகச்சிறப்புடையதாகும். திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) , பழமுதிர்சோலை, திருப்பரங்கூனறம் முதலியவை அண்மையிலுள்ள தரிசிக்கத் தக்க தலங்களாகும் சித்திரைப் பௌர்ணமியன்று அழகர் வைகையாற்றில் வந்து இறங்கும் திருவிழா இத்தலத்துச் சிறப்பானதொரு திருவிழாவாகும். 3600 ஆண்டுகளுக்கு

மேற்பட்ட பழைமையுடைய பதி, இம் மதுரையாகும். ஞானசம்பந்தர் காலத்தில் சுவாமி கோயில் மட்டுமே இருந்ததாகத் தெரிகின்றது.

மதுரையை ஆண்ட சடையவர்மன் குலசேகரபாண்டியன் 12 ஆம் நூற்றாண்டில் மீனாட்சியம்மைக்குத் தனிக்கோயில் எடுப்பித்தான் என்று தெரிகிறது. 13 ஆம் நூள்ளாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கீழ்க்கோபுரத்தைக் கட்டிச் சுற்று மதில்களை அமைத்தான். 14 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் மேற்குக் கோபுரம் கட்டப் பட்டது. 16ஆம் நூற்றாண்டில் செவ்வந்திச் செட்டியார் தெற்குக் கோபுரத்தைக் கட்டினார். ஆயிரக்கால் மண்டபத்தை அரியநாத முதலியார் அமைத்தார் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலைநாய்க்கர் காலத்தில் புதுமண்டபம், அஷ்டசக்தி மண்டபம் கிளிக்கூட்டு மண்டபம் முதலியன கட்டப்பட்டன. ஆடிவீதிகளில் உள்ள சுற்று மண்டபங்கள் இராணி மங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்டன.

இவ்வாறு நூற்றாண்டுகள்தோறும் வளர்ச்சி பெற்று 'ஆலவாய்' இன்று முழுமை பெற்றுப் பெருஞ்சிறப்புடன் திகழ்கின்றது. மன்னர்களும் செல்வந்தர்களும் இத்திருக்கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டுச் செய்து வந்துள்ள தொடரில், தமிழவேள் திரு. பி.டி. ராஜன் அவர்கள் தலைமையில் 1960 - 63ல் மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, அனைத்துக் கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டன. மங்கையர்க்கரசியார் மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டது. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல்நாளில் தங்கரதம் புறப்பாடு நடைபெறுகின்றது. பெருவிழாக்களும் மற்ற மாதாந்திர விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன.


"மங்கயைர்க்கரசி வளவர்கோன் பாவைவரி வளைக்கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழலுருவன் பூத நாயகன் நால்வேதமும் பொருள்கறும் அருளி

அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும்இதுவே".

(சம்பந்தர்)


"நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த

சிலந்தியை அரசதாள அருளினாய் என்று திண்ணம்

கலந்துடன் வந்து நின்தாள் கருதி நான் காண்பதாக

அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள் செயாயே". (அப்பர்)


"பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை

ஆலவாய்ச் சொக்கழ கானந்தமே"- (அருட்பா)




இந்திரன் அமைத்த விமானம்:
மீனாட்சி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம், இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்கும் பொருட்டு, பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அதன் ஒரு பகுதியாக சிவபெருமானின் திரு விளையாடல்கள் பலவும் நடைபெற்றதாக அறியப்படும் கடம்பவனமான மதுரைக்கு வந்தான். அங்கு சுயம்பு லிங்கமாக இருந்த ஈசனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றான். தன் தோஷத்தைப் போக்கிய காரணத்தால், இத்தல இறைவனுக்கு விமானத்துடன் கூடிய பெருங்கோவிலை கட்டியதாக தல வரலாறு சொல்கிறது. இந்த விமானத்திற்கு ‘இந்திர விமானம்’ என்று பெயர். 

மரகத மீனாட்சி :
இத்தல இறைவியின் பெயர் ‘மீனாட்சி.’ தமிழில் ‘அங்கையற்கண்ணி.’ ‘மீன் போன்ற கண்களை கொண்டவள்’ என்று இதற்கு பொருள். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை, மரகதக் கல்லால் ஆனது. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இதற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர். இத்தல அம்மன், நின்ற கோலத்தில், இடை நெளித்து, கையில் கிளியை ஏந்தியபடி விற்றிருக்கிறாள். இங்கு அன்னைக்கே முதல் மரியாதை. அவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகுதான், மூலவரான சுந்தரேஸ்வரருக்கு வழிபாடுகள் நடைபெறும். 

பொற்றாமரைக் குளம்: 

நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுதல்படி, சிவபெருமான் தன்னுடைய சூலாயுதம் கொண்டு உருவாக்கியதே, இந்தக் குளம். இதற்கு ‘சிவகங்கை’ என்று பெயர். இந்திரன், இத்தல இறைவனை வழிபட்டுதான், தோஷம் நீங்கப் பெற்றான். அப்படி வழிபாடு செய்வதற்காக இந்த குளத்தில் இருந்து பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற காரணத்தால், இது ‘பொற்றாமரைக் குளம்’ என்றானது.  

திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய இடம் இது. ஒரு நாரைக்கு, சிவபெருமான் அருளிய வரத்தின்படி, இந்தக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இன்றளவும் இல்லாமல் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான். 165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்ட இந்தக் குளத்தைச் சுற்றிலும், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குளத்தில் அமாவாசை, கிரகண நாட்கள், மாதப் பிறப்பு மற்றும் புண்ணிய நாட்களில் நீராடி, இறைவனையும், இறைவியையும் தரிசித்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். 

வெளி ஆவரணம்.. உள் ஆவரணம்:-

மதுரை திருத்தலத்திற்கு வெளியே நான்கு திசைகளிலும் உள்ள ஆலயங்கள், ‘வெளி ஆவரணம்’ என்றும், மதுரை மீனாட்சி கோவிலுக்கு வெளியே நான்கு திசைகளிலும் அமைந்த ஆலயங்கள் ‘உள் ஆவரணம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. அதன்படி வெளி ஆவரணங்களாக மதுரைக்கு தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம்’ ஆகிய தலங்கள் உள்ளன. உள் ஆவரணங்களாக மதுரை கோவிலுக்கு வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட ‘பழைய சொக்கநாதர் கோவில்’, மேற்கு திசையில் சிவபெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த   ‘இம்மையில் நன்மை தருவார் கோவில்’, கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ‘ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோவில்’, தெற்கு திசையில் எமன் வழிபட்ட ‘தென்திருவாலவாய் கோவில்’ ஆகியவை உள்ளன. 

முக்குறுணி விநாயகர்:-

திருமலை நாயக்கர், மதுரையை ஆட்சி செய்த காலகட்டம் அது. அந்த மன்னனுக்கு தீராத வயிற்று வலி உண்டானது. பல வைத்தியங்களைப் பார்த்தும், அது சரியாகவில்லை. எனவே தன்னுடைய வயிற்றுவலி நீங்கினால், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக் குளம் கட்டித்தருவதாக வேண்டிக்கொண்டார். வேண்டுதல் நிறைவேறியதும், தெப்பக் குளம் அமைக்கும் பணி தொடங்கியது. குளம் தோண்டும் பணியின் போது, நிலத்துக்குள் இருந்து பிரமாண்டமான விநாயகர் சிலை கிடைத்தது. அவரை மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர். இவரே ‘முக்குறுணி விநாயகர்.’ இவருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில், 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைப்பது வழக்கமாக உள்ளது. 

மீனாட்சியின் கிளி:-

‘மீனாட்சி’ என்று சொன்னாலே, அன்னையின் கையில் இருக்கும் கிளி நினைவுக்கு வராமல் இருக்காது. பக்தர்களின் கோரிக்கைகளை, அன்னையின் கையில் இருக்கும் கிளியானது, திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள். தன்னுடைய சாபம் நீங்க, இத்தல இறைவனை வழிபடுவதற்காக இந்திரன் இங்கு வந்தான். அப்போது ஏராளமான கிளிகள், இத்தல இறைவன் எழுந்தருளியிருந்த இடத்தின் மேற்பகுதியில் பறந்தபடி, அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனவாம். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த இந்திரன், இத்தல இறைவனை வழிபாடு செய்து விமோசனம் பெற்றான். இந்திரன் இங்கு சிவ வழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில், மதுரையில் கிளி முக்கியத்துவம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 

கால் மாறி ஆடிய நடராஜர் :- 

பொதுவாக நடராஜர் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில்தான் காட்சியளிப்பார். ஆனால் மதுரையில் உள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். மதுரையை ஆட்சி செய்த ராஜசேகர பாண்டியன் என்பவன், நடனம் கற்று வந்தான். ஒருமுறை இத்தல நடராஜரைப் பார்த்தவனுக்கு, ஒரு வருத்தம்  உண்டானது. அவன் “இறைவா.. நான் நடனம் கற்கும்போதுதான், அதில் உள்ள கஷ்டத்தை அறிந்தேன். நீயோ காலம் காலமாக வலது கால் ஊன்றி, இடது காலை தூக்கி நடனமாடி வருகிறாய். எனக்காக கால் மாறி ஆடக் கூடாதா?” என்று கேட்டான். தன் பக்தனுக்காக நடராஜர் இத்தலத்தில் கால் மாறி நடனம் புரிகிறார். பஞ்ச சபைகளில் இது, வெள்ளி சபை ஆகும்.


குருவருளால் இன்று நடைபெற்ற சேவை பற்றி மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்  - https://tut-temples.blogspot.com/2021/11/blog-post_19.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

பாடல் பெற்ற தலங்கள் (12) - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/04/12.html

பாடல் பெற்ற தலங்கள் (11) - திருநணா சங்கமேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/11.html

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temples.blogspot.com/2020/02/10_13.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & 
ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & 
பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html

ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment