"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 22, 2024

பாடல் பெற்ற தலங்கள் (13) - திருவேட்களம்

                                                                   இறைவா..அனைத்தும் நீயே.

                                                                      சர்வம் சிவார்ப்பணம்..,

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நாம் அவ்வப்போது திருமுறைகள் படித்து வருகின்றோம். நால்வர் காட்டிய வழியில் நாம் சென்றால் இறையை உணரலாம். நால்வர் பெருமக்கள் நமக்கு தந்துள்ள ஞானத்தை படிக்க வேண்டியது நமது வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும். தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம் என்பதை நமது வாழ்வியல் கடமையாக எண்ணுதல் வேண்டும். 

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் என பார்த்தோம். பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் சைவத் தலங்களாக பார்த்து வருகின்றோம். சைவம்,வைணவ பாகுபாடு நமக்கேது? இந்த தொடர்பதிவிலேயே வைணவத்தலங்கள், திருப்புகழ் தலங்கள் என தொடர விரும்புகின்றோம்.

இன்றைய பதிவில் திருவேட்களம் சென்று தரிசனம் செய்ய உள்ளோம்.


அ௫ளியவர் :  திருநாவுக்கரசர்திருமுறை : ஐந்தாம்-திருமுறை  
பண் : திருக்குறுந்தொகை
நாடு :சோழநாடு காவிரி வடகரை 
தலம் :  வேட்களம் 

இறைவர்               : பாசுபதேசுவரர், பாசுபதநாதர்.

இறைவியார்           : சற்குணாம்பாள், நல்லநாயகி.

தல மரம்               : மூங்கில்.

தீர்த்தம்                : தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில்.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் - அந்தமும் ஆதியு மாகிய

                                  2. அப்பர்   - நன்று நாடொறும் நம்வினை


திருநாவுக்கரசர் தில்லையில் கூத்தப்பிரானை வழிபட்டுப் பின் அங்குள்ள  தலங்களை வழிபட்டுத் தில்லை மீண்டார். அச்சமயத்தில் திருவேட்களத்தில் இப்பதிகம் பாடியருளினார்.

திருவேட்களம்: தலக்குறிப்பு:
அர்ச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம்.

இத்தலம் அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் சென்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்துள் புகுந்து நேரே சென்றால் (பல்கலைக்கழகப் பகுதியைத் தாண்டி) சாலை ஓரத்தில் கோயில் உள்ளது.




திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோவில் வரலாறு

அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன், வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக் கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். “அந்த பன்றியை யார் கொன்றார்கள்?” என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது.

இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். “இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது”. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராதமூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன.








கோவில் அமைப்பு

பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது. தற்போது மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் சித்திவிநாயகர், சோமஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதியில் நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் சுற்றுப்பகுதியில் உள்ள நர்த்தன விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, இந்திர மயில் மீதமர்ந்த முருகன் ஆகியன அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருகருகே சூரியனும் சந்திரனும் இத்தலத்தில் இருப்பது விசேஷம். இவர்களை சூரிய, சந்திர கிரகணங்களின் போது வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். அம்மன் நல்லநாயகி (சற்குனாம்பாள்) நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது. கோஷ்ட மூர்த்திகளாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியுன் உள்ளது.


திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் முதல் பாடலில், “இத்தல இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும்”, என்றும் “இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்றும்” குறிப்பிடுகிறார். மேலும் தனது பதிகத்தின் 6-வது பாடலில் “கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக, அப்படி தொழுதால் பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்” என்றும் குறிப்பிடுகிறார்.

















பிரார்த்தனை: 

 பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம்

1. அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்து இலங்க

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்

சந்தம் இலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப

வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன்னகராரே 



2. சடைதனை தாழ்தலும் ஏற முடித்துச் சங்க வெண் தோடு சரிந்து இலங்கப்

புடை தனில் பாரிடம் சூழப் போதருமாறு இவர் போல்வார்

உடை தனில் நால் விரல் கோவண ஆடை உண்பது ஊரிடு பிச்சை வெள்ளை

விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே



3.  பூதமும் பலகணமும் புடை சூழப் பூமியும் விண்ணும் உடன் பொருந்தச்

சீதமும் வெம்மையும் சீரொடு நின்ற எம் செல்வர்

ஓதமும் கானலும் சூழ் தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த

வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே



4.  அரை புல்கு ஐந்தலை ஆடலரவம் அமைய வெண்கோவணத்தோடு அசைத்து

வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்

திரை புல்கு தெண்கடல் தண் கழி ஓதம் தேன் நலம் கானலில் வண்டு பண் செய்ய

விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகராரே



5.  பண்ணுறு வண்டறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண்ணூல் கிடந்த

பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான்

கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்

வெண்ணிற மால் விடை அண்ணல் வேட்கள நன்னகராரே



6.  கறிவளர் குன்றம் எடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம்

பொறிவளர் ஆரழல் உண்ணப் பொங்கிய பூத புராணர்

மறிவளர் அங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோலுடை ஆடை

வெறிவளர் கொன்றை அந்தாரார் வேட்கள நன்னகராரே



7.  மண் பொடிக் கொண்டு எரித்து ஓர் சுடலை மாமலை வேந்தன் மகள் மகிழ

நுண்பொடிச் சேர நின்றாடி நொய்யன செய்யல் உகந்தார்

கண்பொடி வெண் தலையோடு கையேந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்

வெண்பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்னகராரே



8.  ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டார் அமுதம் அமரர்க்கு அருளிச்

சூழ் தரு பாம்பு அரை ஆர்த்துச் சூலமோடு ஒண்மழு ஏந்தித்

தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப

வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே



9.  திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த

கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால்

அருவரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடெழில் தோள்கள் ஆழத்து அழுந்த

வெருவுற ஊன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே



10.  அத்தமண் தோய் துவரார் அமண் குண்டர் யாதும் அல்லா உரையே உரைத்துப்

பொய்த்தவம் பேசுவது அல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல்

முத்தன வெண்முறுவல் உமை அஞ்ச மூரி வல்லானையின் ஈருரி போர்த்த

வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னகராரே



11.  விண்ணியல் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க

நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்

பெண்ணின் நல்லாள் ஒரு பாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த

பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே



திருச்சிற்றம்பலம் 


திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம்

பாடல் எண் : 1

நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

பாடல் எண் : 2

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே.

பாடல் எண் : 3

வேட்க ளத்துறை வேதிய னெம்மிறை
ஆக்க ளேறுவ ரானைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

பாடல் எண் : 4

அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.

பாடல் எண் : 5

துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.

பாடல் எண் : 6

கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.

பாடல் எண் : 7

வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்று மிரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

பாடல் எண் : 8

நட்ட மாடிய நம்பனை நாள்தொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

பாடல் எண் : 9

வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

பாடல் எண் : 10

சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.


திருச்சிற்றம்பலம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...!!! - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_20.html
பாடல் பெற்ற தலங்கள் (12) - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/04/12.html
பாடல் பெற்ற தலங்கள் (11) - திருநணா சங்கமேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/11.html

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temples.blogspot.com/2020/02/10_13.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html
பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html
பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html
பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html
பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html
தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html




No comments:

Post a Comment